Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

எரேமியா என்ற இறைவாக்கினர் கி.மு. 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தார். இந்நெடிய பணிக்காலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு நிகழவிருந்த தண்டனைபற்றி முன்னெச்சரிக்கை விடுத்தார். பாபிலோனிய மன்னனால் எருசலேமும் திருக்கோவிலும் அழிவுற்றதையும் யூதா அரசனும் நாட்டினரும் நாடுகடத்தப்பட்டதையும் தம் கண்ணால் கண்டார். ஆயினும் அம்மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று மீளவிருப்பதையும் நாடு புத்துயிர் பெறவிருப்பதையும் முன்னறிவித்தார்.

எரேமியா மென்மையான அன்புள்ளம் படைத்தவர். ஆயினும் மக்களுக்கெதிராகத் தண்டனைத் தீர்ப்பு உரைக்குமாறு இறைவனால் பணிக்கப்பட்டார். கடவுள் தந்த இவ்வழைப்பிற்காகத் ‘துன்புறும் மனிதன்’ ஆன இவரைப்பற்றிய உணர்ச்சிகரமான பல பகுதிகள் இந்நூலில் காணக்கிடக்கின்றன. இந்நூலின் சில சிறப்பான பகுதிகளில், ‘இதயத்தில் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்ட புதியதோர் இறைக்குலம் தோன்றவிருக்கிறது’ என்னும் நம்பிக்கைப் பேரொளி சுடர்விடுகின்றது.

நூலின் பிரிவுகள்


1. எரேமியாவின் அழைப்பு 1:1 - 19
2. யூதா, எருசலேமுக்கு எதிரான இறைவாக்குகள் 2:1 - 25:38
3. நல்வாழ்வுபற்றிய இறைவாக்குகள் 26:1 - 35:19
4. எரேமியாவின் துன்பங்கள் 36:1 - 45:5
5. வேற்றினத்தார்க்கு எதிரான இறைவாக்குகள் 46:1 - 51:64
6. பிற்சேர்க்கை: எருசலேமின் வீழ்ச்சி 52:1 - 34



அதிகாரம் 1:1-19

எரேமியாவின் அழைப்பு


1பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்: 2ஆமோன் மகனும் யூதா அரசருமான யோசியாவின் காலத்தில், அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.✠ 3யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஐந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.✠

4எனக்கு அருளப்பட்ட
ஆண்டவரின் வாக்கு:
5“தாய் வயிற்றில் உன்னை நான்
உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்;
நீ பிறக்குமுன்பே உன்னைத்
திருநிலைப்படுத்தினேன்;
மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக
உன்னை ஏற்படுத்தினேன்.”
6நான், “என் தலைவராகிய ஆண்டவரே,
எனக்குப் பேசத் தெரியாதே,
சிறுபிள்ளைதானே” என்றேன்.
7ஆண்டவர் என்னிடம் கூறியது:
“‘சிறுபிள்ளை நான்’
என்று சொல்லாதே;
யாரிடமெல்லாம் உன்னை
அனுப்புகின்றேனோ
அவர்களிடம் செல்;
எவற்றை எல்லாம் சொல்லக்
கட்டளை இடுகின்றேனோ
அவற்றைச் சொல்.
8அவர்கள்முன் அஞ்சாதே.
ஏனெனில், உன்னை விடுவிக்க
நான் உன்னோடு இருக்கின்றேன்,
என்கிறார் ஆண்டவர்.”
9ஆண்டவர் தம் கையை நீட்டி
என் வாயைத் தொட்டு
என்னிடம் கூறியது:
“இதோ பார்! என் சொற்களை
உன் வாயில் வைத்துள்ளேன்.
10பிடுங்கவும் தகர்க்கவும்,
அழிக்கவும் கவிழ்க்கவும்,
கட்டவும் நடவும்,
இன்று நான் உன்னை
மக்களினங்கள் மேலும்}
அரசுகள் மேலும்
பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்”.

11ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘எரேமியா, நீ காண்பது என்ன?’ என்னும் கேள்வி எழ, “வாதுமை⁕ மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன். 12அதற்கு ஆண்டவர் என்னிடம், “நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்” என்றார்.

13ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: “நீ காண்பது என்ன?” என்னும் கேள்வி எழ, “கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது” என்றேன். 14ஆண்டவர் என்னிடம் கூறியது: “நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும் வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்.”

15இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர். 16என் மக்களின் தீய செயல்களுக்காக அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன். அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினார்கள். தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள். 17நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். 18இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். 19அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.


1:2 2 அர 22:3-23:7; 2 குறி 24:8-35:19. 1:3 2 அர 23:36-24:7,18-25:21; 2 குறி 36:5-8,11-21.


1:11 எபிரேயத்தில், ‘விழிப்பாயிருக்கும் மரம்’ என்பது பொருள்.



அதிகாரம் 2:1-37

இஸ்ரயேலின் பற்றுறுதியின்மை


1ஆண்டவரின் வாக்கு எனக்கு
அருளப்பட்டது:
2“நீ சென்று எருசலேம் நகரினர்
அனைவரும் கேட்கும் முறையில்
இவ்வாறு பறைசாற்று.
ஆண்டவர் கூறுவது இதுவே;
உன் இளமையின் அன்பையும்
மணமகளுக்குரிய காதலையும்
விதைக்கப்படாத பாலைநிலத்தில்
நீ என்னை எவ்வாறு
பின்பற்றினாய் என்பதையும்
நான் நினைவுகூர்கிறேன்.
3இஸ்ரயேல் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கப்பட்டது;
அவரது அறுவடையின்
முதற்கனியாய் இருந்தது;
அதனை உண்டவர் அனைவரும்
குற்றவாளிகள் ஆயினர்;
அவர்கள்மேல்
தீமையே வந்து சேர்ந்தது,
என்கிறார் ஆண்டவர்.
4யாக்கோபின் வீட்டாரே,
இஸ்ரயேல் வீட்டின்
அனைத்துக் குடும்பத்தாரே,
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
5ஆண்டவர் கூறுவது இதுவே:
என்னை விட்டகன்று
வீணானவற்றைப் பின்பற்றி
வீணாகும் அளவுக்கு
உங்கள் தந்தையர் என்னிடம்
என்ன தவறு கண்டனர்?
6எகிப்து நாட்டிலிருந்து
நம்மை அழைத்து வந்தவரும்
பாழ்நிலமும்
படுகுழிகள் நிறைந்த நிலமும்
வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும்
யாருமே கடந்து செல்லாததும்,
யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில்
நம்மை நடத்தி வந்தவருமான
ஆண்டவர் எங்கே? என்று
அவர்கள் கேட்கவில்லையே!
7செழிப்பான நாட்டுக்கு
அதன் கனிகளையும்
நலன்களையும் நுகருமாறு
நான் உங்களை அழைத்து வந்தேன்.
நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து
அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்;
எனது உரிமைச் சொத்தை நீங்கள்
அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.
8குருக்கள், “ஆண்டவர் எங்கே?”
என்று கேட்கவில்லை;
திருச்சட்டத்தைப் போதிப்போர்
என்னை அறியவில்லை;
ஆட்சியாளர்⁕ எனக்கு எதிராகக்
கலகம் செய்தனர்;
இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப்
பயனற்றவற்றைப் பின்பற்றினர்.
9ஆதலால் இன்னும் உங்களோடு
வழக்காடுவேன்” என்கிறார் ஆண்டவர்.
உங்கள் மக்களின் மக்களோடும்
வழக்காடுவேன்.
10சைப்ரசு நாட்டின்
கடற்கரைப் பகுதிகளுக்குக்
கடந்து சென்றுபாருங்கள்;
கேதாருக்கு ஆளனுப்பி
முழுத் தெளிவு பெறுங்கள்;
இது போன்ற செயல் உண்டோ
என்று பாருங்கள்.
11தங்கள் தெய்வங்கள்
தெங்வங்களே அல்ல எனினும்,
அவற்றினை மாற்றிக்கொண்ட
மக்களினம் உண்டா?
என் மக்களோ, என் மாட்சியைப்
பயனற்ற ஒன்றிற்காக
மாற்றிக் கொண்டனர்.
12வானங்களே இதைக் கண்டு
திடுக்கிடுங்கள்;
அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள்,
என்கிறார் ஆண்டவர்.
13ஏனெனில், என் மக்கள்
இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்;
பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய
என்னைப் புறக்கணித்தார்கள்;
தண்ணீர் தேங்காத,
உடைந்த குட்டைகளைத்
தங்களுக்கென்று
குடைந்து கொண்டார்கள்.
14இஸ்ரயேல் ஓர் அடிமையா?
வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா?
அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?
15அவனுக்கு எதிராக
இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து,
பெருமுழக்கம் செய்து
அவனது நாட்டைப் பாழடையச் செய்தன;
அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன;
அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.
16மெம்பிசு, தகபனேசு நகரினர்
உன் தலையை மழித்தனர்.
17உன் கடவுளாகிய ஆண்டவர்
உன்னை வழிநடத்திச் செல்லும்போதே
அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ
இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?
18நைல் நதி நீரைக் குடிக்க
இப்போது நீ எகிப்துக்குப் போவதால்
உனக்கு வரும் பயன் என்ன?
யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க
அசீரியாவுக்குப் போவதால்
உனக்கு வரும் பயன் என்ன?
19உன் தீச்செயலே
உன்னைத் தண்டிக்கும்;
உன் பற்றுறுதியின்மையே
உன்னைக் கண்டிக்கும்;
உன் கடவுளாகிய ஆண்டவராம்
என்னைப் புறக்கணித்தது
தீயது எனவும் கசப்பானது எனவும்
கண்டுணர்ந்து கொள்.
என்னைப் பற்றிய அச்சமே
உன்னிடம் இல்லை, என்கிறார்
என் தலைவராகிய
படைகளின் ஆண்டவர்.
20நெடுங்காலத்துக்கு முன்பே
உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்;
உன் தளைகளை அறுத்துவிட்டாய்;
“நான் ஊழியம் செய்யேன்”
என்று சொன்னாய்.
உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும்,
பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும்
விலைமாதாகக் கிடந்தாயே!
21முற்றிலும் நல்ல கிளையினின்று
உயர் இனத் திராட்சைச் செடியாய்
உன்னை நட்டு வைத்தேன்;
நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட
காட்டுத் திராட்சைச் செடியாய்
மாறியது எப்படி?
22நீ உன்னை உவர் மண்ணினால்
கழுவினாலும்,
எவ்வளவு சவர்க்காரத்தைப்
பயன்படுத்தினாலும்,
உன் குற்றத்தின் கறை
என் கண்முன்னே இருக்கிறது,
என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.
23“நான் தீட்டுப்படவில்லை;
பாகால்களுக்குப்பின் திரியவில்லை” என
எப்படி நீ கூற முடியும்?
பள்ளத்தாக்கில் நீ சென்ற
பாதையைப் பார்;
நீ செய்தது என்ன என்று
அறிந்துகொள்;
இங்கும் அங்கும் விரைந்தோடும்
பெண் ஒட்டகம் நீ.
24பாலைநிலத்தில் பழகியதும்,
காம வேட்கையில்
மோப்பம் பிடிப்பதுமான
காட்டுக் கழுதை நீ!
அதன் காம வெறியை
யாரால் கட்டுப்படுத்த முடியும்?
அதனை வருந்தித் தேடத்
தேவையில்லை;
புணர்ச்சிக் காலத்தில்
அதனை எளிதில் காணலாம்.
25“கால் தேய ஓடாதே;
தொண்டை வறண்டுபோக விடாதே”
என்றால்,
நீயோ, “பயனில்லை.
நான் வேற்றுத் தெய்வங்கள்மேல்
மோகம் கொண்டேன்;
அவர்கள் பின்னே திரிவேன்” என்றாய்.
26திருடன் பிடிபடும்போது
மானக்கேடு அடைவது போல,
இஸ்ரயேல் வீட்டாரும்
அவர்களின் அரசர்களும்
தலைவர்களும் குருக்களும்
இறைவாக்கினர்களும்
மானக்கேடு அடைவார்கள்.
27ஒரு மரத்தை நோக்கி,
“நீயே என் தந்தை” என்பர்;
ஒரு கல்லை நோக்கி, “நீயே என்னைப்
பெற்றெடுத்தவள்” என்பர்.
எனக்கு முகத்தையல்ல,
முதுகையே காட்டுகின்றனர்;
ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில்
, “எழுந்தருளி எங்களை விடுவியும்” என்பர்.
28உனக்கென நீ செய்துகொண்ட
தெய்வங்கள் எங்கே?
உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில்,
முடிந்தால் அவை எழுந்து
உன்னை விடுவிக்கட்டுமே!
யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ,
அத்தனை தெய்வங்கள்
உன்னிடம் இருக்கின்றனவே!
29என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்?
நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க்
கலகம் செய்தவர்களே,
என்கிறார் ஆண்டவர்.
30நான் உங்கள் மக்களை
அடித்து நொறுக்கியது வீண்;
அவர்கள் திருந்தவில்லை;
சிங்கம் அழித்தொழிப்பதுபோல
உங்கள் வாளே உங்கள்
இறைவாக்கினரை வீழ்த்தியது.
31இத்தலைமுறையினரே!
ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள்.
நான் இஸ்ரயேலுக்குப்
பாலைநிலமாய் இருந்தேனா?
அல்லது இருள்சூழ் நிலமாய்
இருந்தேனா?
“நாங்கள் விருப்பம் போல்
சுற்றித் திரிவோம்;
இனி உம்மிடம் வரமாட்டோம்” என்று
என் மக்கள் ஏன் கூறினார்கள்?
32ஒரு கன்னிப் பெண்
தன் நகைகளை மறப்பாளோ?
மணப்பெண் தன் திருமண உடையை
மறப்பதுண்டோ?
என் மக்களோ என்னை
எண்ணிறந்த நாள்களாய்
மறந்து விட்டார்கள்.
33காதலரை அடையும் வழிகளைச்
சிறப்பாய் வகுத்துள்ளாய்;
ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட
உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
34மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில்
காணப்படுகின்றது;
அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை
நீ கண்டாயா?
35இவை அனைத்தையும்
நீ செய்திருந்தும்
நீயோ, “நான் மாசற்றவள்;
அவர் சினம் என்னைவிட்டு
அகன்று விட்டது உறுதி” என்கிறாய்.
“பாவம் செய்யவில்லை” என்று
நீ கூறியதால்,
நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
36ஏன் இவ்வளவு எளிதாக
உன் வழிகளை
மாற்றிக் கொள்கின்றாய்?
அசீரியாவால்
நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல்
எகிப்தினாலும்
மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!
37உன் தலைமேல் கைகளை
வைத்துக் கொண்டுதான்
அங்கிருந்து திரும்பி வருவாய்;
ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை
ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்;
அவர்களால் உனக்குப்
பயன் ஏதும் இல்லை.”


2:8 ‘மேய்ப்பர்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 3:1-25

மனம் மாற அழைப்பு


1“கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட,
அவள் அவனை விட்டகன்று
வேறு ஒருவனோடு வாழ்கையில்,
அக்கணவன் அவளிடம்
மீண்டும் திரும்பிச் செல்வானா?
அந்நாடு தீட்டுப்படுவது உறுதியல்லவா?
நீ பல காதலர்களோடு
விபசாரம் செய்தாய்;
உன்னால் என்னிடம் திரும்பிவர
முடியுமா?” என்கிறார் ஆண்டவர்.
2உன் கண்களை உயர்த்தி
மொட்டை மேடுகளைப்பார்;
நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ?
பாலை நிலத்தில் அராபியனைப்போல,
பாதையோரங்களில் நீயும்
காதலர்களுக்காகக் காத்திருந்தாய்;
உன் விபசாரங்களாலும்
தீச்செயல்களாலும்
நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.
3ஆகையால், நாட்டில்
மழை பெய்யாது நின்று விட்டது;
இளவேனிற் கால மழையும் வரவில்லை;
உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி;
நீ மானங்கெட்டவள்.
4இப்போது கூட ‘என் தந்தையே!
என் இளமையின் நண்பரே!’ என
என்னை நீ அழைக்கவில்லையா?
5‘என்றென்றும் அவர்
சினம் அடைவாரோ?
இறுதிவரை அவர்
சினம் கொண்டிருப்பாரோ?’ என்கிறாய்.
இவ்வாறு சொல்லிவிட்டு
உன்னால் இயன்றவரை
தீச்செயல்களையே செய்கிறாய்.

6யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: “நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள்.✠ 7இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள். 8நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த *அவளுடைய சகோதரி யூதா கண்டாள்.* எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள்.✠ 9விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள். 10இவை அனைத்திற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை; பொய் வேடம் போடுகிறாள்” என்கிறார் ஆண்டவர்.

11ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள். 12நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு:

நம்பிக்கையற்ற இஸ்ரயேலே,
என்னிடம் திரும்பிவா,
என்கிறார் ஆண்டவர்.
நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்;
ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன்,
என்கிறார் ஆண்டவர்.
நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.
13உன் குற்றத்தை
நீ ஏற்றுக்கொண்டால் போதும்;
உன் கடவுளாகிய ஆண்டவருக்கு
எதிராகக் கலகம் செய்தாய்;
பசுமையான மரங்கள்
அனைத்தின் கீழும்
அன்னியரை நாடி
அங்குமிங்கும் ஓடினாய்;
என் குரலுக்கோ
நீ செவிசாய்க்கவில்லை,
என்கிறார் ஆண்டவர்.
14மக்களே! என்னிடம்
திரும்பி வாருங்கள்; ஏனெனில்,
நானே உங்கள் தலைவன்;
நகருக்கு ஒருவனையும்
குடும்பத்திற்கு இருவரையுமாகத்
தெரிந்தெடுத்து உங்களைச்
சீயோனுக்குக் கூட்டி வருவேன்.

15என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள். 16நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர். 17அக்காலத்தில் எருசலேம ‘ஆண்டவரின் அரியணை’ என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள். 18அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்; நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.

19உன்னை என் மக்களின் வரிசையிலே
எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும்
திரளான மக்களினங்களுக்கிடையே
அழகான உரிமைச்சொத்தாகிய
இனிய நாட்டை உனக்கு
எவ்விதம் தருவேன் என்றும்
எண்ணிக்கொண்டிருந்தேன்.
‘என் தந்தை’ என
என்னை அழைப்பாய் என்றும்,
என்னிடமிருந்து
விலகிச் செல்லமாட்டாய் என்றும்
எண்ணியிருந்தேன்.
20நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண்
தன் காதலனைக் கைவிடுவது போல,
இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு
நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய்,
என்கிறார் ஆண்டவர்.
21மொட்டை மேடுகளில்
கூக்குரல் கேட்கிறது;
அது இஸ்ரயேல் மக்களின்
அழுகையும் வேண்டலுமாம்;
ஏனெனில், அவர்கள் நெறிதவறித்
தங்கள் கடவுளாகிய ஆண்டவரை
மறந்தார்கள்.
22என்னைவிட்டு விலகிய மக்களே!
திரும்பி வாருங்கள்;
உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து
உங்களைக் குணமாக்குவேன்;
“இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம்.
நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
23குன்றுகளிலிருந்தும் மலைகளில்
செய்யப்படும் அமளிகளிலிருந்தும்
கிடைப்பது ஏமாற்றமே;
இஸ்ரயேலின் விடுதலை
எங்கள் கடவுளாகிய
ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.

24எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது. 25மானக்கேடே எங்கள் படுக்கை; அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்; அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.’


3:6 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.


3:8 “அவளுடைய சகோதரி யூதா கண்டாள்” என்பது “நான்…கண்டேன்” என்று எபிரேய பாடத்தில் உள்ளது.



அதிகாரம் 4:1-31

1இஸ்ரயேலே, நீ திரும்பிவருவதாக
இருந்தால்
என்னிடம் திரும்பிவா,
என்கிறார் ஆண்டவர்.
அருவருப்பானவற்றை அகற்றி விட்டால்
என் திருமுன்னிருந்து
அலைந்து திரியமாட்டாய்.
2வாழும் ஆண்டவர் மேல் ஆணை
என்று சொல்லி
உண்மையோடும் நீதியோடும்
நேர்மையோடும் ஆணையிட்டால்,
மக்களினத்தார் அவர் வழியாகத்
தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்;
அவரில் பெருமை பாராட்டுவர்..
3யூதாவிலும் எருசலேமிலும்
உள்ள மக்களுக்கு
ஆண்டவர் கூறுவது இதுவே;
தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்;
முட்களிடையே விதைக்காதீர்கள்.✠
4யூதாவின் மக்களே,
எருசலேமில் குடியிருப்போரே,
ஆண்டவருக்காக
விருத்தசேதனம் செய்துகொள்ளுங்கள்;
உங்கள் இதயத்தின் நுனித்தோலை
அகற்றிவிடுங்கள்; இல்லையேல்
உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு
என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப்
பற்றியெரியும்;
அதனை அணைப்பார் எவருமிலர்.


வடக்கிலிருந்து வரும் அழிவு


5“யூதாவில் அறிவியுங்கள்;
எருசலேமில் பறைசாற்றுங்கள்;
நாட்டில் எக்காளம் ஊதுங்கள்”
எனச் சொல்லுங்கள்.
ஒன்று கூடுங்கள்;
“அரண்சூழ் நகர்களுக்குச்
சென்றிடுவோம்” என
உரக்கக் கூவுங்கள்.
6சீயோனுக்கு நேராகக்
கொடியை உயர்த்திப் பிடியுங்கள்;
விரைந்து தப்பியோடுங்கள்;
நிற்காதீர்கள்; ஏனெனில்,
வடக்கிலிருந்து தீமை வரச்செய்வேன்;
அது பேரழிவாய் இருக்கும்.
7சிங்கம் ஒன்று
புதரிலிருந்து கிளம்பியுள்ளது;
மக்களினங்களை அழிப்பவன்
புறப்பட்டு விட்டான்;
உங்கள் நாட்டைப் பாழாக்க,
அவன் தன் இடத்திலிருந்து
வெளியேறிவிட்டான்;
உங்கள் நகர்கள் பாழாடைந்து
குடியற்றுப் போகும்.
8எனவே, சாக்கு உடை
உடுத்திக் கொள்ளுங்கள்.
அழுது புலம்புங்கள்; ஒப்பாரி வையுங்கள்;
ஏனெனில், ஆண்டவரின் கோபக் கனல்
நம்மை விட்டு நீங்கவில்லை.


9அக்காலத்தில் அரசனும் தலைவர்களும் நம்பிக்கையிழந்துவிடுவர், என்கிறார் ஆண்டவர்; குருக்கள் திடுக்கிட்டுப் போவர்; இறைவாக்கினர் திகைத்து நிற்பர். 10அப்போது நான், “ஆ! என் தலைவராகிய ஆண்டவரே! நீர் இம்மக்களையும் எருசலேமையும் முற்றிலும் ஏமாற்றிவிட்டீர்; ஏனெனில் வாள் எங்கள் தொண்டைமீது இருக்கும்போதே ‘உங்களுக்குச் சமாதானம்’ என்கிறீர்” என்றேன்.

11அக்காலத்தில் இம்மக்களுக்கும் எருசலேமுக்கும் இவ்வாறு கூறப்படும்; பாலை நிலத்தின் மொட்டை மேடுகளிலிருந்து அனல்காற்று என் மகளாகிய மக்கள்மீது வீசும். அது தூற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்குமான காற்றன்று. 12அதைவிடப் பெரும் காற்று ஒன்று என்னிடமிருந்து வருகின்றது. இப்போது நானே அவர்கள் மேல் தண்டனைத் தீர்ப்பு வழங்கப் போகிறேன்.

13இதோ, மேகங்களைப் போல் எதிரி வருகிறான். அவன் தேர்கள் சூறாவளி போன்றவை; அவன் குதிரைகள் கழுகுகளைவிட விரைவாகச் செல்பவை; நமக்கு ஐயோ கேடு! நாம் அழிந்தோம். 14எருசலேமே, நீ விடுவிக்கப்பட வேண்டுமானால், உன் இதயத்திலிருந்து தீயதைக் கழுவி விடு; இன்னும் எத்துணைக் காலத்திற்குத் தீய சிந்தனைகள் உன்னில் குடி கொண்டிருக்கும்? 15தாணிலிருந்து எழும்பும் குரலொலி அறிக்கையிடுகிறது. எப்ராயிம் மலையிலிருந்து கேடு அறிவிக்கப்படுகிறது. 16‘தொலை நாட்டிலிருந்து உன்னை முற்றுகையிடுவோர் வருகின்றனர்; யூதாவின் நகர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புகின்றனர்’ என மக்களினங்களை எச்சரியுங்கள். இதை எருசலேமுக்கு அறிவியுங்கள். 17வயல்வெளியின் காவலாளியென, அவர்கள் அவளைச் சுற்றி வளைத்து எதிர்த்து நிற்கின்றனர். ஏனெனில் அவள் எனக்கு எதிராகக் கலகம் செய்தாள், என்கிறார் ஆண்டவர். 18உன் நடத்தையும் உன் செயல்களும் இவற்றை உன்மேல் வருவித்தன. உனக்கு வந்த இக்கேடு எத்துணைக் கசப்பாய் உள்ளது? அது உன் இதயத்தையே நொறுக்கி விட்டது.

19என் அடிவயிறு கலங்குகின்றது;
நான் வேதனையால் துடிக்கின்றேன்;
என் இதயம் துயரத்தால்
பதைபதைக்கின்றது;
நான் வாளாவிருக்க முடியுமா?
என் நெஞ்சே, எக்காள ஒலி
என் காதில் விழுகிறதே!
போர்க்குரல் கேட்கிறதே!
20அழிவின் மேல் அழிவு
என்ற செய்தியே வருகின்றது;
நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது;
நொடிப்பொழுதில் என் கூடாரங்களும்,
இமைப்பொழுதில் மூடு திரைகளும்
அழிந்து போயின;
21எதுவரைக்கும் நான்
போர்க்கொடியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?
எக்காளத்தின் குரலைக்
கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?
22என் மக்கள் அறிவிலிகள்;
என்னை அவர்கள்
அறிந்து கொள்ளவில்லை;
மதிகெட்ட மக்கள் அவர்கள்;
உய்த்துணரும் ஆற்றல்,
அவர்களுக்கில்லை;
தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்;
நன்மை செய்ய
அவர்களுக்குத் தெரிவதில்லை.
23நான் நாட்டைப் பார்த்தேன்;
அது பாழ்நிலமாய்க் கிடந்தது;
வானங்களைப் பார்த்தேன்;
அவற்றில் ஒளியே இல்லை.
24நான் மலைகளைப் பார்த்தேன்;
இதோ! அவை அதிர்ந்தன;
குன்றுகள் அனைத்தும் அசைந்தன.
25நான் பார்த்தேன்;
மனிதரையே காணவில்லை;
வானத்துப் பறவைகள் அனைத்தும்
பறந்து போய்விட்டன.
26நான் பார்த்தேன்;
இதோ செழிப்பான நிலமெல்லாம்
பாலை நிலமாகிவிட்டது;
ஆண்டவரின் திருமுன்
அவரது கோபக் கனலால்
அதன் நகர்கள் அனைத்தும்
தகர்க்கப்பட்டன.
27ஆண்டவர் கூறுவது இதுவே:
நாடு முழுவதும் பாழடைந்து போகும்;
எனினும் அதனை முற்றிலும்
பாழாக்கமாட்டேன்.
28இதனை முன்னிட்டு நாடு புலம்பும்;
மேலே வானங்கள் இருளடையும்;
எனெனில், நான் சொல்லிவிட்டேன்;
இது பற்றி வருந்தமாட்டேன்;
நான் முடிவு செய்து விட்டேன்;
மனம் மாறமாட்டேன்.
29குதிரை வீரர், வில் வீரர்
எழுப்பும் ஒலி கேட்டு,
நகரினர் அனைவரும் ஓட்டமெடுப்பர்;
புதர்களுக்குள் மறைந்துகொள்வர்;
பாறைகள் மீது ஏறிக்கொள்வர்;
நகர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு
ஓடிவிடுவர்;
அவற்றில் குடியிருக்க எவருமே இரார்.
30பாழ்பட்டவளாகிய நீ ஏன்
கருஞ் சிவப்பு ஆடை உடுத்துகின்றாய்?
பொன் அணிகலன்களால்
அலங்கரிக்கின்றாய்?
நீ உன்னை அழகுபடுத்துவது வீண்;
உன் காதலர் உன்னை
அவமதிக்கின்றனர்;
உன் உயிரைப் பறிக்கத் தேடுகின்றனர்.
31பேறுகாலப் பெண் எழுப்பும்
குரல் போன்றும்
தன் முதற் பிள்ளையைப்
பெற்றெடுப்பவளின்
வேதனைக் குரல் போன்றும்
குரல் ஒன்று கேட்டேன்.
அது, மூச்சுத் திணறி,
கைகளை விரித்து,
“எனக்கு ஐயோ கேடு!
கொலைஞர் முன்னால்
நான் உணர்வற்றுக் கிடக்கிறேன்!”
என்று அலறும்
மகள் சீயோனின் குரலாகும்.


4:3 ஓசே 10:12.



அதிகாரம் 5:1-31

எருசலேம் படையெடுப்புக்கான காரணங்கள்


1நீதியைக் கடைப்பிடித்து
உண்மையை நாடும் ஒரு மனிதரைக்
கண்டுபிடிக்க முடியுமாவென
எருசலேமின் தெருக்களில்
சுற்றிப் பார்த்துத் தெரிந்துகொள்;
அவளுடைய பொது இடங்களில்
கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால்,
அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.
2வாழும் ஆண்டவர் மேல்
அவர்கள் ஆணையிடலாம்;
ஆனால் அது பொய்யாணையே.
3ஆண்டவரே, உம் கண்கள்
பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன!
நீர் அவர்களை நொறுக்கினீர்;
அவர்களோ வேதனையை உணரவில்லை;
நீர் அவர்களை அழித்தீர்;
அவர்களோ திருந்த மறுத்தனர்;
அவர்கள் தங்கள் முகத்தைப்
பாறையினும் கடியதாக
இறுக்கிக்கொண்டனர்.
உம்மிடம் திரும்பிவர மறுத்தனர்.
4நான் ‘அவர்கள் தாழ்நிலையில்
உள்ளவர்கள்;
அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்’
என எண்ணினேன்;
ஏனெனில், அவர்கள் ஆண்டவரின்
வழிமுறைகளையும்,
தம் கடவுளின் நெறிமுறைகளையும்
அறியாதிருக்கின்றார்கள்.
5நான் உயர் நிலையில்
உள்ளவர்களிடம் போய்,
அவர்களிடம் பேசுவேன்.
ஏனெனில், அவர்கள்
ஆண்டவரின் வழிமுறைகளையும்,
தம் கடவுளின் நெறிமுறைகளையும்
அறிந்தவர்களாய் இருக்கிறார்கள்என
நினைத்தேன். ஆனால்,
அவர்களும் நுகத்தை முறித்தார்கள்;
தளைகளை அறுத்தார்கள்.
6எனவே காட்டுச் சிங்கம்
அவர்களைக் கொல்லும்,
பாலைநிலத்து ஓநாய்
அவர்களை அழிக்கும்,
சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல்
கண்வைத்திருக்கும்;
அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும்
பீறிக் கிழித்தெறியப்படுவர்.
ஏனெனில், அவர்கள்
வன்செயல்கள் பல செய்தனர்;
என்னை விட்டுப் பன்முறை
விலகிச் சென்றனர்.
7நான் ஏன் உன்னை
மன்னிக்க வேண்டும்?
உன் மக்கள்
என்னைப் புறக்கணித்தார்கள்;
தெய்வங்கள் அல்லாதவைமீது
ஆணையிட்டார்கள்;
அவர்கள் உண்டு
நிறைவடையுமாறு செய்தேன்;
அவர்களோ
விபசாரம் பண்ணினார்கள்;
விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;
8தின்று கொழுத்து மோக வெறி கொண்ட
குதிரைகள்போல்,
ஒவ்வொருவனும் தனக்கு
அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக்
கனைக்கிறான்.
9இவற்றிற்காக நான்
தண்டிக்க மாட்டேனா?
என்கிறார் ஆண்டவர்.
இத்தகைய மக்களை நான்
பழி வாங்காமல் இருப்பேனா?
10திராட்சைத் தோட்டச்
சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்;
எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம்.
அதன் படர்கொடிகளை
ஒடித்தெறியுங்கள்.
அவை ஆண்டவருடையவை அல்ல.
11ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும்
யூதா வீட்டாரும் எனக்கு எதிராக
நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர்,
என்கிறார் ஆண்டவர்.
12அவர்கள் ஆண்டவரைக் குறித்துப்
பொய்யாகச் சொன்னது:
“அவர் ஒன்றும் செய்யமாட்டார்;
நமக்குத் தீமை எதுவும் வராது;
வாளையும் பஞ்சத்தையும்
நாம் காணப்போதில்லை.”
13இறைவாக்கினர் பேசுவதெல்லாம்
காற்றோடு காற்றாய்ப் போகும்.
இறைவாக்கு அவர்களிடம் இல்லை;
அவர்கள் கூறியவாறு
அவர்களுக்கே நிகழும்.


வரப்போகும் எதிரிகள்


14ஆகவே படைகளின் கடவுளாகிய
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
“அவர்கள் இப்படிப் பேசியதால்
நான் உன் வாயில் வைக்கும்
என் சொற்கள் நெருப்பாகும்.
உன் வாயில் வைத்த அவை
மரக்கட்டைகளாகிய இம்மக்களை
எரித்துவிடும்.
15இஸ்ரயேல் வீட்டாரே,
இதோ! தொலையிலிருந்து
உங்களுக்கு எதிராக ஓரினத்தை
அழைத்து வருவேன்,
என்கிறார் ஆண்டவர்.
அது எதையும் தாங்கும் இனம்;
தொன்று தொட்டு
நிலைத்து நிற்கும் இனம்.
அதன் மொழி உனக்குப் புரியாது;
அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.
16அவர்களது அம்புக் கூடு
திறந்த கல்லறை போன்றது.
அவர்கள் அனைவரும்
வலிமை வாய்ந்தவர்கள்.
17அவர்கள் உன் விளைச்சலையும்
உணவையும் விழுங்கிவிடுவார்கள்;
புதல்வர், புதல்வியரை
விழுங்கிவிடுவார்கள்;
உன் ஆடு மாடுகளை
விழுங்கிவிடுவார்கள்;
உன் திராட்சைக் கொடிகளையும்
அத்தி மரங்களையும்
விழுங்கிவிடுவார்கள்;
நீ நம்பியிருக்கும்
உன் அரண்சூழ் நகர்களை
வாளால் அழிப்பார்கள்.

18அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன்,” என்கிறார் ஆண்டவர். 19“எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்?” என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், “நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்” என்று சொல்.


இறைவனின் எச்சரிக்கை


20யாக்கோபின் வீட்டாருக்கு
இதைப்பறைசாற்றுங்கள்;
யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.
21கண்ணிருந்தும் காணாத,
காதிருந்தும் கேளாத மதிகெட்ட,
இதயமற்ற மக்களே, கேளுங்கள்;✠
22உங்களுக்கு என் மீது அச்சமில்லையா?
என்கிறார் ஆண்டவர்.
என் முன்னிலையில்
நீங்கள் நடுங்க வேண்டாமா?
கடலுக்கு எல்லையாக
மணலை வைத்தேன்.
இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு,
அதனைக் கடக்க முடியாது.
அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்;
எனினும் அதன்மேல்
வெற்றி கொள்ள முடியாது.
அவைகள் சீறி முழங்கலாம்;
எனினும் அதனை மீற முடியாது.✠
23இம்மக்களோ கட்டுக்கடங்காதவர்,
பிடிவாத குணத்தினர்,
என்னை விட்டு விலகிச் சென்றனர்.
24“தக்க காலத்தில் முன் மாரி,
பின் மாரியைத் தருபவரும்,
விளைச்சலுக்காகக்
குறிக்கப்பட்ட வாரங்களை
நமக்காகக் காத்து வருபவருமான
நம் கடவுளாகிய ஆண்டவருக்கு
அஞ்சுவோம்” என்னும் எண்ணம்
அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.
25உங்கள் குற்றங்கள்
இவற்றை எல்லாம் தடுத்தன;
உங்கள் பாவங்களே உங்களுக்கு
நன்மை வராமலிருக்கச் செய்தன.
26ஏனெனில், என் மக்களிடையே
தீயோர் காணப்படுகின்றனர்;
வேடர் பதுங்கியிருப்பதுபோல்
அவர்கள் மறைந்து கண்ணி வைத்து
மனிதர்களைப் பிடிக்கின்றனர்.
27பறவைகளால்
கூண்டு நிறைந்திருப்பது போல,
அவர்களின் வீடுகள்
சூழ்ச்சிவழி கிடைத்த
பொருள்களினால் நிறைந்துள்ளன.
இவ்வாறு அவர்கள் பெரியவர்களும்
செல்வர்களும் ஆனார்கள்.
28அவர்கள் கொழுத்துத்
தளதள வென்றிருக்கின்றார்கள்;
அவர்களின் தீச்செயல்களுக்குக்
கணக்கில்லை;
வழக்குகளை
நீதியுடன் விசாரிப்பதில்லை;
அனாதைகள் வளம்பெறும் வகையில்
அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை.
ஏழைகளின் உரிமைகளை
நிலைநாட்டுவதுமில்லை.
29இவற்றிற்காக நான்
இவர்களைத் தண்டிக்க வேண்டாமா?
என்கிறார் ஆண்டவர்.
இத்தகைய மக்களினத்தை
நான் பழிவாங்காமல் விடுவேனா?
30திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி
நாட்டில் நடக்கின்றது.
31இறைவாக்கினர் பொய்யை
இறைவாக்காக உரைக்கின்றனர்;
குருக்கள் தங்கள் விருப்பப்படியே
அதிகாரம் செலுத்துகின்றனர்;
இதையே என் மக்களும் விரும்புகின்றனர்;
ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்?


5:21 எசா 6:9-10; எசே 12:2; மாற் 8:18. 5:22 யோபு 38:8-11.



