Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

‘எஸ்ரா’ என்னும் இந்நூல் ‘குறிப்பேட்டின்’ தொடர்ச்சியாகும். கி.மு. 538இல் பாரசீக மன்னர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில் இஸ்ரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இஸ்ரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர்; மீண்டும் அங்கு வழிபாடுகள் நடத்தினர். சில ஆண்டுகளுக்குப் பின் எஸ்ராவின் தலைமையில் இஸ்ரயேல் மக்களுள் மற்றொரு பகுதியினர் திரும்பி வந்தனர்.

எஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் அவர் ‘இறையாட்சி’ இஸ்ரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகியவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.

இந்நூலின் பெரும் பகுதி எபிரேயத்திலும், சிறு பகுதி (4:8 -6:18, 7:12-16) அரமேயத்திலும் எழுதப்பட்டுள்ளன.


நூலின் பிரிவுகள்


1. சிறையிருப்பினின்று திரும்பி வருதலின் முதல் பகுதி 1:1 - 2:70
2. கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு அர்ப்பணிக்கப்படல் 3:1 - 6:22
3. சிறையிருப்பினின்று எஸ்ராவின் தலைமையில் திரும்பி வருதலின் இரண்டாம் பகுதி 7:1 - 10:44



அதிகாரம் 1:1-11

யூதர்கள் நாடு திரும்பச் சைரசு மன்னனின் ஆணை


1எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்.✠

2“பாரசீக மன்னர் சைரசு கூறுவது; விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார்.✠ 3அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ — கடவுள் அவர்களோடு இருப்பாராக! — அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்! 4எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்குத் தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப்பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!”

5அப்போது யூதா, பென்யமினுடைய குலத்தலைவர்களும், குருக்களும் லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள். 6அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும் மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.

7நெபுகத்னேசர் எருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரங்களை எடுத்து வந்து தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தான். அவற்றைச் சைரசு மன்னர் திரும்பிக் கொடுத்தார். 8பாரசீக மன்னரான சைரசின் பொருளாளரான மித்ரதாத்தின் கையில் அவற்றை ஒப்படைத்தார். அவர் அவற்றை யூதாவின் தலைவரான சேஸ்பட்சரிடம் எண்ணிக் கொடுத்தார். 9அவற்றின் எண்ணிக்கை பின் வருமாறு; பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. 10பொற் கிண்ணங்கள் முப்பது, வேறு வகையான வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப் பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம். 11பொன், வெள்ளியாலான பாத்திரங்கள் அனைத்தும் ஐயாயிரத்து நானூறு. அவற்றையெல்லாம் சேஸ்பட்சரும், பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களும் கொண்டு வந்தார்கள்.


1:1 எரே 25:11; 29:10. 1:2 எசா 44:28; 2 குறி 36:23.



அதிகாரம் 2:1-70

சிறையிருப்பினின்று திரும்பி வந்தோரின் பட்டியல்

(நெகே 7:4-73)


1அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தினின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.

2செருபாபேலோடு வந்தவர்கள்; ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை; 3பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர். 4செபத்தியாவின் மக்கள் முந்நூற்று எழுபத்திரண்டு பேர். 5ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர். 6ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர். 7ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர். 8சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர். 9சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர். 10பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர். 11பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர். 12அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர். 13அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர். 14பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர். 15அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர். 16எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர். 17பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர். 18யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர். 19ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர். 20கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர். 21பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர். 22நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர். 23அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர். 24அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர். 25கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர். 26இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர். 27மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர். 28பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர். 29நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர். 30மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர். 31மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர். 32ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர். 33லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர். 34எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பதைந்து பேர். 35செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.

36குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர். 37இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர். 38பஸ்கூரின் மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர். 39ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.

40லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர். 41பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர். 42வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.

43கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள். 44கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள், 45இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள், 46காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், அனானின் மக்கள், 47கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள், 48இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள், 49ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள், 50அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள், 51பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள், 52பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள், 53பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள், 54நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே!

55சாலமோன் ஊழியரின் மக்கள்: 56சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள், 57செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள். 58கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.

59மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே; 60தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.

61மற்றும், குருக்களின் புதல்வர்கள்; அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள். 62இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். 63அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார்.✠

64மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது. 65அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர். 66அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து. 67ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.

68குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர். 69அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம்⁕ வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள்.✠ 70குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள்.✠


2:63 எண் 27:21. 2:70 1 குறி 9:2; நெகே 11:3.


2:69 ‘அறுபத்தோராயிரம் திராக்மா’ என்பது எபிரேய பாடம். 2:69 ‘ஐயாயிரம் மினா’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 3:1-13

வழிபாடு மீண்டும் நடைபெறல்


1தம் நகரில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் ஏழாம் மாதம் வந்த போது எருசலேமில் ஒருசேரக் கூடினர். 2அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டநூலில் எழுதியுள்ளபடி எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர்.✠ 3வேற்று நாட்டு மக்களால் அச்சம் தோன்றினும் பலிபீடத்தை அதற்குரிய இடத்திலே அமைத்தார்கள். காலையிலும், மாலையிலும் ஆண்டவருக்கு எரிபலிகள் ஒப்புக்கொடுத்தனர்.✠ 4திருச்சட்ட நூலில் உள்ளபடி கூடாரத்திருவிழாவைக் கொண்டாடினர். ஒவ்வொரு நாளும் முறைமைப்படி அந்நாளுக்குரிய எரிபலிகளைச் செலுத்தினர்.✠ 5அதன்பிறகு ஒவ்வொரு அமாவாசையின்போதும், ஆண்டவரின் எல்லாத் திருவிழாக்களிலும் எரிபலி செலுத்தினர். ஆண்டவருக்குத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக்கொடுக்க விரும்பியவர்கள் ஒப்புக்கொடுத்தார்கள்.✠ 6ஏழாவது மாதத்தில் முதல் நாளிலிருந்து ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தத் தொடங்கினார்கள். ஆனால், ஆண்டவருடைய கோவிலுக்கு இன்னும் அடிக்கல் நாட்டப்படவில்லை.


எருசலேம் கோவில் மீண்டும் கட்டப்படல்


7பாரசீக மன்னர் சைரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியின்படி, கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து யோப்பா கடலுக்குக் கொண்டுவரச் சீதோன், தீர் நகரத்தினருக்கு உணவு, பணம், எண்ணெய் ஆகியன கொடுத்தார்கள். 8அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர். 9ஏசுவா, அவருடைய புதல்வர், உறவினர், கத்மியேல், அவருடைய புதல்வர், யூதாவின் புதல்வர், லேவியரான ஏனிதாதின் புதல்வர், அவர்களுடைய புதல்வர், உறவினர் ஆகியோர் கோவில் வேலையைக் கண்காணிக்க ஒருசேர நின்றனர்.

10கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி குருக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.✠ 11அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து நன்றி கூறி, “அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது” என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.✠ 12முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர். 13நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.


3:2 விப 27:1. 3:3 எண் 28:1-8. 3:4 எண் 29:12-38. 3:5 எண் 28:11-29:39. 3:10 1 குறி 25:1. 3:11 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; திபா 100:5; 106:1; 107:1; 118:1; 136:1; எரே 33:11.