அதிகாரம் 6:1-30

எருசலேமைச் சுற்றிலும் எதிரிகள்


1பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து
தப்பியோடுங்கள்;
தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்;
பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்;
ஏனெனில் வடக்கிலிருந்து
தீமையும், பேரழிவும் வருகின்றன.
2*மகள் சீயோனை
வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்*.✠
3ஆயர்கள் தங்கள் மந்தையோடு
அவளிடம் வருவார்கள்;
அவளைச் சுற்றிலும்
கூடாரங்கள் அடிப்பார்கள்;
அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.
4“அவளுக்கு எதிராய்ப்
போருக்குத் தயாராகுங்கள்;
எழுந்திருங்கள்;
நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்;
ஐயோ! பொழுது சாய்கின்றதே!
மாலை நேரத்து நிழல்கள்
நீள்கின்றனவே!
5எழுந்திருங்கள்;
இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்;
அவள் அரண்மனைகளை
அழிப்போம்” என்பார்கள்.
6படைகளின் ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்;
அவளுடைய மரங்களை வெட்டுங்கள்;
எருசலேமுக்கு எதிராக
முற்றுகைத் தளம் எழுப்புங்கள்;
அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்;
அவளிடம் காணப்படுவது அனைத்தும்
கொடுமையே.
7கேணியில் நீர்
சுரந்து கொண்டிருப்பது போல்
அவள் தீமைகளைச்
சுரந்து கொண்டிருக்கின்றாள்.
வன்முறை, அழிவு என்பதே
அவளிடம் எழும் குரல்;
நோயும் காயமுமே
என்றும் என் கண்முன் உள்ளன.
8எருசலேமே, எச்சரிக்கையாய் இரு;
இல்லையேல், நான் உன்னைவிட்டு
அகன்று போவேன்;
உன்னை மனிதர் வாழாப்
பாழ்நிலம் ஆக்குவேன்.
9படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே;
திராட்சைக் கொடிகளில்
தப்பும் பழங்களை ஒன்றும் விடாது
பறித்துச் சேர்ப்பது போல,
இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக்
கூட்டிச்சேர்.
திராட்சைத் தோட்டக்காரரைப்போல்
கிளைகளிடையே
உன் கையை விட்டுப் பார்.
10நான் யாரிடம் பேசுவேன்?
யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்?
யார் செவி கொடுப்பார்?
அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை;
அவர்களால் செவிகொடுக்க முடியாது;
ஆண்டவரின் வாக்கு
அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று;
அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.
11ஆண்டவரின் சீற்றம்
என்னில் நிறைந்துள்ளது;
அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்;
ஆண்டவர் கூறுவது;
தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும்
ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும்
சினத்தைக் கொட்டு.
கணவனும் மனைவியும்,
முதியோரும் வயது நிறைந்தோரும் பிடிபடுவர்.
12அவர்களுடைய வீடுகளையும்
நிலங்களையும் மனைவியரையும்
பிறர் கைப்பற்றுவர்;
ஏனெனில், நாட்டில்
குடியிருப்போருக்கு எதிராய்
என் கையை நீட்டப்போகிறேன்.
13ஏனெனில், சிறியோர் முதல்
பெரியோர் வரை அனைவரும்
கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்;
இறைவாக்கினர் முதல்
குருக்கள்வரை அனைவரும்
ஏமாற்றுவதையே
தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
14அமைதியே இல்லாதபொழுது,
‘அமைதி, அமைதி’ என்று கூறி
என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை
மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.✠
15அருவருப்பானதைச் செய்தபோது
அவர்கள் வெட்கமடைந்தார்களா?
அப்போதுகூட அவர்கள்
வெட்கமடையவில்லை;
நாணம் என்பதே என்னவென்று
அவர்களுக்குத் தெரியாது;
எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு
அவர்களும் வீழ்வர்;
நான் அவர்களைத் தண்டிக்கும்போது
அவர்கள் வீழ்த்தப்படுவர்
என்கிறார் ஆண்டவர்.
16ஆண்டவர் கூறுவது இதுவே:
சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்;
தொன்மையான பாதைகள் எவை?
நல்ல வழி எது? என்று கேளுங்கள்;
அதில் செல்லுங்கள்.
அப்போது உங்களுக்கு
அமைதி கிடைக்கும்.
அவர்களோ, “அவ்வழியே
செல்ல மாட்டோம்” என்றார்கள்.✠
17நான் உங்களுக்குக்
காவலரை நியமித்தேன்.
“எக்காளக் குரலுக்குச்
செவி கொடுங்கள்” என்றேன்.
அவர்களோ, “செவிசொடுக்க
மாட்டோம்” என்றார்கள்.
18எனவே, நாடுகளே கேளுங்கள்;
மக்கள் கூட்டத்தாரே,
அவர்களுக்கு என்ன நேரப்போகிறது
என்று பாருங்கள்.
19நிலமே, நீயும் கேள்;
இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன்.
அவர்களின் தீய எண்ணங்களின்
விளைவே இத்தீமை.
ஏனெனில், அவர்கள்
என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை;
என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
20சேபா நாட்டுத் தூபமும்
தூரத்து நாட்டு நறுமண நாணலும்
எனக்கு எதற்கு?
உங்கள் எரிபலிகள்
எனக்கு ஏற்புடையவை அல்ல.
உங்களின் மற்றைய பலிகளும்
எனக்கு உவகை தருவதில்லை.
21ஆண்டவர் கூறுவது இதுவே;
இதோ இம் மக்களுக்கு எதிராகத்
தடைக்கற்களை வைக்கப்போகிறேன்.
தந்தையரும் தனயரும்
ஒன்றாகத் தடுக்கி விழுவர்;
அடுத்திருப்பாரும் நண்பரும்
அழிந்து போவர்.
22ஆண்டவர் கூறுவது இதுவே;
இதோ! வடக்கு நாட்டினின்று
ஓர் இனம் வருகின்றது;
மண்ணுலகின் கடை எல்லைகளினின்று
பெரிய நாடு ஒன்று
கிளர்ந்து எழுகின்றது.
23அவர்கள் வில்லும் ஈட்டியும்
ஏந்தியுள்ளார்கள்;
அவர்கள் கொடியவர்; இரக்கமற்றவர்;
அவர்களின் ஆரவாரம்
கடலின் இரைச்சலைப் போன்றது;
மகளே சீயோன்!
அவர்கள் போருக்கு அணிவகுத்து
குதிரைகள் மீது வருகின்றார்கள்;
சவாரி செய்துகொண்டு
உனக்கெதிராய் வருகின்றார்கள்;
24“அவர்களைப் பற்றிய செய்தியை
நாம் கேள்வியுற்றபோது
நம் கைகள் தளர்ந்து போயின;
கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது;
பேறுகாலப் பெண்ணைப் போல்
நாம் தவிக்கின்றோம்.
25வயல்வெளிக்குப்
போகவேண்டாம்;
சாலைகளில் செல்ல வேண்டாம்;
ஏனெனில், எதிரியின் வாள்
எங்கும் உள்ளது;
சுற்றிலும் ஒரே திகில்.
26மகளாகிய என் மக்களே!
சாக்கு உடை உடுத்துங்கள்;
சாம்பலில் புரளுங்கள்;
இறந்த ஒரே பிள்ளைக்காகத்
துயருற்று அழுவது போல்,
மனமுடைந்து அழுது புலம்புங்கள்.
ஏனெனில், அழிப்பவன் திடீரென
நமக்கெதிராய் வருவான்.”
27நான் உன்னை என் மக்களுக்குள்
மதிப்பீடு செய்பவனாகவும்,
ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்;
நீ அவர்களின் வழிகளை அறிந்து
மதிப்பீடு செய்வாய்.✠
28அவர்கள் எல்லாரும்
அடங்காத கலகக்காரர்கள்;
பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்;
அவர்கள் யாவரும் வெண்கலத்தையும்
இரும்பையும் போன்றவர்கள்;
அவர்களின் செயல்கள் கறைபட்டவை.
29துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன;
காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது.
தூய்மைப்படுத்தும் வேலை
தொடர்ந்து நடப்பதில் பயனில்லை;
ஏனெனில், தீயவர்கள் இன்னும்
நீக்கப்படவில்லை.
30அவர்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’
என்று அழைக்கப்படுவார்கள்.
ஏனெனில், ஆண்டவர் அவர்களைப்
புறக்கணித்துள்ளார்.


6:12-15 எரே 8:10-12. 6:14 எசே 13:10. 6:16 மத் 11:29.


6:2 “மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்” என்பதன் வேறு பாடம் “வளமான பசும்புல் தரையாகிய மகள் சீயோனை அழிப்பேன்”. 6:27 ‘ஆய்வாளனாகவும்’ என்பது ‘அரணாகவும்’ எனவும் பொருள்படும்.



அதிகாரம் 7:1-34

உண்மையான வழிபாடு


1ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: 2ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே; ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள். 3இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: “உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன். 4“இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!” என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம். 5நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால், 6அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும் வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால், 7இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.

8நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள். 9களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்; பொய்யாணை இடுகிறீர்கள்; பாகாலுக்குத் தூபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள். 10ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, “நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்” என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு? 11என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்கிறார் ஆண்டவர்.✠ 12நான் முன்னாளில் குடியிருந்த சீலோ என்னும் என் இடத்திற்குப் போங்கள். என் மக்கள் இஸ்ரயேல் செய்த தீமையின் பொருட்டு நான் அதற்குச் செய்துள்ளதைப் பாருங்கள். 13ஆண்டவர் கூறுவது; நீங்கள் இந்தத் தீய செயல்களை எல்லாம் செய்தீர்கள். நான் தொடர்ந்து கூறியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. நான் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தரவில்லை. 14எனவே, என் பெயர் விளங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்தக் கோவிலுக்கும் உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இந்த இடத்திற்கும் சீலோவிற்குச் செய்தது போலவே செய்யப்போகிறேன். 15உங்கள் சகோதரர் அனைவரையும் எப்ராயிம் வழிமரபினர் யாவரையும் ஒதுக்கியதுபோல, உங்களையும் என் முன்னிலையிலிருந்து ஒதுக்கிவிடுவேன்.


மக்களுக்காக மன்றாட வேண்டாம்


16இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்; இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்; என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன். 17யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா? 18புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.✠ 19எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்; தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு! 20ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்; அதனை அணைக்க முடியாது.


மக்களின் பிடிவாத குணம்


21இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள். 22உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை; கட்டளையிடவும் இல்லை. 23ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும். 24அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள். 25உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். 26அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.

27நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள். 28தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.


இன்னோம் பள்ளத்தாக்கில் சிலை வழிபாடு

29உன் தலை முடியை மழித்து
எறிந்துவிடு;
மொட்டைக் குன்றுகளில் நின்று
ஒப்பாரி வை;
ஏனெனில், தம் சீற்றத்தில் ஆண்டவர்
இத்தலைமுறையைப்
புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.

30ஏனெனில், யூதாவின் மக்கள் என் கண்முன் தீமை செய்தனர் என்கிறார் ஆண்டவர். என் பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி அவர்கள் அருவருப்பானவற்றை அங்கு வைத்தார்கள். 31அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி பென்இன்னோம் பள்ளத்தாக்கில் உள்ள தோபேத்தில் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இதனை நான் கட்டளையிடவில்லை. இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.✠ 32ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது; மாறாகப் “படுகொலைப் பள்ளத்தாக்கு” என்று அழைக்கப்படும்; வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர். 33இம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். யாரும் அவற்றை விரட்ட மாட்டார்கள். 34அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும்.✠


7:11 மத் 21:13; மாற் 11:17; லூக் 19:46. 7:12-14 யோசு 18:1; திபா 78:60; எரே 26:6. 7:18 எரே 44:17-19. 7:31 லேவி 18:21; 2 அர 23:10; எரே 32:35. 7:34 எரே 16:9; 25:10; திவெ 18:23.



அதிகாரம் 8:1-22

1அப்போது யூதாவின் அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேமில் குடியிருப்போர் ஆகியோரின் எலும்புகளை அவர்களின் கல்லறைகளிலிருந்து தோண்டி எடுப்பர், என்கிறார் ஆண்டவர். 2அவற்றைக் கதிரவன், நிலா, விண்மீன்கள் ஆகியவற்றின்முன் பரப்புவார்கள். இவற்றுக்குத்தாமே அவர்கள் அன்பு காட்டிப் பணிவிடை புரிந்தார்கள்! இவற்றின் பின்தானே அலைந்து திரிந்தார்கள்! இவற்றிடம் தானே குறி கேட்டார்கள்! இவற்றைத்தானே வழிபட்டார்கள்! அவ்வெலும்புகளை யாரும் மீண்டும் ஒன்றுசேர்த்துப் புதைக்கமாட்டார்கள். அவை தரையில் சாணம் போல் கிடக்கும். 3நான் அவர்களைத் துரத்தியுள்ள இடங்களில் எல்லாம், இந்தத் தீய மக்களில் எஞ்சியிருப்போர் யாவரும் வாழ்வைவிடச் சாவையே விரும்புவர், என்கிறார் படைகளின் ஆண்டவர்.


அச்சுறுத்தல்கள்


4நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது;
“ஆண்டவர் கூறுவது இதுவே;
விழுந்தவன் எழுவதில்லையா?
பிரிந்து சென்றவன்
திரும்பி வருவதில்லையா?
5ஏன் இந்த எருசலேமின் மக்கள்
என்றென்றைக்கும்
என்னை விட்டு விலகிப்
பொய்யைப் பற்றிக்கொண்டு
நிற்கின்றார்கள்?
ஏன் திரும்பிவர மறுக்கின்றார்கள்?
6நான் செவிசாய்த்தேன்; உற்றுக்கேட்டேன்.
அவர்கள் சரியானதைச்
சொல்லவில்லை.
“நான் என்ன செய்துவிட்டேன்?” என்று
கூறுகிறார்களேயன்றி
எவருமே தம் தீச்செயலுக்காக
வருந்தவில்லை.
போர்க்களத்தில்
பாய்ந்தோடும் குதிரைபோல
யாவருமே தம் வழியில்
விரைகின்றார்கள்.
7வானத்துக் கொக்கு
தன் காலங்களை அறிந்துள்ளது.
புறாவும் தகைவிலானும் நாரையும்
தாம் இடம் பெயரும் காலத்தை
அறிந்துள்ளன.
என் மக்களோ,
ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!
8“நாங்கள் ஞானிகள்;
ஆண்டவரின் சட்டம்
எங்களோடு உள்ளது” என
நீங்கள் எவ்வாறு கூறமுடியும்?
மறைநூல் அறிஞரின்
பொய் எழுதும் எழுதுகோல்
பொய்யையே எழுதிற்று.
9ஞானிகள் வெட்கமடைவர்;
திகிலுற்றுப் பிடிபடுவர்;
ஏனெனில், அவர்கள்
ஆண்டவரின் வாக்கைப்
புறக்கணித்தார்கள்;
இதுதான் அவர்களின் ஞானமா?
10ஆகவே, நான்
அவர்களுடைய மனைவியரை
வேற்றவருக்குக் கொடுப்பேன்;
அவர்களுடைய நிலங்களைக்
கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்;
ஏனெனில், சிறியோர் முதல்
பெரியோர் வரை அனைவரும்
கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்.
இறைவாக்கினர் முதல்
குருக்கள்வரை அனைவரும்
ஏமாற்றுவதையே
தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
11அமைதியே இல்லாத பொழுது
‘அமைதி, அமைதி’ என்று கூறி
என் மகளாகிய மக்களுக்கு
ஏற்பட்ட காயத்தை
மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.✠
12அருவருப்பானதைச் செய்தபோது
அவர்கள் வெட்கம் அடைந்தார்களா?
அப்போதுகூட அவர்கள்
வெட்கம் அடையவில்லை;
நாணம் என்பது என்னவென்று
அவர்களுக்குத் தெரியாது;
எனவே மடிந்து விழுந்தவர்களோடு
அவர்களும் மடிந்து விழுவர்;
நான் அவர்களை தண்டிக்கும் போது
அவர்கள் வீழ்த்தப்படுவர்,
என்கிறார் ஆண்டவர்.
13நான் கனிகளை
ஒன்று சேர்க்க விரும்பினேன்.
ஆனால், திராட்சைக் கொடியில்
பழங்கள் இல்லை;
அத்தி மரங்களில் கனிகள் இல்லை.
இலைகள்கூட உதிர்ந்து போயின.
நான் அவர்களுக்குக் கொடுத்தது
அவர்களிடமிருந்து நழுவிப் போயிற்று.
14நாம் இங்கு ஏன் அமர்ந்திருக்கிறோம்?
ஒன்றிணைவோம்;
அரண் சூழ் நகர்களுக்குப் போவோம்;
அங்குச் சென்று மடிவோம்;
ஏனெனில், நம் கடவுளாகிய ஆண்டவர்
நம்மை மடியும்படி விட்டுவிட்டார்;
நஞ்சு கலந்த நீரை
நாம் குடிக்கச் செய்தார்;
ஏனெனில், நாம் ஆண்டவருக்கு எதிராகப்
பாவம் செய்தோம்.
15நாங்கள் அமைதிக்காகக்
காத்திருந்தோம்;
ஆனால் பயனேதும் இல்லை.
நலம் பெறும் காலத்தை
எதிர்ப்பார்த்திருந்தோம்;
பேரச்சமே மிஞ்சியது.
16தாணிலிருந்து அவனுடைய
குதிரைகளின் சீறல் கேட்கின்றது;
வலிமை வாய்ந்த குதிரைகளின் கனைப்பு
நாட்டையெல்லாம் நடுங்கச் செய்கின்றது.
அவர்கள் வந்து
நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும்
நகரையும் அதில் குடியிருப்போரையும்
விழுங்கிவிடுவார்கள்.
17நான் உங்கள் நடுவில்
பாம்புகளை அனுப்புவேன்.
எதற்கும் மயங்கா
நச்சுப் பாம்புகளை அனுப்புவேன்;
அவை உங்களைக் கடிக்கும்,
என்கிறார் ஆண்டவர்.


எரேமியாவின் புலம்பல்


18துயரம் என்னை மேற்கொண்டது;
என் உள்ளம் நலிந்து போய்விட்டது.
19இதோ என் மகளாகிய
மக்களின் அழுகுரல்
தூரத்து நாட்டிலிருந்து கேட்கிறதே;
சீயோனில் ஆண்டவர் இல்லையா?
அவளின் அரசர் அங்கே இல்லையா?
செதுக்கிய உருவங்களாலும்
வேற்றுத் தெய்வச் சிலைகளாலும்
எனக்கு ஏன் சினமூட்டினார்கள்?
20அறுவடைக் காலம் முடிந்துவிட்டது;
வேனிற்காலம் கடந்துவிட்டது;
நமக்கோ இன்றும்
விடுதலை கிடைக்கவில்லை.
21என் மகளாகிய
மக்களுக்கு ஏற்பட்ட முறிவு
எனக்கே ஏற்பட்டதாகும்.
நான் துயருறுகிறேன்.
திகில் என்னைப் பற்றிக் கொண்டுள்ளது.
22அம்முறிவில் தடவக் கிலயாதில்
பொன்மெழுகு இல்லையா?
அங்கே மருத்துவர் இல்லையா?
அப்படியானால், என் மகளாகிய மக்கள்
ஏன் இன்னும் குணமாகவில்லை?


8:10-12 எரே 6:12-15. 8:11 எசே 13:10.



அதிகாரம் 9:1-26

1என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்
என் கண்கள் கண்ணீரின்
ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?
அப்படியானால், என் மகளாம்
மக்களுள் கொலையுண்டோருக்காக
இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!


யூதாவின் தீய வாழ்வு


2பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று
எனக்கு இருக்கக் கூடாதா?
நான் மக்களைப் புறக்கணித்து
அவர்களிடமிருந்து சென்று விடலாமே!
ஏனெனில், அவர்கள் யாவரும்
விபசாரிகள்,
நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.
3பொய்பேசத் தங்கள் நாவை
வில்லைப்போல்
அவர்கள் வளைக்கின்றனர்;
உண்மைக்காக நாட்டில்
யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை;
அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே
சென்று கொண்டிருக்கிறார்கள்;
என்னையோ அவர்கள்
அறிந்து கொள்ளவில்லை,
என்கிறார் ஆண்டவர்.
4ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப்
பொறுத்தவரை
எச்சரிக்கையாய் இருக்கட்டும்.
எந்த உறவினரையும் நம்பவேண்டாம்.
ஏனெனில், எல்லா உறவினரும்
ஏமாற்றுவர் என்பது உறுதி;
அடுத்திருப்பவர் அனைவரும்
புறணி பேசுகின்றனர்;
5எல்லாரும் அடுத்திருப்பவரை
ஏமாற்றுகின்றனர்;
யாருமே உண்மை பேசுவதில்லை;
பொய் பேசத் தங்கள் நாவைப்
பழக்கியுள்ளார்கள்;
குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.
6நீயோ வஞ்சனை செய்வார் நடுவில்
வாழ்கின்றாய்;
தங்கள் வஞ்சனையின் காரணமாக
என்னை அவர்கள்
அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
7எனவே, படைகளின் ஆண்டவர்
இவ்வாறு கூறுகின்றார்;
நான் அவர்களைப் புடமிடுவேன்;
பரிசோதிப்பேன்;
என் மகளாகிய மக்களுக்கு நான்
வேறு என்னதான் செய்யமுடியும்?
8அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு;
அது பேசுவது வஞ்சனை;
எல்லாரும் தம் வாயால்
அடுத்திருப்பவர்களோடு
சமாதானமாய்ப் பேசுகின்றனர்;
உள்ளத்திலோ அவர்களுக்குக்
குழி பறிக்கின்றனர்.
9இவற்றின் பொருட்டு
நான் அவர்களைத்
தண்டியாமல் விடுவேனோ?
இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை
நான் பழிவாங்காமல் இருப்பேனோ?
என்கிறார் ஆண்டவர்.


சீயோனில் புலம்பல்


10மலைகளைக் குறித்து
அழுது புலம்புவோம்;
பாழ்வெளி மேய்ச்சல்
நிலத்தின் பொருட்டு
ஒப்பாரி வைப்போம்;
ஏனெனில் அனைத்தும்
தீய்ந்து போயின;
அவை வழியாய்ச் செல்வோர்
யாருமில்லை;
கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை;
வானத்துப் பறவைகள் முதல்
விலங்குகள் வரை அனைத்துமே
ஓடி மறைந்து விட்டன.
11எருசலேமை அழித்துக்
கற்குவியலாக்குவேன்;
அதனைக் குள்ளநரிகளின்
வளையாக்குவேன்;
யூதா நகர்களை யாரும் வாழாப்
பாழ்வெளியாக்குவேன்.


12இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்? 13ஆண்டவர் கூறுவது; நான் அவர்களுக்குக் கொடுத்த சட்டத்தைப் புறக்கணித்தார்கள். என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை; அதன்படி நடக்கவும் இல்லை. 14மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்; தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி பாகாலைப் பின்பற்றினார்கள். 15ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன். நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன். 16அவர்களோ அவர்தம் மூதாதையரோ அறிந்திராத மக்களினங்கள் நடுவில் அவர்களைச் சிதறடிப்பேன். நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன். போர் எழச் செய்வேன்.

17படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;
இதோ! கேளுங்கள்.
ஒப்பாரி வைக்கும் பெண்களை
வரச்சொல்லுங்கள்;
அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச்
சொல்லியனுப்புங்கள்.
18அவர்கள் விரைந்து வந்து
நம்மைக் குறித்துப் புலம்பட்டும்;
நம் கண்கள் நீர் பொழியட்டும்;
நம் இமைகள் நீர் சொரியட்டும்.
19ஏனெனில், சீயோனிலிருந்து
புலம்பல் கேட்கின்றது;
“நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே;
நம் மானமெல்லாம் போயிற்றே;
நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே.
நம் குடியிருப்புகள்
தகர்க்கப்பட்டனவே.”
20பெண்டிரே!
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
உங்கள் செவிகள் அவர்தம்
வாய்மொழியை ஏற்கட்டும்;
உங்கள் புதல்வியருக்குப்
புலம்பக் கற்றுக்கொடுங்கள்.
ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு
ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.
21ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய்
வந்துவிட்டது;
நம் அரண்களுக்குள்ளும்
நுழைந்து விட்டது;
தெருக்களில் சிறுவர்களையும்
பொதுவிடங்களில் இளைஞர்களையும்
வீழ்த்திவிட்டது.
22ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்
எனச் சொல்;
மனிதரின் பிணங்கள் சாணம்போல்
வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்;
அறுவடை செய்வோனுக்குப் பின்னால்
விடப்பட்ட அரிகளைப் போலக் கிடக்கும்.


ஆண்டவரை அறிதலே பெருமை


23ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தம் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். 24பெருமை பாராட்ட விரும்புபவர், “நானே ஆண்டவர்” என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.✠ 25இதோ! நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம் செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன். 26எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும் முன்தலையை மழித்துக் கொள்ளும் பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்; ஏனெனில் வேற்றினத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்; இஸ்ரயேல் வீட்டார் யாவரும் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.


9:24 1 கொரி 1:31; 2 கொரி 10:17.



அதிகாரம் 10:1-25

சிலைகளும் உண்மைக் கடவுளும்

1இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர்
உங்களுக்குக் கூறும் சொல்லைக்
கேளுங்கள்.
2ஆண்டவர் கூறுவது இதுவே;
வேற்றினங்களின் வழியைக்
கற்றுக் கொள்ளாதீர்;
வானத்தில் தோன்றும்
அடையாளங்களைக் கண்டு
கலங்காதீர்;
வேற்றினத்தாரே
அவற்றால் கலக்கமுறுவர்.
3வேற்றினங்கள் வழிபடும் சிலைகள்
வீணானவை;
அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட
மரத்தாலானவை;
கைவினைஞர் உளியால் செய்த
வேலைப்பாடுகள்.
4அவை பொன், வெள்ளியால்
அணி செய்யப்பட்டவை.
அசையாதபடி ஆணி,
சுத்தியல் கொண்டு
பொருத்தப் பெற்றவை.
5அவை வெள்ளரித் தோட்டத்துப்
பொம்மை போன்றவை;
அவற்றால் பேச முடியாது;
அவற்றைத் தூக்கிக்கொண்டுதான்
செல்லவேண்டும்.
அவற்றால் நடக்கவும் முடியாது.
அவை நன்மையும் செய்யா;
தீமையும் செய்யா;
அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
6ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்;
நீர் பெரியவர்;
உமது பெயர் ஆற்றல் மிக்கது.
7மக்களினங்களின் மன்னரே!
உமக்கு அஞ்சாதவர் யார்?
அரசுரிமை உமதே;
வேற்றினத்தாரின் ஞானிகள்
அனைவரிலும்
அவர்களின் அரசுகள் அனைத்திலும்
உமக்கு நிகர் யாருமிலர்.✠
8அவர்கள் மூடர்களும்
முட்டாள்களுமாய் உள்ளனர்;
அவர்களது போதனையின் பொருளாம்
சிலைகள் மரக்கட்டைகளே.
9தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்,
ஊபாசிலிருந்து பொன்னும்
வந்து சேர்கின்றன.
அவை கைவினைஞரின்
வேலைப்பாடுகள்;
பொற்கொல்லனின்
கைத்திறனால் ஆனவை;
ஊதா, கருஞ்சிவப்பு
உடைகளைக் கொண்டவை.
அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற
கைவினைஞரின் வேலைப்பாடுகள்.
10ஆனால், ஆண்டவரே
உண்மையான கடவுள்!
அவரே வாழும் கடவுள்!
என்றும் ஆளும் அரசர்!
அவர் வெஞ்சினம் கண்டு
நிலம் நடுங்கும்;
அவர் கடுங்கோபத்தை
வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.
11நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு;
விண்ணையும் மண்ணையும்
உருவாக்காத அந்தத் தெய்வங்கள்
மண்ணின் மீதும் விண்ணின் கீழும்
இல்லாதொழியும்.
12அவரே தம் ஆற்றலால்
மண்ணுலகைப் படைத்தார்;
தம் ஞானத்தால்
பூவுலகை நிலை நாட்டினார்;
தம் கூர்மதியால்
விண்ணுலகை விரித்தார்.
13அவர் குரல் கொடுக்க
வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது;
மண்ணுலகின் எல்லையினின்று
மேகங்கள் எழச்செய்கிறார்;
மழை பொழியுமாறு
மின்னல் வெட்டச் செய்கிறார்;
தம் கிடங்குகளினின்று
காற்று வீசச் செய்கிறார்.
14மனிதர் யாவரும் மூடர்கள்,
அறிவிலிகள்;
கொல்லர் எல்லாரும்
தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;
அவர்களின் வார்ப்புப் படிமங்கள்
பொய்யானவை;
அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.
15அவை பயனற்றவை;
ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;
தம் தண்டனையின் காலத்தில்
அவை அழிந்துவிடும்.
16யாக்கோபின் பங்காய் இருப்பவரோ
இவற்றைப் போன்றவர் அல்லர்;
அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;
அவரது உரிமைச் சொத்தாகிய
இஸ்ரயேல் இனத்தை
உருவாக்கியவரும் அவரே;
படைகளின் ஆண்டவர் என்பது
அவர் பெயராகும்.


நாடுகடத்தப்படவிருத்தல்


17முற்றுகையிடப்பட்டவனே,
தலையில் கிடக்கும் உன் பொருள்களை
மூட்டையாகக் கட்டு.
18ஏனெனில்,
ஆண்டவர் கூறுவது இதுவே;
நாட்டில் வாழ்வோரை
இத்தருணத்தில் வீசி எறிவேன்;
அவர்கள் என்னைக் கண்டுணருமாறு
அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.
19ஐயோ நான் நொறுங்குண்டேன்;
என் காயம் கொடியது;
நானோ “உண்மையில் இது ஒரு நோய்;
நான் இதைத் தாங்கியே
ஆக வேண்டும்” என்று
எண்ணிக்கொண்டேன்.
20என் கூடாரம் அழிக்கப்பட்டது;
அதன் கயிறுகளெல்லாம்
அறுத்தெறியப்பட்டன;
என் மக்கள் என்னைவிட்டுச்
சென்றுவிட்டனர்;
அவர்கள் இங்கு இல்லை;
என் கூடாரத்தை மீண்டும்
எழுப்புவார் எவருமிலர்;
அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.
21ஏனெனில், மேய்ப்பவர்கள்
மூடர்களாய் இருந்தனர்;
அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை;
எனவே, அவர்கள் வாழ்வு
வளம் பெறவில்லை;
அவர்களின் மந்தைகள் எல்லாம்
சிதறிப்போயின.
22குரல் ஒலி ஒன்று கேட்கின்றது;
அது அண்மையில் ஒலிக்கின்றது;
வடக்கு நாட்டிலிருந்து
பெருங் கொந்தளிப்பு எழுகின்றது;
யூதாவின் நகர்கள் பாழாகிக்
குள்ள நரிகளின்
வளையாகப் போகின்றன.
23ஆண்டவரே! நான் அறிவேன்;
மனிதர் செல்ல வேண்டிய வழி
அவர்களின் கையில் இல்லை;
நடப்பவன் காலடிப் போக்கும்
அவர்களின் அதிகாரத்தில் இல்லை.
24ஆண்டவரே!
உம் சினத்திற்கு ஏற்ப அன்று,
உன் நீதிக்கு ஏற்ப
என்னைத் திருத்தியருளும்.
இல்லையெனில்,
நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.
25உம்மை அறியாத
வேற்றினத்தார் மேலும்,
உம் பெயரைச் சொல்லி மன்றாடாத
குடும்பத்தார் மேலும்
உன் சீற்றத்தைக் காட்டியருளும்.
ஏனெனில், அவர்கள் யாக்கோபை
விழுங்கிவிட்டார்கள்;
விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்;
அவர் குடியிருப்பையும்
பாழாக்கிவிட்டார்கள்.


10:7 திவெ 15:4.



அதிகாரம் 11:1-23

உடன்படிக்கை


1ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: 2“இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு யூதாவின் மக்களுக்கும் எருசலேமில் குடியிருப்போருக்கும் அறிவிப்பாய். 3நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளுக்குச் செவி கொடுக்காதவன் சபிக்கப்படுக! 4இரும்புச் சூளையாகிய எகிப்து நாட்டிலிருந்து நான் உங்கள் மூதாதையரைக் கூட்டிக்கொண்டு வந்த நாளில், அவர்களுக்குக் கட்டளையிட்டது இதுவே; என் குரலுக்குச் செவிசொடுத்து, நான் கட்டளையிடுவது அனைத்தையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். 5இன்று இருப்பதுபோல, அப்பொழுது, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக உங்கள் மூதாதையருக்கு நான் ஆணையிட்டுக் கூறியதை உறுதிப்படுத்துவேன்.” அதற்கு நான், ‘ஆண்டவரே! அப்படியே ஆகுக!’ என்று மறுமொழி கூறினேன்.

6ஆண்டவர் என்னிடம் கூறினார்: யூதா நகர்களிலும் எருசலேம் தெருக்களிலும் இந்த விதிமுறைகளை அறிவிப்பாய். ‘உடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுங்கள்’ என்று கூறுவாய். 7உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை அவர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளேன். என் குரலுக்குச் செவிகொடுங்கள் என்று வற்புறுத்திக் கூறியுள்ளேன். 8அவர்களோ கீழ்ப்படியவும் இல்லை; செவிசாய்க்கவும் இல்லை. மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி நடந்தனர். ஆகவே நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காத இந்த உடன்படிக்கையின் விதிமுறை அனைத்தின்படி அவர்களுக்கு எதிராகச் செயல்படுவேன்.

9ஆண்டவர் என்னிடம் கூறியது: யூதா மக்களிடமும் எருசலேம் வாழ் மக்களிடமும் சதித்திட்டம் ஒன்று தோன்றியுள்ளது. 10என் சொற்களுக்குச் செவிசாய்க்க மறுத்து, முன்பு தம் மூதாதையர் செய்த குற்றங்களை இவர்களும் செய்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குப்பின் திரிந்து, அவற்றுக்கு ஊழியம் செய்து, நான் அவர்கள் மூதாதையரோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரயேல் வீட்டாரும் யூதாவின் வீட்டாரும் முறித்துவிட்டனர். 11ஆகவே ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் அவர்கள் மீது தீமை வருவிக்கப்போகிறேன். அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது. அவர்கள் என்னை நோக்கி அழுகுரல் எழுப்பினாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்க்கமாட்டேன். 12அப்போது யூதா நகர்களில் குடியிருப்போரும் எருசலேம் வாழ் மக்களும் தாங்கள் தூபம் காட்டி வணங்கும் தெய்வங்களிடம் ஓடிச்சென்று அழுகுரல் எழுப்புவார்கள். ஆனால் அவர்களுக்குத் தீமை நேர்ந்த காலத்தில் அவற்றால் அவர்களை விடுவிக்கவே முடியாது. 13யூதாவே, உன் நகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உனக்குத் தெய்வங்கள் உள்ளன. எருசலேமிலுள்ள தெருக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வெட்கக் கேட்டிற்கு — பாகாலுக்கு — தூபம் காட்டப் பீடங்கள் அமைத்தீர்கள். 14எனவே இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம். இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவர்களுக்குத் தீமை நேரிடும்பொழுது அவர்கள் என்னை வருந்தி அழைத்தாலும் நான் செவிசாய்க்கமாட்டேன். 15என் இல்லத்தில் இருக்க என் அன்புக்குரியவளுக்கு என்ன உரிமை? அவள்தான் தன் எண்ணற்ற இழிசெயல்களைச் செய்துவருகிறாளே! உனக்கு வரவிருக்கும் தீமையைப் பலி இறைச்சி உன்னிடமிருந்து அகற்றிவிடுமா? அப்படியிருக்க ஏன் அக்களிக்கிறாய்? 16“பசுமையான, அழகிய, பார்வைக்கினிய பழங்களைக் கொண்ட ஒலிவ மரம்” என்பது ஆண்டவர் உனக்கு இட்ட பெயர். இப்போதோ கொடும் புயற்காற்றின் இரைச்சலுடன் அது தீப்பற்றி எரியச் செய்கிறார். அதன் கிளைகள் தீய்ந்து போயின. 17உன்னை நட்டுவளர்த்த படைகளின் ஆண்டவரே உனக்குத் தீமை வரும் என்று சொல்லிவிட்டார். ஏனெனில் இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் செய்தார்கள். எனக்குச் சினமூட்டும்படி பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்.


எரேமியாவைக் கொல்லச் சதி


18“ஆண்டவர் எனக்கு
வெளிப்படுத்தினார்;
நானும் புரிந்து கொண்டேன்.
பின்னர் நீர் அவர்களின்
செயல்களை எனக்குக் காட்டினீர்.
19வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும்
சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்;
அவர்கள் எனக்கு எதிராய்,
“மரத்தைப் பழத்தோடு அழிப்போம்;
வாழ்வோரின் நாட்டிலிருந்து
அவனை அகற்றிவிடுவோம்;
அவன் பெயர் மறக்கப்படட்டும்”
என்று சொல்லிச் சதித் திட்டம்
தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.
20படைகளின் ஆண்டவரே,
நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்;
உள்ளுணர்வுகளையும்
இதயச் சிந்தனைகளையும்
சோதித்தறிபவர்;
நீர் அவர்களைப் பழிவாங்குவதை
நான் காணவேண்டும்.
ஏனெனில், என் வழக்கை
உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.

21“ஆண்டவரின் பெயரால் இறைவாக்கு உரைக்காதே; உரைத்தால் எங்கள் கைகளாலே சாவாய்” என்று கூறி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அனத்தோத்தைச் சார்ந்த ஆள்களைப்பற்றி, 22படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இளைஞர்கள் வாளால் மடிவர்; புதல்வர், புதல்வியர் பஞ்சத்தால் அழிவர். 23அவர்களுள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அனத்தோத்தைச் சார்ந்த ஆள்கள் மேல், அவர்களைத் தண்டிக்கும் ஆண்டில், தீமை வரச்செய்வேன்.



அதிகாரம் 12:1-17

எரேமியாவின் முறையீடு


1ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர்;
ஆயினும் உம்மோடு நான்
வழக்காடுவேன்;
ஆம்; உம் தீர்ப்புக்கள் பற்றி
உம்மிடம் முறையிட விரும்புகிறேன்;
தீயோரின் வாழ்வு வளம் பெறக்
காரணம் என்ன?
நம்பிக்கைத் துரோகம் செய்வோர்
அமைதியுடன் வாழ்வது ஏன்?
2அவர்களை நீர் நட்டுவைத்தீர்;
அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்;
கனியும் ஈந்தார்கள்;
அவர்களின் உதடுகளில்
நீர் எப்போதும் இருக்கின்றீர்;
அவர்கள் உள்ளத்திலிருந்தோ
வெகு தொலையில் உள்ளீர்.
3ஆனால் ஆண்டவரே!
நீர் என்னை அறிவீர்;
என்னைப் பார்க்கின்றீர்;
என் இதயம் உம்மோடு உள்ளது
என்பதைச் சோதித்து அறிகின்றீர்;
அவர்களையோ வெட்டப்படுவதற்கான
ஆடுகளைப் போலக்
கொலையின் நாளுக்கெனப்
பிரித்து வைத்தருளும்.
4எவ்வளவு காலம் மண்ணுலகம்
புலம்பிக் கொண்டிருக்கும்?
வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம்
வாடிக் கிடக்கும்?
மண்ணுலகில் குடியிருப்போர் செய்த
தீமைகளின் காரணமாக,
விலங்குகளும் பறவைகளும்
அழிந்து போயின;
“நம் செயல்களைக்
கடவுள் காண்பதில்லை” என்று
அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.
5காலாள்களோடு ஓடியே
நீ களைத்துப்போனாய்;
குதிரைகளோடு நீ எவ்வாறு
போட்டியிட முடியும்?
அமைதியான நாட்டிலேயே
நீ அஞ்சுகிறாய் என்றால்,
யோர்தானின் காடுகளில்
நீ என்ன செய்வாய்?
6உன் சகோதரரும்
உன் தந்தை வீட்டாரும்கூட
உனக்கு நம்பிக்கைத் துரோகம்
செய்தார்கள்;
அவர்களும் உனக்கு எதிராக
உரக்கக் கத்தினார்கள்;
அவர்கள் உன்னிடம்
இனிமையாகப் பேசினாலும்
நீ அவர்களை நம்பாதே.


ஆண்டவரின் முறையீடு


7நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்;
என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்;
என் உள்ளத்துக்கு இனியவளை
அவளின் எதிரிகளிடம்
ஒப்புவித்துவிட்டேன்.
8என் உரிமைச்சொத்து எனக்கு
ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று;
அது எனக்கு எதிராய்க்
கர்ச்சிக்கின்றது;
எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.
9என் உரிமைச்சொத்து எனக்குப்
பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று;
சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம்
அதற்கு எதிராய் எழுந்துள்ளன;
வயல்வெளி விலங்குகளே,
வாருங்கள்; வந்து கூடுங்கள்;
அதனை விழுங்குங்கள்.
10மேய்ப்பர்கள் பலர்
என் திராட்சைத் தோட்டத்தை
அழித்தார்கள்;
எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்;
எனது இனிய பங்கைப்
பாழடைந்த பாலைநிலம் ஆக்கினார்கள்.
11அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்;
அது என்னை நோக்கிப் புலம்புகிறது;
நாடு முழுவதும் பாழாகிவிட்டது;
ஆனால் யாரும் அதுபற்றிக்
கவலைப்படுவதில்லை.
12பாழாக்குவோர் பாலைநிலத்தின்
மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும்
வந்துசேர்ந்துள்ளனர்;
ஏனெனில் ஆண்டவரின் வாள்,
நாட்டை ஒரு முனை முதல்
மறு முனைவரை அழித்துவிடும்;
அமைதி என்பது யாருக்குமே இல்லை.
13கோதுமையை விதைத்தார்கள்;
ஆனால் முட்களையே அறுத்தார்கள்.
உழைத்துக் களைத்தார்கள்;
ஆயினும் பயனே இல்லை.
தங்கள் அறுவடையைக் கண்டு
வெட்கம் அடைந்தார்கள்.
இதற்கு ஆண்டவரின்
கோபக்கனலே காரணம்.


அண்டை நாட்டார்க்குத் தீர்ப்பும் மீட்பும்


14ஆண்டவர் கூறுவது இதுவே; என் மக்களாகிய இஸ்ரயேல் என்னிடமிருந்து பெற்றுக்கொண்ட உரிமைச் சொத்தின்மேல் கைவைக்கும் சுற்றியுள்ள தீயோர் அனைவரையும் அவர்கள் நாட்டிலிருந்து நான் பிடுங்கிவிடுவேன். அவர்கள் நடுவிலிருந்து யூதா வீட்டாரையும் பிடுங்கிவிடுவேன். 15அவர்களைப் பிடுங்கிவிட்டபின், நான் மீண்டும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன். அவர்கள் ஒவ்வொருவரையும் தம் உரிமைச் சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவேன். 16அவர்கள் முன்பு பாகாலின் பெயரால் ஆணையிடும்படி என் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தது போல், இப்போது என் மக்களின் வழிமுறைகளைக் கவனமாய்க் கற்றுக்கொண்டு, “வாழும் ஆண்டவர் மேல் ஆணை” என்று என் பெயரால் ஆணையிடுவார்களாகில், அவர்கள் என் மக்கள் நடுவில் வாழ்ந்து வளம்பெறுவர். 17ஆனால், எந்த மக்களினமாவது கீழ்ப்படியாவிடின், அந்த மக்களினத்தை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.



அதிகாரம் 13:1-27

நார்ப்பட்டுக் கச்சையின் அடையாளம்


1ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.” 2ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன். 3எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: 4“நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்; எழுந்து பேராத்து⁕ ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.”

5ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன். 6பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.” 7அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.

8அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 9“ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். 10என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். 11கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர்.


திராட்சை இரசச் சாடியின் அடையாளம்


12நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ ‘சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?’ என்று உன்னிடம் கூறுவார்கள். 13அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; “ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன். 14அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.


அச்சுறுத்தலும் எச்சரிக்கையும்


15செவிகொடுத்துக் கேளுங்கள்!
செருக்குறாதீர்கள்;
ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.
16உங்கள் கடவுளாகிய ஆண்டவரை
பெருமைப்படுத்துங்கள்;
உங்கள் கடவுளாகிய ஆண்டவர்
இருள்படரச் செய்யுமுன்பும்,
உங்கள் பாதங்கள் இருளடைந்த
மலைகளில் இடறுமுன்பும்
அவரை மாட்சிமைப் படுத்துங்கள்.
நீங்கள் ஒளியை எதிர்பார்த்து
நிற்கும் போதே
இருளின் நிழல்கள் சூழச்செய்வார்;
இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.
17ஆனால் நீங்கள் இதற்குச்
செவி கொடுக்காவிட்டால்,
உங்கள் செருக்கை முன்னிட்டு
என் உள்ளம் மறைவில் அழும்;
அழுகை மிகுதியால் கண்களிலிருந்து
கண்ணீர் வழிந்தோடும்;
எனெனில், ஆண்டவரின் மந்தை
கைப்பற்றப்பட்டுள்ளது.
18அரசனுக்கும் அரசனின்
அன்னைக்கும் சொல்லுங்கள்;
கீழே அமருங்கள். ஏனெனில்
உங்கள் மேன்மையின் மணிமுடி
உங்கள் தலைகளிலிருந்து
வீழ்ந்துவிட்டது.
19நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம்
அடைபட்டுவிட்டன;
அவற்றைத் திறப்பார் யாருமில்லை;
யூதா முழுவதும்
நாடுகடத்தப்பட்டுள்ளது.
அது முற்றிலுமாய்
நாடு கடத்தப்பட்டுள்ளது.
ஐயகோ எருசலேமே!
20உன் கண்களை உயர்த்தி
வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்;
உனக்குத் தரப்பட்ட மந்தை — உன்
பெருமைக்குரிய மந்தை — எங்கே?
21உன் நண்பர்களாக நீ
வளர்த்து விட்டவர்களே உன்
தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது
நீ என்ன சொல்வாய்?
பேறுகாலப் பெண்ணின் வேதனை
உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?
22இவையெல்லாம் எனக்கு
ஏன் நிகழ வேண்டும் என
நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்;
உன் குற்றம் பெரிது! அதனால்தான்
உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது!
உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.
23எத்தியோப்பியர் தம் நிறத்தை
மாற்றிக் கொள்ள முடியுமா?
சிறுத்தைகள் தம் புள்ளிகளை
அகற்றிக்கொள்ள முடியுமா?
அப்படி முடியுமானால்,
தீமையே செய்து பழகிவிட்ட
நீங்களும் நன்மை செய்ய முடியும்.
24பாலைநிலக் காற்றில்
பறந்து போகும் பதர்போல்
நான் உங்களைச்⁕ சிதறடிப்பேன்.
25இதுவே உன் கதி!
நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு!
ஏனெனில், நீ என்னை மறந்து
பொய்யை நம்பினாய்,
என்கிறார் ஆண்டவர்.
26உன் ஆடைகளை
உன் முகத்துக்கு மேல் தூக்கிக்
கழற்றிவிடுவேன்;
உன் அவமானம் காணப்படும்.
27உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய
விபசாரங்களையும்
காமக் கனைப்புகளையும்
பரந்த வெளியில் குன்றுகளின்மேல்
நீ செய்த கீழ்த்தரமான
வேசித்தனத்தையும் நான் கண்டேன்;
ஐயகோ! எருசலேமே!
நீ தூய்மை பெறுவது எந்நாளோ?


13:4 ‘யூப்பிரத்தீசு’ என்பது மறுபெயர். 13:24 ‘அவர்களை’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 14:1-22

கொடிய வறட்சி


1வறட்சி பற்றி எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
2யூதா துயருற்றுள்ளது;
அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன;
அதன் மக்கள் தரையில் விழுந்து
புலம்புகின்றார்கள்;
எருசலேமின் அழுகைக் குரல்
எழும்பியுள்ளது.
3உயர்குடி மக்கள் தம் ஊழியரைத்
தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்;
அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச்
செல்கின்றார்கள்;
அங்குத் தண்ணீர் இல்லை;
அவர்கள் வெறுங்குடங்களோடு
திரும்பி வருகின்றார்கள்;
வெட்கி நாணித் தங்கள் தலைகளை
மூடிக்கொள்கின்றார்கள்.
4நாட்டில் மழை இல்லாததால்
தரை வெடிப்புற்றுள்ளது.
உழவர்கள் வெட்கித் தங்கள்
தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்;
5கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான்
புல் இல்லாமையால்
தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.
6காட்டுக் கழுதைகள்
மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன;
காற்று இல்லாமையால்,
குள்ள நரிகளைப் போல்
மூச்சுத் திணறுகின்றன;
பசுமையே காணாததால்
அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று.
7ஆண்டவரே! நாங்கள் பலமுறை
உம்மை விட்டகன்றோம்.
உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
எங்கள் குற்றங்களே எங்களுக்கு
எதிராய்ச் சான்றுபகர்கின்றன.
எனினும், உமது பெயருக்கேற்பச்
செயலாற்றும்.
8இஸ்ரயேலின் நம்பிக்கையே!
துன்ப வேளையில் அதனை மீட்பவரே!
நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல்
இருக்கவேண்டும்?
இரவு மட்டும் தங்க வரும்
வழிப்போக்கரைப்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்?
9நீர் ஏன் திகைப்புற்ற மனிதர்போல்
தோன்ற வேண்டும்?
ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல்
காணப்படவேண்டும்?

ஆயினும், ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர்; உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்; எங்களைக் கைவிட்டு விடாதேயும்.

10இம்மக்களைக் குறித்து
ஆண்டவர் கூறுவது இதுவே;
அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்;
தங்கள் கால்களை அவர்கள்
கட்டுப்படுத்தவில்லை;
எனவே, ஆண்டவர் அவர்களை
ஏற்கவில்லை;
இப்போது அவர்களின் தீமையை
நினைவில் கொண்டு,
அவர்களின் பாவங்களுக்காக
அவர்களைத் தண்டிப்பார்.

11ஆண்டவர் எனக்குக் கூறியது: இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம். 12அவர்கள் நோன்பு இருப்பினும் நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன். அவர்கள் எரிபலிகளையும் தானியப் படையல்களையும் அளிப்பினும் அவற்றை நான் ஏற்கமாட்டேன். மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.

13“ஓ! எம் தலைவராகிய ஆண்டவரே! ‘நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை உங்களுக்குத் தருவேன்’ என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே!” என்றேன் நான்.

14ஆண்டவர் என்னிடம் கூறியது: “என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; அவர்களோடு பேசவுமில்லை.” அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை; பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல், வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.

15ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; நான் அவர்களை அனுப்பவில்லை; எனினும், அவர்கள் “இந்த நாட்டின்மேல் வாளும் பஞ்சமும் வாரா” என்று கூறுகிறார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர். 16அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.

17நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு;
“என் கண்கள் இரவு பகலாகக்
கண்ணீர் சொரியட்டும்;
இடைவிடாது சொரியட்டும்;
ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள்
நொறுங்குண்டாள்;
அவளது காயம் மிகப் பெரிது.
18வயல்வெளிகளுக்குச் சென்றால்,
இதோ! வாளால் மடிந்தவர்கள்!
நகரில் நுழைந்தால்,
இதோ! பசியால் நலிந்தவர்கள்!
இறைவாக்கினரும் குருக்களும்
தங்களுக்கு முன்பின் தெரியாத
நாட்டில் அலைகின்றனர்.
19நீர் யூதாவை முற்றிலும்
புறக்கணித்துவிட்டீரா?
சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா?
நாங்கள் குணமாக முடியாதபடி
ஏன் எங்களை நொறுக்கினீர்?
நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;
பயனேதும் இல்லை!
நலம்பெறும் காலத்தை
எதிர்பார்த்திருந்தோம்;
பேரச்சமே மிஞ்சியது!
20ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும்
எங்கள் மூதாதையரின் தீமையையும்
நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்;
நாங்கள் உமக்கு எதிராய்ப்
பாவம் செய்தோம்.
21உம் பெயரை முன்னிட்டு
எங்களை உதறித் தள்ளாதீர்;
உம் மாட்சிமிகு அரியணையை
அவமதிக்காதீர்;
நீ எங்களோடு செய்த
உடன்படிக்கையை நினைவுகூரும்;
அதனை முறித்து விடாதீர்.
22வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள்
மழை தரவல்லது எதுவும் உண்டா?
வானங்கள் தாமாக
மழை பொழிய முடியுமா?
எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,
நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்;
நாங்கள் உம்மையே
எதிர்நோக்கியுள்ளோம்;
எனெனில், இவற்றை எல்லாம்
செய்பவர் நீரே.



அதிகாரம் 15:1-21

யூதாவின் அழிவு


1ஆண்டவர் என்னிடம் கூறியது: மோசேயும் சாமுவேலும் என்முன் வந்து நின்றாலும் என் உள்ளம் இந்த மக்கள்பால் திரும்பாது. என் முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டிவிடு. அவர்கள் அகன்று போகட்டும்.✠ 2‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது:

“ஆண்டவர் கூறுவது இதுவே:
சாவுக்குரியோர் சாவர்
வாளுக்குரியோர் வாளால் மாள்வர்;
பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்;
நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர்.”

3ஆண்டவர் கூறுவது: நான்கு வகையான அழிவின் சக்திகளை அவர்களுக்கு எதிராக அனுப்பப் போகிறேன்; கொல்வதற்கு வாளையும் இழுத்துச் செல்வதற்கு நாய்களையும் விழுங்கி அழிப்பதற்கு வானத்துப் பறவைகளையும் நிலத்து விலங்குகளையும் அனுப்பப் போகிறேன். 4அவர்களைக் கண்டு உலகின் அரசுகள் யாவும் திகில் அடையும். எசேக்கியா மகனும் யூதா அரசனுமான மனாசே எருசலேமில் செய்தவையே அதற்குக் காரணம்.✠

5 எருசலேமே! யாராவது
உனக்கு இரக்கம் காட்டுவார்களா?
உன் நிலைபற்றி வருந்துவார்களா?
திரும்பிப் பார்த்து நலம் விசாரிப்பார்களா?
6ஆண்டவர் கூறுவது:
“நீ என்னைப் புறக்கணித்து விட்டாய்;
என்னைக் கைவிட்டு ஓடிவிட்டாய்;
எனவே, உன்னை அழிப்பதற்கு
என் கையை உனக்கு
எதிராய் நீட்டினேன்;
இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்.
7நாட்டின் வாயில்களில் நான்
அவர்களை முறத்தால்
தூற்றிச் சிதறடித்தேன்;
அவர்களைத் தனியாகத்
தவிக்க விட்டேன்;
என் மக்களை அழித்துவிட்டேன்;
ஏனெனில் அவர்கள் தங்கள்
தீயவழியிலிருந்து திரும்பவில்லை.
8கடற்கரை மணலைவிட அவர்களின்
கைம்பெண்களின் எண்ணிக்கையை
மிகுதியாக்கினேன்;
இளைஞர்களின் அன்னையருக்கு
எதிராகக் கொலைஞனைப்
பட்டப்பகலில் கூட்டி வந்தேன்;
திடீரென அவள் துயரும் திகிலும்
அடையச் செய்தேன்;
9எழுவரைப் பெற்றவள் சோர்வுற்றாள்;
மூச்சுத் திணறினாள்;
அவள் வாழ்வில்
கதிரவன் மறைந்து விட்டான்;
அவள் வெட்கி நாணமுற்றாள்;
எஞ்சியிருப்போரை
அவர்களுடைய எதிரிகளின்முன்
வாளுக்கு இரையாக்குவேன்,”
என்கிறார் ஆண்டவர்.


எரேமியாவின் அழைப்பு புதுப்பிக்கப்படுதல்


10நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு; நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதுமில்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள். 11ஆண்டவரே, நான் உமக்கு நன்கு பணி செய்யாதிருந்தால், எதிரிகள் இடையூறும் துன்பமும் அடைந்த நேரத்தில் நான் அவர்களுக்காக உம்மிடம் மன்றாடாதிருந்தால், அவர்களின் சாபத்திற்கு நான் ஆளாகட்டும். 12வடக்கிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் யாரால் உடைக்க முடியும்? 13“நாடெங்கும் செய்யப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் இலவசக் கொள்ளைப் பொருள் ஆக்குவேன். 14முன்பின் தெரியாத ஒரு நாட்டில் எதிரிகளுக்கு உங்களை அடிபணியச் செய்வேன்; ஏனெனில், என்னில் கோபக் கனல் மூண்டுள்ளது. அது உங்களுக்கு எதிராகக் கொழுந்து விட்டு எரியும்.”

15ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்;
நீர் என்னை அறிவீர்;
என்னை நினைவுகூரும்;
எனக்கு உதவியருளும்;
என்னைத் துன்புறுத்துவோரை
என் பொருட்டுப் பழிவாங்கும்;
நீர் பொறுமையுள்ளவர்;
என்னைத் தள்ளிவிடாதேயும்;
உம்பொருட்டு நான்
வசைமொழிகளுக்கு ஆளாகிறேன்
என்பதை நினைவில் கொள்ளும்.
16நான் உம் சொற்களைக்
கண்டடைந்தேன்;
அவற்றை உட்கொண்டேன்;
உன் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன;
என் உள்ளத்திற்கு உவகை அளித்தன.
ஏனெனில், படைகளின் ஆண்டவரே,
உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று.
17களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து
நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை.
உம் கை என்மேல் இருந்ததால்
நான் தனியனாய் இருந்தேன்.
சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர்.
18எனக்கு ஏன் தீராத வேதனை?
குணமாகாக் கொடிய காயம்?
நீர் எனக்குக் கானல் நீரென,
ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ!
19எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே:
“நீ திரும்பி வந்தால் நான் உன்னை
முன்னைய நிலைக்குக்
கொண்டு வருவேன்.
என்முன் வந்து நிற்பாய்;
பயனில நீக்கிப் பயனுள பேசின்,
நீ என் இறைவாக்கினனாக இருப்பாய்.
அவர்கள் உன்னிடம்
திரும்பி வருவார்கள்;
நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம்.
20நான் உன்னை அவர்கள்முன்
வலிமை வாய்ந்த
வெண்கலச் சுவராக்குவேன்;
அவர்கள் உனக்கு எதிராய்ப்
போராடுவார்கள்; ஆனால்,
உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்;
ஏனெனில் உன்னை
விடுவிக்கவும் காக்கவும்
நான் உன்னோடு இருக்கிறேன்,
என்கிறார் ஆண்டவர்.
21தீயோரின் கையினின்று
நான் உன்னைக் காப்பேன்;
முரடரின் பிடியினின்று
உன்னை மீட்பேன்.”


15:1 விப 32:11-14; எண் 14:13-19; 1 சாமு 7:5-9. 15:2 திவெ 13:10. 15:4 2 அர 21:1-16; 2 குறி 33:1-9.



அதிகாரம் 16:1-21

எரேமியாவின் வாழ்வு ஓர் அடையாளம்


1ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு. 2“நீ திருமணம் செய்யாதே; இந்த இடத்தில் உனக்குப் புதல்வரோ புதல்வியரோ இருக்கவேண்டாம். 3இந்த இடத்தில் பிறந்துள்ள புதல்வர், புதல்வியரைப் பற்றியும் அவர்களைப் பெற்றெடுத்த தாய், தந்தையரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே; 4அவர்கள் கொடும் நோய்களால் மடிவார்கள். அவர்களுக்காக யாரும் அழமாட்டார்கள்; அவர்களை அடக்கம் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சாணம்போல் தரையில் கிடப்பார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அழிந்து போவார்கள். அவர்களின் பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும்.

5ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ இழவு வீட்டுக்குப் போக வேண்டாம்; அவர்களுக்காக அழுவதற்கோ துக்கம் கொண்டாடுவதற்கோ நீ செல்ல வேண்டாம்; ஏனெனில் நான் என் அமைதியையும் பேரன்பையும் இரக்கத்தையும் இந்த மக்களிடமிருந்து எடுத்துவிட்டேன். 6இந்நாட்டிலுள்ள பெரியோரும் சிறியோரும் இறந்து போவர். அவர்களை யாரும் அடக்கம் செய்யமாட்டார்கள்; அவர்களுக்காக அழவும் மாட்டார்கள். அவர்களை முன்னிட்டு யாரும் தங்களைக் காயப்படுத்திக்கொள்ளவோ மொட்டையடித்துக் கொள்ளவோ மாட்டார்கள். 7இறந்தோரை எண்ணித் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதல் அளிக்க, அப்பம் தருவார் யாருமிரார். தாய் அல்லது தந்தைக்காகத் துக்கம் கொண்டாடுகிறவனுக்கு ஆறுதலின் கிண்ணத்தில் பருகக் கொடுக்கவும் யாருமிரார். 8விருந்து நடக்கும் வீடுகளுக்குச் செல்லாதே; உண்டு குடிப்பதற்காக அங்கு அமராதே,” 9ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இந்த இடத்தில் மகிழ்ச்சி ஒலியும், உவகைக் குரலும், திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். இவை உங்கள் வாழ்நாளில் உங்கள் கண்முன்னே நிகழும்.

10நீ இம்மக்களுக்கு இச்சொற்களை எல்லாம் அறிவிக்கும்போது அவர்கள் உன்னை நோக்கி, “எங்களுக்கு எதிராக இப்பெருந்தீங்கு அனைத்தையும் ஆண்டவர் அறிவிக்கக் காரணம் என்ன? எங்கள் குற்றம் என்ன? எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக நாங்கள் செய்த பாவம் என்ன?” என்று கேட்பார்கள். 11நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது; ஆண்டவர் கூறுவது; உங்கள் மூதாதையர் என்னைப் புறக்கணித்தனர். வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றினர். அவற்றுக்கு ஊழியம் செய்து அவற்றையே வழிபட்டனர். என்னையோ புறக்கணித்தனர். என் சட்டத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. 12நீங்களோ உங்கள் மூதாதையரைவிடப் பெருந்தீமைகள் செய்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் தீய இதயத்தின் பிடிவாதத்தின்படி நடக்கின்றீர்கள்; என் சொல்லுக்கோ செவிகொடுப்பதில்லை. 13ஆகையால் இந்த நாட்டிலிருந்து, உங்களுக்கோ உங்கள் மூதாதையருக்கோ முன்பின் தெரியாத ஒரு நாட்டுக்கு, உங்களைத் தூக்கி எறிவேன். அங்கு நீங்கள் அல்லும் பகலும் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்வீர்கள்; அங்கு என் ஆதரவு உங்களுக்கு இராது.


அடிமைத்தனத்தினின்று திரும்புதல்


14ஆதலால் ஆண்டவர் கூறுவது; இதோ, நாள்கள் வருகின்றன. அப்போது ‘எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை’ என்று யாரும் சொல்லமாட்டார்கள். 15மாறாக, ‘வடக்கு நாட்டிலிருந்தும், அவர்கள் விரட்டப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை’ என்று கூறுவார்கள். ஏனெனில் நான் அவர்களின் மூதாதையருக்குக் கொடுத்திருந்த நாட்டிற்கே அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.


வரவிருக்கும் தண்டனை


16ஆண்டவர் கூறுவது: இதோ, மீனவர் பலரை அனுப்புகிறேன். அவர்கள் அவர்களைப் பிடிப்பர். அதன்பின் வேடர் பலரையும் அனுப்புவேன். அவர்கள் அனைத்து மலைகளிலும் குன்றுகளிலும் பாறையிடுக்குகளிலும் உள்ளோரை வேட்டையாடுவர். 17அவர்கள் வழிகளெல்லாம் என் கண்முன்னே உள்ளன. அவை எனக்கு மறைவாய் இருப்பதில்லை. அவர்களின் குற்றங்கள் என் பார்வைக்குத் தப்புவதில்லை. 18முதற்கண், அவர்களின் குற்றத்திற்காகவும், பாவத்திற்காகவும் அவர்களுக்கு இரட்டிப்பான தண்டனை கொடுப்பேன். ஏனெனில், பிணம் ஒத்த சிலைகளால் அவர்கள் என் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள்; அருவருப்பானவற்றால் என் உரிமைச் சொத்தை நிரப்பினார்கள்.


எரேமியாவின் நம்பிக்கை


19ஆண்டவரே! என் வலிமையே! என் அரணே! துன்பக் காலத்தில் என் புகலிடமே! உலகின் எல்லைகளிலிருந்து வேற்றினத்தார் உம்மிடம் வந்து, “எங்கள் மூதாதையர் பொய்ம்மையை மரபுரிமையாகப் பெற்றனர்; எதற்கும் பயனற்ற சிலைகளையே பெற்றனர்; 20மனிதர் தமக்குத் தாமே தெய்வங்களைச் செய்ய முடியுமா? அவை தெய்வங்கள் அல்லவே!” என்று கூறுவார்கள். 21“எனவே, இதோ அவர்கள் அறியும்படி செய்வேன்; என் ஆற்றலையும் என் வலிமையையும் அறியும்படி செய்வேன். என் பெயர் ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.”


16:1-9 எரே 7:34; 25:10; திவெ 18:23.



அதிகாரம் 17:1-27

யூதாவின் பாவமும் தண்டனையும்


1யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. 2தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள். 3ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன். 4நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்.


அறிவுரைகள்


5ஆண்டவர் கூறுவது இதுவே:
மனிதரில் நம்பிக்கை வைப்போரும்
வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக்
காண்போரும் சபிக்கப்படுவர்.
6அவர்கள் பாலைநிலத்துப்
புதர்ச்செடிக்கு ஒப்பாவர்.
பருவ காலத்திலும்
அவர்கள் பயனடையார்;
பாலை நிலத்தின்
வறண்ட பகுதிகளிலும்
யாரும் வாழா உவர் நிலத்திலுமே
அவர்கள் குடியிருப்பர்.
7ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்
பேறுபெற்றோர்;
ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.
8அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட
மரத்துக்கு ஒப்பாவர்;
அது நீரோடையை நோக்கி
வேர் விடுகின்றது.
வெப்பமிகு நேரத்தில்
அதற்கு அச்சமில்லை;
அதன் இலைகள்
பசுமையாய் இருக்கும்;
வறட்சிமிகு ஆண்டிலும்
அதற்குக் கவலை இராது;
அது எப்போதும் கனி கொடுக்கும்.✠
9இதயமே அனைத்திலும்
வஞ்சகம் மிக்கது;
அதனை நலமாக்க முடியாது.
அதனை யார்தான் புரிந்துகொள்வர்?
10ஆண்டவராகிய நானே
இதயச் சிந்தனைகளை ஆய்பவர்;
உள்ளுணர்வுகளைச்
சோதித்து அறிபவர்.
ஒவ்வொருவரின் வழிகளுக்கும்
செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு
நடத்துபவர்.✠
11நேர்மையற்ற வழிகளில்
செல்வம் சேர்ப்போர்
தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும்
கௌதாரி போன்றோர்;
தம் வாழ்நாள்களின் நடுவிலேயே
அவர்கள் அச்செல்வத்தை
இழந்துவிடுவர்;
இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்.
12“நம் திருத்தூயகம்
தொடக்கத்திலிருந்தே
உயர்ந்த இடத்தில் அமைந்த,
மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.”
13ஆண்டவரே!
இஸ்ரயேலின் நம்பிக்கையே!
உம்மைப் புறக்கணித்தோர் யாவரும்
வெட்கமுறுவர்;
உம்மைவிட்டு அகன்றோர்
தரையில் எழுதப்பட்டோர் ஆவர்;
ஏனெனில், அவர்கள்
வாழ்வளிக்கும் நீரூற்றாகிய
ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.


எரேமியாவின் மன்றாட்டு


14ஆண்டவரே, என்னை நலமாக்கும்;
நானும் நலமடைவேன்.
என்னை விடுவியும்;
நானும் விடுதலை அடைவேன்;
ஏனெனில், நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.
15இதோ அவர்கள் என்னிடம், “ஆண்டவரின் வாக்கு எங்கே?
அது நிறைவேறட்டுமே” என்கிறார்கள்.
16அவர்கள்மேல்
தீமையை அனுப்ப வேண்டும் என்று
நான் உம்மை நெருக்கவில்லை;
கொடுமையின் நாளை
நான் விரும்பவில்லை;
நான் கூறியவைதாம்
உமக்குத் தெரியமே;
அவை உம்முன்தாமே கூறப்பட்டன.
17நீ எனக்குத் திகிலாய் இராதீர்;
தீமையின் நாளில் நீரே என் புகலிடம்.
18என்னைத் துன்புறுத்துவோர்
வெட்கம் அடையட்டும்;
நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக!
அவர்கள் திகிலுறட்டும்;
நானோ திகிலுறாதிருப்பேனாக.
தீமையின் நாளை
அவர்கள்மேல் வரச்செய்யும்;
இரட்டிப்பான அழிவு
அவர்கள்மேல் வரட்டும்;
அவர்கள் அடியோடு ஒழியட்டும்.


ஓய்வுநாளை அனுசரித்தல்


19ஆண்டவர் கூறியது இதுவே: நீ போய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள்.

20நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது; இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். 21ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்; அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.✠ 22ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள்.✠ 23அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் சொன்னதைக் கவனிக்கவில்லை; கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.

24ஆண்டவர் கூறுவது; நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிப்பீர்களாகில், 25தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்; குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள். 26அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள். 27ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்; அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லக் கூடாது; எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்; அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்; அத்தீயோ அணையாது.


17:8 திபா 1:3. 17:10 திபா 62:12; திவெ 2:23. 17:21 நெகே 13:15-22. 17:22 விப 20:8-10; இச 5:12-14.



அதிகாரம் 18:1-23

குயவர் வீட்டில் எரேமியா


1எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: 2“நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.” 3எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல்வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். 4குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாத போதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.

5அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: 6“இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வதுபோல் நானும் உனக்குச் செய்யமுடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள். 7ஒரு நாட்டையோ அரசையோ பிடுங்கித் தகர்த்து அழிக்கப்போவதாக நான் எப்போதாவது கூறலாம். 8எனினும், குறிப்பிட்ட அந்த நாடு தன் தீய வழியிலிருந்து திரும்புமாயின், நான் அதற்கு வருவிக்கவிருந்த தீங்கை எண்ணி வருந்துவேன். 9அதுபோல ஒரு நாட்டையோ அரசையோ கட்டியெழுப்பவும் நட்டு வளர்க்கவும் போவதாக நான் எப்போதாவது கூறலாம். 10மாறாக, அது என் சொல்லுக்குச் செவிகொடுக்காமல், என் கண்முன் தீமை செய்தால், நான் அதற்குச் செய்யப்போதாகக் கூறியிருந்த நன்மையை எண்ணி வருந்துவேன். 11ஆகையால் இப்போது நீ யூதா நாட்டினரையும் எருசலேம் வாழ் மக்களையும் நோக்கிக் கூற வேண்டியது: “ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களுக்கு எதிராய் வரப்போகும் தீமைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகிறேன்; ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய வழியிலிருந்து திரும்புங்கள்; உங்கள் வழிகளையும் செயல்களையும் திருத்திக்கொள்ளுங்கள்.”

12அவர்களோ, ‘இதெல்லாம் சொல்லிப் பயனில்லை. எங்கள் திட்டப்படியே நாங்கள் நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இதயத்தின் பிடிவாதப்படியே செயல்படுவோம்’ என்பார்கள்.


இஸ்ரயேல் ஆண்டவரை மறத்தல்


13எனவே ஆண்டவர் கூறுவது இதுவே: “இதுபோன்ற செயலைப் பற்றிக்
கேள்விப்பட்டதுண்டா? என்று
நாடுகளிடையே கேட்டுப்பார்.
கன்னி இஸ்ரயேல்
பெரும் கோரச் செயல் ஒன்று
செய்துள்ளாள்.
14லெபனோன் மலையின் உறைபனி
அதன் பாறை உச்சிகளிலிருந்து
அகல்வதுண்டோ?
அதலிருந்து வழிந்தோடும் தண்ணீரால்
நீரோடைகள் வற்றிப்போவதுண்டோ?
15என் மக்களோ
என்னை மறந்து விட்டார்கள்;
இல்லாத ஒன்றிற்குத்
தூபம் காட்டுகின்றார்கள்;
தங்கள் வழிகளிலே
தொன்மையான பாதைகளிலே
தடுமாறுகின்றார்கள்;
நெடுஞ்சாலையை விட்டுவிட்டு
ஒதுக்கு வழிகளிலே நடக்கின்றார்கள்.
16அவர்கள் நாடு
கொடூரமாய்க் காட்சியளிக்கும்;
காலமெல்லாம் ஏளனத்துக்கு உள்ளாகும்;
அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும்
திகிலடைவான்;
தலையை ஆட்டிக்கொண்டே செல்வான்.
17கீழைக் காற்றைப்போல்
அவர்கள் எதிரிகளுக்குமுன்
அவர்களைச் சிதறடிப்பேன்;
அவர்களின் துன்பக் காலத்தில்
என் முகத்தையல்ல, முதுகையே
அவர்களுக்குக் காண்பிப்பேன்.”


எரேமியாவுக்கு எதிரான சூழ்ச்சி


18அப்போது அவர்கள் “வாருங்கள்,
எரேமியாவுக்கு எதிராகச்
சூழ்ச்சி செய்வோம்.
குருக்களிடமிருந்து சட்டமும்,
ஞானிகளிடமிருந்து அறிவுரையும்,
இறைவாக்கினரிடமிருந்து
இறைவாக்கும் எடுபடாது.
எனவே, அவர்மீது குற்றம் சாட்டுவோம்.
அவர் சொல்வதைக்
கேட்கவேண்டாம்” என்றனர்.
19ஆண்டவரே, என்னைக் கவனியும்;
என் எதிரிகள் சொல்வதைக் கேளும்.
20நன்மைக்குக் கைம்மாறு தீமையா?
என் உயிரைப் போக்கக்
குழிபறித்திருக்கின்றார்கள்;
அவர்கள்மேல் உமக்கிருந்த
சினத்தைப் போக்குவதற்காக
அவர்களைக் குறித்து
நல்லதை எடுத்துச் சொல்வதற்கு
நான் உம்முன் வந்து நின்றதை
நினைவுகூரும்.
21ஆகவே அவர்களுடைய பிள்ளைகள்
பஞ்சத்தால் மடியட்டும்;
அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்;
அவர்தம் மனைவியர்
விதவையராய்த் தனியராகட்டும்;
கணவர்கள் கொல்லப்படட்டும்;
இளைஞர்கள் போரில்
வாளால் மடியட்டும்.
22திடீரெனக் கொள்ளைக் கூட்டத்தினர்
அவர்களிடையே வரட்டும்.
அவர்கள் வீடுகளிலிருந்து
அழுகுரல் கேட்கட்டும்;
ஏனெனில், அவர்கள் என்னைப் பிடிக்கக்
குழி பறித்தார்கள்;
என் கால்களுக்குக்
கண்ணி வைத்தார்கள்.
23ஆண்டவரே!
என்னைக் கொல்வதற்காக
அவர்கள் செய்த
சதித் திட்டங்களை எல்லாம்
நீர் அறிவீர்;
அவர்கள் குற்றத்தை மன்னியாதேயும்;
அவர்கள் பாவத்தை
உம் முன்னிலையிலிருந்து
அகற்றிவிடாதேயும்;
அவர்கள் உம்முன் வீழ்ச்சியுறட்டும்;
உம் சினத்தின் நாளில்
அவர்களின் செயல்களுக்கு ஏற்றபடி
அவர்களை நடத்தும்.




அதிகாரம் 19:1-15abcd
அதிகாரம் 20:1-18

பஸ்கூருக்குச் சாபம்


1இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான். 2அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான். 3மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அப்போது எரேமியா கூறியது: “ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல, மாறாக ‘மாகோர் மிசாபீபு’ ⁕என்றே அழைத்துள்ளார். 4ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும் பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய். உன் கண் முன்னாலேயே அவர்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள். யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்; அவன் அவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான். 5இந்நகரின் செல்வங்களையும் உழைப்பின் பயன் அனைத்தையும் விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும் யூதா அரசரின் கருவூலங்களையும் அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள். 6பஸ்கூர்! நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும் நாடு கடத்தப்படுவீர்கள். நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட உன் நண்பர்களும் பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்; அங்கேயே புதைக்கப்படுவீர்கள்.


எரேமியாவின் முறைப்பாடு


7ஆண்டவரே!
நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்;
நானும் ஏமாந்து போனேன்;
நீர் என்னைவிட வல்லமையுடையவர்;
என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்;
நான் நாள் முழுவதும்
நகைப்புக்கு ஆளானேன்.
எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றார்கள்.
8நான் பேசும்போதெல்லாம்
‘வன்முறை அழிவு’ என்றே
கத்த வேண்டியுள்ளது;
ஆண்டவரின் வாக்கு என்னை
நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும்
நகைப்புக்கும் ஆளாக்கியது.
9“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்;
அவர் பெயரால் இனிப்
பேசவும் மாட்டேன்” என்பேனாகில்,
உம் சொல் என் இதயத்தில்
பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.
அது என் எலும்புகளுக்குள்
அடைப்பட்டுக் கிடக்கின்றது.
அதனை அடக்கிவைத்துச்
சோர்ந்து போனேன்;
இனி என்னால்
பொறுத்துக்கொள்ள முடியாது.
10‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று
பலரும் பேசிக் கொள்கின்றார்கள்;
‘பழிசுமத்துங்கள்; வாருங்கள்,
அவன்மேல் பழி சுமத்துவோம்’
என்கிறார்கள்.
என் நண்பர்கள்கூட
என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்;
‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்;
நாம் அவன்மேல் வெற்றி கொண்டு
அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்’
என்கிறார்கள்.
11ஆனால், ஆண்டவர்
வலிமை வாய்ந்த வீரரைப் போல
என்னோடு இருக்கின்றார்.
எனவே, என்னைத் துன்புறுத்துவோர்
இடறி விழுவர்.
அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள்.
அவர்கள் விவேகத்தோடு
செயல்படவில்லை;
அவர்களின் அவமானம் என்றும்
நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.
12படைகளின் ஆண்டவரே!
நேர்மையாளரை சோதித்தறிபவரும்
உள்ளுணர்வுகளையும்
இதயச் சிந்தனைகளையும்
அறிபவரும் நீரே;
நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை
நான் காணவேண்டும்;
ஏனெனில், என் வழக்கை
உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
13ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்;
அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத்
தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
14நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்;
என் அன்னை
என்னைப் பெற்றெடுத்த நாள்
ஆசி பெறாதிருக்கட்டும்.
15‘உனக்கோர் ஆண் குழந்தை
பிறந்துள்ளது’ என்ற செய்தியை
என் தந்தையிடம் சொல்லி
அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில்
ஆழ்த்திய அந்த மனிதன்
சபிக்கப்படுக!
16அவன், ஆண்டவர்
இரக்கமின்றி வீழ்த்திய
நகர்களுக்கு ஒப்பாகட்டும்.
அவன் காதில்
காலையில் அழுகைக் குரலும்
நண்பகலில் போர் இரைச்சலும்
ஒலிக்கட்டும்!
17தாய் வயிற்றில் நான் இருந்தபோதே,
அவள் ஏன் என்னைக்
கொல்லவில்லை?
என் தாயே எனக்குக்
கல்லறையாய் இருந்திருப்பாளே!
அவள் கருவறையிலேயே
என்றும் இருந்திருப்பேனே!
18கருவறைவிட்டு
ஏன்தான் வெளிவந்தேன்?
துன்ப துயரத்தை அனுபவிக்கவும்
என் வாழ்நாள்களை
வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ?


20:14-18 யோபு 3:1-19.


20:3 எபிரேயத்தில், ‘சுற்றிலும் பேரச்சம்’ என்பது பொருள்.



அதிகாரம் 21:1-14

செதேக்கியாவின் தூதர்க்கு மறுமொழி


1மல்கியாவின் மகன் பஸ்கூரையும் மாசேயாவின் மகனாக குரு செப்பனியாவையும் செதேக்கியா அரசன் எரேமியாவிடம் அனுப்பிய நேரத்தில் ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது: 2அவர்கள் எரேமியாவிடம் வந்து, “பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் நமக்கு எதிராய்ப் போருக்குப் புறப்பட்டு வருகிறான். இந்நேரத்தில் ஆண்டவர் நமக்காக வியத்தகு செயல்கள் செய்து நெபுகத்னேசரைப் பின்வாங்க வைப்பாரா? என்று ஆண்டவரிடம் கேட்டுச் சொல்” என்றனர்.✠

3அப்போது எரேமியா அவர்களிடம் கூறியது: “நீங்கள் செதேக்கியாவிடம் இவ்வாறு சொல்லுங்கள்; 4இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மதில்களுக்கு வெளியே உங்களுக்கு எதிராய் முற்றுகையிட்டுள்ள பாபிலோனிய மன்னனோடும் கல்தேயரோடும் போரிடுவதற்கு நீங்கள் கையாளும் படைக்கலன்களை உங்களுக்கு எதிராகத் திருப்புவேன். அவற்றை எல்லாம் இந்நகரின் மையத்தில் குவித்துவைப்பேன். 5என் சினத்திலும், சீற்றத்திலும், கடும் வெஞ்சினத்திலும் உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். ஓங்கிய கையோடும் வலிமைமிகு புயத்தோடும் போரிடுவேன். 6இந்நகரில் வாழ்வோரை வதைப்பேன். இங்குள்ள மனிதர்களும் விலங்குகளும் பெரும் கொள்ளை நோயால் மடிவார்கள். 7அதன் பின் யூதா அரசன் செதேக்கியாவையும் அவன் அலுவலரையும், கொள்ளைநோய், வாள், பஞ்சம் ஆகியவற்றிலிருந்து தப்பி இந்நகரில் எஞ்சியிருப்போரையும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையிலும், உங்கள் பகைவர்களின் கையிலும், உங்கள் உயிரைப் பறிக்கத் தேடுவார் கையிலும் ஒப்படைப்பேன். நெபுகத்னேசர் அவர்களை வாளால் வெட்டி வீழ்த்துவான். அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்கு இரக்கம் காட்டவோ, பரிவு காட்டவோ மாட்டான்” என்கிறார் ஆண்டவர். 8இம்மக்களுக்கு நீ கூற வேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் உங்கள்முன் வைக்கிறேன். 9இந்நகரில் தங்கிவிடுபவன் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மடிவான். ஆனால், வெளியேறி உங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர்பிழைப்பான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும். 10இந்நகருக்கு நன்மையை அல்ல, தீமையையே கொணர முடிவு செய்துள்ளேன்; அதனைப் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்போகிறேன். அவன் அதனைத் தீக்கிரையாக்குவான், என்கிறார் ஆண்டவர்.”


யூதாவின் அரச குடும்பத்துக்கு எதிராக


11யூதாவின் அரச குடும்பத்திற்கு நீ கூறவேண்டியது: “ஆண்டவர் வாக்கைக் கேளுங்கள்:

12தாவீதின் வீட்டாரே,
ஆண்டவர் கூறுவது இதுவே:
காலைதோறும் நீதி வழங்குங்கள்;
கொள்ளையடிக்கப்பட்டவனைக்
கொடியோனிடத்திலிருந்து
விடுவியுங்கள்; இல்லையேல்
உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு
என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப்
பற்றியெரியும்;
அதனை அணைப்பார் யாருமிலர்.
13பள்ளத்தாக்கில் வாழ்வோரே!
சமவெளிப் பாறையே!
‘எங்களுக்கு எதிராக யார் வரமுடியும்?
நம் கோட்டைகளில்
யார் நுழைய முடியும்?’ என்று கூறும்
உங்களுக்கு எதிராய்
நானே எழும்பியுள்ளேன்,
என்கிறார் ஆண்டவர்.
14உங்கள் செயல்களின் விளைவுக்கேற்ப
உங்களைத் தண்டிப்பேன்;
நகரிலுள்ள வனத்திற்குத்⁕ தீமூட்டுவேன்;
சுற்றிலுமுள்ள அனைத்தையும்
அது சுட்டெரிக்கும்.


21:2 2 அர 25:1-11; 2 குறி 36:17-21.


21:14 "வனம்" என்பது இங்கு எருசலேம் அரண்மனையைக் குறிக்கும் (காண் 1 அர 7:2).



அதிகாரம் 22:1-30

யூதாவின் அரச குடும்பத்திற்கு எதிராக


1ஆண்டவர் கூறுவது இதுவே: “யூதா அரசன் மாளிகைக்குச் செல். அங்கு இந்தச் செய்தியைச் சொல். 2‘தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே, நீயும் உன் அலுவலரும் இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்’ என்று சொல். 3ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்; பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்; அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்; அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்; மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள். 4நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில், தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள் இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்; அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள். 5ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால் இந்த அரண்மனை பாழ்பட்டுப்போகும் என என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர்.✠ 6யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: ‘நீ எனக்குக் கிலயாதைப் போலவும், லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்; ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும், குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன். 7உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்; அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.’ 8இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார், ‘இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர். 9‘அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான் இவ்வாறு நேர்ந்தது’ என்பர்.”


யோவகாசுக்கு எதிராக


10இறந்தவனைக் குறித்து
அழ வேண்டாம்;
அவனுக்காகப் புலம்ப வேண்டாம்;
சென்றுவிட்டவனுக்காகக்
கதறி அழுங்கள்;
ஏனெனில் அவன் இனி
திரும்பிவரப் போவதில்லை;
தான் பிறந்த நாட்டைப்
பார்க்கப் போவதில்லை.


11யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே: தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான். அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்; இனி இங்குத் திரும்பி வரமாட்டான்.✠ 12அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான். இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான்.


யோயாக்கிமுக்கு எதிராக


13நீதியின்றித் தன் மாளிகையையும்,
நேர்மையின்றித்
தன் மாடியறைகளையும்
கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு!
அடுத்திருப்பாரை ஊதியமின்றி
உழைக்கச் செய்கிறான்.
அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.
14“நான் பெரியதொரு மாளிகையையும்
காற்றோட்டமான மாடியறைகளையும்
கட்டிக்கொள்வேன்” என்கிறான்.
அதற்குப் பலகணிகளை
அமைத்துக் கொள்கின்றான்.
கேதுரு பலகைகளால்
அதனை அணி செய்து
அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.
15கேதுரு மரங்களின் சிறப்பில்தான்
உன் அரச பெருமை
அடங்கியிருக்கின்றதா?
உன் தந்தை
உண்டு குடித்து மகிழ்ந்தாலும்,
நீதி நேர்மையுடன் நடந்தானே!
அவனைப் பொறுத்தவரையில்
எல்லாம் நலமாய் இருந்ததே!
16ஏழை எளியோரின் வழக்கில்
அவன் நீதி வழங்கினான்.
எல்லாம் நலமாய் இருந்தது.
என்னை அறிதல் என்பது
இதுதானே! என்கிறார் ஆண்டவர்.
17நீயோ நேர்மையின்றி
வருவாய் சேர்ப்பிலும்
மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும்
ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான்
கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.
18ஆகவே யூதாவின் அரசனும்
யோசியாவின் மகனுமாகிய
யோயாக்கிமைக் குறித்து
ஆண்டவர் கூறுவது இதுவே:
‘ஐயோ என் சகோதரனே!
ஐயோ சகோதரியே!’
என்று அவனுக்காக யாரும்
ஒப்பாரி வைக்கமாட்டார்கள்.
‘ஐயோ என் தலைவரே!
மாண்பு மிக்கவரே!’
என்று அழமாட்டார்கள்.✠
19ஒரு கழுதைக்குரிய அடக்கமே
அவனுக்குக் கிடைக்கும்;
அவனை இழுத்து
எருசலேமின் வாயில்களுக்கு
வெளியே எறிவர்.


எருசலேம் மக்களுக்கு எதிராக


20லெபனோன்மேல் ஏறிக் கதறியழு!
பாசானில் அழுகைக்குரல் எழுப்பு!
அபாரிமில் ஓலமிடு!
ஏனெனில், உன் அன்பர்கள்
அனைவரும் நொறுக்கப்பட்டார்கள்.
21நீ நலமாய் இருந்த காலத்தில்
உன்னோடு பேசினேன்;
நீயோ ‘நான்
செவிசாய்க்க மாட்டேன்’ என்றாய்;
உன் இளமையிலிருந்து
இதுவே உன் வழிமுறை;
எனது குரலுக்கு நீ
செவிகொடுக்கவே இல்லை.
22உன் மேய்ப்பர்களைக்
காற்றே மேய்க்கும்;
உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்;
அப்போது நீ வெட்கமுறுவாய்.
உன் தீச்செயல்களைக் குறித்து
மானக்கேடு அடைவாய்.
23லெபனோனில் குடிகொண்டுள்ள நீ,
கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ,
பேறுகால வேதனை போன்ற
துன்பம் வரும்போது,
எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்?


யோயாக்கின் அரசனுக்கு எதிராக


24ஆண்டவர் கூறுவது: என்மேல் ஆணை! யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே, நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும், நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன்.✠ 25உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில், நீ அஞ்சுகின்றவர்களின் கையில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில், கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன். 26உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும் இன்னொரு நாட்டுக்குத் தூக்கியெறிவேன். நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள். 27எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.

28கோனியா என்னும் இம்மனிதன்
அவமதிப்புக்குள்ளான
உடைந்த ஒரு பானையோ?
யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ?
அவனும் அவன் வழி மரபினரும்
ஏன் தூக்கி எறியப்பட்டார்கள்?
முன்பின் தெரியாத நாட்டுக்கு
ஏன் துரத்தப்பட்டார்கள்?
29நாடே! நாடே! நாடே!
ஆண்டவரின் வாக்கைக் கேள்.
30ஆண்டவர் கூறுவது இதுவே:
“இந்த ஆள் மகப் பேறற்றவன்;

தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன்” என எழுது.
ஏனெனில் அவன் வழி மரபினர்
யாரும் வெற்றி அடையமாட்டார்கள்;
யாரும் தாவீதின்
அரியணையில் வீற்றிருந்து
யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.


22:5 மத் 23:38; லூக் 13:35. 22:11 2 அர 23:31-34; 2 குறி 36:1-4. 22:18 2 அர 23:36-24:6; 2 குறி 36:5-7. 22:24 2 அர 24:8-15; 2 குறி 36:9-10.



அதிகாரம் 23:1-40

வருங்கால அரசரைப் பற்றிய முன்னறிவிப்பு


1ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு! 2தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். 3என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். 4அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். 5ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். 6அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ”⁕ என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும். 7ஆதலால் ஆண்டவர் கூறுவது; இதோ நாள்கள் வருகின்றன. அப்போது, ‘எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த வாழும் ஆண்டவர்மேல் ஆணை’ என்று எவரும் சொல்லார். 8மாறாக, ‘இஸ்ரயேல் குடும்ப மரபினர் தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி, அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை’ என்று கூறுவர்.


போலி இறைவாக்கினருக்கு எதிராக


9இறைவாக்கினரைக் குறித்து:
என்னுள் என் இதயம்
நொறுங்கியுள்ளது;
என் எலும்புகள் எல்லாம்
நடுநடுங்குகின்றன;
ஆண்டவரை முன்னிட்டும்
அவர்தம் புனித சொற்களை முன்னிட்டும்
நான் குடிபோதையில்
இருப்பவன் போல் ஆனேன்;
மதுவினால் மயக்கம்
கொண்டவன் ஆனேன்.
10ஏனெனில்,நாட்டில்
விபசாரர்கள் நிரம்பியுள்ளனர்;
சாபத்தின் விளைவாக
நாடு புலம்புகிறது;
பாலைநிலத்துப் பசும்புல் தரை
உலர்ந்து போயிற்று;
அவர்கள் வழிகள் தீயவை;
அவர்கள் ஆற்றல்
தீயவற்றிற்குப் பயன்படுகின்றது.
11இறைவாக்கினர், குருக்கள் ஆகிய
இரு சாராரும்
இறையுணர்வு அற்றவர்கள்;
என் இல்லத்தில்
அவர்களின் தீச்செயல்களை
நான் கண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
12எனவே, அவர்கள் பாதை
வழுக்கிவிடக்கூடியது;
இருளில் அவர்கள் தள்ளப்பட்டுத்
தடுக்கி விழுவர்;
அவர்கள் தண்டிக்கப்படும் ஆண்டில்
அவர்கள்மேல் தீமை வரச் செய்வேன்,
என்கிறார் ஆண்டவர்.
13சமாரியாவின் இறைவாக்கினரிடையே
ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்;
அவர்கள் பாகால் பெயரால்
பொய் வாக்குரைத்து
என் மக்கள் இஸ்ரயேலைத்
தவறான வழியில் நடத்தினார்கள்.
14எருசலேமின் இறைவாக்கினரிடையே
திகிலூட்டும் செயல் ஒன்று கண்டேன்;
அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்;
பொய்ம்மை வழியில் நடக்கிறார்கள்;
தீயோரின் கைகளை
வலுப்படுத்துகிறார்கள்;
இதனால் யாரும் தம்
தீய வழியிலிருந்து திரும்புவதில்லை;
அவர்கள் எல்லாரும் என் பார்வையில்
சோதோமைப் போன்றவர்கள்;
எருசலேமின் குடிமக்கள்
கொமோராவைப் போன்றவர்கள்.✠
15எனவே இறைவாக்கினரைப் பற்றிப்
படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே;
அவர்களை எட்டிக்காய்
உண்ணச் செய்வேன்;
நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன்.
ஏனெனில்,
எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே
இறைஉணர்வின்மை
நாடெங்கும் பரவிற்று.

16படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும் இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச் செவி கொடுக்காதீர்கள். அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே. 17ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் “உங்களுக்கு நலம் உண்டாகும்” எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் “உங்களுக்குத் தீமை நேராது” என்று கூறுகிறார்கள்.

18ஆண்டவரின் மன்றத்தில்
நின்றவன் யார்?
அவர் சொல்லைக் கண்டவன்
அல்லது கேட்டவன் யார்?
அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து
அதனை அறிவித்தவன் யார்?
19இதோ ஆண்டவரின் சீற்றம்
புயலாய் வீசுகின்றது;
அது தீயோரின் தலைமேல்
சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.
20ஆண்டவர் தம் இதயத்தின்
திட்டங்களைச் செயலாக்கி
நிறைவேற்றும்வரை
அவர் சினம் தணியாது;
வரப்போகும் நாள்களில்
இதனை நீங்கள்
முற்றிலும் அறிந்துகொள்வீர்கள்.
21அந்த இறைவாக்கினர்களை
நான் அனுப்பவில்லை;
அவர்களாகவே ஓடிவந்தார்கள்.
நான் அவர்களோடு பேசவில்லை;
அவர்களாகவே
இறைவாக்கு உரைத்தார்கள்.
22ஆனால் அவர்கள்
என் மன்றத்தில் நின்றிருந்தால்
என் சொல்லை
என் மக்களுக்கு எடுத்துரைத்து,
அவர்கள் தங்கள் தீய வழிகளையும்
தீச்செயல்களையும் விட்டு விலகச்
செய்திருப்பர்.

23ஆண்டவர் கூறுவது; அருகில் இருந்தால்தான் நான் கடவுளா? தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா? 24என் கண்ணில் படாதபடி எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா? என்கிறார் ஆண்டவர். 25என் பெயரால் பொய்யுரைக்கும் இறைவாக்கினர் “நான் கனவுகண்டேன், நான் கனவுகண்டேன்” என்று கூறியதைக் கேட்டேன். 26பொய்யையும், தம் வஞ்சக எண்ணங்களையும் இறைவாக்காக உரைக்கும் இந்த இறைவாக்கினரின் மனப்பாங்கு என்று மாறுமோ? 27இவர்களுடைய மூதாதையர் பாகால் காரணமாக என் பெயரை மறந்தனர். அதுபோலத் தாங்கள் ஒருவர் ஒருவருக்குக் கூறும் கனவுகள் வழியாக என் மக்களின் நினைவிலிருந்து என் பெயரை அகற்றிவிடலாம் என நினைக்கின்றனர். 28கனவு கண்ட இறைவாக்கினன் தன் கனவை எடுத்துச் சொல்லட்டும். என் சொல்லைத் தன்னிடத்தில் கொண்டிருப்பவனோ அதனை உண்மையோடு எடுத்துரைக்கட்டும். தாளைத் தானியத்தோடு ஒப்பிட முடியுமா? என்கிறார் ஆண்டவர். 29என் சொல் தீயைப் போன்றது அல்லவா? பாதையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா? என்கிறார் ஆண்டவர். 30ஆகவே, ஒருவர் ஒருவரிடமிருந்து என் சொற்களைத் திருடும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். 31தங்கள் நாவினால் “ஆண்டவர் கூறுகிறார்” என்று உரைக்கும் இறைவாக்கினருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். 32பொய்க் கனவுகனை இறைவாக்காக உரைப்போருக்கு எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். இவர்கள் அவற்றை எடுத்துரைத்து, தங்கள் பொய்களாலும் மூடச்செயல்களாலும் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கட்டளையிடவும் இல்லை, அவர்களால் இந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என்கிறார் ஆண்டவர்.


ஆண்டவரின் சுமை


33இந்த மக்களோ ஓர் இறைவாக்கினரோ ஒரு குருவோ உன்னிடம் ‘ஆண்டவரின் சுமை யாது?’ என்று கேட்டால், ‘நீங்களே, அந்தச் சுமை; நான் உங்களைத் தள்ளவிடுவேன், என்கிறார் ஆண்டவர்’ என்று சொல். 34‘ஆண்டவரின் சுமை’ என்று ஓர் இறைவாக்கினர் அல்லது குரு அல்லது மக்களில் யாராவது கூறினால், அந்த மனிதரையும் அவர் வீட்டாரையும் நான் தண்டிப்பேன். 35‘ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?’ ‘ஆண்டவர் என்ன பேசினார்?’ என்றே நீங்கள் உங்கள் உற்றார் உறவினரிடம் கேட்க வேண்டும். 36‘ஆண்வரின் சுமை’ என்று இனி யாரும் குறிப்பிடக்கூடாது; அவனவன் சொல்லே அவனுக்குச் சுமை. வாழும் கடவுளும் படைகளின் ஆண்டவருமான நம் கடவுளின் சொற்களை நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள். 37நீங்கள் இறைவாக்கினரிடம், “ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?”, “ஆண்டவர் என்ன பேசினார்?” என்றே கேட்கவேண்டும். 38“ஆண்டவரின் சுமை” என்று நீங்கள் கூறுவீர்களானால், ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள். ‘ஆண்டவரின் சுமை’ என்று நீங்கள் கூறக்கூடாது என்று நான் உங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தும், நீங்கள் ‘ஆண்டவரின் சுமை’ என்று கூறுகிறீர்கள். 39ஆதலால், நான் உங்களை முற்றிலும் மறந்து, உங்களையும் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் நான் கொடுத்த நகரையும் என் முன்னிலையிலிருந்து தூக்கி வீசியெறிவேன். 40நீங்கள் என்றென்றும் வசைச் சொல்லுக்கு ஆளாவீர்கள். உங்கள் அவமானம் என்றென்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.


23:5-6 எரே 33:14-16. 23:14 தொநூ 18:20; எசே 16:49.

23:6 எபிரேயத்தில், ‘ஆண்டவரே நமது நீதி’ என்பது பொருள்.



அதிகாரம் 24:1-10

அத்திப் பழங்களின் அடையாளம்


1பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் எருசலேமிலிருந்து நாடுகடத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர், ஆண்டவர் எனக்கு அருளிய காட்சி; இதோ, ஆண்டவரது கோவில்முன் அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன.✠ 2ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன; அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன; அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன. 3அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, “எரேமியா, நீ காண்பது என்ன?” என்று கேட்டார். நான் “அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன” என்றேன்.

4ஆண்டவரின் வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது; 5இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அதாவது இவ்விடத்திலிருந்து நான் கல்தேயரின் நாட்டுக்கு அனுப்பியிருப்பவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போன்றவர்கள். அவர்களை நான் நல்லவர்களாகக் கருதுகிறேன். 6அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் கண்ணாயிருக்கிறேன்; அவர்களை மீண்டும் இந்நாட்டுக்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன்; கவிழ்த்து வீழ்த்தமாட்டேன். நான் அவர்களை நட்டு வளர்ப்பேன்; பிடுங்கி எறியமாட்டேன். 7நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பிவருவார்கள்.

8ஆண்டவர் கூறுவது இதுவே; யூதா அரசன் செதேக்கியாவையும் அவர் தலைவர்களையும் இந்நாட்டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோரையும், எகிப்து நாட்டில் வாழ்வோரையும், தின்ன முடியாத அளவுக்குத் தீயவையாய் இருந்த அத்திப் பழங்களைப் போன்று நடத்துவேன். 9உலகின் அரசுகள் அனைத்துக்கும் அவர்கள் திகிலின் சின்னமாக அமைவார்கள். நான் அவர்களைத் துரத்தியடிக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் வசைச் சொல்லுக்கும் ஏளனத்துக்கும் பழிப்புரைக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள். 10நான் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையருக்கும் கொடுத்த நாட்டில் யாரும் இராது அழியும்வரை அவர்கள்மேல் வாளையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் அனுப்புவேன்.


24:1 2 அர 24:12-16; 2 குறி 36:10.



அதிகாரம் 25:1-38

ஆண்டவரின் சாட்டையான பாபிலோன்


1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், அதாவது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற முதல் ஆண்டில், யூதா மக்கள் அனைவரையும் குறித்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.✠ 2அதனை இறைவாக்கினரான எரேமியா யூதாவின் அனைத்து மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்போர் யாவருக்கும் எடுத்துரைத்தார்; 3ஆமோனின் மகனும் யூதாவின் அரசனுமான யோசியா ஆட்சியேற்ற பதின்மூன்றாம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதாவது கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டு வந்துள்ளது. நானும் அதை உங்களிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். நீங்களோ அதற்குச் செவிகொடுக்கவில்லை. 4ஆண்டவர்தம் ஊழியர்களான இறைவாக்கினர் எல்லாரையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். நீங்களோ காது கொடுத்துக் கேட்கவில்லை; கவனிக்கவுமில்லை. 5அவரது செய்தி இதுவே; “நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்தம் தீய வழிகளையும் தீச்செயல்களையும் விட்டு விலகுங்கள். அப்போது ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் மூதாதையருக்கும் எக்காலத்திற்குமெனக் கொடுத்துள்ள நாட்டில் வாழ்வீர்கள்.

6வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றுக்கு ஊழியம் செய்து வழிபடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளால் எனக்குச் சினமூட்டாமலும் இருந்தால், நான் உங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டேன். 7நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர். உங்கள் கை வேலைப்பாடுகளால் உங்களுக்கே தீங்கிழைக்கும் வகையில் எனக்குச் சினமூட்டினீர்கள்.

8ஆகவே படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் சொற்களுக்குக் கீழ்ப்படியால் இருந்தீர்கள். 9எனவே நான் வடநாட்டுக் குலங்கள் அனைத்தையும், என் ஊழியனான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரையும் கூட்டிச் சேர்த்து, அவர்களை இந்த நாட்டுக்கும், இதன் குடிமக்களுக்கும், சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் எதிராகக் கொண்டு வருவேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை முற்றிலும் அழித்துவிடுவேன். அவர்கள் இகழ்ச்சிக் குறியாகக் காட்சியளிப்பார்கள்; ஏளனத்துக்கும் முடிவில்லா அழிவுக்கும் உள்ளாவார்கள்.

10அவர்களிடம் மகிழ்ச்சி ஒலியும் உவகைக் குரலும் திருமண ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன்; இயந்திரக் கற்களின் ஓசையும் விளக்கின் ஒளியும் இல்லாதிருக்கச் செய்வேன்.✠ 11இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும். சுற்றியுள்ள நாடுகளும் எழுபது ஆண்டளவாய்ப் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்.✠ 12ஆனால் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் பாபிலோனிய மன்னனையும் அந்த நாட்டையும் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர். அவர்களது குற்றத்தின் காரணமாகக் கல்தேயரின் நாட்டை என்றென்றைக்கும் பாழ்நிலம் ஆக்குவேன். 13நான் அந்த நாட்டுக்கு எதிராய்ப் பேசியுள்ள அனைத்துச் சொற்களும், எரேமியா வேற்று நாடுகளுக்கு எதிராய் உரைத்து இந்நூலில் எழுதப்பட்டுள்ள அனைத்து இறைவாக்குகளும் அந்நாட்டின் மேல் பலிக்கச் செய்வேன். 14அந்நாட்டினரைக் கூடப் பல நாடுகளும் மாமன்னர்களும், அடிமையாக்குவர். அவர்களின் செயல்களுக்கும் நடத்தைக்கும் ஏற்றவாறு நான் அவர்களுக்குக் கைம்மாறு அளிப்பேன்.


வேற்றினத்தார்க்கு எதிராய்


15இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே; சீற்றத்தால் நிரம்பியுள்ள இந்த இரசக் கிண்ணத்தை என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை எந்த மக்களினத்தாரிடம் அனுப்புகிறேனோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கக் கொடு. 16நான் அவர்கள்மேல் அனுப்பப்போகும் வாளை முன்னிட்டு அவர்கள் குடித்துத் தள்ளாடி வெறிகொள்வார்கள்.

17அப்போது நான் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை எடுத்து ஆண்டவர் என்னை எந்த மக்களித்தாரிடம் அனுப்பியிருந்தாரோ அந்த மக்களினத்தார் எல்லாம் குடிக்கச் செய்தேன். 18எருசலேமும் யூதாவின் நகர்களும் அவற்றின் அரசர்களும் தலைவர்களும் அதனைக் குடிக்கச் செய்தேன். இன்று காண்பதுபோல், அவை அழிந்து பாழாகவும் ஏளத்துக்கும் சாபத்துக்கும் உள்ளாகவுமே இவ்வாறு செய்தேன். 19எகிப்திய மன்னன் பார்வோன், அவன் அலுவலர்கள், தலைவர்கள், மக்கள் எல்லாரும், 20அங்குள்ள வேற்றின மக்கள் அனைவரும், ஊசு நாட்டு மன்னர்கள் யாவரும், அனைத்துப் பெலிஸ்திய மன்னர்களும், அஸ்கலோன், காசா, எக்ரோன், அஸ்தோதில் எஞ்சியோர்,

21ஏதோம், மோவாபு, அம்னோனின் புதல்வர், 22தீர், சீதோன் மன்னர்கள் யாவரும், கடலுக்கு அப்பாலுள்ள கடற்கரை நாட்டு மன்னர்கள் எல்லாரும், 23தெதான், தேமா, பூசு, முன்தலையை மழித்துக் கொள்ளும் எல்லாரும், 24அரேபியாவின் அனைத்து மன்னர்களும், பாலைநிலத்தில் வாழும் பல இன மக்களின் மன்னர்களும், 25சிம்ரியின் மன்னர்கள் யாவரும், ஏலாம் மன்னர்கள் எல்லாரும், மேதிய மன்னர்கள் அனைவரும், 26ஒருவருக்குப் பின் ஒருவராய் அருகிலும் தொலையிலும் உள்ள வட நாட்டு மன்னர்கள் யாவரும், மண்ணுலக நாடுகளின் அரசுகள் அனைத்தும் அக்கிண்ணத்திலிருந்து குடிக்கச் செய்தேன். அவர்களுக்குப் பிறகு சேசாக்கு⁕ மன்னனும் குடிப்பான். 27இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ‘குடியுங்கள், போதையேறக் குடியுங்கள்; கக்குங்கள். நான் உங்கள்மேல் அனுப்பும் வாளால் வீழுங்கள்; எழவே மாட்டீர்கள்’ என்று நீ அவர்களிடம் கூறு. 28உன் கையிலிருந்து கிண்ணத்தை எடுத்துக் குடிக்க அவர்கள் மறுத்தால், “படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் குடித்துத்தான் ஆகவேண்டும்” என்று அவர்களிடம் கூறு. 29இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.

30ஆகவே அவர்களுக்கு எதிராக
இச்சொற்களை எல்லாம்
இறைவாக்காக உரை:
“ஆண்டவர் மேலிருந்து
கர்ச்சனை செய்வார்;
தமது தூய உறைவிடத்திலிருந்து
குரல் எழுப்புவார்;
தம் இருப்பிடத்திலிருந்து
கடுமையாகக் கர்ச்சனை செய்வார்;
திராட்சைப்பழம் மிதிப்போரின்
ஆரவாரம்போல்
பூவுலகில் வாழ்வோர் அனைவருக்கு
எதிராகவும் குரல் எழுப்புவார்.
31அவரது கர்ச்சனை
உலகின் எல்லைவரை எட்டும்;
ஏனெனில், ஆண்டவர்
மக்களினங்களுக்கு எதிராக
வழக்குத் தொடரப்போகிறார்;
அவர் எல்லா மனிதர்க்கும்
தீர்ப்பு வழங்கப்போகிறார்;
தீயோரை அவர்
வாளுக்கு இரையாக்குவார்,
என்கிறார் ஆண்டவர்.”
32படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே: இதோ! தீமை
நாட்டிலிருந்து நாட்டுக்குப் பரவுகின்றது.
பூவுலகின் எல்லைகளிலிருந்து
பெரும் புயலொன்று
புறப்பட்டுப் போகின்றது.

33அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை விழுந்து கிடப்பார்கள். புலம்புவாரற்று, எடுத்துச் சேர்ப்பாரற்று, புதைப்பாரற்றுத் தரையில் சாணம்போல் கிடப்பார்கள். 34மேய்ப்பர்களே! ஒப்பாரி வையுங்கள்; கதறியழுங்கள். மந்தையின் தலைவர்களே! சாம்பலில் புரளுங்கள். ஏனெனில் நீங்கள் கொல்லப்படுவதற்கும் சிதறடிக்கப்படுவதற்குமான நாள்கள் நெருங்கிவிட்டன. விலையுயர்ந்த பாத்திரம் நொறுக்கப்படுவதுபோல், நீங்கள் அழிக்கப்படுவீர்கள். 35மேய்ப்பர்கள் ஓடி ஒளிய இயலாது. மந்தையின் தலைவர்களுக்குத் தப்ப வழியும் இராது. 36மேய்ப்பர்களின் ஆழுகுரலும் மந்தையின் தலைவர்களது ஒப்பாரியும் கேட்கின்றதே! ஏனெனில் ஆண்டவர் அவர்களின் மேய்ச்சல் நிலத்தை அழித்து விட்டார். 37ஆண்டவரின் கோபக்கனலால் அமைதியான பசும்புல் தரைகள் அழிந்து போயின. 38தன் குகையில் இருந்து வெளியேறும் சிங்கத்தைப் போல் அவர் வெளியேறி விட்டார். கொடியோனின் வாளாலும் ஆண்டவரின் கோபக்கனலாலும் அவர்கள் நாடு பாழடைந்து போயிற்று.


25:1 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2. 25:10 எரே 7:34; 16:9; திவெ 18:22-23. 25:11 2 குறி 36:21; எரே 29:10; தானி 9:2.


25:26 ‘சேசாக்கு’ என்னும் சொல் பாபிலோனைக் குறிக்கும்.



அதிகாரம் 26:1-24

எரேமியா சிறைப்படல்


1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:✠ 2“ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. 3ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்’.

4நீ அவர்களிடம் சொல்லவேண்டியது: ‘ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், 5நீங்கள் செவி சாய்க்காதபொழுதும் நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், 6இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.”✠

7ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். 8மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, “நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்” என்று கூச்சலிட்டனர். 9“இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.

10யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று அங்கே “புதுவாயில்” அருகே அமர்ந்தார்கள். 11குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.

12அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார். 13எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார். 14இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள். 15ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.”

16பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, “கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்” என்றார்கள். 17உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து, மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது: 18“யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, ‘படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்; எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,’ என்று சொன்னார்.✠ 19இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும் யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா? எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா? இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா? நாமோ நமக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.

20ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்; அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார். 21யோயாக்கிம் அரசரும் அவருடைய படைவீரர்களும் தலைவர்கள் அனைவரும் உரியா சொன்னதைக் கேட்டனர். உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் உரியா அதை அறிந்து அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார். 22அரசர் யோயாக்கிமோ அக்போரின் மகன் எல்னாத்தானையும், அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார். 23அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து, அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார்.”

24ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.


26:1 2 அர 23:36-24:6; 2 குறி 36:5-7. 26:6 யோசு 18:1; திபா 78:60; எரே 7:12-14. 26:18 மீக் 3:12.



அதிகாரம் 27:1-22

நுகத்தின் அடையாளம்


1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய⁕ செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே:✠ 2“ஆண்டவர் என்னிடம் இவ்வாறு உரைத்தார்; கயிறுகளையும் நுகத்தடியையும் நீ செய்து, உனது கழுத்தில் பூட்டிக் கொள். 3யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள தூதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு. 4அவர்கள் தங்கள் தலைவர்களிடம் பின்வரும் செய்தியைச் சொல்லுமாறு கட்டளையிடு; இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 5உங்கள் தலைவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டியது; என் மிகுந்த ஆற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் மண்ணுலகையும் அதில் வாழும் மனிதரையும் விலங்குகளையும் படைத்தது நானே. எனக்கு விருப்பமானவர்களிடம் அவற்றை நான் கொடுப்பேன். 6என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரின் கையில் இந்நாடுகளை எல்லாம் இப்பொழுது ஒப்புவித்திருப்பதும் நானே. அவனுக்கு அடிபணியும் பொருட்டுக் காட்டு விலங்குகளையும் அவனிடம் நான் ஒப்புவித்திருக்கிறேன். 7அவனுடைய நாட்டுக்கென்று குறிக்கப்பட்ட காலம் வரும்வரை, மக்களினங்கள் எல்லாம் அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்வார்கள். பின்னர் பல்வேறு மக்களினத்தாரும் மாமன்னர்களும் அவனையே தங்கள் அடிமை ஆக்கிக்கொள்வார்கள். 8ஆனால் பாபிலோனிய மன்னனான நெபுகத்னேசருக்கு அடிபணிந்து, அவனது நுகத்தைத் தனது கழுத்தில் ஏற்க மனமில்லாத மக்களினத்தையோ அரசையோ — அவனுடைய கையில் அவற்றை நான் ஒப்புவிக்கும்வரை — வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றால் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

9நீங்களோ ‘பாபிலோனிய மன்னனுக்கு அடிபணியாதீர்கள்’ என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் இறைவாக்கினர், குறிசொல்வோர், கனவுக்காரர், மந்திரவாதி, சூனியக்காரர் ஆகியோருக்குச் செவி கொடாதீர்கள். 10ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். அதன் விளைவாக உங்கள் நாட்டினின்று நீங்கள் அப்புறப்படுத்தப்படுவீர்கள். நான் உங்களைத் துரத்தியடிப்பேன்; நீங்கள் அழிந்து போவீர்கள். 11ஆனால், பாபிலோனிய மன்னனின் நுகத்தைத் தன் கழுத்தில் ஏற்று, அவனுக்கு அடிபணியும் எந்த இனத்தையும் அதன் சொந்த நாட்டிலேயே நான் விட்டு வைப்பேன். அந்த இனம் உழுது பயிரிட்டு அங்கேயே குடியிருக்கும், என்கிறார் ஆண்டவர்.”

12யூதாவின் அரசனான செதேக்கியாவிடமும் இதே போன்று பேசினேன்: “பாபிலோனிய மன்னனின் நுகத்துக்கு உங்கள் கழுத்தை நீட்டுங்கள்; அவனுக்கும் அவனுடைய மக்களுக்கும் அடிபணியுங்கள். அப்படியானால் நீங்கள் பிழைப்பீர்கள். 13பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய மனம் இல்லாத மக்களினத்தின் மேல் அனுப்பபுவதாக ஆண்டவர் எச்சரித்துள்ள வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றுக்கு நீரும் உம் மக்களும் ஏன் இரையாக வேண்டும்? 14எனவே ‘பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய வேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லும் இறைவாக்கினரின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடாதீர்கள். ஏனெனில் உங்களிடம் அவர்கள் பொய்யை இரைவாக்காக உரைக்கிறார்கள். 15நான் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இருப்பினும், நான் உங்களை நாடுகடத்தும் பொருட்டும், அங்கே நீங்களும் உங்களோடு பேசும் இறைவாக்கினர்களும் அழியும் பொருட்டும், அவர்கள் இவ்வாறு என் பெயரால் பொய்யை இறைவாக்காக உரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.”

16பின்னர் குருக்களிடமும் மக்கள் எல்லாரிடமும் நான் சொன்னது; “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; ‘இதோ! ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் இப்பொழுதே பாபிலோனிலிருந்து திருப்பிக் கொணரப்படும்’, என்று உங்களுக்கு அறிவிக்கும் இறைவாக்கினர்களின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். 17எனவே அவர்களுக்குச் செவி கொடாதீர்கள். பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிந்தால் நீங்கள் பிழைப்பீர்கள். இந்நகர் ஏன் பாழாக வேண்டும்? 18அவர்கள் உண்மையாகவே இறைவாக்கினர்களாய் இருந்தால், ஆண்டவரின் வாக்கும் அவர்களோடு இருந்தால், ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனது அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்களாவது பாபிலோனுக்குப் போகாதவாறு இப்பொழுதே அவர்கள் படைகளின் ஆண்டவரிடம் பரிந்து பேசட்டும்.”

19-20பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்துவந்த உயர்குடி மக்கள் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திய பொழுது, தன்னோடு எடுத்துச் செல்லாமல் இந்நகரிலேயே விட்டுச்சென்றிருந்த தூண்கள், வெண்கலக்கடல், ஆதாரங்கள், பிற கலங்கள் முதலியவற்றைக் குறித்துப் படைகளின் ஆண்டவர் கூறுவது: 21ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்கள் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 22‘அவை யாவும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும். நான் அவற்றின்மீது எனது கவனத்தைத் திருப்பும்வரை அவை அங்கேயே இருக்கும். பின்னர் நான் அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து இவ்விடத்தில் வைக்கச் செய்வேன்’ என்கிறார் ஆண்டவர்.


27:1 2 அர 24:18-20; 2 குறி 36:11-13.


27:1 ‘யோயாக்கிம்’ என்பது எபிரேய பாடம். 27:20 ‘கோனியா", "யோயாக்கிம்’ என்பவை மறுபெயர்கள்.



அதிகாரம் 28:1-17

எரேமியாவும் அனனியாவும்


1அதே ஆண்டில், அதாவது யூதாவின் அரசனான செதேக்கியாவினுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டு ஐந்தாம் மாதத்தில் அசூரின் மகனும் கிபயோனைச் சார்ந்தவனுமான அனனியா என்னும் இறைவாக்கினன் ஆண்டவரின் இல்லத்தில் குருக்கள் மற்றும் மக்கள் அனைவருடைய முன்னிலையிலும் என்னிடம் உரைத்தது; 2-3“இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; ‘பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிந்துவிட்டேன். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் இவ்விடத்தினின்று கவர்ந்து, பாபிலோனுக்கு எடுத்துச் சென்றுள்ள ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் எல்லாவற்றையும் இரண்டே ஆண்டுக் காலத்திற்குள் இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவேன். 4அத்தோடு யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதா மக்கள் அனைவரையும் இவ்விடத்திற்கு நான் திரும்பக் கொண்டு வருவேன். ஏனெனில், பாபிலோனிய மன்னனது நுகத்தை நான் முறித்தெறிவேன்’, என்கிறார் ஆண்டவர்”.

5அப்பொழுது ஆண்டவரின் இல்லத்தில் நின்று கொண்டிருந்த குருக்கள், மக்கள் அனைவர் முன்னிலையிலும், இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் பேசினார். 6இறைவாக்கினர் எரேமியா அவனை நோக்கி, “ஆமென்! ஆண்டவர் அவ்வாறே செய்வாராக! நீர் உரைத்த சொற்களை ஆண்டவர் நிறைவேற்றுவாராக! ஆண்டவர் இல்லத்தின் கலங்களையும் நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும் பாபிலோனிலிருந்து இவ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவருவாராக! 7ஆயினும் உம்செவிகளிலும் மக்கள் அனைவரின் செவிகளிலும் விழும்படி நான் உரைக்கும் இச்சொல்லைக் கவனித்துக் கேளும். 8உமக்கும் எனக்கும் முன்பே பண்டைய நாள்களில் வாழ்ந்த இறைவாக்கினர், பல நாடுகள், பேரரசுகளுக்கு எதிராகப் போர், துன்பம், கொள்ளைநோய் ஆகியவைப்பற்றி இறைவாக்கு உரைத்திருக்கின்றனர். 9நல்வாழ்வை முன்னறிவிக்கும் இறைவாக்கினரைப் பொறுத்தவரை, அவரது வாக்கு நிறைவேறும் பொழுதுதான், ஆண்டவர் அவரை உண்மையாகவே அனுப்பியுள்ளார் என்பது தெரியவரும்” என்றார்.

10அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான். 11மேலும், அனனியா எல்லா மக்கள் முன்னிலையிலும், “ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நுகத்தை இன்னும் இரண்டே ஆண்டுகளில் மக்களினத்தார் அனைவருடைய கழுத்தினின்றும் பிடுங்கி முறித்தெறிவேன்” என்றான். உடனே இறைவாக்கினர் எரேமியா அவ்விடம் விட்டு அகன்றார்.

12இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை முறித்தெறிந்த சில நாள்களுக்குப் பின்னர், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது; 13“நீ யோய் அனனியாவிடம் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே: நீ மர நுகத்தை முறித்தெறிந்தாய்; அதற்குப் பதிலாக இரும்பு நுகத்தைச் செய்து கொள்வாய். 14ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்.”

15அப்பொழுது இறைவாக்கினர் எரேமியா இறைவாக்கினன் அனனியாவிடம் கூறியது: “அனனியாவே, கூர்ந்து கேள்: ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. அப்படியிருந்தும் இம்மக்கள் பொய்யை நம்பும்படி நீ செய்துவிட்டாய். 16எனவே, ஆண்டவர் கூறுகிறார்: இதோ! நான் இவ்வுலகினின்றே உன்னை அனுப்பி வைக்கப்போகிறேன். ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு நீ போதித்ததால், இந்த ஆண்டிலேயே நீ சாவாய்!”

17அவ்வாறே அதே ஆண்டு ஏழாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா மாண்டான்.



அதிகாரம் 29:1-32

நாடுகடத்தப்பட்டோர்க்கு எரேமியா எழுதிய மடல்


1எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார். 2அரசன் எக்கோனியா, அரச அன்னை, அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்ற பின்னர், 3சாப்பானின் மகன் எலாசா, இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் யூதாவின் அரசன் செதேக்கியா அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான். 4அதன் சொற்களாவன; “இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே; 5வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள். 6பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள். உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்; உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்! இவ்வாறு அவர்களும் தங்களுக்குப் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும். அங்கே பல்கிப் பெருகுங்கள்; எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள். 7உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்; அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது. 8இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும் குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 9அவர்கள் காணும் கனவுகளை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை,” என்கிறார் ஆண்டவர்.

10ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் நான் உங்களைச் சந்திக்க வருவேன்; உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன்.✠ 11ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். 12நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். 13நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்.✠ 14ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்; நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களினங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.

15‘ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்’ என்று சொல்கிறீர்கள். 16ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே; 17படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ! அவர்கள் மீது வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பிவைப்பேன். தின்ன முடியாத அளவுக்கு அழுகிப் போன காட்டு அத்திப் பழங்களைப் போல் அவர்களை ஆக்குவேன். 18வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு அவர்களைப் பின்தொடர்வேன். உலகின் எல்லா அரசுகளும் அவர்களை அருவருக்கும்படி செய்வேன்; நான் அவர்களை விரட்டியடித்துள்ள எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச் சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன். 19ஏனெனில் என் ஊழியர்களான இறைவாக்கினர்களை நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியிருந்தும், அவர்கள் என் சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நீங்களும் செவிகொடுக்கவில்லை, என்கிறார் ஆண்டவர். 20எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்.”

21“என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான். 22அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் அனைவரும் ‘பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக’ என்று சாபமிடுவர். 23ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்; பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்; நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்; இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்.”

24நெகலாமைச் சார்ந்த செமாயாவிடம் நீ சொல்லவேண்டியது; 25இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ உன் பெயரால் மடல்கள் எழுதி, எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும் மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவுக்கும் மற்ற குருக்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்துள்ளாய்.

26செப்பனியாவுக்கு நீ எழுதியது; ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய் இருக்கும் பொருட்டும், இறைவாக்கினர்போல் நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனையும் தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும் குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார். 27அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனதோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்? 28இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, ‘உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்; எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்’ என்று செய்தி அனுப்பியுள்ளான்.

29இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார். 30அப்பொழுது ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: 31நாடு கடத்தப்பட்டோர் எல்லாருக்கும் நீ எழுதி அனுப்ப வேண்டியது; நெகலாமியனான செமாயாவைப்பற்றி ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் அனுப்பாதிருந்தும் செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து, அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான். 32எனவே ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்,” என்கிறார் ஆண்டவர்.


29:1-2 2 அர 24:12-16; 2 குறி 36:10. 29:10 2 குறி 36:21; எரே 25:11; தானி 9:2. 29:13 இச 4:29.



அதிகாரம் 30:1-24

விடுதலைபற்றிய வாக்குறுதியும் புதிய உடன்படிக்கையும்

1ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு மீண்டும் அருளப்பட்டது: 2“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நான் உனக்குச் சொல்லியிருக்கும் சொற்களை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவை. 3ஏனெனில் நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது என்னுடைய மக்களான இஸ்ரயேலையும் யூதாவையும் அவர்களது அடிமைத்தனத்தினின்று அழைத்து வருவேன்; அவர்களுடைய மூதாதையர்க்கு நான் கொடுத்திருந்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வேன். அவர்களும் அதை உடைமையாக்கிக்கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.”

4இஸ்ரயேலையும் யூதாவையும் குறித்து ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே:
5ஆண்டவர் கூறுகின்றார்;
திடுக்கிடச் செய்யும் ஒலியை
நான் கேட்கின்றேன்;
அது அச்சத்தின் ஒலி;
சமாதானத்தின் ஒலி அன்று.
6‘ஆண்மகன் எவனாவது
பிள்ளை பெற்றதுண்டா?’ என்று
கேட்டுப் பாருங்கள்.
அப்படியிருக்க, ஒவ்வோர் ஆணும்
பேறுகாலப் பெண்ணைப்போலத்
தன் இடுப்பில் கையை
வைத்துக் கொண்டிருப்பதை
நான் ஏன் காண்கிறேன்?
எல்லா முகங்களும் மாறிவிட்டன;
அவை வெளிறிப்போய்விட்டன!
7அந்தோ! அந்த நாள் பெரிய நாள்;
மற்றெந்த நாளும்
அதைப் போன்றில்லை.
யாக்கோபுக்கு அது
வேதனையின் காலம்;
ஆனால் அதனின்று
அவன் விடுவிக்கப்பெறுவான்.

8படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்நாளில் உன்னுடைய கழுத்திலிருக்கும் அவனது நுகத்தை முறித்துப்போடுவேன்; அவனுடைய விலங்குகளை உடைத்தெறிவேன். 9அயல்நாட்டவர் அவனை மீண்டும் அடிமைப்படுத்தமாட்டார். ஆனால் அவர்களின் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவர்களுக்காக நான் எழச்செய்யவிருக்கும் மன்னன் தாவீதுக்கும் அவர்கள் ஊழியம் புரிவார்கள்!

10என் ஊழியன் யாக்கோபே,
அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே,
என்கிறார் ஆண்டவர்.
தொலை நாட்டினின்று
உன்னை நான் மீட்பேன்;
அடிமைத்தன நாட்டினின்று
உன் வழிமரபினரை விடுவிப்பேன்.
யாக்கோபு திரும்பிவந்து
அமைதியில் இளைப்பாறுவான்;
அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
11நான் உன்னோடு இருக்கின்றேன்;
உன்னை மீட்பதற்காக உள்ளேன்,
என்கிறார் ஆண்டவர்.
எந்த மக்களினத்தார் இடையே
நான் உன்னைச் சிதறடித்தேனோ
அவர்கள் அனைவரையும்
முற்றிலும் அழித்தொழிப்பேன்;
உன்னையோ முற்றிலும்
அழிக்கமாட்டேன்;
உன்னை நீதியான முறையில்
தண்டிப்பேன்;
உன்னைத் தண்டிக்காமல்
விட்டுவிடமாட்டேன்;
உன்னை எவ்வகையிலேனும்
தண்டியாதுவிடேன்.
12ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;
உனது காயத்தைக்
குணப்படுத்த முடியாது;
உனது புண் புரையோடிப்போனது.
13உனக்காக வாதிட எவனும் இல்லை;
உனது காயத்தை ஆற்ற
மருந்தே இல்லை;
உன்னைக் குணப்படுத்தவே முடியாது.
14உன் காதலர் அனைவரும்
உன்னை மறந்துவிட்டனர்;
உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;
மாற்றான் தாக்குவது போல
நான் உன்னைத் தாக்கினேன்;
கொடியோன் தண்டிப்பதுபோல
நான் உன்னைத் தண்டித்தேன்;
ஏனெனில் உனது குற்றம் பெரிது;
உன் பாவங்களோ எண்ணற்றவை.
15நீ நொறுக்கப்பட்டதை எண்ணி
ஏன் அழுகின்றாய்?
உனது வேதனையைத் தணிக்கமுடியாது;
ஏனெனில் உனது குற்றமோ பெரிது;
உன் பாவங்களோ எண்ணற்றவை;
எனவே இவற்றை எல்லாம்
நான் உனக்குச் செய்தேன்.
16ஆயினும், உன்னை விழுங்குவோர்
எல்லாரும் விழுங்கப்படுவர்;
உன் பகைவர் எல்லாரும்
ஒருவர் விடாமல் நாடுகடத்தப்படுவர்;
உன்னைக் கொள்ளையடிப்போர்
அனைவரும், கொள்ளையடிக்கப்படுவர்;
உன்னைச் சூறையாடுவோர்
அனைவரும், நான் கையளிக்க,
சூறையாடப்படுவர்.
17நான் உனக்கு நலம் அளிப்பேன்;
உன்னுடைய காயங்களை ஆற்றுவேன்,
என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில், “தள்ளப்பட்டவள்” என்று
உன்னை அழைத்தார்கள்;
‘இந்தச் சீயோனைப் பற்றிக்
கவலைப்படுவார் யாருமிலர்’,
என்றார்கள்.
18ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;
அடிமைத் தனத்தினின்று
நான் யாக்கோபின் கூடாரங்களை
திரும்பக் கொணர்வேன்;
அவனுடைய உறைவிடங்கள்மீது
நான் இரக்கம் காட்டுவேன்;
அவற்றின் இடிபாடுகள்மேலேயே
நகர் மீண்டும் கட்டி எழுப்பப்படும்;
அரண்மனையும் அதற்குரிய
இடத்திலேயே அமைக்கப்படும்.
19அவர்களிடமிருந்து
நன்றிப் பாக்கள் எழும்பிவரும்;
மகிழ்ச்சியுறுவோரின்
ஆரவாரம் கேட்கும்.
அவர்களை நான்
பல்கிப் பெருகச் செய்வேன்;
அவர்கள் எண்ணிக்கையில்
குறைய மாட்டார்கள்.
நான் அவர்களைப்
பெருமைப் படுத்துவேன்;
இனி அவர்கள்
சிறுமையுற மாட்டார்கள்.
20அவர்களுடைய பிள்ளைகள்
முன்புபோல் இருப்பர்;
அவர்களது கூட்டமைப்பு
என் திருமுன் நிலை நாட்டப்படும்;
அவர்களை ஒடுக்குவோர்
அனைவரையும் தண்டிப்பேன்.
21அவர்களின் தலைவன்
அவர்களுள் ஒருவனாகவே இருப்பான்;
அவர்களை ஆள்பவன்
அவர்கள் நடுவினின்றே தோன்றுவான்;
அவன் என்னை நெருங்கிவரச் செய்வேன்;
அவனும் என்னை அணுகிவருவான்;
ஏனெனில், என்னை அணுகிவர
வேறு யாருக்குத் துணிவு உண்டு?,
என்கிறார் ஆண்டவர்.
22நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;
நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
23இதோ ஆண்டவரின் புயல்!
அவரது சினம்
சூறாவளிபோல் சுழன்றெழும்.
அது தீயோரின் தலையைத் தாக்கிச்
சுழன்றடிக்கும்.
24ஆண்டவர் மனத்தில் கொண்டுள்ள
திட்டங்கள் அனைத்தையும்
செயல்படுத்தி நிறைவேற்றாமல்
அவரது வெஞ்சினம் திரும்பிவராது;
வரவிருக்கும் நாள்களில்
அதை நீங்கள் உணர்வீர்கள்.


30:10-11 எரே 46:27-28.



அதிகாரம் 31:1-40

1ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.”

2ஆண்டவர் கூறுவது இதுவே:
“வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள்
பாலைநிலத்தில்
என் அருளைக் கண்டடைந்தனர்;
இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர்.
3ஆண்டவர் அவர்களுக்குத்⁕
தொலையிலிருந்து தோன்றினார்.
உனக்கு நான்
முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்;
எனவே, பேரன்பால்
உன்னை ஈர்த்துள்ளேன்.
4கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே!
உன்னை நான் மீண்டும்
கட்டி எழுப்புவேன்;
நீயும் கட்டி எழுப்பப்படுவாய்;
மீண்டும் உன் மேளதாளங்களை
நீ எடுத்துக் கொள்வாய்;
மகிழ்ச்சியுற்றோர் போல
நடனம் ஆடிக் கொண்டு
நீ வெளியேறுவாய்;
5சமாரியாவின் மலைகள்மேல்
திராட்சைத் தோட்டங்களை
நீ மீண்டும் அமைப்பாய்;
தோட்டக்காரர் பயிரிட்டு
விளைச்சலை உண்டு மகிழ்வர்.
6ஏனெனில், ஒரு நாள் வரும்;
அப்பொழுது எப்ராயிம் மலையில்,
‘எழுந்திருங்கள்;
நாம் சீயோனுக்குப் போவோம்;
நம் கடவுளாகிய ஆண்டவரிடம்
செல்வோம்’ என்று
காவலர் அழைப்பு விடுப்பர்.
7ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்:
யாக்கோபை முன்னிட்டு
மகிழ்ந்து பாடுங்கள்;
மக்களினத் தலைவனைக் குறித்து
ஆர்ப்பரியுங்கள்;
முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்;
‘ஆண்டவர் இஸ்ரயேலில்
எஞ்சியோராகிய தம் மக்களை
மீட்டருளினார்!’ என்று
பறைசாற்றுங்கள்.
8இதோ! வடக்கு நாட்டிலிருந்து
அவர்களை நான் அழைத்து வருவேன்;
மண்ணுலகின் கடை எல்லைகளினின்று
அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்.
அவர்களுள் பார்வையற்றோரும்
காலூனமுற்றோரும் கருவுற்றோரும்
பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்;
பெரும் கூட்டமாய் அவர்கள்
இங்குத் திரும்பி வருவர்.
9அழுகையோடு அவர்கள்
திரும்பி வருவார்கள்;
ஆறுதலளித்து⁕ அவர்களை
நான் அழைத்து வருவேன்;
நீரோடைகள் ஓரமாக அவர்களை
நான் நடத்திச் செல்வேன்;
இடறிவிழாதவாறு சீரான வழியில்
அவர்கள் நடக்கச் செய்வேன்.
ஏனெனில், நான்
இஸ்ரயேலின் தந்தை,
எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.
10மக்களினத்தாரே,
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில்
அதை அறிவியுங்கள்;
‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரே
அதைக் கூட்டிச் சேர்ப்பார்;
ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல்
அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள்.
11ஏனெனில், யாக்கோபை
ஆண்டவர் மீட்டார்;
அவனிலும் வலியவன் கையினின்று
அவனை விடுவித்தார்.
12அவர்கள் வந்து சீயோனின் உச்சியில்
பாடி மகிழ்வார்கள்;
தானியம், திராட்சை இரசம்,
எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,
கன்றுகாலிகள், ஆகிய
ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப்
பூரிப்படைவார்கள்;
அவர்களது வாழ்க்கை
நீர்வளம் மிக்க
தோட்டம் போல் இருக்கும்;
அவர்கள் இனிமேல்,
ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.
13அப்பொழுது கன்னிப்பெண்கள்
நடனம் ஆடிக் களித்திருப்பர்;
அவ்வாறே இளைஞரும் முதியோரும்
மகிழ்ந்திருப்பர்;
அவர்களுடைய அழுகையை நான்
மகிழ்ச்சியாக மாற்றுவேன்;
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்;
துன்பத்திற்குப் பதிலாக
இன்பத்தை அருள்வேன்.
14குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்;
என் மக்கள் எனது வள்ளன்மையால்
நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.
15ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;
இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது;
ஒரே புலம்பலும் அழுகையுமாய்
இருக்கின்றது.
இராகேல் தம் குழந்தைகளுக்காக
அழுதுகொண்டிருக்கின்றார்;
ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்;
ஏனெனில், அவருடைய குழந்தைகள்
அவரோடு இல்லை.✠
16ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்;
நீ அழுகையை நிறுத்து;
கண்ணீர் வடிக்காதே;
ஏனெனில் உனது உழைப்புக்குப்
பயன் கிடைக்கும்,
என்கிறார் ஆண்டவர்.
தங்கள் பகைவரின் நாட்டினின்று
அவர்கள் திரும்பி வருவார்கள்.
17உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில்
நம்பிக்கை உண்டு,
என்கிறார் ஆண்டவர்.
உன் பிள்ளைகள்
தம் நாட்டுக்குத் திரும்புவர்.
18எப்ராயிமின் புலம்பலை
நான் உண்மையாகவே கேட்டேன்;
“பணியாத இளம் காளையை
அடித்துத் திருத்துவதுபோல
நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்;
நீர் என்னைத் திரும்ப
அழைத்துச் செல்லும்;
நானும் திரும்பி வரவேன்;
ஏனெனில், என் கடவுளாகிய
ஆண்டவர் நீரே.
19உம்மை விட்டு விலகிச் சென்றபின்
நான் மனம் வருந்தினேன்;
பயிற்றுவிக்கப்பட்டபின்
நான் மார்பில் அறைந்து கொண்டேன்;
என் இளமையின் அவமானம்
இன்னும் என்னிடம் காணப்பட்டது.
நான் வெட்கித் தலை குனிந்தேன்.”
20“எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா?
நீ என் அன்புக் குழந்தை அல்லவா?
உனக்கு எதிராக நான்
அடிக்கடி பேசியபோதிலும்,
உன்னை நான் இன்னும்
நினைவில் கொண்டிருக்கிறேன்;
உனக்காக என் இதயம்
ஏங்கித் தவிக்கின்றது;
திண்ணமாய் உனக்கு நான்
இரக்கம் காட்டுவேன்”
என்கிறார் ஆண்டவர்.
21உனக்கெனச் சாலை
அடையாளங்களை அமைத்துக்கொள்;
உனக்கெனக் “கைகாட்டிகளை
நாட்டிக்கொள்;
நீ நடந்து சென்ற வழியாகிய
நெடுஞ்சாலையை நினைவில் கொள்.
கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே,
திரும்பி வா;
இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.
22நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே!
இன்னும் எத்துணைக் காலம்
நீ அலைந்து திரிவாய்?
ஆண்டவராகிய நான்
விந்தையான ஒன்றை
உலகில் படைத்துள்ளேன்;
ஒரு பெண் தன் கணவனைப்
பாதுகாக்கின்றாள்.”
23இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே;
அடிமைத்தனத்தினின்று அவர்களை
நான் திரும்பக் கொணரும் பொழுது,
‘நீதியின் இருப்பிடமே,
தூய்மை மிகு மலையே!
ஆண்டவர் உனக்கு
ஆசி வழங்குவாராக!’
என்னும் வாழ்த்துரை
யூதா நாட்டிலும்
அதன் நகர்களிலும்
மீண்டும் எதிரொலிக்கும்.
24யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும்
மக்கள் குடியிருப்பர்;
விவசாயிகளும், ஆடு மேய்க்கும்
இடையர்களும் சேர்ந்து வாழ்வர்.
25ஏனெனில், சோர்ந்த உள்ளங்களுக்கு
நான் புத்துயிர் அளிப்பேன்;
வாடிய நெஞ்சங்களுக்கு
நான் நிறைவளிப்பேன்.
26அப்பொழுது நான்
விழித்தெழுந்து பார்த்தேன்;
என் தூக்கம்
எனக்கு இன்பமாய் இருந்தது.

27இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும் யூதா வீட்டையும் மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன், என்கிறார் ஆண்டவர். 28பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், தீங்கிழைக்கவும் அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி விழிப்பாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நடவும் விழிப்பாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர்.

29அக்காலத்தில் அவர்கள்,
‘தந்தையர் புளித்த திராட்சைப்
பழங்களைத் தின்ன,
பிள்ளைகளின் பல் கூசிற்றாம்’
என்று சொல்ல மாட்டார்கள்.✠
30ஆனால், எல்லாரும் அவரவர் தம்
தீச்செயலின் பொருட்டே சாவர்.
புளித்த திராட்சைப் பழம்
தின்பவனுக்குத்தான் பல் கூசும்.

31இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்.✠ 32அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

33அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.✠ 34இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன்.

35ஆண்டவர் பகலில் ஒளி வீசக்
கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்;
இரவில் ஒளி கொடுக்க
நிலாவையும் விண்மீன்களையும்
நியமித்துள்ளார்;
அலைகள் முழங்குமாறு
கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்;
‘படைகளின் ஆண்டவர்’ என்பது
அவரது பெயராம்.
அவர் கூறுவது இதுவே;
36மேற்கண்ட நியமங்கள்
என் திருமுன்னின்று
மறைந்துவிடுமாயின்,
இஸ்ரயேலின் வழிமரபினர்
என் முன்னிலையில்
ஒரு தனி இனமாய்
என்றென்றும் இல்லாமல்
போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.
37ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
மேலே வான்வெளி
அளக்கப்படக் கூடுமாயின்,
கீழே பூவுலகின் அடித்தளங்களைக்
கண்டுபிடிக்க இயலுமாயின்,
இஸ்ரயேலின் வழிமரபினரின்
அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு
அவர்கள் அனைவரையும்
நான் தள்ளிவிடுவேன்,
என்கிறார் ஆண்டவர்.

38இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர். 39அதன் எல்லை நேராகக் காரேபு மலைவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும். 40பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது; அழித்தொழிக்கப்படாது.


31:15 தொநூ 35:16-19; மத் 2:18. 31:29 எசே 18:2. 31:31 மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20; 1 கொரி 11:25; 2 கொரி 3:6. 31:31-34 எபி 8:8-12. 31:33 எபி 10:16.


31:3 ‘எனக்கு’ என்பது எபிரேய பாடம். 31:9 ‘மன்றாட்டுக்களோடு’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 32:1-44

எரேமியா நிலம் வாங்குதல்


1யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.✠ 2அப்பொழுது பாபிலோனிய மன்னனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினர் எரேமியாவோ யூதா அரசனது அரண்மனையில் இருந்த காவல்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார். 3யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான். 4யூதாவின் அரசன் செதேக்கியா கல்தேயரின் கைக்குத் தப்பமாட்டான்; மாறாக, அவன் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்படுவது உறுதி. செதேக்கியா அவனோடு நேருக்கு நேர் பேசுவான்; அவனை முகத்துக்கு முகம் பார்ப்பான். 5அவன் செதேக்கியாவைப் பாபிலோனுக்கு இழுத்துச் செல்வான். நான் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்,” என்கிறார் ஆண்டவர். மேலும், கல்தேயருக்கு எதிராக நீங்கள் போரிட்டாலும் வெற்றி பெறமாட்டீர்கள் என்று நீ இறைவாக்கு உரைத்தது ஏன்? என்று சொல்லி, அவரைச் சிறைப்படுத்தினான்.

6அப்பொழுது எரேமியா கூறியது: ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 7இதோ, உன் உறவினன் சல்லூமின் மகன் அனமேல் உன்னிடம் வந்து, “அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை நீ விலைக்கு வாங்கிக் கொள். எனெனில் அதை வாங்கி மீட்பது உனது உரிமை ஆகும்” என உன்னை வேண்டுவான். 8ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, “தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்; ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை; நீரே அதை வாங்கிக்கொள்ளும்” என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன். 9அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து நான் வாங்கினேன்; அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன். 10பத்திரத்தில் கையெழுத்திட்டு, அதில் முத்திரையிட்டேன்; சாட்சிகள் முன்னிலையில் வெள்ளியைத் தராசில் வைத்து நிறுத்துக் கொடுத்தேன். 11பின்னர் விதி முறைகளும் நிபந்தனைகளும் அடங்கிய முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அதன் முத்திரையிடப்படாத நகலையும் நான் பெற்றுக் கொண்டேன். 12ஒப்பந்தப் பத்திரத்தை மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான பாரூக்கிடம் நான் கொடுத்தேன். என் உறவினரின் மகன் அனமேல் முன்னிலையிலும் பத்திரத்தில் கையொப்பமிட்டிருந்த சாட்சிகள் முன்னிலையிலும் காவல்கூடத்தில் உட்கார்ந்திருந்த யூதர் அனைவருடைய முன்னிலையிலும் நான் அதைக் கொடுத்தேன். 13அவர்கள் முன்னிலையில் நான் பாரூக்கிற்குக் கொடுத்த கட்டளையாவது; 14இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்த ஒப்பந்தப் பத்திரங்களை — அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும் — எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை. 15ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மீண்டும் விலைக்கு வாங்கப்படும்.


எரேமியாவின் மன்றாட்டு


16ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது: 17“என் தலைவராகிய ஆண்டவரே! உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! உமக்குக் கடினமானது எதுவும் இல்லை. 18ஆயிரமாயிரம் பேருக்கு நீர் அருளன்பு காட்டி வருகிறீர். ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர். மாபெரும் ஆற்றல் மிகு இறைவா! படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும். 19நீர் திட்டமிடுவதில் பெரியவர்; செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர். 20நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும் இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர். இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர். 21அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால் பேரச்சம் உண்டாக, வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும் உம் மக்கள் இஸ்ரயேலை எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர். 22அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக நீர் வாக்களித்திருந்த நாட்டை — பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை — அவர்களுக்குக் கொடுத்தீர். 23அவர்கள் வந்து அதைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் உம் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை; உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை; நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை. ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்தீர்.

24இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன! வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்! 25ஓ! தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, ‘வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்; அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்’ என்று சொல்கிறீரே! ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே!”

26பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது; 27நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ? 28ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.✠ 29இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்; அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்; ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்; வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்; இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள். 30இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்; ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.

31இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை, என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன். 32ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டியுள்ளார்கள்; அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள். 33அவர்கள் தங்களது முகத்தை அல்ல, முதுகையே எனக்குக் காட்டினார்கள். திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை, அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. 34எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர்.✠ 35மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்வதன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.✠


ஆண்டவரின் வாக்குறுதி


36இப்பொழுதோ வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக இந்நகர் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதைக் குறித்துக் கூறுவது இதுவே; 37“இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்; அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன். 38அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். 39ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். இதனால் அவர்கள் தங்கள் நலனையும், தங்களுக்குப்பின் தங்கள் பிள்ளைகளின் நலனையும் கருதி, எந்நாளும் எனக்கு அஞ்சி நடப்பார்கள். 40நான் அவர்களோடு என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன். எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன். என்னைப் பற்றிய அச்சத்தை அவர்களது இதயத்தில் பதியவைப்பேன். இதனால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமாட்டார்கள். 41அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்; என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன்

42ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும் இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே, நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும் எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன். 43‘இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு; இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள். 44வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்; அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்; இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன்;’ என்கிறார் ஆண்டவர்.


32:1 2 அர 25:1-7. 32:28 2 அர 25:1-11; 2 குறி 36:17-21. 32:34 2 அர 23:10; எரே 7:30-31; 19:1-6. 32:35 லேவி 18:21; 2 அர 23:10; எரே 7:31.



அதிகாரம் 33:1-26

மற்றொரு வாக்குறுதி


1காவல்கூடத்தில் எரேமியா இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை அவருக்கு அருளப்பட்டது: 2உலகைப் படைத்தவரும் அதை உருவாக்கி நிலைநாட்டியவருமான ஆண்டவர் — ‘ஆண்டவர்’ என்பது அவர் பெயராகும் — இவ்வாறு கூறுகிறார்: 3என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன். 4முற்றுகைத் தளங்கள், வாள் முதலியவற்றால் தகர்க்கப்பட்டுக் கிடக்கும் இந்நகரின் வீடுகளைக் குறித்தும், யூதா அரசர்களின் அரண்மனைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; 5எதிர்த்துப் போரிடவும், சினம்கொண்டு, சீற்றமுற்று நான் வெட்டி வீழத்திய மனிதர்களின் பிணங்களால் வீடுகளை நிரப்பவும், இதோ கல்தேயர் வந்துகொண்டிருக்கின்றனர். ஏனெனில் இந்நகரின் தீச்செயல் அனைத்தையும் முன்னிட்டு அதனின்று நான் என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். 6ஆயினும், நான் அந்நகரின் காயங்களை ஆற்றிக் குணப்படுத்துவேன்; அம்மக்களுக்கு நலன் அளித்து நிலையான நிறைவாழ்வை வழங்குவேன். 7யூதாவை அதன் அடிமைத்தனத்தினின்றும் இஸ்ரயேலை அதன் அடிமைத்தனத்தினின்றும் நான் அழைத்துவருவேன்; முன்பு இருந்தது போன்று அவற்றைக் கட்டி எழுப்புவேன்.

8எனக்கு எதிராக அவர்கள் செய்துள்ள பாவங்களினின்று அவர்களை நான் தூய்மைப்படுத்துவேன்; அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்துள்ள குற்றங்கள், கிளர்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையும் நான் மன்னிப்பேன். 9நான் எருசலேமுக்குச் செய்துவரும் எல்லா நன்மைகளையும் பற்றிக் கேள்வியுறும் உலகின் மக்களினத்தார் அனைவரின் முன்னிலையில் அது எனக்கு மகிழ்ச்சி, புகழ்ச்சி, மாட்சி தரும் நகராய் விளங்கும். நான் அதற்கு வழங்கும் அனைத்து நலத்தையும் வளத்தையும் கண்டு அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்.

10ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: ‘ஆளரவமற்ற பாழ்நிலம்’ என நீங்கள் அழைக்கும் இவ்விடத்தில் — மனிதனோ, குடிமகனோ, விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் — 11மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும், மணமகன் மணமகள் குரலொலியும் மீண்டும் கேட்கும். ‘படைகளின் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றுமுள்ளது’ எனப் பாடியவாறு ஆண்டவர் இல்லத்திற்கு நன்றிப் பலிகளைக் கொண்டுசெல்வோரின் பேரொலியும் கேட்கும்; ஏனெனில், நாட்டை நான் அடிமைத்தனத்தினின்று விடுவித்து முன்னைய நன்னிலைக்கு உயர்த்துவேன், என்கிறார் ஆண்டவர்.

12படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; மனிதனோ விலங்கோ இன்றிப் பாழடைந்து கிடக்கும் இவ்விடத்திலும், இதை அடுத்த எல்லா நகர்களிலும் இடையர் தம் மந்தைகளை இளைப்பாற்றும் குடியிருப்புகள் மீண்டும் தோன்றும். 13மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும், பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும் ஆடுகளை எண்ணிச் சரிபார்ப்பவனின் கண்காணிப்பில் அவை மீண்டும் கடந்து செல்லும், என்கிறார் ஆண்டவர்.

14இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 15அந்நாள்களில் — அக்காலத்தில் — நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். 16அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ”⁕ என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

17ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டின் அரியணையில் வீற்றிருக்கத்தக்க ஒருவர் தாவீதுக்கு இராமல் போகார்.✠ 18என் திருமுன் எரிபலிகள் செலுத்தவும், தானியப் படையல்கள் ஒப்புக்கொடுக்கவும், என்றென்றும் பலிகள் நிறைவேற்றவும் தக்க ஒருவர் லேவி குலத்துக் குருக்களிடையே இராமல் போகார்.✠

19ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: 20ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: பகலும் இரவும் முறைப்படி வராதவாறு அவற்றோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கை உங்களால் உடைத்தெறியப்படுமாயின், 21என் ஊழியன் தாவீதோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் உடைத்தெறியப்படும், தாவீதின் அரியணையேறி ஆட்சிசெய்யும் மைந்தன் அவனுக்கு இருக்கமாட்டான்; என் பணியாளர்களான லேவி குலத்துக் குருக்களுக்கும் இவ்வாறே நிகழும்.

22எண்ணமுடியாத விண்மீன்களையும் அளக்க முடியாத கடல் மணலையும் போல, என் ஊழியன் தாவீதின் வழி மரபினரையும் என் பணியாளரான லேவியரையும் நான் பெருகச் செய்வேன்.

23ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: 24ஆண்டவர் தேர்ந்துகொண்ட இரண்டு குடும்பங்களையும் அவர் தள்ளிவிட்டார் என்று இம்மக்கள் பேசிக்கொள்வதை நீ கவனித்ததில்லையா? என் மக்கள் ஓர் இனமாகத் திகழாத அளவுக்கு, என் மக்களை அவர்கள் இழிவாக நடத்துகிறார்கள்; அவர்களை ஓர் இனமாகக் கூடக் கருதுவதில்லை. 25ஆண்டவர் கூறுவது இதுவே; நான் பகலோடும் இரவோடும் உடன்படிக்கை செய்திராவிடில், விண்ணுக்கும் மண்ணுக்கும் உரிய ஒழுங்கு முறைகளை நிறுவியிராவிடில், 26யாக்கோபின் வழிமரபினரையும், என் ஊழியன் தாவீதின் வழிமரபினரையும் உண்மையாகவே தள்ளிவிடுவேன். ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகியோரின் வழிமரபினரை ஆள்வதற்குத் தாவீதின் வழிமரபினரிலிருந்து யாரையும் தேர்ந்துகொள்ளமாட்டேன். ஆனால் இப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்பேன்; அவர்கள்மீது இரக்கம் காட்டுவேன்.


33:14-16 எரே 23:5-6. 33:17 2 சாமு 7:12-16; 1 அர 2:4; 1 குறி 17:11-14. 33:18 எண் 3:5-10.


33:16 எபிரேயத்தில், ‘ஆண்டவரே நமது நீதி’ என்பது பொருள். காண்: எரே 23:6.



அதிகாரம் 34:1-22

செதேக்கியாவுக்கு எதிராக


1பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும், அவருடைய எல்லாப் படைகளும், அவரது ஆட்சிக்கு உட்பட்ட உலகின் அரசுகள், மக்களினங்கள் அனைத்தும் எருசலேமையும் அதன் நகர்களையும் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த வேளையில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு;✠ 2இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா அரசன் செதேக்கியாவிடம் சொல்லவேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனிடம் இந்நகரைக் கையளிக்கப்போகிறேன். அவன் அதைத் தீக்கிரையாக்குவான். 3நீ அவனுடைய கைக்குத் தப்பமாட்டாய்; மாறாகத் திண்ணமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புவிக்கப்படுவாய். பாபிலோனிய மன்னனை நீ முகத்துக்குமுகம் பார்ப்பாய்; அவனோடு நேருக்கு நேர் பேசுவாய்; நீ பாபிலோனுக்குப் போவாய். 4ஆயினும், யூதாவின் அரசனே! செதேக்கியா! ஆண்டவரின் வாக்கைக் கேள். உன்னைப் பற்றி ஆணடவர் கூறுவது இதுவே; நீ வாளால் மடியமாட்டாய்; 5ஆனால் அமைதியாகவே சாவாய். உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான உன் மூதாதையரின் நினைவாக மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று, உன் நினைவாகவும் எரிப்பார்கள்; ‘ஐயோ, தலைவா!’ எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள்! இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.

6பின்னர் இறைவாக்கினர் எரேமியா எருசலேமில் யூதா அரசன் செதேக்கியாவிடம் இவற்றை எல்லாம் கூறினார். 7அப்பொழுது எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் அரண்சூழ் நகர்களுள் எஞ்சியிருந்த இலாக்கிசு, அசேக்காவுக்கு எதிராகவும் பாபிலோனிய மன்னனின் படை போரிட்டுக் கொண்டிருந்தது.


விடுதலை பெற்ற அடிமைகள்


8விடுதலையை அறிவிப்பதற்காக, அரசன் செதேக்கியா எருசலேம் மக்கள் அனைவரோடும் உடன்படிக்கை செய்துகொண்டபின், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது. 9யூதா நாட்டினர் எவரும் தம் சகோதரரை அடிமைப்படுத்தாமல், அவரவர் தம் எபிரேய அடிமைகளான ஆண், பெண் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கை. 10உடன்படிக்கை செய்துகொண்ட தலைவர்கள், மக்கள் ஆகிய எல்லாரும், தம் அடிமைகளான ஆண், பெண் அனைவரும் தொடர்ந்து அடிமைகளாய் இராதவாறு, அவர்களுக்கு விடுதலை அளிக்க உடன்பட்டு அவர்களை விடுதலை செய்தார்கள். 11ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டார்கள்; தாங்கள் ஏற்கெனவே விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை மீண்டும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.

12எனவே ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது: 13இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே; அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உங்கள் மூதாதையரை அழைத்துவந்த நாளில் நான் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டேன். 14‘உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும், ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின், ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும் உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்’ என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை; செவி சாய்க்கவுமில்லை.✠ 15ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி, ஒவ்வோருவரும் தம் சகோதருக்கு விடுதலை கொடுத்ததன் மூலம் என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்; என் பெயர் விளங்கும் இல்லத்தில் என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள். 16ஆனால் உங்கள் மனத்தை நீங்கள் மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்; என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்; தங்கள் விருப்பம்போல் செல்லும்படி நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை நீங்கள் மீண்டும் அடிமைப்படுத்திக் கொண்டீர்கள். 17எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை; உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும் விடுதலை அறிவிக்கவுமில்லை. ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவற்றால் அழிவதற்கான ‘விடுதலை’யை நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர். உலக அரசுகள் அனைத்துக்கும் திகிலூட்டும் சின்னமாய் உன்னை மாற்றுவேன். 18-19இளங் காளையின் துண்டங்களுக்கு நடுவே கடந்து போன யூதாவின் தலைவர்கள், எருசலேமின் தலைவர்கள், அரசவையோர், குருக்கள், நாட்டுமக்கள் அனைவரும் என் திருமுன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி அதன் உடன்பாடுகளை நிறைவேற்றத் தவறினார்கள். எனவே, இரண்டாக வெட்டப்பட்டு, அத்துண்டங்களிடையே கடந்து செல்வதற்காகப் பயன்படுத்திய இளங்காளையைப் போல் அவர்களை நான் ஆக்குவேன். 20அவர்களை அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் நான் ஒப்புவிப்பேன். அவர்களுடைய பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் வையகத்து விலங்குகளுக்கும் இரையாகும். 21யூதா அரசன் செதேக்கியாவையும் நாட்டுத் தலைவர்களையும் அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், உங்களிடமிருந்து பின்வாங்கி நிற்கும் பாபிலோனிய மன்னனது படையின் கையிலும் ஒப்புவிப்பேன். 22இதோ! நான் கட்டளையிடப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை இந்நகருக்குத் திரும்ப அழைத்துவருவேன். அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவார்கள். யூதாவின் நகர்கள் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.


34:1 2 அர 25:1; 2 குறி 36:17-21. 34:14 விப 21:2; இச 15:12.



அதிகாரம் 35:1-19

இரேக்காபு வீட்டாரின் எடுத்துக்காட்டு


1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய நாள்களில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:✠ 2‘நீ இரேக்காபு குடியிருப்புக்குச் செல். அவர்களோடு பேசி ஆண்டவரின் இல்லத்தில் அறைகளுள் ஒன்றுக்கு அவர்களை அழைத்துவா. அங்கே அவர்கள் பருகிடத் திராட்சை இரசம் கொடு.’ 3அவ்வாறே அபட்சனியாவின் பேரனும் மற்றோர் எரேமியாவின் மகனுமான யாசனியாவையும் அவருடைய சகோதரரையும் புதல்வர் எல்லாரையும் இரேக்காபு வீட்டார் அனைவரையும் நான் அழைத்து, 4கடவுளின் அடியவரான இக்தலியாவின் மகன் ஆனானுடைய புதல்வரின் அறைக்குக் கூட்டிவந்தேன். அந்த அறை ஆண்டவரின் இல்லத்தில் தலைவர்களின் அறைக்கு அருகில், சல்லூம் மகனும் வாயில் காவலருமான மாசேயாவின் அறைக்குமேல் இருந்தது. 5நான் திராட்சை இரசம் நிறைந்த பாத்திரங்களையும கிண்ணங்களையும் இரேக்காபு வீட்டாரின் மக்கள்முன் வைத்து, அவர்களை நோக்கி, “திராட்சை இரசம் பருகுங்கள்” என்றேன். 6அவர்களோ, “நாங்கள் திராட்சை இரசம் பருகமாட்டோம்; ஏனெனில் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையாவது; ‘நீங்களோ உங்கள் மக்களோ என்றுமே திராட்சை இரசம் பருகலாகாது. 7வீடு கட்டிக்கொள்ளவோ, விதை விதைக்கவோ, திராட்சைத் தோட்டம் நடவோ அதை உடைமையாக்கிக் கொள்ளவோ கூடாது. மாறாக, நீங்கள் தங்கியிருக்கும் இந்நிலத்தின் கண் நெடுநாள்வாழும் பொருட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் கூடாரங்களில் குடியிருங்கள்.’ 8ஆகையால் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து வருகிறோம். அதன்படி நாங்களும் எங்கள் மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய எல்லாருமே எங்கள் வாழ்நாள் முழுவதும் திராட்சை இரசம் பருகியதுமில்லை; 9குடியிருக்க வீடுகள் கட்டிக் கொண்டதுமில்லை. எங்களுக்காகத் திராட்சைத் தோட்டமோ வயலோ விதையோ எதுவுமே கிடையாது. 10கூடாரங்களில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் மூதாதையான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்துக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து நடக்கிறோம். 11ஆனால் பாபிலோனிய மன்னன் நெபுகத்கேனசர் இந்நாட்டின்மீது படையெடுத்து வந்தபொழுது, ‘வாருங்கள், கல்தேயர் படைக்கும் சிரியர் படைக்கும் தப்பித்துக் கொள்ளுமாறு எருசலேமுக்கு ஓடிப் போவோம்’ என்று நாங்கள் சொன்னோம். இவ்வாறு எருசலேமில் நாங்கள் தங்கி வாழ்கிறோம்” என்றனர்.

12பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: 13இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா மக்களையும் எருசலேம் குடிகளையும் பார்த்து, ‘நீங்கள் என் அறிவுரையை ஏற்று, என் சொற்களுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா?’ என்று கேள், என்கிறார் ஆண்டவர். 14திராட்சை இரசம் பருகவேண்டாம் என்று இரேக்காபின் மகன் யோனதாபு தம் வீட்டாருக்குக் கொடுத்திருந்த கட்டளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுவரை அவர்கள் திராட்சை இரசம் பருகுவது கிடையாது. இவ்வாறு தங்கள் மூதாதையின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து வருகிறார்கள். நானோ உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. 15இறைவாக்கினரான என் ஊழியர் அனைவரையும் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பி வைத்தேன். ‘இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்கள் தீய வழியினின்று திரும்பி வாருங்கள்; உங்கள் செயல்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள். வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்று அவற்றை வழிபடாதீர்கள். அப்படியானால், உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்துள்ள நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்’ என்று அவர்களைச் சொல்லவைத்தேன். நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை. 16இரேக்காபின் மகனான யோனதாபின் மக்கள் தம் மூதாதையின் கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இம்மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை. 17எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ, நான் எச்சரித்திருந்த எல்லாத் தீங்குகளும் யூதாவுக்கும் எருசலேமின் அனைத்துக் குடிகளுக்கும் நேரிடச் செய்வேன். ஏனெனில் நான் அவர்களோடு பேசியிருந்தும் அவர்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை.

18இரேக்காபின் வீட்டாரிடம் எரேமியா கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் உங்கள் மூதாதையாம் யோனதாபின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி, அவர் உங்களுக்குக் கொடுத்திருந்த அறிவுரை அனைத்தையும் கடைப்பிடித்து வந்துள்ளீர்கள். 19ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது; என் திருமுன் என்றும் பணிவிடை புரியத்தக்க ஒருவன், இரேக்காபின் மகன் யோனதாபுக்கு இல்லாமல் போகான்.


35:1 2 அர 23:36-24:6; 2 குறி 36:5-7.



அதிகாரம் 36:1-32

ஏட்டுச் சுருள்


1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு;✠ 2நீ ஏட்டுச் சுருள் ஒன்றை எடுத்துக்கொள். நான் உன்னோடு பேசத் தொடங்கின நாள் முதல், அதாவது யோசியாவின் நாள்கள் தொடங்கி இந்நாள்வரை, இஸ்ரயேலைக் குறித்தும், யூதாவைக் குறித்தும், மற்ற எல்லா நாடுகளைக் குறித்தும் நான் உனக்கு உரைத்துள்ள சொற்கள் எல்லாவற்றையும் அச்சுருளில் எழுது. 3யூதா வீட்டாருக்கு நான் அளிக்க எண்ணியுள்ள எல்லாத் தண்டனைகள் பற்றியும் அவர்கள் அனைவரும் கேள்வியுற நேர்ந்தால், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது அவர்கள் குற்றங்களையும் பாவங்களையும் நான் மன்னிப்பேன்.

4ஆகவே நேரியாவின் மகன் பாரூக்கை எரேமியா தம்மிடம் அழைத்தார். ஆண்டவர் தமக்கு உரைத்திருந்த சொற்களை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்தார். 5பின்னர் எரேமியா பாரூக்குக்குக் கொடுத்த கட்டளை; நான் அடைபட்டிருக்கிறேன். ஆண்டவர் இல்லத்திற்குச் செல்ல என்னால் இயலாது. 6ஆதலால் நீ அங்குப் போ. நோன்பு நாளன்று அங்குக் குழுமியிருக்கும் மக்களின் செவிகளில் விழும்படி, நான் சொல்லச் சொல்ல நீ எழுதி வைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டு. தம் நகர்களிலிருந்து அங்குவரும் யூதா மக்கள் அனைவரும் கேட்கும் படியும் நீ அதை வாசித்துக்காட்டு. 7ஒருவேளை அவர்கள் ஆண்டவர் திருமுன் விழுந்து மன்றாடவும், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பவும் இயலும். ஏனெனில் ஆண்டவர் கடும் சினமுற்று, சீற்றம் கொண்டு, இம்மக்களுக்குத் தீங்கு வருவிப்பதாக அறிவித்துள்ளார். 8இறைவாக்கினர் எரேமியா கட்டளையிட்டிருந்தவாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஆண்டவர் இல்லத்தில் ஏட்டுச்சுருளினின்று ஆண்டவருடைய சொற்களைப் படித்துக் காட்டினார்.

9யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டு ஒன்பதாம் மாதத்தில் எருசலேம் மக்கள் எல்லாரும், யூதாவின் நகர்களினின்று எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் நோன்பு இருந்தனர். 10அப்பொழுது செயலரான சாப்பானின் மகன் கெமரியாவின் அறையில், அதவாது ஆண்டவர் இல்லத்தின் புதுவாயிலை ஒட்டிய மேல்முற்றத்து அறையில் இருந்தவாறு, மக்கள் எல்லாரும் கேட்கும்படி எரேமியாவின் சொற்களை ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டினார்.

11ஏட்டுச் சுருளினின்று படிக்கப் பெற்ற ஆண்டவரின் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சாப்பானின் பேரனும் கெமரியா மகனுமான மிக்காயா, 12உடனே அரண்மனைக்கு இறங்கிச் சென்று, செயலரின் அறைக்குள் நுழைந்தார். அங்கே செயலராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்னாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் செதேக்கியா ஆகியோர் உள்படத் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள். 13மக்கள் கேட்கும்படி ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டியிருந்த சொற்கள் எல்லாவற்றையும் மிக்காயா தலைவர்களிடம் எடுத்துரைத்தார். 14பின்னர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, கூசியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான எகுதியைப் பாரூக்கிடம் அனுப்பிவைத்தார்கள். “மக்கள் செவிகளில் விழும்படி நீ படித்துக் காட்டிய ஏட்டுச்சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டு வா”, என அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார். 15அப்பொழுது அவர்கள் அவரிடம், “நீ இங்கே அமர்ந்து, நாங்கள் கேட்கும்படி அதைப் படி” என்றார்கள். அவரும் அவர்கள் காதில் விழும்படி அதைப் படித்தார். 16எல்லாச் சொற்களையும் அவர்கள் கேட்டுத் திகிலுற்று, ஒருவர் ஒருவரை நோக்கினர். பின் பாரூக்கைப் பார்த்து, “இவற்றை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக அரசரிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள். 17தொடர்ந்து, “இச்சொற்கள் எல்லாவற்றையும் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்ல நீ எழுதினாயா? சொல்” என்று அவர்கள் பாரூக்கை வினவினார்கள். 18அதற்குப் பாரூக்கு, “எரேமியா சொல்லச் சொல்ல, இவற்றை எல்லாம் நான் மை கொண்டு ஏட்டுச்சுருளில் எழுதினேன்” என்று மறுமொழி கூறினார். 19அப்பொழுது தலைவர்கள் பாரூக்கை நோக்கி, “நீயும் எரேமியாவும் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதிருக்கட்டும்” என்றார்கள்.

20செயலர் எலிசாமாவின் அறையிலேயே ஏட்டுச்சுருளை வைத்துவிட்டுத் தலைவர்கள் அரண்மனை முற்றத்திற்குள் சென்று, நடந்த எல்லாவற்றையும் அரசனுக்குத் தெரிவித்தார்கள். 21அரசனோ ஏட்டுச்சுருளை எடுத்துவருமாறு எகுதியை அனுப்பிவைத்தான். செயலர் எலிசாமாவின் அறையினின்று எகுதி அதை எடுத்துவந்து, அரசனும் அவனைச் சூழ்ந்து நின்ற தலைவர்கள் அனைவரும் கேட்கப் படித்தான். 22அது ஆண்டின் ஒன்பதாம் மாதம், அரசன் தன் குளிர்கால மாளிகையில் அமர்ந்திருந்தான். அவன்முன் கனல் தட்டில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. 23எகுதி மூன்று அல்லது நான்கு பத்திகளைப் படித்ததும், அரசன் கத்தியால் அப்பகுதியை அறுத்து கனல்தட்டில் இருந்த நெருப்பில் போட்டான். இவ்வாறு ஏட்டுச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை அவன் செய்து கொண்டிருந்தான். 24அரசனோ இச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய பணியாளர்களோ அஞ்சவில்லை; தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை. 25அரசன் ஏட்டுச்சுருளை எரிக்காதவாறு அவனை எல்னாத்தான், தெலாயா, கெமரியா ஆகியோர் வேண்டியும், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. 26மாறாக எழுத்தர் பாரூக்கையும் இறைவாக்கினர் எரேமியாவையும் பிடித்து வருமாறு அரசனின் மகன் எரகுமவேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தவேலின் மகன் செலேமியா ஆகியோருக்கு அரசன் கட்டளையிட்டான். ஆண்டவரோ அவர்களை மறைத்துவைத்திருந்தார்.

27எரேமியா சொல்ல, பாரூக்கு எழுதியிருந்த சொற்கள் அடங்கிய ஏட்டுச்சுருளை அரசன் எரித்த பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: 28நீ மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்துக்கொள்; யூதா அரசன் யோயாக்கிம் முன்பு எரித்த ஏட்டுச்சுருளில் அடங்கியிருந்த எல்லாச் சொற்களையும் இதில் எழுதிவை. 29பின்னர் யூதா அசரனான யோயாக்கிமைக் குறித்து நீ சொல்லவேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “பாபிலோனிய மன்னன் திண்ணமாய் வந்து, இந்நாட்டை அழித்துவிடுவான்; மனிதரையும் விலங்குகளையும் வெட்டி வீழ்த்துவான் என்று நீ ஏன் எழுதினாய்?” என்று கூறி அன்றோ நீ அந்த ஏட்டுச் சுருளை எரித்தாய். 30எனவே யூதாவின் அரசன் யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; அவன் வழிமரபினருள் எவனும் தாவீதின் அரியணையில் அமரமாட்டான். அவனது பிணம் வெளியில் எறியப்பட்டு, பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கும். 31அரசனையும் அவன் வழிமரபினர், பணியாளர் ஆகியோரையும் அவர்களின் குற்றங்கள் பொருட்டுத் தண்டிப்பேன். நான் எச்சரித்திருந்தும் அவர்கள் பொருட்படுத்தியிராத தீங்குகளை அவர்கள் மேலும் எருசலேம் குடிகள்மேலும் யூதா மக்கள்மேலும் வரச் செய்வேன்.

32பின்னர் எரேமியா மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்து, நேரியாவின் மகனும் எழுத்தருமான பாரூக்கிடம் கொடுத்தார். யூதாவின் அரசன் யோயாக்கிம் எரித்த ஏட்டுச்சுருளில் காணப்பட்ட எல்லாச் சொற்களையும் எரேமியா சொல்லச் சொல்லப் பாரூக்கு மீண்டும் அவற்றை ஏட்டுச்சுருளில் எழுதினார். அவை போன்ற வேறு பலசொற்களும் அவற்றோடு சேர்க்கப்பெற்றன.


36:1 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2.



அதிகாரம் 37:1-21

செதேக்கியா எரேமியாவிடம் ஆலோசனை கேட்டல்


1யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான்.✠ 2அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.

3செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் அனுப்பிவைத்து, ‘நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்’ என்று அவரை வேண்டிக்கொண்டான். 4அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில், அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை. 5இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.

6அப்பொழுது இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது; 7இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது; இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்வோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும். 8கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்; அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர். 9ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயர் நம்மை விட்டுத் திரும்பிப் போவது உறுதி என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் அவர்கள் திரும்பிப் போகவேமாட்டார்கள். 10உங்களை எதிர்த்துப் போரிட்டு வரும் கல்தேயரின் படை முழுவதையும் நீங்கள் முறியடித்தாலும், அவர்களுள் தாக்குண்ட வீரர் மட்டுமே தம் கூடாரங்களில் எஞ்சியிருந்தாலும், அவர்களே கிளர்ந்தெழுந்து இந்நகரைத் தீக்கிரையாக்குவர்.


எரேமியா மீண்டும் சிறைப்படல்


11பார்வோன் படையெடுத்து வரவே, கல்தேயர் படை எருசலேமை விட்டுப் பின்வாங்கியது. 12அப்பொழுது எரேமியா, மக்கள் முன்னிலையில் பாகப் பிரிவினை செய்து கொள்ள, எருசலேமை விட்டுப் பென்யமின் நாட்டுக்குப் புறப்பட்டார். 13அவர் பென்யமின் வாயிலை அடைந்தபொழுது அனனியாவின் பேரனும் செலேமியாவின் மகனுமான இரிய்யா என்னும் மெய்க்காப்பாளர் தலைவன் இறைவாக்கினர் எரேமியாவைத் தடுத்து, “நீ கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயல்கிறாய்” என்று கூறி, அவரைப் பிடித்தான். 14அதற்கு எரேமியா, “அது பொய். நான் கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை” என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தினான். 15தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்; ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.

16எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார். 17அப்பொழுது அரசன் செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, “ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?” என்று வினவினான். அதற்கு எரேமியா, “ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்” என்றார். 18தொடர்ந்து எரேமியா அரசன் செதேக்கியாவிடம் கூறியது: “உமக்கோ உம் பணியாளருக்கோ இம்மக்களுக்கோ நான் செய்த தீங்குதான் என்ன? ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்? 19“உங்கள்மீதோ இந்நாட்டின் மீதோ பாபிலோனிய மன்னன் படையெடுத்து வரமாட்டான் என்று அறிவித்த உங்கள் இறைவாக்கினர் இப்போது எங்கே? 20என் தலைவரே! என் அரசரே! தயவு செய்து எனக்குச் செவிகொடும்: என் விண்ணப்பத்தைக் கனிவாய் ஏற்றருளும். செயலர் யோனத்தானின் வீட்டுக்கு என்னை மீண்டும் அனுப்பி வைக்காதீர். அனுப்பினால் நான் அங்கேயே மடிந்து போவேன்.”

21பின்னர் அரசன் செதேக்கியா கட்டளையிடவே, எரேமியா காவல் கூடத்திற்கு மாற்றப்பட்டார். நகரின் அப்பம் அனைத்தும் தீரும்வரை அப்பக்காரர் தெருவினின்று ஓர் அப்பம் அவருக்கு நாள்தோறும் கொடுக்கப்பட்டுவந்தது. இவ்வாறு எரேமியா காவல்கூடத்தில் தங்கியிருந்தார்.


37:1 2 அர 24:17; 2 குறி 36:10.



அதிகாரம் 38:1-28

பாழ்ங்கிணற்றில் எரேமியா


1மாத்தானின் மகன் செபற்றியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூக்கால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர், மக்கள் எல்லாருக்கும் எரேமியா அறிவித்துக் கொண்டிருந்த கீழ்க்கண்ட சொற்களைக் கேட்டார்கள்: 2ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்நகரில் தங்கியிருப்பவன் வாள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றால் மடிவான். கல்தேயர் பக்கம் தப்பிச் செல்பவனோ பிழைத்துக்கொள்வான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும். அவன் உயிர் பிழைப்பான். 3ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனது படையிடம் இந்நகர் கையளிக்கப்படுவது உறுதி. அவனும் அதைக் கைப்பற்றிக் கொள்வான்.

4பின்னர் தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள். 5அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். 6எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.

7அரண்மனையில் இருந்த அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்ற எத்தியோப்பியர் எரேமியா பாழ்ங்கிணற்றில் தள்ளப்பட்டதை அறியவந்தார். அப்பொழுது அரசன் பென்யமின் வாயிலில் அமர்ந்திருந்தான். 8எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, 9“என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது” என்று கூறினார். 10அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, “உன்னோடு மூன்று⁕ பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு” என்று கட்டளையிட்டான். 11எனவே எபேது மெலேக்கு ஆள்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு அரச அரண்மனையின் கருவூலத்திற்குக் கீழே சென்றார். அங்கிருந்து பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் எடுத்து, கயிற்றில் கட்டி, கிணற்றில் கிடந்த எரேமியாவிடம் இறக்கினார். 12எத்தியோப்பியரான எபேது மெலேக்கு எரேமியாவிடம், “இந்தப் பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் உம் அக்குள்களுக்கும் கயிற்றுக்கும் இடையே வைத்துக் கொள்ளும்” என்று வேண்டினார். எரேமியாவும் அவ்வாறே செய்தார். 13பின்னர் அவர்கள் எரேமியாவைக் கயிற்றால் வெளியே தூக்கினார்கள். அதன்பின் எரேமியா காவல்கூடத்தில் தங்கி இருந்தார்.


செதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் ஆலோசனை கேட்டல்


14அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி, “நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது” என்று சொன்னான். 15எரேமியா செதேக்கியாவை நோக்கி, “நான் உள்ளதைச் சொன்னால் நீர் என்னைத் திண்ணமாய்க் கொன்றுபோடமாட்டீரா? நான் உமக்கு அறிவுரை கூறினாலும் நீர் கேட்கமாட்டீரே!” என்றார். 16அதற்கு அரசன் செதேக்கியா “நமக்கு இந்த உயிர் கொடுத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உம்மைக் கொல்லமாட்டேன். உமது உயிரைப் பறிக்கத்தேடும் இம்மனிதர் கையிலும் உம்மை ஒப்புவிக்க மாட்டேன்” என்று எரேமியாவுக்கு மறைவாக ஆணையிட்டுக் கூறினான்.

17எரேமியா செதேக்கியாவிடம் கூறியது: “படைகளின் கடவுளும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால், உயிர் வாழ்வீர். இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள். 18பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும்; அவர்கள் அதைத் தீக்கிரையாக்குவார்கள். நீரோ அவர்களது கைக்குத் தப்பமாட்டீர்”. 19அப்பொழுது அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “கல்தேயரிடம் ஏற்கெனவே சரணடைந்துள்ள யூதா நாட்டவர் மட்டில் எனக்கு அச்சமாய் உள்ளது. நான் அவர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களது பழிப்புக்கு ஆளாவேன்” என்றான். 20அதற்கு எரேமியா, “இல்லை, நீர் கையளிக்கப்படமாட்டீர்; நான் உமக்கு எடுத்துரைக்கும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடும். அது உமக்கு நலம் பயக்கும். நீரும் உயிர் பிழைப்பீர். 21நீர் சரணடைய மறுப்பீராகில், இவ்வாறு நடக்குமென ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார்; 22யூதா அரசனின் அரண்மனையில் எஞ்சியிருக்கும் பெண்கள் எல்லாரும் பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் ‘நம்பிக்கைக்குரிய உம் நண்பர்கள் உம்மை வஞ்சித்து அடக்கி விட்டார்கள்; உம் கால்களைச் சேற்றில் அமிழச்செய்து உம்மைவிட்டு அகன்று போனார்கள்’ எனக் கூறுவார்கள்.

23உம் மனைவியர், மக்கள் அனைவரும் கல்தேயரிடம் கொண்டுபோகப்படுவார்கள்; நீரோ அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர். மாறாக, பாபிலோனிய மன்னனால் நீர் பிடிபடுவீர். இந்நகர் தீக்கிரையாகும்” என்றார்.

24அதற்குச் செதேக்கியா எரேமியாவிடம், “நாம் பேசிக் கொண்டது யாருக்கும் தெரியவேண்டாம். அப்படியானால் நீர் சாவுக்குள்ளாகமாட்டீர். 25நான் உம்மோடு பேசினதாகத் தலைவர்கள் கேள்வியுற்று, உம்மிடம் வந்து, ‘நீர் அரசரிடம் என்ன கூறினீர்? அரசர் உம்மிடம் என்ன சொன்னார்? எங்களிடம் எதையும் மறைக்காதீர். நாங்கள் உம்மைக் கொல்ல மாட்டோம்’ என்று சொன்னால், 26‘நான் மடிந்துபோகாதவாறு யோனத்தான் வீட்டிற்கு என்னை மீண்டும் அனுப்பிவைக்க வேண்டாம் என்று நான் அரசனை வேண்டிக்கொண்டேன்’ என்று நீர் அவர்களிடம் சொல்லி விடும்” என்றான்.

27பின்னர் தலைவர்கள் அனைவரும் எரேமியாவிடம் வந்து, அவரை வினவியபொழுது, அரசன் சொல்லியிருந்தபடியே அவர் பதில் உரைத்தார். எனவே அத்தோடு அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். பேசியதை யாரும் ஒட்டுக்கேட்கவில்லை. 28எருசலேம் கைப்பற்றப்பட்ட நாள்வரை எரேமியா காவல் கூடத்திலேயே இருந்தார்.✠


38:28 எசே 33:21.


38:10 * "முப்பது" என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 39:1-18

எருசலேமின் வீழ்ச்சி


1யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டு பத்தாம் மாதத்தில், பாபிலோனிய மன்னன் நெபுகதனேசர் அவனுடைய எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான். 2செதேக்கியாவின் பதினொன்றாம் ஆண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. 3நேர்கல் சரேட்சர், சம்கூர் நெபோ, சர்செக்கிம் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் உள்ளே புகுந்து, நடுவாயிலில் அமர்ந்தார்கள். 4யூதாவின் அரசன் செதேக்கியாவும் போர் வீரர் அனைவரும் அவர்களைக் கண்டவுடன் அரச பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர். 5ஆனால் கல்தேயப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் செதேக்கியாவைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் ரிப்லாவில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான். 6பாபிலோனிய மன்னன் ரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண்முன்னே கொன்றான். மேலும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான். 7அவன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச்சென்றான். 8அரச மாளிகையையும் மக்களின் வீடுகளையும் கல்தேயர் தீக்கிரையாக்கினர்; எருசலேம் மதில்களையும் தகர்த்தெறிந்தனர். 9மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான், நகரில் எஞ்சியிருந்த மக்களையும் தம்மிடம் சரணடைந்திருந்தவர்களையும் பாபிலோனுக்கு நாடுகடத்தினார். 10ஆனால் யாதுமற்ற ஏழைகளை மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் யூதா நாட்டில் விட்டுவைத்ததோடு திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் அவர்களுக்கு வழங்கினார்.


எரேமியாவின் விடுதலை


11பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எரேமியாவைக் குறித்து மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதானுக்குக் கொடுத்த கட்டளை: 12“இவரைக் கூட்டிக்கொண்டு போய் நன்கு கவனித்துக் கொள்; தீங்கு எதுவும் அவருக்குச் செய்யாதே; அவர் விருப்பப்படியே அவரை நடத்து.” 13மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான், அரசவையோர் தலைவன் நெபுசஸ்பான் ரப்சாரிம், நேர்கல் சரேட்சர் ரப்மாகு உள்படப் பாபிலோனிய மன்னனின் தலைவர்கள் அனைவரும் ஆளனுப்பி, 14காவல் கூடத்தினின்று எரேமியாவைக் கூட்டி வந்தனர். வீட்டுக்கு அவரை அழைத்துச் செல்லும்படி சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் அவரை ஒப்படைத்தனர். எனவே அவர் மக்களிடையே வாழ்ந்துவந்தார்.


எபேதுமெலேக்கு


15எரேமியா காவல்கூடத்தில் இன்னும் அடைபட்டிருக்கையில், ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது; 16நீ போய், எத்தியோப்பியரான எபேதுமெலேக்கிடம் சொல்; இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்நகருக்கு எதிராக நான் கூறியிருந்தவற்றை நிறைவேற்றுவேன்; நன்மையை அல்ல, தீமையையே வருவிப்பேன். அந்நாளில் இவை உன் கண் முன்பாகவே நிகழும். 17ஆயினும், அந்நாளில் நான் உன்னை விடுவிப்பேன், என்கிறார் ஆண்டவர். நீ யாரைக் குறித்து அஞ்சுகிறாயோ அம்மனிதர்களிடம் நீ கையளிக்கப்பட மாட்டாய். 18நான் உறுதியாக உன்னை உயிரோடு காப்பாற்றுவேன். நீ வாளால் மடிய மாட்டாய். உன் உயிரே உனது கொள்ளைப்பொருளாய் அமையும்; ஏனெனில், நீ என்னில் நம்பிக்கை வைத்துள்ளாய், என்கிறார் ஆண்டவர்.



அதிகாரம் 40:1-16

கெதலியாவுடன் எரேமியா


1எருசலேமினின்றும் யூதாவினின்றும் விலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்டோராய்ப் பாபிலோனுக்குச் சென்று கொண்டிருந்த மக்களிடையே எரேமியாவும் விலங்கிடப்பட்டிருந்ததைக் கண்ட மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அவரை இராமாவில் விடுதலை செய்தார். அதன்பின் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது. 2மெய்க்காப்பாளரின் தலைவர், எரேமியாவைத் தம்மிடம் அழைத்து, “உம் கடவுளாகிய ஆண்டவர் இந்த இடத்தின்மீது இத்தீங்கு வரும் என்று அறிவித்துள்ளார். 3அவர் சொன்னவாறே எல்லாம் நிகழவும் செய்துள்ளார். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்துள்ளீர்கள். அவருடைய குரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை. ஆகவே தான் இத்துன்பம் உங்களுக்கு நேர்ந்துள்ளது. 4இதோ, நான் கைவிலங்கினின்று உம்மை இன்று விடுவிக்கிறேன். என்னோடு பாபிலோனுக்கு வர உமக்கு விருப்பமானால் வாரும்; நான் உம்மை நன்கு கவனித்துக் கொள்வேன். என்னோடு வர உமக்கு விருப்பமில்லை எனில், நீர் இங்கேயே இருந்து கொள்ளும். நாடு முழுவதும் உம் கண்முன் உள்ளது; எங்குச் செல்வது நல்லது என்றும் வசதியானது என்றும் உமக்குப் படுகிறதோ அங்கே நீர் செல்லும். 5நீர் இங்கேயே தங்க விரும்பினால், யூதாவின் நகர்களுக்கு ஆளுநராய்ப் பாபிலோனிய மன்னன் ஏற்படுத்தியிருக்கும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவிடம் போய், அவனோடு மக்களிடையே வாழும். இல்லையெனில் எங்குப் போக உனக்கு விருப்பமோ, அங்கேயே செல்லும்” என்று கூறினார். பின்னர் மெய்க்காப்பாளரின் தலைவர் உணவுப் பொருள்களும் அன்பளிப்பும் எரேமியாவுக்கு அளித்து, அவரை அனுப்பிவைத்தார். 6எரேமியா மிஸ்பாவுக்குச் சென்று, நாட்டில் எஞ்சியிருந்த மக்களிடையே அகிக்காமின் மகன் கெதலியாவுடன் வாழ்ந்துவந்தார்.


யூதாவின் ஆளுநன் கெதலியா

(2 அர 25:22-24)


7அகிக்காம் மகன் கெதலியாவைப் பாபிலோனிய மன்னன் ஆளுநராக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும், பாபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழைகளான ஆண், பெண், சிறுவர்களை அவரது பொறுப்பில் விட்டுள்ளான் என்றும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் எல்லாரும் அவர்களுடைய ஆள்களும் கேள்வியுற்றனர். 8அவர்களுள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், காரயாகின் புதல்வர் யோகனானும் யோனத்தானும், தன்குமேத்தின் மகன் செராயாவும், நெற்றோபாவைச் சார்ந்த ஏப்பாயின் புதல்வரும், மாக்காவின் மகன் யாசனியாவும், அவர்களுடைய ஆள்களும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்றார்கள். 9அவர்களிடமும் அவர்களுடைய ஆள்களிடமும் சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியா ஆணையிட்டு, “கல்தேயருக்கு அடிபணிய நீங்கள் தயங்க வேண்டாம். இந்நாட்டில் தங்கி வாழுங்கள்; பாபிலோனிய மன்னனுக்குப் பணிந்திருங்கள்; அது உங்களுக்கு நலம் பயக்கும். 10நானோ மிஸ்பாவில் தங்கியிருப்பேன்; நம்மிடம் வரவிருக்கும் கல்தேயர்முன் உங்கள் பிரதிநிதியாய் இருப்பேன்; நீங்கள் போய்த் திராட்சை இரசம், பழங்கள், எண்ணெய் முதலியவற்றைச் சேகரித்துப் பாத்திரங்களில் வையுங்கள். நீங்கள் கைப்பற்றியுள்ள நகர்களில் குடியிருங்கள்” என்று சொன்னார். 11இதே போன்று மோவாபிலும் அம்மோனியரிடையிலும் ஏதோமிலும் மற்ற நகர்களிலும் வாழ்ந்து வந்த யூதா நாட்டினர் அனைவரும், பாபிலோனிய மன்னன் யூதாவில் சிலரை விட்டுவைத்துள்ளான் என்றும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை அவர்களின் ஆளுநராக ஏற்படுத்தியுள்ளான் என்றும் அறிய வந்தார்கள். 12அப்பொழுது யூதா நாட்டினர் அனைவரும் தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த எல்லா இடங்களினின்றும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவந்து, மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சேர்ந்து கொண்டார்கள். அங்குத் திராட்சை இரசமும் பழங்களும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்.


கெதலியா கொலைசெய்யப்படல்

(2 அர 25:25-26)


13காரயாகின் மகன் யோகனானும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்று, 14“அம்மோனியரின் மன்னனாகிய பகலீசு உம்மைக் கொல்லும் பொருட்டு நெத்தனியாவின் மகன் இஸ்மயேலை அனுப்பி வைத்துள்ளான் என்று உறுதியாய் உமக்குத் தெரியுமன்றோ!” என்று கூறினர். ஆனால் அகிக்காமின் மகன் கெதலியா அவர்களை நம்பவில்லை. 15பின்னர் காரயாகின் மகன் யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகச் சென்று, “நான் போய், நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொல்ல எனக்கு அனுமதி கொடும். அது யாருக்கும் தெரியவராது. உம்மை ஏன் அவன் கொலைசெய்யவேண்டும்? அதனால் உம் பொறுப்பில் கூடி வாழும் யூதா நாட்டினர் அனைவரும் சிதறிப் போவார்கள்; யூதாவின் எஞ்சினோரும் அழிவார்களே!” என்று சொன்னான்.

16அகிக்காமின் மகன் கெதலியாவோ காரயாகின் மகன் யோகனானை நோக்கி, “நீ இச்செயலைச் செய்யாதே. ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி நீ கூறுவது பொய்” என்றார்.


40:7-9 2 அர 25:22-24.



அதிகாரம் 41:1-18

1ஏழாம் மாதத்தில் அரச குலத்தவனும் அரசனின் உயர் அதிகாரிகளுள் ஒருவனுமான எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான இஸ்மயேல் தன்னோடு பத்துப் பேரை அழைத்துக் கொண்டு மிஸ்பாவில் இருந்த அகிக்காமின் மகன் கெதலியாவிடம் வந்தான். அங்கு அவர்கள் அனைவரும் ஒன்றாக உணவு அருந்திக் கொண்டிருந்த வேளையில், 2நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும் அவனோடு இருந்த பத்துப் பேரும் எழுந்து சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவை — பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அவரை — வாளால் வெட்டிக் கொன்றார்கள். 3மேலும் கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த யூதா நாட்டினர் அனைவரையும் அங்கு இருக்க நேரிட்ட கல்தேய வீரர்களையும் இஸ்மயேல் வெட்டி வீழ்த்தினான்.

4கெதலியா கொலை செய்யப்பட்டு இரண்டு நாள் ஆனபின்னும் அது பற்றி யாருக்கும் தெரியவில்லை. 5அப்படியிருக்க செக்கேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து தாடியைச் சிரைத்துக்கொண்டு, ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, உடலைக் கீறிக் கொண்ட எண்பது பேர் ஆண்டவரின் இல்லத்தில் ஒப்புக்கொடுக்குமாறு தானியப் படையல்களும் தூபமும் கையில் ஏந்திக் கொண்டு வந்தனர். 6அவர்களைச் சந்திக்க நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் மிஸ்பாவினின்று புறப்பட்டு அழுது கொண்டே சென்றான். அவர்களைச் சந்தித்தபோது, “அகிக்காமின் மகன் கெதலியாவை வந்து பாருங்கள்” என்று அவர்களிடம் கூறினான். 7அவர்கள் நகருக்குள் நுழைந்திடவே, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும் அவனோடு இருந்தவர்களும் அவர்களைக் கொன்று, நிலவறைக்குள் தள்ளிவிட்டனர். 8அவர்களுள் பத்து பேர் இஸ்மயேலை நோக்கி, “எங்களைக் கொல்லாதீர்; ஏனெனில் கோதுமை, வாற்கோதுமை, எண்ணெய், தேன் ஆகியவற்றைச் சேர்த்து வயலில் மறைத்து வைத்திருக்கிறோம்” என்றார்கள். எனவே அவன் அவர்கள் சகோதரர்களோடு அவர்களைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்.

9நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கெதலியாவை முன்னிட்டுக் கொன்று குவித்த மனிதர்களின் பிணங்கள் எல்லாவற்றையும் ஒரு நிலவறைக்குள் தள்ளி அதை நிரப்பினான். அது இஸ்ரயேல் அரசன் பாசாவினின்று தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அரசன் ஆசா வெட்டியிருந்ததாகும். 10மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் அகிக்காமின் மகன் கெதலியா பொறுப்பில் விட்டிருந்த அரசனின் புதல்வியரையும் மிஸ்பாவில் இருந்த மற்ற மக்கள் எல்லாரையும் இஸ்மயேல் சிறைப்பிடித்துக்கொண்டு அம்மோனியரின் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.

11நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் செய்திருந்த கொடுமை அனைத்தையும் பற்றிக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் அறியவந்தபொழுது, 12அவர்கள் தங்களோடு இருந்த ஆள்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலோடு போரிடப் புறப்பட்டு, கிபயோனின் பெரிய நீர்நிலை அருகே அவனை நெருங்கினார்கள். 13இஸ்மயேலின் பிடியிலிருந்த மக்கள் எல்லாரும் காரயாகின் மகன் யோகனானையும் அவரோடு இருந்த படைத்தலைவர்களையும் கண்டு மகிழ்ச்சியுற்றார்கள். 14இஸ்மயேல் சிறைப்படுத்தி மிஸ்பாவிலிருந்து கூட்டிச் சென்றிருந்த மக்கள் எல்லோரும் அவனை விட்டுவிட்டுக் காரயாகின் மகன் யோகனானோடு சேர்ந்து கொண்டார்கள். 15ஆனால் நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் எட்டுப் பேரோடு யோகனானிடமிருந்து தப்பி, அம்மோனியரின் நாட்டுக்கு ஓடிப் போனான். 16நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அகிக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றபின் மிஸ்பாவில் எஞ்சியிருந்தோரை⁕ — படைவீரர், பெண்டிர், சிறுவர், அரசவையோர் ஆகியோரை — சிறைப்பிடித்து இழுத்து வந்திருந்தான். இவர்களைக் காரயாகின் மகன் யோகனானும் அவரோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் கிபயோனிலிருந்து அழைத்துவந்தார்கள். 17-18அவர்கள் எல்லாரும் புறப்பட்டு, பெத்லெகேமுக்கு அருகே இருந்த கேருத்கிம்காமினில் தங்கினார்கள். பாபிலோனிய மன்னன் நாட்டின் ஆளுநராக ஏற்படுத்தியிருந்த அகிக்காமின் மகன் கெதலியாவை நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கொன்று போட்ட காரணத்தினால், அவர்கள் கல்தேயருக்கு அஞ்சி அவர்களிடம் இருந்து தப்பிக்கும்படி எகிப்துக்குப் போக எண்ணியிருந்தார்கள்.


41:1-3 2 அர 25:25.


41:16 * ‘இஸ்மாயேலிடமிருந்து அவன் மீட்டிருந்த’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 42:1-22

எரேமியாவின் மன்றாட்டும் ஆண்டவரின் மறுமொழியும்


1பின்னர் படைத்தலைவர்கள் அனைவரும் காரயாகின் மகன் யோகனானும் ஓசயாவின் மகன் ஏசனியாவும் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரும் அருகில் வந்தார்கள். 2அவர்கள் இறைவாக்கினர் எரேமியாவிடம் சொன்னது: “எம் வேண்டுகோளைக் கேட்டருளும், எங்களுக்காகவும் எஞ்சியிருக்கும் இவர்கள், அனைவருக்காகவும் உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும் — ஏனெனில் நீர் காண்பதுபோல் திரளாக இருந்த எங்களுள் ஒரு சிலரே எஞ்சியிருக்கிறோம் — 3நாங்கள் நடக்க வேண்டிய வழியையும் செய்யவேண்டிய செயல்களையும் உம் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்குக் காட்டியருள்வாராக.” 4இறைவாக்கினர் எரேமியா அவர்களை நோக்கி, “நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது. அதற்கிணங்க, உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் நான் மன்றாடுவேன். ஆண்டவர் உங்களுக்குச் சொல்லவிருக்கும் மறுமொழியை உங்களிடம் தெரிவிப்பேன். உங்களிடமிருந்து ஒன்றையும் மறைக்கமாட்டேன்” என்றார். 5அதற்கு அவர்கள் எரேமியாவிடம் கூறியது: “உம் கடவுளாகிய ஆண்டவர் உம் வழியாக எங்களுக்கு வெளிப்படுத்தவிருக்கும் எல்லாச் சொற்களின்படியும் நாங்கள் நடப்போம் என்பதற்கு, ஆண்டவரே நமக்கு இடையில் உண்மையும் நம்பிக்கையும் உள்ள சாட்சி. 6எங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், நாங்கள் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கே செவிசாய்ப்போம். அவரிடமே நாங்கள் உம்மை அனுப்பிவைக்கிறோம். ஏனெனில் எம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கும் பொழுது, எங்களுக்கு நன்மையே விளையும்.”

7பத்து நாள்களுக்குப் பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது. 8எனவே அவர் காரயாகின் மகன் யோகனானையும், தம்மோடு இருந்த படைத்தலைவர்கள் அனைவரையும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் எல்லாரையும் அழைத்தார். 9அவர் அவர்களிடம் சொன்னது; உங்கள் வேண்டுகோளை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் முன் வைத்து மன்றாடுமாறு நீங்கள் என்னை அனுப்பினீர்கள். அவர் இவ்வாறு கூறுகிறார்: 10நீங்கள் இந்த நாட்டிலேயே தொடர்ந்து குடியிருந்தால், நான் உங்களைக் கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்க மாட்டேன்; நிலை நாட்டுவேனேயன்றி, பிடுங்கி எறிய மாட்டேன். ஏனெனில் நான் உங்களுக்கு அளித்துள்ள தண்டனைபற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன். 11நீங்கள் அஞ்சி நடுங்கும் பாபிலோனிய மன்னனுக்கு இனி அஞ்சவேணடாம், நீங்கள் அவனுக்கு அஞ்ச வேண்டாம், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் உங்களை மீட்கும் பொருட்டும், அவனுடைய கையினின்று உங்களை விடுவிக்கும் பொருட்டும் நான் உங்களோடு இருக்கிறேன். 12நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவனும் உங்கள்மீது மனமிரங்கி, உங்கள் சொந்த நாட்டுக்கே நீங்கள் திரும்பிவரச் செய்வான். 13ஆனால் நீங்கள், நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடாது, “இந்த நாட்டில் நாங்கள் குடியிருக்க மாட்டோம். 14நாங்கள் எகிப்து நாட்டுக்குப் போயே தீருவோம். அங்கே போர் இருக்காது; போர்முரசு ஒலிக்காது; உணவுப் பஞ்சம் இராது; நாங்கள் அங்கேயே குடியிருப்போம்” என்று கூறுவீர்களானால், 15யூதாவில் எஞ்சியிருப்போரே, இப்பொழுது ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் எகிப்துக்குச் சென்று, அங்கே தங்கியிருக்க முடிவு செய்திருந்தால், 16உங்களை இங்கு அச்சுறுத்தும் அதே வாள் எகிப்து நாட்டிலும் உங்களைத் துரத்திவந்து தாக்கும்; உங்களுக்குத் திகிலூட்டுகின்ற பஞ்சம் உங்கள் பின்னாலேயே எகிப்துக்கும் தொடர்ந்துவரும்; நீங்கள் அங்கேயே மடிவீர்கள். 17எகிப்துக்குச் சென்று அங்கே தங்கியிருக்க முடிவு செய்துள்ள ஆள்கள் அனைவரும் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவர். அவர்களுள் ஒருவனும் எஞ்சியருக்கமாட்டான்; நான் அவர்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனையினின்று எவனுமே தப்பமாட்டான்.

18ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: என் சினமும் சீற்றமும் எருசலேமின் குடிகள்மீது வெகுண்டெழுந்ததுபோன்று, நீங்கள் எகிப்துக்குச் செல்லும்பொழுது என் சீற்றம் உங்கள்மீது மூண்டெழும். நீங்கள் சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவீர்கள். நீங்கள் இந்த இடத்தை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள். 19யூதாவில் எஞ்சியிருப்போரே, ‘நீங்கள் எகிப்துக்குப் போகாதீர்கள்’ என்று ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறார். நான் இதுபற்றி உங்களை இன்று எச்சரித்துள்ளேன் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். 20உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டீர்கள்; ஏனெனில், “எங்களுக்காக நம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும்; அவர் சொல்வது அனைத்தையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்; நாங்கள் அவ்வாறே நடப்போம்” என்று கூறி, நீங்களே என்னை உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அனுப்பி வைத்தீர்கள். 21நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருவுளத்தை இன்று உங்களுக்கு அறிவித்துள்ளேன். நீங்களோ அதற்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்னவற்றில் எதையுமே நீங்கள் கண்டுகொள்ளவில்லை. 22எனவே நீங்கள் சென்று தங்க விழையும் இடத்திலேயே நீங்கள் வாள், பஞ்சம், கொள்ளை நோயால் மடிவீர்கள் என்பதை இப்போது திண்ணமாய் அறிந்துகொள்ளுங்கள்.



அதிகாரம் 43:1-13

எகிப்துக்குத் தப்பியோடுதல்


1அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் எரேமியா வழியாகச் சொல்லி அனுப்பிய எல்லாச் சொற்களையும் மக்கள் அனைவருக்கும் அவர் அறிவித்து முடித்தார். 2பின்னர் ஓசயாவின் மகன் அசரியாவும், காரயாகின் மகன் யோகனானும், இறுமாப்புக் கொண்ட எல்லா ஆள்களும் எரேமியாவை நோக்கி, “நீ பொய் சொல்கிறாய். நீங்கள் எகிப்துக்குப் போய் அங்கே தங்கியிருக்க வேண்டாம் என்று சொல்வதற்காக நம் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அனுப்பவில்லை. 3ஆனால் கல்தேயர் கையில் எங்களை ஒப்புவிக்கவும், எங்களைச் சாவுக்கு உள்ளாக்கவும், எங்களைப் பாபிலோனுக்கு நாடுகடத்தவுமே நேரியாவின் மகன் பாரூக்கு எங்களுக்கு எதிராக உன்னைத் தூண்டிவிட்டுள்ளான்” என்றனர். 4எனவே காரயாகின் மகன் யோகனானும், எல்லாப் படைத்தலைவர்களும், மக்கள் அனைவரும் ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை; அதாவது யூதாவிலேயே தங்கவில்லை. 5காரயாகின் மகன் யோகனானும் படைத்தலைவர்கள் அனைவரும் யூதா நாட்டில் வாழும் பொருட்டு, தாங்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளினின்றும் திரும்பி வந்திருந்த யூதாவில் எஞ்சினோர் அனைவரையும் 6அதாவது, ஆண், பெண், சிறுவர், அரசனின் புதல்வியர் ஆகியோரையும், சாப்பானின் பேரனும் அகிக்காமின் மகனுமான கெதலியாவின் பொறுப்பில் மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் விட்டுவைத்திருந்த எல்லாரையும், இறைவாக்கினர் எரேமியாவையும் நேரியாவின் மகன் பாரூக்கையும் கூட்டிக்கொண்டு, 7எகிப்து நாட்டுக்குப் போய்த் தகபனகேசை அடைந்தனர்; ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை.


நெபுகத்னேசர் படையெடுத்தலின் முன்னறிவிப்பு


8தகபனகேசில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: 9பெரும் கற்கள் சிலவற்றை உன் கையில் எடுத்துக்கொள். தகபனகேசில் பார்வோன் அரண்மனை வாயில்களத்தில் உள்ள காரையில் யூதா மக்கள் முன்பாக அவற்றை மறைத்து வை. 10பிறகு நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரை இங்கு வரவழைப்பேன். நான் மறைத்துவைத்துள்ள இந்தக் கற்கள்மீது அவன்⁕ தன் அரியணையை அமைத்துத் தன் கொற்றக்குடையை விரித்துவைப்பான். 11அவன் வந்து, எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்; கொள்ளைநோய்க்குரியோர் கொள்ளைநோய்க்குள்ளாவர்; நாடு கடத்தலுக்குரியோர் நாடுகடத்தப்படுவர்; வாளுக்குரியோர் வாளால் மாள்வர். 12மேலும் அவன் எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்; அத்தெய்வச் சிலைகளை எரித்துத் தூக்கிச்செல்வான். இடையன் தன் ஆடையைத் துப்புரவு செய்வதுபோல், அவன் எகிப்தைத் துப்புரவு செய்வான்; அங்கிருந்து நலமே திரும்பிச் செல்வான். 13எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் தூண்களை அவன் தகர்த்தெறிவான்; எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்.


43:5-7 2 அர 25:26.


43:10 ‘நான்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 44:1-30

எகிப்தில் இஸ்ரயேலுக்கு அருளப்பட்ட இறைவாக்கு


1எகிப்து நாட்டின் மிக்தோல், தகபனகேசு, தப்னீஸ், மெம்பிசு, ஆகிய நகர்களிலும் பத்ரோசு நாட்டிலும் வாழ்ந்த வந்த யூதர் எல்லாரையும் குறித்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு: 2இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எருசலேம் மீதும் யூதாவின் எல்லா நகர்கள் மீதும் நான் வருவித்துள்ள தண்டனையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இதோ, இன்று அவை பாழடைந்து குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன. 3ஏனெனில், அவர்களோ நீங்களோ உங்கள் மூதாதையரோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களை அவர்கள் நாடிச்சென்று, தூபம் காட்டி, அவற்றைத் தொழுததன் மூலம் தீச்செயல் புரிந்து எனக்குச் சினமூட்டினார்கள். 4இருப்பினும், நான் என் ஊழியரான இறைவாக்கினர் அனைவரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி வைத்து, நான் வெறுக்கின்ற இந்த அருவருப்பான செயலைச் செய்யாதீர்கள் என்று சொல்லச் செய்திருந்தேன். 5அவர்களோ அதைக் கேட்கவில்லை; காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை. தங்கள் தீச்செயலை விட்டுத் திரும்பவில்லை; வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுவதை நிறுத்தவுமில்லை. 6எனவே என் சீற்றமும் சினமும் யூதாவின் நகர்கள்மேலும் எருசலேமின் தெருக்கள்மேலும் மூண்டெழுந்து அவற்றைத் தீக்கிரையாக்கின. இன்று காண்பதுபோல், அவை பாழடைந்து, ஆளரவமற்றுப் போயின. 7இப்போது இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உங்களுள் ஒருவன் கூட எஞ்சியிராதபடி, ஆண், பெண், சிறுவர், குழந்தை ஆகிய அனைவரையும் யூதாவினின்று அழித்து விடுவதன்மூலம் நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் பார்க்கிறீர்களே, அது ஏன்? 8நீங்கள் தங்கியிருக்க வந்துள்ள எகிப்து நாட்டில் வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுதல் போன்ற உங்கள் செயல்களால் ஏன் எனக்குச் சினமூட்டுகிறீர்கள்? நான் உங்களை அழிக்க, உலகின் எல்லா மக்களினத்தார் மத்தியிலும் நீங்கள் பழிப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளவதற்கா இவ்வாறு செய்கிறீர்கள்? 9உங்கள் மூதாதையரின் தீச்செயல்களையும், யூதா அரசர்களின் தீச்செயல்களையும், அவர்களுடைய மனைவியரின் தீச்செயல்களையும், உங்களுடைய சொந்தத் தீச்செயல்களையும் யூதா நாட்டிலும் எருசலேமின் தெருக்களிலும் உங்கள் மனைவியர் செய்த தீச்செயல்களையும் நீங்கள் மறந்துபோய் விட்டீர்களா? 10இந்நாள் வரை அவர்கள் எனக்குப் பணிந்துபோகவில்லை; அஞ்சி நடக்கவில்லை; உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்திருந்த திருச்சட்டத்தின்படியும் நியமங்களின்படியும் ஒழுகவுமில்லை.

11எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களுக்குத் தண்டனை அளிக்கவும், யூதா முழுவதையும் அழிக்கவும் நான் முடிவுசெய்துள்ளேன். 12எகிப்து நாட்டிற்கு வந்து தங்கியிருக்க முடிவுசெய்துள்ள யூதாவின் எஞ்சினோரை நான் தாக்க, அவர்கள் எல்லாரும் அழிந்து போவார்கள்; எகிப்து நாட்டில் அவர்கள் அனைவரும் வீழ்ச்சியுறுவார்கள்; வாளுக்கும் பஞ்சத்துக்கும் அவர்கள் இரையாவார்கள்; சிறியோர் முதல் பெரியோர் வரை அவர்கள் எல்லாரும் வாளாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்; சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவார்கள். 13எருசலேமை வாள், பஞ்சம், கொள்ளை நோயால் நான் தண்டித்துள்ளது போன்று எகிப்து நாட்டில் வாழ்வோரையும் தண்டிப்பேன். 14எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள யூதாவின் எஞ்சியோருள் எவருமே தப்பமாட்டார்; உயிர் பிழைக்கவும் மாட்டார். யூதா நாட்டில் குடியிருக்கும் பொருட்டு அங்குத் திரும்பிச் செல்ல ஆவலோடு ஏங்கியும் அங்குத் திரும்பிச் செல்லமாட்டார். தப்பியோடுவோரைத் தவிர வேறு எவருமே திரும்பிச் செல்லமாட்டார்.

15அப்பொழுது, தங்கள் மனைவியர் வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டியதை அறிந்திருந்த எல்லா ஆண்களும், அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த எல்லாப் பெண்களும், எகிப்து நாட்டிலும் பத்ரோசிலும் வாழ்ந்துவந்த மக்கள் அனைவரும் எரேமியாவுக்கு மறுமொழியாகக் கூறியது: 16“ஆண்டவர் பெயரால் எங்களுக்கு நீர் அறிவித்துள்ள செய்தியைப் பொறுத்தமட்டில் நாங்கள் உமக்குச் செவிகொடுக்கமாட்டோம். 17நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும் திண்ணமாய் நிறைவேற்றுவோம்; நாங்களும் எங்கள் மூதாதையரும் அரசர்களும் தலைவர்களும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் செய்துள்ளது போல, நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம். ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு ஏராளமான உணவு இருந்தது. நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம். தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை. 18ஆனால், நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவதையும் நீர்மப் படையல்களைப் படைப்பதையும் நிறுத்திவிட்ட காலத்திலிருந்து, எங்களுக்கு எல்லாமே குறைபாடாய் உள்ளது. வாளாலும் பஞ்சத்தாலும் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்.” 19அப்பொழுது பெண்கள், “விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி, நீர்மப் படையல்களைப் படைத்தபொழுது, எங்கள் கணவர்களின் ஒப்புதல் இல்லாமலா நாங்கள் விண்ணக அரசியின் உருவம் தாங்கிய மாவடை சுட்டு, நீர்மப் படையல்கள் படைத்தோம்?” என்றார்கள்.

20இந்த மறுமொழி கூறிய ஆண், பெண் ஆகிய எல்லா மக்களிடமும் எரேமியா கூறியது: 21“நீங்களும் உங்கள் மூதாதையர், அரசர்கள், தலைவர்கள், நாட்டுமக்கள் எல்லாரும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் தூபம் காட்டினீர்களே, அதை ஆண்டவர் மறந்து விட்டாரா? அதை அவர் தம் நினைவில் கொள்ளவில்லையா? 22நீங்கள் செய்துள்ள தீச்செயல்களையும் அருவருப்பான செயல்களையும் ஆண்டவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்கள் நாடு கண்டனத்திற்கும் பேரச்சத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகி, இன்று காண்பதுபோல், குடியிருப்பாரற்றுக் கிடக்கிறது. 23நீங்கள் தூபம் காட்டியதாலும், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ததாலும், அவரது குரலுக்குச் செவிகொடாது, அவருடைய திருச்சட்டம், நியமங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றிற்கேற்ப ஒழுகாததாலுமே, இன்றும் காண்பது போல், இத்தீங்கு உங்களுக்கு நேர்ந்துள்ளது.”

24தொடர்ந்து எரேமியா எல்லா மக்களையும் பெண்களையும் நோக்கிக் கூறியது: “எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுங்கள். 25இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்களும் உங்கள் மனைவியரும், ‘விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி, நீர்மப்படையல்களை அவளுக்குப் படைப்பதாக நாங்கள் செய்துகொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றியே தீருவோம்’ என்று நீங்கள் சொல்லால் கூறியதைச் செயலில் நிறைவேற்றிவிட்டீர்கள். நன்று! நன்று! உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்! உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்! 26எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: ‘தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!’ எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன். 27நன்மை அன்று, தீமை விளைவிக்கவே அவர்கள் மட்டில் நான் விழிப்பாய் இருக்கிறேன்; எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்கள் எல்லாரும் முற்றிலும் அழியும்வரை வாளாலும் பஞ்சத்தாலும் அவர்களை வதைப்பேன். 28வாளுக்குத் தப்பும் ஒரு சிலரே எகிப்து நாட்டினின்று யூதா நாட்டுக்குத் திரும்பிச் செல்வர். அப்பொழுது எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள யூதாவின் எஞ்சினோர் அனைவரும், நிலைநிற்பது என் சொல்லா, அவர்கள் சொல்லா? என்பதை அறிந்துகொள்வர். 29நான் இந்த இடத்திலேயே உங்களைத் தண்டிப்பேன். இதுவே உங்களுக்கு அடையாளம், என்கிறார் ஆண்டவர். இதனால் உங்கள் தண்டனை பற்றி உங்களுக்கு எதிராக நான் கூறிய சொற்கள் உறுதியாய் நிலைநிற்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 30ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, யூதாவின் அரசனான செதேக்கியாவை, அவன் பகைவனும் அவன் உயிரைப் பறிக்கத் தேடியவனுமான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் நான் கையளித்தது போல, எகிப்திய மன்னன் பார்வோன் ஒப்ராவை அவன் பகைவர் கையிலும் அவன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் ஒப்புவிப்பேன்.”✠


44:30 2 அர 25:1-7.



அதிகாரம் 45:1-5

பாரூக்குக்கு ஆண்டவரின் வாக்குறுதி


1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச் சுருளில் எழுதி வைத்த பின்னர், எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது:✠ 2பாரூக்கு! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்: 3எனக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஆண்டவர் எனக்குத் துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்; நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப்போனேன். எனக்கு நிம்மதியே கிடையாது என்று நீ சொன்னாய். 4இவ்வாறு நீ அவனிடம் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே; நான் கட்டியதை நானே அழிப்பேன்; நான் நட்டதை நானே பிடுங்குவேன். இந்நாடு முழுவதற்கும் இவ்வாறு நிகழும். 5நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா? அவ்வாறு தேடாதே; ஏனெனில் எல்லா மனிதர்க்கும் நான் தண்டனை அளிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். ஆனால் நீ எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் நான் உன் உயிரைக் கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.


45:1 2 அர 24:1; 2 குறி 36:5-7; தானி 1:1-2.



அதிகாரம் 46:1-28

எகிப்துக்கு எதிராக


1மக்களினத்தாரைக் குறித்து இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு: 2எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்:

3பரிசை, கேடயம் தயார் செய்யுங்கள்;
போருக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள்.
4குதிரைகளுக்குச் சேணம் பூட்டுங்கள்;
படைவீரரே, அவற்றின்மீது ஏறுங்கள்;
தலைக் கவசங்களுடன்
அணிவகுத்து நில்லுங்கள்;
ஈட்டிகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்.
மார்புக் கவசங்களை
அணிந்து கொள்ளுங்கள்.
5நான் காண்பது என்ன?
அவர்கள் திகிலடைந்து
புறமுதுகிட்டு ஓடுகிறார்கள்;
அவர்களுடைய படைவீரர்கள்
முறியடிக்கப் படுகிறார்கள்;
திரும்பிப் பாராது தப்பி ஓடுகிறார்கள்;
6ஓட்டத்தில் வல்லவர்
ஓடிப்போக முடியாது;
படைவீரரும் தப்பியோட இயலாது;
வடக்கே யூப்பிரத்தீசு பேராற்றங்கரையில்
அவர்கள் தடுமாறிக் கீழே விழுவர்.
7நைல்நதி போல் பொங்கி எழுந்து,
அலைமோதும் நதிகளெனப்
பாய்ந்து வரும் இவன் யார்?
8நைல்நதிபோல் பொங்கி எழுந்து
அலைமோதும் நதிகளெனப்
பாய்ந்து வருகின்றது எகிப்து.
நான் பொங்கி எழுந்து,
மண்ணுலகை மூடிக்கொள்வேன்;
நகரையும் அதன் குடிகளையும்
அழித்தொழிப்பேன் என்று
அவன் சொல்லிக்கொள்கிறான்.
9குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்;
தேர்களே, விரைந்து ஓடுங்கள்;
படைவீரர்களே,
முன்னேறிச் செல்லுங்கள்.
எத்தியோப்பியரும் லீபியரும்
கேடயம் ஏந்தட்டும்!
லீதியர் அம்புகளைத் தொடுத்து
நாணேற்றட்டும்!
10அந்த நாள், படைகளின்
ஆண்டவராகிய தலைவரின் நாள்;
ஆண்டவர் தம் எதிரிகளைப்
பழிவாங்கும் நாள்,
வாள் உண்டு நிறைவுகொள்ளும்;
குருதி குடித்து வெறிகொள்ளும்.
வடக்கு நாட்டு யூப்பிரத்தீசு
பேராற்றங்கரையில்
படைகளின் ஆண்டவராகிய
தலைவருக்குப் பலியிடப்படும்.
11கன்னிப் பெண் எகிப்தே!
கிலயாதுக்குச் சென்று,
பொன் மெழுகு கொண்டுவா,
பல்வகை மருந்துகளை
நீ பயன்படுத்துவது வீணே!
உன் காயங்கள் ஆறவே ஆறா.
12மக்களினத்தார் உன் இழிவுபற்றிக்
கேள்வியுற்றனர்;
உன் அழுகுரல்
மண்ணுலகை நிறைந்தது;
படைவீரன் படைவீரனோடு
இடறிக்கொள்ள
இருவரும் சேர்ந்து கீழே விழுந்தனர்.

13பாபிலோனிய மன்னன் நெபுகத்தேனசர் எகிப்து நாட்டைத் தாக்க வருவதைப் பற்றி, ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:

14எகிப்தில் அறிவியுங்கள்;
மிக்தோலில் பறைசாற்றுங்கள்;
மெம்பிசிலும் தகபனகேசிலும்
முரசறையுங்கள்;
அணிவகுத்து நில்; தயாராய் இரு!
உன்னைச் சுற்றிலும் உள்ளவை
வாளுக்கு இரையாகும்.
15உன் படைவீரர் வீழ்ச்சியுற்றது ஏன்?
அவர்கள் எதிர்த்து நிற்காதது ஏன்?
ஆண்டவர் அவனைத்
தள்ளிவிட்டதால் அன்றோ!
16அவர் பலரை இடறிவிழச் செய்தார்.
‘எழுந்திருங்கள், கொடுங்கோலன்
வாளினின்று தப்பிப்போம்;
நம் சொந்த மக்களிடம்
நம் தாய் நாட்டுக்கே
திரும்பிச் செல்வோம்’ என்று
ஒருவர் மற்றவரிடம் சொல்லிக்கொண்டனர்.
17‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்று
எகிப்திய மன்னன் பார்வோனுக்குப்
பெயர் சூட்டுங்கள்.
18படைகளின் ஆண்டவர் என்னும்
பெயருடைய மன்னர் கூறுகிறார்:
வாழும் என் மேல் ஆணை!
மலைகளுக்குள் தாபோர் போலவும்
கடலோரத்துக் கர்மேல் போலவும்
ஒருவன் ஆற்றலுடன் வருவான்.
19மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென
மூட்டை கட்டிக்கொள்;
மெம்பிசு அழிந்துபோகும்;
குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்.
20எகிப்து ஓர் அழகான இளம்பசு!
வடக்கினின்று உண்ணி ஒன்று
அவள்மீது வந்து அமர்ந்துள்ளது.
21அவள் நடுவில் உள்ள கூலிப் படையினர்
கொழுத்த கன்று போன்றவர்கள்;
அவர்களும் புறமுதுகுகாட்டி
ஒருமிக்க ஓடிவிட்டார்கள்.
அவர்களால்
எதிர்த்து நிற்க முடியவில்லை.
அவர்களுடைய அழிவின் நாள்,
அவர்களது தண்டனையின் காலம்
அவர்கள்மேல் வந்துற்றது.
22நழுவிச் செல்லும் பாம்பு போன்று
அவள் சீறுகின்றாள்;
அவள் எதிரிகள் வலிமையோடு
அணிவகுத்து வருகின்றார்கள்;
மரம் வெட்டிகள் போல் கோடரிகளோடு
அவளை எதிர்த்து வருகின்றார்கள்.
23அவளது காடு
ஆள் நுழையமுடியாததாய் இருக்கிறது.
அவர்கள் அதை வெட்டுவார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
அவர்கள் வெட்டுக்கிளிகளைவிட
மிகுதியானவர்கள்.
அவர்களைக் கணக்கிட முடியாது.
24மகள் எகிப்து
இகழ்ச்சிக்கு உள்ளாவாள்;
வடக்கு நாட்டு மக்களிடம்
அவள் கையளிக்கப்படுவாள்.

25இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ, நோ நகரத்து ஆமோனையும், பார்வோனையும் எகிப்தையும் அவளுடைய தெய்வங்களையும் அரசர்களையும், பார்வோனையும் அவனில் நம்பிக்கை வைப்போரையும் நான் தண்டிக்கப் போகிறேன். 26அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் கையிலும் அவனுடைய அலுவலர் கையிலும் அவர்களை நான் ஒப்புவிப்பேன். அதன் பின்னர் முன்னாளில் போன்று எகிப்தில் மக்கள் குடியேறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.

27என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே;
இஸ்ரயேலே, கலங்காதே!
தொலை நாட்டினின்று
உன்னை நான் மீட்பேன்;
அடிமைத்தன நாட்டினின்று
உன் வழிமரபினரை விடுவிப்பேன்;
யாக்கோபு திரும்பிவந்து
அமைதியில் இளைப்பாறுவான்;
அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.
28என் ஊழியன் யாக்கோபே,
அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்.
நான் உன்னோடு இருக்கிறேன்;
எந்த மக்களினத்தாரிடையே
உன்னைத் துரத்தியடித்தேனோ,
அவர்கள் அனைவரையும்
முற்றிலும் அழித்தொழிப்பேன்;
உன்னையோ
முற்றிலும் அழிக்க மாட்டேன்;
உன்னை நீதியோடு தண்டிப்பேன்;
உன்னை எவ்வகையிலேனும்
தண்டியாது விடேன்.


46:2-26 எசா 19:1-25; எசே 29:1-32:32. 46:27-28 எரே 30:10-11.



அதிகாரம் 47:1-7

பெலிஸ்தியருக்கு எதிராக


1பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

2ஆண்டவர் கூறுவது இதுவே:
வடக்கினின்று வெள்ளம்
பொங்கி எழுகின்றது;
கரை புரண்டோடும் காட்டாறென
அது மாறுகின்றது.
நாட்டையும் அதில் உள்ள
அனைத்தையும்
நகரையும் அதன் குடிகளையும்
மூழ்கடிக்கும்.
மனிதர் கூக்குரலிடுவர்;
நாட்டு மக்கள் அனைவரும்
ஓலமிடுவர்.
3போர்க் குதிரைகளின்
குளம்பொலியையும்
தேர்களின் இரைச்சலையும்
அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு,
தந்தையர் கை சோர்ந்தமையால்
தம் குழந்தைகளையும்
திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.
4பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள்,
தீர், சீதோனும் அவற்றின்
எஞ்சியுள்ள துணையாளர் எல்லாரும்
ஒழியும் நாள் நெருங்கிவிட்டது.
ஆண்டவர் பெலிஸ்தியரையும்
கப்தோர் தீவின் எஞ்சியோரையும்
அழிக்கவிருக்கிறார்.
5காசா மொட்டையடிக்கப்படும்;
அஸ்கலோன் அழிக்கப்படும்;
அனாக்கியருள்⁕ எஞ்சியிருப்போரே,
எத்துணைக் காலம் நீங்கள்
உங்களையே
காயப்படுத்திக் கொள்வீர்கள்?
6ஓ, ஆண்டவரின் வாளே!
என்று நீ ஓய்ந்திருப்பாய்?
நீ உன் உறைக்குள் செல்!
அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு.
7ஆண்டவர் அதற்குக்
கட்டளை கொடுத்திருக்கிறார்;
அது⁕ எப்படி ஓய்ந்திருக்க முடியும்?
அஸ்கலோனுக்கும்
கடற்கரைப் பகுதிக்கும் எதிராக
அவர் அதற்குப் பணி
குறித்து வைத்துள்ளாரே!


47:1-7 எசா 14:29-31; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.


47:5 ‘அவர்களது பள்ளத்தாக்கு’ என்பது எபிரேய பாடம். 47:7 ‘நீ’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 48:1-47

மோவாபுக்கு எதிராக


1மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:

நெபோவுக்கு ஐயோ கேடு!
அது பாழடைந்து கிடக்கிறது.
கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்
கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,
தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
2போவாபின் புகழ் மங்கிவிட்டது;
எஸ்போனில் அதற்குத்
தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:
‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய்
இல்லாதவாறு சிதைப்போம்’.
மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;
வாள் உன்னைத் துரத்தி வரும்.
3ஓரொனாயிமினின்று
கூக்குரல் ஒலிக்கிறது.
‘கொடுமை, பேரழிவு’ எனக் கேட்கிறது.
4மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது;
அதன் குழந்தைகளின்
அழுகுரல் கேட்கின்றது.
5லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்
அவர்கள் அழுதுகொண்டே
போகிறார்கள்;
ஓரொனாயிமுக்கு
இறங்கிச் செல்லும் வழியில்
அழிவின் புலம்பல்⁕ கேட்கிறது.
6தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்
பாதுகாத்துக்கொள்ளுங்கள்;
பாலை நிலத்துக்
காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.
7உன் கோட்டைகளையும்⁕
கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;
நீயும் கைப்பற்றப்படுவாய்.
கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;
அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும்
அதனோடு செல்வார்கள்.
8‘அழிப்போன்’
ஒவ்வொரு நகருக்கும் வருவான்.
எந்த நகரும் தப்பாது.
ஆண்டவர் சொல்லியிருப்பது போல்
பள்ளத்தாக்குகள் பாழாகும்;
சமவெளிகள் அழிக்கப்படும்.
9மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;
அது பறந்தோடட்டும்;
அதன் நகர்கள் பாழாக்கப்படும்;
அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.
10ஆண்டவர்தம் அலுவலை
அக்கறையின்றிச் செய்பவன்
சபிக்கப்பட்டவன்;
குருதி சிந்தாமல்
தன் வாளை வைத்திருப்பவனும்
சபிக்கப்பட்டவனே.
11மோவாபு இளமைமுதல்
அமைதியில் வாழ்ந்துவருகிறது;
மண்டியை அடியில் கொண்ட
பழந் திராட்சை இரசம் அது
. அது கலத்தினின்று கலத்திற்கு
மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது;
அதன் சுவை குன்றவில்லை;
அதன் நறுமணம் மாறவில்லை.

12எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள். 13இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.

14‘நாங்கள் படைவீரர்கள்;
போரில் வல்லவர்கள்’ என்று
நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?
15“மோவாபையும் அதன் நகர்களையும்
அழிப்பவன் வந்துவிட்டான்;
அதன் சிறந்த இளைஞர்கள்
கொலைக் களத்திற்குப்
போய் விட்டார்கள்,” என்கிறார்
படைகளின் ஆண்டவர் என்னும்
பெயருடைய மன்னர்.
16மோவாபின் அழிவு
அண்மையில் உள்ளது;
தீங்கு அதை நோக்கி
விரைந்து வருகிறது.
17அதைச் சுற்றியிருப்போரே,
நீங்கள் அனைவரும் அதற்காகத்
துக்கம் கொண்டாடுங்கள்.
அதன் புகழை அறிந்திருப்போரே,
நீங்கள் அனைவரும்
‘வலிமைமிக்க செங்கோல்
முறிந்தது எங்ஙனம்?
மேன்மைமிக்க கோல்
உடைந்தது எவ்வாறு?’
என்று கேளுங்கள்.
18மகள் தீபோனின் குடிமகனே,
உன் மேன்மையை விட்டு இறங்கி வா;
வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.
மோவாபை அழிப்பவன்
உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;
உன் கோட்டைகளை
அவன் தகர்த்து விட்டான்.
19அரோயேரின் குடிமகனே!
நீ சாலை ஓரமாய் நின்று கவனி;
ஓட்டம்பிடிக்கிறவனையும்
தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,
‘என்ன நடந்தது?’ என்று கேள்.
20மோவாபு அழிக்கப்பட்டுச்
சிறுமைக்குள்ளானது;
அழுது புலம்புங்கள்;
கூக்குரலிடுங்கள்;
மோவாபு பாழடைந்துவிட்டது என
அர்னோனில் அறிவியுங்கள்.

21சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து, 22தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம், 23கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன், 24கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது. 25மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.

26மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும். 27இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?

28மோவாபின் குடிமக்களே,
நகர்களை விட்டு வெளியேறுங்கள்;
பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.
பாறையின் இடுக்குகளில்
கூடுகட்டி வாழும்
புறாவைப் போல் இருங்கள்.
29மோவாபின் செருக்கைப் பற்றி
நாங்கள் கேள்வியுற்றோம்;
பெரிதே அதன் இறுமாப்பு!
அதன் ஆணவம், செருக்கு,
அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்
கேள்வியுற்றோம்.
30அதன் திமிரை நான் அறிவேன்,
என்கிறார் ஆண்டவர்.
அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;
அதன் செயல்கள் யாவும் பொய்.
31மோவாபை முன்னிட்டு
நான் ஓலமிடுவேன்;
மோவாபு முழுவதையும் குறித்து
அலறியழுவேன்;
கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்
புலம்புவேன்.
32சிப்மாவின் திராட்சைக் கொடியே,
யாசேருக்காக அழுவதைவிட
அதிகமாய் உனக்காக அழுவேன்.
உன் கொடிகள்
கடல் வரை படர்ந்துள்ளன;
யாசேர் கடலை எட்டியுள்ளன.
கோடைப் பழங்கள்மீதும்
திராட்சைப் பழங்கள்மீதும்
‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான்.
33செழிப்பான மோவாபு நாட்டினின்று
மகிழ்ச்சியும், அக்களிப்பும்
அகற்றப்பட்டுவிட்டன;
திராட்சை ஆலைகளில்
இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;
மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்
எவனும் இலலை;
மகிழ்ச்சியின் ஆரவாரம்
அங்கு எழுவதில்லை.

34எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது. 35மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர். 36எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன.

37அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது. 38மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.

39இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.

40ஆண்டவர் கூறுவது இதுவே;
ஒருவன் கழுகைப்போல்
பாய்ந்து வருவான்;
மோவாபின்மீது
தன் இறக்கைகளை விரிப்பான்.
41நகர்கள் பிடிபடும்;
கோட்டைகள் கைப்பற்றப்படும்.
அந்நாளில் மோவாபிய
படைவீரர்களின் இதயம்
பேறுகாலப் பெண்ணின்
இதயத்தைப்போல் துடிக்கும்.
42மோவாபு அழிக்கப்படும்;
இனி அது ஒரு மக்களினமாய் இராது.
அது ஆண்டவருக்கு எதிராகப்
பெருமை அடித்துக் கொண்டது.
43மோவாபின் மகனே,
திகிலும் படுகுழியும் கண்ணியுமே
உன்முன் இருக்கின்றன,
என்கிறார் ஆண்டவர்.
44திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்
படுகுழியில் விழுவான்;
படுகுழியினின்று வெளியே வருபவன்
கண்ணியில் மாட்டிக்கொள்வான்.
அவர்களுடைய தண்டனைக் காலத்தில்
இவற்றை மோவாபின்மீது
வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.
45தப்பியோடுவோர்
எஸ்போனின் நிழலில்
வலுவிழந்து நிற்கின்றனர்;
எஸ்போனிலிருந்து
நெருப்பு கிளம்பிற்று;
சீகோனிலிருந்து
தீப்பிழம்பு புறப்பட்டது;
மோவாபின் நெற்றியை
அது விழுங்கிற்று;
கலக்காரரின் உச்சந்தலையை
அது பொசுக்கிற்று.
46மோவாபே, உனக்கு ஐயோ கேடு!
கெமோசின் மக்கள்
அழிந்துபோயினர்;
உன் புதல்வர்
நாடு கடத்தப்பட்டனர்;
உன் புதல்வியரும்
நாடுகடத்தப்பட்டனர்.
47ஆயினும், இறுதி நாள்களில்
அடிமைத்தனத்தினின்று
மோவாபை நான்
திரும்பக் கொணர்வேன்,
என்கிறார் ஆண்டவர்.
மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு
இத்துடன் முற்றிற்று.


48:1-47 எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.


48:5 ‘புலம்பலின் துயரம்’ என்பது எபிரேய பாடம். 48:7 ‘செயல்கள்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 49:1-39

அம்மோனுக்கு எதிராக


1அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே;
இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?
அதற்கு வழிமரபே கிடையாதா?
மில்க்கோம்⁕
காத்தைக் கைப்பற்றியது ஏன்?
அவன் மக்கள் அதன் நகர்களில்
குடியிருப்பது ஏன்?
2இதோ, நாள்கள் வருகின்றன,
என்கிறார் ஆண்டவர்.
அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப்
போர்முரசு ஒலிக்கச் செய்வேன்.
அது பாழடைந்த குவியல் ஆகும்;
அதன் ஊர்கள்⁕ தீக்கிரையாகும்;
தன்னைக் கைப்பற்றியோரை
இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும்,
என்கிறார் ஆண்டவர்.
3எஸ்போனே, புலம்பியழு;
ஆயி பாழடைந்துவிட்டது.
இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்;
சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்;
ஒப்பாரி வையுங்கள்;
மதில்களுக்கிடையே
அங்குமிங்கும் ஓடுங்கள்;
மில்கோம் நாடுகடத்தப்படுவான்.
அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும்
அவனோடு செல்வார்கள்.
4பற்றுறுதியற்ற மகளே,
உன் பள்ளத்தாக்குகள் பற்றி,
உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி,
பெருமையடிப்பானேன்?
உன் செல்வங்களில்
நம்பிக்கை வைக்கிறாய்;
‘எனக்கு எதிராய் எவன் வருவான்?’
எனச் சொல்லிக்கொள்கின்றாய்.
5உன்னைச் சுற்றியிருப்போர்
அனைவரிடமிருந்தும்
உனக்குத் திகில் வருவிப்பேன்,
என்கிறார் படைகளின்
ஆண்டவராகிய தலைவர்.
நீங்கள் எல்லாரும்
தலை தெறிக்க ஓடுமாறு
விரட்டியடிக்கப்படுவீர்கள்;
தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க
எவரும் இரார்.
6பின்னர், அம்மோனியரின்
சொத்து, செல்வங்களைத்
திரும்பக் கொடுப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.


ஏதோமுக்கு எதிராக


7ஏதோமைக் குறித்து,
படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே;
தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா?
மதி நுட்பமுடையோரிடமிருந்து
அறிவுரை ஒழிந்துபோயிற்றா?
அவர்களின் ஞானம்
மறைந்து போயிற்றா?
8தெதோன் குடிமக்களே,
திரும்புங்கள், தப்பியோடுங்கள்;
பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்;
நான் ஏசாவைத் தண்டிக்கும்
அவனது காலத்தில்
அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.
9திராட்சைப் பழம் பறிப்போர்
உன்னிடம் வந்தால்,
விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?
இரவில் திருடர் வருவாராயின்,
தேவைக்குமேல்
திருடமாட்டார் அன்றோ?
10நானோ ஏசாவை
வெறுமையாக்கிவிட்டேன்;
அவனுடைய பதுங்கிடங்களை
வெளிப்படுத்திவிட்டேன்.
இனி அவனால் மறைந்திருக்க முடியாது.
அவன் வழிமரபினர், சகோதரர்,
அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;
அவன் முற்றிலும் அழிந்து போவான்.
11அனாதைகளைப்பற்றிக்
கவலை கொள்ளாதே.
நான் அவர்களை வாழவைப்பேன்.
உன் விதவைகள்
என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.

12ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்; நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய். 13ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்; அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.

14நான் ஆண்டவரிடமிருந்து
ஒரு செய்தி கேட்டேன்.
‘ஒன்றுகூடுங்கள்,
அதனை எதிர்க்க வாருங்கள்,
போருக்குப் புறப்படுங்கள்’
என்று சொல்லுமாறு,
மக்களினத்தார்க்கு ஒரு தூதன்
அனுப்பப்பட்டுள்ளான்.
15பார்! மக்களினத்தாருள்
உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்;
மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.
16பாறை இடுக்குகளில் வாழ்பவனே,
குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே,
நீ விளைவித்த அச்சமும்
உன் உள்ளத்தின் இறுமாப்பும்
உன்னை ஏமாற்றிவிட்டன;
நீ கழுகைப் போல் உன் கூட்டை
உயரத்தில் கட்டினாலும்,
நான் உன்னை அங்கிருந்து
கீழே தள்ளிவிடுவேன்,
என்கிறார் ஆண்டவர்.

17ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்; அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான். 18சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்; எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.✠ 19யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்; நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்? 20எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும். 21அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும். 22இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்; போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.


தமஸ்குவுக்கு எதிராக


23தமஸ்கு குறித்து:
ஆமாத்தும் அர்ப்பாத்தும்
கலக்கம் அடைந்துள்ளன;
கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன;
அவை அச்சத்தால் நடுங்குகின்றன;
கடலைப்போல் தத்தளிக்கின்றன;
அவற்றுக்கு அமைதியே கிடையாது.
24தமஸ்கு தளர்ந்துவிட்டது;
தப்பியோடப் பார்க்கின்றது;
அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;
வேதனை, துயரத்தின் பிடியில்
பேறுகாலப் பெண் தவிப்பதுபோல்
அதுவும் தவிக்கின்றது.
25புகழ் பெற்ற நகர் —
மகிழ்ச்சி பொங்கும் நகர் —
இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே!
26அதன் இளைஞர்கள்
தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.
அதன் படைவீரர்கள் அனைவரும்
அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
27தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்;
பென்அதாதின் கோட்டைகளை
அது சுட்டெரிக்கும்.


கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக


28பாபிலோனிய மன்னன்
நெபுகத்னேசர் வீழ்த்திய
கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,
ஆண்டவர் கூறுவது இதுவே;
புறப்படுங்கள்,
கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;
கீழ்த்திசை மக்களை
அழித்தொழியுங்கள்.
29அவர்களின் கூடாரங்களும்
மந்தைகளும் பிடிபடும்;
கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப்
பொருள்களும் கைப்பற்றப்படும்;
அவர்களின் ஒட்டகங்களை
அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்;
“எப்பக்கமும் ஒரே திகில்” என
மனிதர் ஓலமிடுவர்.
30ஆட்சோரின் குடிமக்களே!
தப்பியோடுங்கள்,
தூரமாகச் சென்று
பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,
என்கிறார் ஆண்டவர்.
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
உங்களுக்கு எதிராகச்
சதித்திட்டம் தீட்டியுள்ளான்;
உங்களுக்கு எதிராகச்
சூழ்ச்சி செய்துள்ளான்.
31புறப்படுங்கள்;
கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி
அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும்
மக்களினத்தார்க்கு எதிராக —
தனித்து வாழும்
மக்களினத்தார்க்கு எதிராக
முன்னேறிச் செல்லுங்கள்,
என்கிறார் ஆண்டவர்.
32அவர்களுடைய ஒட்டகங்கள்
கொள்ளையடிக்கப்படும்;
அவர்களின் எண்ணற்ற மந்தைகள்
பறிமுதலாகும்;
முன்தலையை
மழித்துக்கொள்ளும் மக்களைக்
காற்றில் பறக்கவிடுவேன்;
எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல்
அழிவைக் கொணர்வேன்,
என்கிறார் ஆண்டவர்.
33ஆட்சோர்,
குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்;
என்றும் பாழடைந்து கிடக்கும்;
அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்;
எவரும் அதில் தங்கவும் மாட்டார்.


ஏலாமுக்கு எதிராக


34யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:

35படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான
வில்லை முறித்துப்போடுவேன்.
36வானத்தின் நான்கு திசைகளினின்று
நால்வகைக் காற்றுகளை
ஏலாம்மீது வரவழைப்பேன்;
இந்த எல்லாக் காற்றுகளினாலும்
அவர்களைச் சிதறடிப்பேன்.
ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்
சென்றடையாத நாடே இராது.
37ஏலாமின் எதிரிகள் முன்னும்,
அதன் உயிரைப்
பறிக்கத் தேடுவோர் முன்னும்
நான் அதை நடுங்கச்செய்வேன்;
அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.
என் சினம் அவர்கள் மேல்
மூண்டெழும், என்கிறார் ஆண்டவர்.
அவர்களை முற்றிலும்
அழித்துத் தீர்க்கும்வரை,
அவர்களைப் பின்தொடருமாறு
வாளை அனுப்பி வைப்பேன்.
38ஏலாமில்
என் அரியணையை அமைப்பேன்;
அவர்களின் அரசரையும்
தலைவர்களையும் அழிப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.
39ஆயினும் ,இறுதி நாள்களில் நான்
ஏலாமின் சொத்து, செல்வங்களைத்
திரும்பக் கொணர்வேன்,
என்கிறார் ஆண்டவர்.


49:1-6 எசே 21:28-32; 25:1-7; ஆமோ 1:13-15; செப் 2:8-11. 49:7-22 எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5. 49:18 தொநூ 19:24-25. 49:23-27 எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1.


49:1 * ‘அவர்களின் அரசன்’ என்பது எபிரேய பாடம். 49:2 * ‘புதல்வியர்’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 50:1-46

பாபிலோனுக்கு எதிராக


1பாபிலோனைக் குறித்தும் கல்தேயரின் நாட்டைக் குறித்தும் இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் அருளிய வாக்கு:

2மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்;
பறைசாற்றுங்கள்; கொடியேற்றுங்கள்;
முழக்கம் செய்யுங்கள்;
‘பாபிலோன் கைப்பற்றப்பட்டது;
பேல் சிறுமையுற்றது;
மெரோதாக்கு உடைக்கப்பட்டது;
அதன் சிலைகள் சிறுமையுற்றன;
அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன,’ என்று
மறைக்காமல் அறிக்கையிடுங்கள்.

3ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும். அது பாபிலோனைப் பாழாக்கும். ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான். மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்.

4ஆண்டவர் கூறுகிறார்: அந்நாள்களில் — அக்காலத்தில் — இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும் சேர்ந்து வருவார்கள்; அழுது கொண்டே திரும்பி வருவார்கள்; தங்கள் கடவுளான ஆண்டவரை அவர்கள் தேடுவார்கள். 5அவர்கள் சீயோனை நோக்கியவண்ணம், அங்குப் போகும் வழியைக் கேட்பார்கள்; ‘வாருங்கள்; மறக்கப்படாத, என்றுமுள உடன்படிக்கை மூலம் ஆண்டவரோடு நம்மையே இணைத்துக்கொள்வோம்’ என்பார்கள்.

6என் மக்கள் காணாமற்போன ஆடு போன்றவர்கள். அவர்களின் ஆயர்கள் அவர்களை வழி தவறிப் போகச் செய்தார்கள்; மலைகள் மேல் அவர்களைக் கலங்கடித்தார்கள். மலைக்கும் குன்றுக்கும் இடையில் மக்கள் அலைந்து திரிந்தார்கள்; தங்கள் உறைவிடத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். 7பார்த்தவர் எல்லாரும் அவர்களை விழுங்கினர். ‘நாங்கள் குற்றவாளிகள் அல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களின் உண்மையான உறைவிடமும், தங்கள் மூதாதையரின் நம்பிக்கையுமான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்தார்கள்’ என்று அவர்களுடைய பகைவர் சொல்லிக்கொண்டனர்.

8பாபிலோனினின்று தப்பியோடுங்கள்; கல்தேயரின் நாட்டினின்று வெளியேறுங்கள்; மந்தைக்கு முன் செல்லும் கிடாய்களைப்போல் இருங்கள். 9ஏனெனில் நான் வடக்கு நாட்டினின்று பெரிய மக்களினங்களின் திரளைப் பாபிலோனுக்கு எதிராகத் தூண்டி விட்டுப் பாய்ந்து வரச்செய்வேன். அவை அதற்கு எதிராகப் படையெடுத்து வர, அது கைப்பற்றப்படும். அவர்களின் அம்புகள், வெறுங்கையாய்த் திரும்பி வராத தேர்ச்சி பெற்ற வீரர் போன்றவை. 10கல்தேயா சூறையாடப்படும்; அதைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.

11என் உரிமைச் சொத்தைச்
சூறையாடியவர்களே,
நீங்கள் அக்களித்தாலும்,
அகமகிழ்ந்தாலும்,
புல்கண்ட இளம்பசுபோல்
துள்ளிக் குதித்தாலும்,
பொலிகுதிரைப்போலக்
கனைத்தாலும்,
12உங்கள் அன்னை
பெரும் அவமானத்துக்கு உள்ளாவாள்;
உங்களை ஈன்றெடுத்தவள்
இகழ்ச்சிக்கு ஆளாவாள்;
மக்களுள் அவளே
கடையளாய் இருப்பாள்;
வறண்ட, வெறுமையான
பாலைநிலம் ஆவாள்.
13ஆண்டவருடைய வெஞ்சினத்தால்
அது குடியற்றுப்போகும்;
முற்றிலும் பாழடைந்துபோகும்;
பாபிலோனைக் கடந்து செல்லும்
எவனும் அதிர்ச்சி அடைவான்;
அதன் தோல்வி கண்டு
ஏளனம் செய்வான்.
14வில்வீரர்களே, நீங்கள் அனைவரும்
பாபிலோனுக்கு எதிராக எப்பக்கமும்
அணிவகுத்து வாருங்கள்.
அதன்மீது அம்பு எய்யுங்கள்,
அம்பு மாரி பொழியுங்கள்;
அது ஆண்டவருக்கு எதிராகப்
பாவம் செய்துள்ளது.
15எப்பக்கமும் அதற்கு எதிராகக்
குரல் எழுப்புங்கள்.
அது சரணடைந்துவிட்டது.
அதன்கொத்தளங்கள் வீழ்ந்தன;
அதன் மதில்கள் தகர்ந்தன.
இது ஆண்டவரின்
பழிவாங்குதல் ஆகும்.
நீங்களும் அதனைப் பழிவாங்குங்கள்;
அது செய்ததுபோல்
நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.
16விதைப்பவனைப் பாபிலோனினின்று
அழித்துப் போடுங்கள்;
அறுவடைக் காலத்தில்
அரிவாள் எடுப்பவனையும்
வீழ்த்தி விடுங்கள்;
கொடுங்கோலனின் வாளை முன்னிட்டு,
அவர்கள் ஒவ்வொருவனும்
தன் சொந்த மக்களிடம்
திரும்பிப் போகட்டும்;
அவர்கள் எல்லாரும் தங்கள்
சொந்த நாட்டுக்கே தப்பியோடட்டும்.

17இஸ்ரயேல் வேட்டையாடப்படும் ஆட்டுக்கு ஒப்பாகும். அது சிங்கங்களால் துரத்தியடிக்கப்பட்டது. முதன்முதலில் அசீரிய மன்னன் அதை விழுங்கினான்; இறுதியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் அதன் எலும்புகளை முறித்துப் போட்டான். 18ஆகவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ! அசீரிய மன்னனை நான் தண்டித்தது போன்று, பாபிலோனிய மன்னனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன்.

19நான் இஸ்ரயேலை அதன் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்ப அழைத்து வருவேன். கர்மேலிலும் பாசானிலும் அது மேயும்; எப்ராயிம் மலைகளிலும் கிலயாதிலும் அது வயிறு புடைக்கத்தின்னும். 20அந்நாள்களில் — அக்காலத்தில் — இஸ்ரயேலில் குற்றத்தை தேடிப் பார்ப்பர்; ஆனால், ஒன்றும் தென்படாது. யூதாவில் பாவங்களைத் தேடுவர்; ஆனால் ஒன்றும் காணப்படாது. ஏனெனில் நான் விட்டுவைத்த எஞ்சியோரை மன்னிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

21மெரத்தாயிம் நாட்டுக்கு
எதிராகப் புறப்படு;
பெக்கோதின் குடிகளை
எதிர்த்துமுன்னேறு;
அவர்களை வெட்டி வீழ்த்து;
முற்றிலும் அழித்துப்போடு;
நான் கட்டளையிட்ட அனைத்தையும்
நிறைவேற்று, என்கிறார் ஆண்டவர்.
22நாட்டில் போரின் ஆரவாரம்
கேட்கின்றது;
பேரழிவின் கூக்குரல் ஒலிக்கின்றது.
23மண்ணுலகு முழுவதற்கும்
சம்மட்டியாய்த் திகழ்ந்தது
நொறுங்கித் தூள்தூளானது எப்படி ?
மக்களினங்கள் நடுவே பாபிலோன்
பாழடைந்துபோனது எவ்வாறு!
24பாபிலோனே, நான் உனக்குக்
கண்ணி வைத்தேன்;
தெரியாமலே நீ அதில்
மாட்டிக் கொண்டாய்;
நீ கண்டுபிடிக்கப்பட்டுப் பிடிபட்டாய்;
ஏனெனில் நீ ஆண்டவரை எதிர்த்தாய்.
25ஆண்டவர் தம் படைக்கலக்
கொட்டிலைத் திறந்து விட்டார்;
தம் கடுங்கோபத்தின் படைக்கருவிகளை
வெளிக்கொணர்ந்தார்;
கல்தேயர் நாட்டில்
படைகளின் ஆண்டவராகிய கடவுள்
ஆற்றவேண்டிய அலுவல் இதுவே.
26எல்லாத் திக்குகளினின்றும்
அதை எதிர்த்து வாருங்கள்;
அதன் களஞ்சியங்களை
உடைத்துத்திறங்கள்;
தானியக் குவியல்போல
அதைக் குவித்து வையுங்கள்;
அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்;
அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.
27அதன் காளைகள் அனைத்தையும்
வெட்டி வீழ்த்துங்கள்;
அவை கொலைக்களத்திற்குச்
செல்லட்டும்;
அவற்றுக்கு ஐயோ கேடு!
அவற்றின் நாள் வந்துவிட்டது;
அவற்றின் தண்டனைக் காலம்
நெருங்கிவிட்டது.

28இதோ! அவர்கள் பாபிலோனிய நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்; தம்கோவிலை முன்னிட்டு நம் ஆண்டவராகிய கடவுள் பழி வாங்கியதைச் சீயோனில் அறிவிக்க ஓடுகிறார்கள். 29வில்லாளர்கள், வில்வீரர்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக வருமாறு அழையுங்கள்; அதை சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள். ஒருவனும் தப்பியோட விடாதீர்கள்; அதன் செயல்களுக்குத் தக்கவாறு கைம்மாறு செய்யுங்கள்; அது நடந்து கொண்டதற்கு ஏற்ப அதை நடத்துங்கள்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவராகிய ஆண்டவருக்கு எதிராக அது இறுமாப்புடன் நடந்து கொண்டது.✠ 30எனவே அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்; அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.

31இறுமாப்புக் கொண்டவனே!
நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்,
என்கிறார் படைகளின்
ஆண்டவராகிய தலைவர்.
உனது நாள் வந்துவிட்டது;
உன்னை நான் தண்டிக்கும் காலம்
நெருங்கி விட்டது.
32இறுமாப்புக் கொண்டவன்
இடறிக் கீழே விழுவான்;
அவனைத் தூக்கிவிட யாரும் இலர்;
அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்;
சுற்றிலும் உள்ள அனைத்தையும்
அது சுட்டெரிக்கும்.

33படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; யூதாவின் மக்களும் அவர்களோடு சேர்ந்து துன்புறுத்தப் படுகிறார்கள். அவர்களை அடிமைப் படுத்தியோர் அனைவரும் அவர்களைக் காவலில் வைத்திருக்கிறார்கள்; அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்; 34அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்; ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர் பெயர். அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்; நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்; பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.

35கல்தேயர்மேலும்,
பாபிலோன் குடிமக்கள்மேலும்,
அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும்
ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
36குறிசொல்வோர் மேல் வாள் வரும்;
அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்;
அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்;
அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
37அதன் குதிரைகள்மேலும்,
தேர்கள் மேலும்
அதன் நடுவே இருக்கும்
கூலிப் படைகள்மேலும் வாள் வரும்;
அவர்கள் பேடிகள் ஆவார்கள்;
அதன் செல்வங்கள்
அனைத்தின் மேலும் வாள் வரும்;
அவை கொள்ளையடிக்கப்படும்.
38அதன் நீர்நிலைகள் மேல் வாள் வரும்;
அவை வறண்டுபோகும்;
அது சிலைகள் மலிந்த நாடு;
அதன் மக்கள் சிலைப் பைத்தியங்கள்.

39எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளோடு வாழும்; தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும். மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை; காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும்.✠ 40கடவுள் சோதோம், கொமோராவையும் அவற்றின் அண்டை நகர்களையும் வீழ்த்தியபொழுது நிகழ்ந்ததுபோல், அங்கு எவரும் குடியிருக்க மாட்டார்; எவரும் தங்கவுமாட்டார், என்கிறார் ஆண்டவர்.✠

41இதோ! வடக்கினின்று
ஓர் இனம் வருகின்றது;
வலிமை வாய்ந்த மக்களினமும்
மன்னர் பலரும்
மண்ணுலகின் கடை எல்லைகளினின்று
கிளர்ந்தெழுகின்றனர்.
42அவர்கள் வில்லும் ஈட்டியும்
ஏந்தியுள்ளார்கள்;
அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்;
அவர்களின் ஆரவாரம்
கடலின் இரைச்சலைப் போன்றது;
மகளே பாபிலோன்!
அவர்கள் போருக்கு அணிவகுத்துக்
குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டு
உனக்கு எதிராய் வருகின்றார்கள்.
43அவர்கள் வரும் செய்திபற்றிக்
கேள்வியுற்ற,
பாபிலோனிய மன்னனின் கைகள்
தளர்ந்துபோயின;
கடுந்துயர் அவனை ஆட்கொண்டது;
பேறுகாலப் பெண்ணைப்போல்
அவன் தவிக்கின்றான்.

44யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவதுபோல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென்று விரட்டியடிப்பேன். நான் தேர்ந்து கொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக்கேட்பவன் யார்? எந்த மேய்ப்பன் என்னை எதிர்த்து நிற்பான்? 45எனவே பாபிலோனுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், கல்தேய நாட்டுக்கு எதிராக அவர் கொண்டுள்ள எண்ணங்களுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும். 46பாபிலோனுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவே கேட்கும்.


50:1-51:64 எசா 13:1; 14:23; 47:1-15. 50:29 திவெ 18:6. 50:39 திவெ 18:2. 50:40 தொநூ 19:24-25.



அதிகாரம் 51:1-64

எருசலேமின் வீழ்ச்சி


1ஆண்டவர் கூறுவது இதுவே:
பாபிலோனுக்கும் கல்தேயாவின்
குடிகளுக்கும் எதிராக
அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.
2புடைப்போரைப்
பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;
அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;
தண்டனை நாளில் அவர்கள்
எப்பக்கத்தினின்றும்
அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;
அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.
3வில்வீரன் வில்லை
நாணேற்ற விடாதீர்கள்!
தன் கவசத்தை
அணிந்து நிற்க விடாதீர்கள்!
அதன் இளைஞர்கள் யாரையும்
விட்டுவைக்காதீர்கள்
அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
4கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில்
வீழ்ந்து கிடப்பர்.
காயமடைந்தோர்
அதன் தெருக்களில் கிடப்பர்.
5தங்கள் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர்
இஸ்ரயேலையும் யூதாவையும்
கைவிட்டுவிடவில்லை.
இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்
கல்தேயரின் நாடு
குற்றங்களால் நிறைந்துள்ளது.
6பாபிலோன் நடுவினின்று
தப்பியோடுங்கள்;
ஒவ்வொருவரும் தம் உயிரைக்
காத்துக்கொள்ளட்டும்;
அதன் குற்றங்களுக்காக
நீங்கள் அழிந்து போகாதீர்கள்;
இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,
அவரே அதற்குத்
தகுந்த தண்டனை வழங்குவார்;
7பாபிலோன் ஆண்டவரின் கையில்
பொற்கிண்ணம்போல் இருந்தது;
அது மண்ணுலகு முழுவதற்கும்
போதை ஊட்டியது;
மக்களினங்கள் அதன்
திராட்சை இரசத்தைப் பருகின;
நாடுகள் வெறிகொண்டன.✠
8பாபிலோன் திடீரென்று
விழுந்து நொறுங்கிற்று;
அதற்காகப் புலம்பியழுங்கள்;
அதன் காயத்துக்கு
மருந்து கொண்டு வாருங்கள்;
ஒருவேளை அது நலம் பெறலாம்!
9நாங்கள் பாபிலோனைக்
குணப்படுத்த முயன்றோம்;
அதுவோ நலம் அடைவதாயில்லை!
அதைக் கைவிட்டுவிடுங்கள்;
நாம் ஒவ்வொருவரும்
நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;
பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு
விண்ணுலகை எட்டியுள்ளது;
அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.✠
10ஆண்டவர் நமக்கு
நீதி வழங்கியுள்ளார்;
வாருங்கள்! நம் கடவுளான
ஆண்டவரின் செயலைச்
சீயோனில் பறைசாற்றுவோம்.
11அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;
கேடயங்களைக் கையிலெடுங்கள்;
ஆண்டவர் மேதிய அரசர்களைக்
கிளர்ந்தெழச் செய்துள்ளார்;
பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;
இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு
ஆண்டவர் பழிவாங்குவார்.
12பாபிலோன் மதில்கள்மேல்
கொடியேற்றுங்கள்;
காவலை வலுப்படுத்துங்கள்;
இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;
கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;
பாபிலோனின் குடிகளுக்கு எதிராக
ஆண்டவர் உரைத்திருந்ததைத்
தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.
13நீர்வளம் கொண்டவனே!
செல்வம் மிகுந்தவனே!
உனக்கு முடிவு வந்துவிட்டது;
உன் வாழ்நாளின் இழை
துண்டிக்கப்பட்டுவிட்டது.✠
14வெட்டுக்கிளிகளைப் போன்று
எண்ணற்ற மனிதரால் உன்னைத்
திண்ணமாய் நிரப்புவேன்;
அவர்கள் உனக்கு எதிராக
வெற்றி முழக்கம் செய்வார்கள்,
என்று படைகளின் ஆண்டவர்
தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.
15அவரே தம் ஆற்றலால்
மண்ணுலகைப் படைத்தார்
; தம் ஞானத்தால்
பூவுலகை நிலைநாட்டினார்;
தம் கூர்மதியால்
விண்ணுலகை விரித்தார்.
16அவர் குரல் கொடுக்க,
வானத்து நீர்த்திரள்
முழக்கமிடுகின்றது;
மண்ணுலகின் எல்லையினின்று
முகில்கள் எழச் செய்கின்றார்;
மழை பொழியுமாறு
மின்னல் வெட்டச் செய்கிறார்;
தம் கிடங்குகளினின்று
காற்று வீசச்செய்கிறார்.
17மனிதர் யாவரும் மூடர்கள்,
அறிவிலிகள்;
கொல்லர் எல்லாரும்
தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;
அவர்களின் வார்ப்புப் படிமங்கள்
பொய்யானவை;
அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.
18அவை பயனற்றவை,
ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;
தம் தண்டனையின் காலத்தில்
அவை அழிந்துவிடும்.
19யாக்கோபின் பங்காய் இருப்பவரோ
இவற்றைப் போன்றவர் அல்லர்;
அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;
தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை
உருவாக்கியவரும் அவரே;
படைகளின் ஆண்டவர் என்பது
அவர் பெயராகும்.
20நீ என் சம்மட்டியும்
படைக்கருவியும் ஆவாய்;
நான் உன்னைக்கொண்டு
மக்களினங்களை நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு
அரசுகளை அழித்தொழிப்பேன்.
21உன்னைக்கொண்டு குதிரையையும்
குதிரை வீரனையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு தேரையும்
தேரோட்டியையும் நொறுக்குவேன்.
22உன்னைக்கொண்டு ஆணையும்
பெண்ணையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு முதியோனையும்
சிறுவனையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு இளைஞனையும்
இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;
23உன்னைக்கொண்டு ஆயனையும்
அவனது மந்தையையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு உழவனையும்
அவன் காளைகளையும் நொறுக்குவேன்;
உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்
அதிகாரிகளையும் நொறுக்குவேன்;
24பாபிலோனும் கல்தேயாவின்
குடிகள் எல்லாரும்
சீயோனில் செய்த தீச்செயல்
அனைத்தின் பொருட்டு,
உங்கள் கண்முன்னால்
அவர்களைப் பழிவாங்குவேன்,
என்கிறார் ஆண்டவர்.
25அழிவைக் கொணரும் மலையே,
மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,
நான் உனக்கு எதிராய் இருப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.
நான் உனக்கு எதிராய்
என் கையை நீட்டுவேன்;
உன்னைப் பாறை முகடுகளினின்று
உருட்டிவிடுவேன்;
உன்னை எரிந்துபோன
மலை ஆக்குவேன்.
26மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,
உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;
நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய்,
என்கிறார் ஆண்டவர்.
27மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;
மக்களினங்கள் நடுவில்
எக்காளம் ஊதுங்கள்;
அதனை எதிர்த்துப் போரிட
மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;
அதனை எதிர்க்குமாறு
அரராத்து, மின்னி, அஸ்கனாசு
ஆகிய அரசுகளுக்கு
அழைப்பு விடுங்கள்;
அதற்கு எதிராய்த்
தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.
வெட்டுக்கிளிக் கூட்டம்போல்
குதிரைகளைக் கொணருங்கள்.
28அதனை எதிர்த்துப் போரிட
மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;
மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,
அதிகாரிகளையும்
அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட
எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.
29மண்ணுலகு நடுநடுங்கி,
வேதனையால் பதைபதைக்கிறது;
பாபிலோன் நாட்டை
மக்கள் குடியிருப்பில்லாத
பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு
அதற்கு எதிராக
ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள்
நிலைக்கும்.
30பாபிலோனின் படைவீரர்கள்
போரிடுவதைக் கைவிட்டார்கள்;
அவர்கள் தங்கள்
கோட்டைகளுக்குள்ளேயே
தங்கியிருக்கிறார்கள்;
அவர்களின் வலிமை
குன்றிப்போயிற்று.
அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.
அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;
அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.
31-32ஓர் அஞ்சற்காரன்
அடுத்த அஞ்சற்காரனைச்
சந்திக்க ஓடுகின்றான்;
ஒரு தூதன் அடுத்த தூதனைச்
சந்திக்க ஓடுகின்றான்;
“நகர் எல்லாப் பக்கங்களிலும்
கைப்பற்றப்பட்டது;
கடவுத் துறைகள் பிடிப்பட்டன;
கோட்டை, கொத்தளங்கள்
தீக்கிரையாயின;
படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்
பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க
அவர்கள் ஓடுகிறார்கள்.
33இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே;
புணையடிக்கும் காலக் களத்துக்கு
மகள் பாபிலோன் ஒப்பாவாள்;
இன்றும் சிறிது காலத்தில்
அதன் அறுவடைக் காலம் வரும்.
34பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
என்னை விழுங்கிவிட்டான்;
அவன் என்னைக்
கசக்கிப் பிழிந்து விட்டான்;
வெறுமையான பாத்திரம்போல்
என்னை ஆக்கிவிட்டான்;
அரக்கன் போன்று
என்னை விழுங்கிவிட்டான்;
என் அருஞ்சுவை உணவுகளால்
தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.
என்னைக் கொப்பளித்துத்
துப்பிவிட்டான்.
35“எனக்கும் என் உறவினர்க்கும்
இழைக்கப்பட்ட கொடுமை
பாபிலோன் மேல் வரட்டும்” என்று
சீயோன் குடிகள் கூறட்டும்;
“என் இரத்தப் பழி
கல்தேயக் குடிகள்மீது
வந்துவிழட்டும்,” என்று
எருசலேம் சொல்லட்டும்.
36எனவே, ஆண்டவர்
இவ்வாறு கூறுகிறார்:
நானே உனக்காக வழக்காடுவேன்;
உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;
அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;
அதன் நீரூற்றுகள்
காய்ந்துபோகச் செய்வேன்.
37பாபிலோன் பாழ்மேடு ஆகும்;
குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.
அது குடியிருப்பாரற்றுப்
பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்
உள்ளாகும்.
38அவர்கள் சிங்கங்களைப்போல்
சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;
சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.
39அவர்கள் கொதித்தெழுந்தபொழுது
நான் அவர்களுக்கு
விருந்து அளிப்பேன்;
அவர்கள் மயங்கி மகிழுமாறு
போதையுறும்வரை
குடிக்கச் செய்வேன்;
அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;
துயில் எழவே மாட்டார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
40செம்மறிக்குட்டிகள்,
ஆட்டுக்கிடாய்கள்,
வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,
நான் அவர்களைக்
கொலைக் களத்திற்குக்
கொண்டுபோவேன்.
41சேசாக்கு இப்படிப்
பிடிபட்டுப் போயிற்றே!
மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம்
இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே!
மக்களினங்கள் நடுவே பாபிலோன்
பாழடைந்துபோனது எவ்வாறு?
42கடலானது பாபிலோன்மீது
கொந்தளித்து வந்துள்ளது;
ஆர்ப்பரிக்கும் அலைகளால்
அது மூடப்பட்டுவிட்டது.
43அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;
அது வறண்ட பாலைநிலமாய்
மாறிவிட்டது;
அந்நாட்டில் குடியிருப்பார்
யாரும் இல்லை;
எவரும் அதனைக்
கடந்து செல்லமாட்டார்.
44நான் பாபிலோனில்
பேலைத் தண்டிப்பேன்;
அது விழுங்கினதை
அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;
மக்களினங்கள் இனி ஒருபோதும்
அங்குக் செல்லமாட்டா;
பாபிலோன் மதிலும்
தரைமட்டமாக்கப்படும்.
45என் மக்களே,
அதனின்று வெளியேறுங்கள்;
ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று
ஒவ்வொருவனும் தன் உயிரைக்
காத்துக்கொள்ளட்டும்.
46உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;
நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்
கலங்காதீர்கள்;
ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;
மறு ஆண்டில்
மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;
நாட்டில் வன்முறை மலியும்;
ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய்
எழுவான்.
47எனவே நாள்கள் வருகின்றன.
அப்பொழுது நான்
பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.
அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;
கொலையுண்டோர் அனைவரும்
அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.
48விண்ணுலகும் மண்ணுலகும்
அவற்றில் உள்ள அனைத்தும்
பாபிலோனைக் குறித்து
மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;
வடக்கினின்று “அழிப்போர்”
அதை எதிர்த்து வருவர்,
என்கிறார் ஆண்டவர்.✠
49பாபிலோனை முன்னிட்டு
மண்ணுலகு எங்கும்
மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;
இஸ்ரயேலில்
கொலையுண்டோரை முன்னிட்டு
இப்போது பாபிலோன்
வீழ்ச்சியுற வேண்டும்.✠
50வாளுக்குத் தப்பியவர்களே,
போய்விடுங்கள், நிற்காதீர்கள்;
தொலையிலிருந்து
ஆண்டவரை நினைவுகூருங்கள்;
உங்கள் இதயத்தில்
எருசலேம் இடம்பெறட்டும்.
51பழிமொழி கேட்டதால்
நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;
ஆண்டவரது இல்லத்தின்
திரு இடங்களுக்குள்
அன்னியர் நுழைந்துவிட்டதால்,
மானக்கேடு எங்கள் முகங்களை
மூடிக்கொண்டது.
52ஆகவே நாள்கள் வருகின்றன,
என்கிறார் ஆண்டவர்.
நான் அதன் சிலைகளைத்
தண்டிப்பேன்;
அந்நாடு எங்கணும்
காயம்பட்டோர் குமுறியழுவர்.
53பாபிலோன் வானம்வரை
தன்னை உயர்த்திக் கொண்டாலும்,
தன் உயர்ந்த கோட்டை
கொத்தளங்களை
வலுப்படுத்திக் கொண்டாலும்,
அழிப்போரை நான்
அதன் மீது அனுப்புவேன்,
என்கிறார் ஆண்டவர்.
54பாபிலோனிலிருந்து
கூக்குரல் கேட்கிறது;
கல்தேயரின் நாட்டிலிருந்து
பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.
55ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;
அதன் பெரும் ஆரவாரத்தை
அடக்குகிறார்;
அவர்களின் அலைகள்
பெரும் வெள்ளம்போல் முழங்கும்.
அவர்கள் உரத்த குரலில்
ஆரவாரம் செய்வர்.
56“அழிப்போன்” பாபிலோன் மீதே
வந்துவிட்டான்.
அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.
அவர்கள் அம்புகள்
முறித்தெறியப்பட்டன.
ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;
அவர் திண்ணமாய்
பதிலடி கொடுப்பார்.
57அதன் தலைவர்கள், ஞானிகள்,
ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,
படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்
நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.
அவர்கள் மீளாத்
துயில் கொள்வார்கள்;
துயில் எழவே மாட்டார்கள்,
என்கிறார் “படைகளின் ஆண்டவர்”
என்னும் பெயர் கொண்ட மன்னர்.
58படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே;
பாபிலோனின் அகன்ற மதில்கள்
முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;
அதன் உயர்ந்த வாயில்கள்
தீக்கிரையாகும்;
மக்களின் உழைப்பு வீணாகும்;
மக்களினங்களின் முயற்சிகள்
தீயோடு தீயாகும்.

59யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை; 60பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார். 61எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி. 62‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல். 63இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு. 64“நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.


50:1-51:64 எசா 13:1; 14:23; 47:1-15. 51:7 திவெ 17:2-4; 18:3. 51:9 திவெ 18:5. 51:13 திவெ 17:1. 51:48 திவெ 18:20. 51:49 எரே 51:10-11; திபா 137:8; திவெ 8:5-6. 51:63-64 திவெ 18:21.



அதிகாரம் 52:1-34

எருசலேமின் வீழ்ச்சி

(2 அர 24:8-25:7)


1செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமுற்றாள் என்பவரே அவன் தாய். 2யோயாக்கிம் செய்தது போல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான். 3ஆண்டவர் எருசலேமையும் யூதாவையும் தம் முன்னிலையினின்று தள்ளிவிடும் அளவுக்கு அவற்றின்மீது சினம் கொண்டார்; செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.

4அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி, அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.✠ 5இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினொன்றாம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. 6நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை. 7அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர்.✠ 8கல்தேயப்படையினர் அரசன் செதேக்கியாவைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று. 9அவர்கள் அரசனைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் இரிப்பலாவில் இருந்த பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான். 10பாபிலோனிய மன்னன் இரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னே கொன்றான்; மேலும், யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான். 11பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்; அவன் சாகும்வரை அவனைச் சிறையில் அடைத்தான்.✠


திருக்கோவில் அழிவுறுதல்

(2 அர 25:8-17)


12பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு, ஐந்தாம் மாதம், பத்தாம் நாளன்று, அவனுக்குப் பணிசெய்து வந்த மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் எருசலேமுக்குள் நுழைந்தான். 13ஆண்டவரின் இல்லத்தையும் அரச அரண்மனையையும் எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் அவன் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினான்.✠ 14மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்து கல்தேயப் படையினர் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர். 15மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான். 16ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.

17ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் தூண்களையும் தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். 18சாம்பல்சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பலிக் கிண்ணங்கள், தூபக்கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்டவெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள். 19மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள், நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள், சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள், தூபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள ஆகிய எல்லாவற்றையும் மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான். 20சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக் கடல், அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள், தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது. 21தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது. 22தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு தூணும் அவ்வாறே செய்யப்பட்டிருந்தது. 23வலைப் பின்னலைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்த மொத்தம் நூறு மாதுளம் பழ வடிவங்களுள், தொண்ணூற்றாறு பக்கவாட்டில் தெரிந்தன.


திருக்கோவில் அழிவுறுதல்

(2 அர 25:18-21:27-30)


24மெய்க்காப்பாளர் தலைவன், தலைமைக் குரு செராயாவையையும் துணைக் குரு செப்பனியாவையும் வாயிற்காவலர் மூவரையும் சிறைப்பிடித்தான். 25போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் எழுவரையும், படைத் தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொது மக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான். 26மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதோன் இவர்களைப் பிடித்து, இரிப்லாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான். 27ஆமாத்து நாட்டின் இரிப்லாவில் பாபிலோனிய மன்னன் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.

28நெபுகத்னேசர் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கை வருமாறு; அவன் ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யூதா நாட்டினர் மூவாயிரத்து இருபத்து மூன்று பேர்; 29அவன் பதினெட்டாம் ஆண்டில் எருசலேமினின்று நாடுகடத்தப்பட்டோர் எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்; 30அவன் இருபத்து மூன்றாம் ஆண்டில் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நாடுகடத்திய யூதா நாட்டினர் எழுநூற்று நாற்பத்தைந்து பேர். ஆக, நாடு கடத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து அறுநூறு.

31யூதாவின் அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எவில்மெரதாக்கு ஆட்சிபெற்ற ஆண்டில், அவன் யூதாவின் அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து, சிறையினின்று விடுவித்தான். 32அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசி, பாபிலோனில் தன்னோடு இருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான். 33எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்; தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டுவந்தான். 34அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக, அவன் சாகுமட்டும், அதாவது அவன் வாழ்நாள் முழுவதும், பாபிலோனிய மன்னன் அவனுக்கு உதவித் தொகையை ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் கொடுத்து வந்தான்.


52:4 எசே 24:2. 52:7 எசே 33:21. 52:11 எசே 12:13. 52:13 1 அர 9:8. 52:17-23 1 அர 7:15-47.