அதிகாரம் 4:1-24

கோவில் கட்டும் வேலை தடைபடல்


1அடிமைத்தனத்திலிருந்து திரும்பியிருந்த மக்கள் இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவருக்குக் கோவில் கட்டுவதை யூதா, பென்யமின் குலங்களின் பகைவர் அறிந்தனர். 2அவர்கள் செருபாபேலையும் குலத்தலைவர்களையும் அணுகி, “நாங்களும் உங்களோடு சேர்ந்து கட்டுகின்றோம். ஏனெனில் உங்கள் கடவுளையே நாங்களும் உங்களைப்போல் வழிபடுகின்றோம். அசீரிய மன்னன் ஏசர்கத்தோன் எங்களை இங்கு கொண்டுவந்த நாளிலிருந்து அவருக்கே பலி செலுத்தி வருகின்றோம்.”✠ 3ஆனால், செருபாபேலும் ஏசுவாவும் இஸ்ரயேலின் எஞ்சிய குலத்தலைவர்களும் அவர்களிடம், “நீங்களும் நாங்களும் சேர்ந்து எங்கள் கடவுளுக்கு கோவில் கட்ட வேண்டியதில்லை. மாறாகப் பாரசீக மன்னரான சைரசு எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்கள் மட்டுமே, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோவில் கட்டுவோம்” என்றனர்.

4ஆதலால், அந்நாட்டு மக்கள், யூதாவின் மக்களது கோவில் கட்டும் பணியைத் தடுத்தனர்; அவர்களை அச்சுறுத்தவும் செய்தனர். 5பாரசீக மன்னரான சைரசு ஆட்சிக்காலம் தொடங்கிப் பாரசீக மன்னரான தாரியு ஆட்சிக்காலம்வரை அரசு அலுவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்து, அவர்களின் திட்டங்களைச் சீர்குலைக்கத் தூண்டினர்.


எருசலேம் புதிப்பிப்பு தடைபடல்


6அகஸ்வேர் ஆட்சியின்போது, அவரது ஆட்சியின் தொடக்கத்திலேயே யூதாவிலும் எருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஒன்று எழுதினர்.✠ 7அர்த்தக்சஸ்தாவின் காலத்தில் பிஸ்லாம், மித்ரதாத்து, தாபேல், அவர்களைச் சார்ந்த மற்றவர்களும், பாரசீக மன்னனான அர்த்தக்சஸ்தாவிற்கு ஒரு மடல் எழுதினர். அம்மடல் அரமேயத்தில் எழுதப்பட்டிருந்ததால், மொழிபெயர்க்கப்பட வேண்டியிருந்தது. 8ஆளுநர் இரகூமும் எழுத்தாளரான சிம்சாயும் எருசலேமுக்கு எதிராக அர்த்தக்சஸ்தா மன்னருக்குக் கீழ்க் கண்டவாறு ஒரு மடல் எழுதினர்; 9ஆளுநர் இரகூம், எழுத்தர் சிம்சாய், அவர்களைச் சார்ந்து நீதிபதிகள், தூதர், ஆலோசகர், அதிகாரிகள் மேலும் எரேக்கியர், பாபிலோனியர், எலாமித்தியரான சூசா நகரின் மக்கள், 10மாட்சியும், மேன்மையும் பொருந்திய ஒஸ்னப்பர் அடிமைதனத்திற்கு இட்டுச் சென்ற மக்களைச் சமாரியா நதியின் அக்கரைப் பகுதியின் ஊர்களிலும் குடியேற்றிய பிற மக்கள் ஆகியோர் எழுதும் மடல்;

11மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்கு அனுப்பிய கடிதத்தின் உட்பொருள் இதுவே: நதியின் அக்கரையில் வாழும் உம் பணியாளராகிய மக்கள் அறிவிப்பது; 12உம்மிடமிருந்து எங்களிடம் வந்த யூதர்கள் எருசலேமுக்குச் சென்று கலகம் மிகுந்த, தீங்கு நிறைந்த அந்நகரைக் கட்டுகின்றார்கள்; மதில் சுவர்களைக் கட்டி முடிக்கின்றார்கள், அடித்தளங்களைப் பழுதுபார்க்கின்றார்கள். 13மேலும் மன்னர் அறிய வேண்டியது; அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதில்கள் கட்டி முடிக்கப்படுமானால், அவர்கள் வரியும், தீர்வையும் தரவோ, கட்டாய வேலை செய்யவோ மாட்டார்கள். எனவே மன்னருக்குரிய வருமானம் குறையும். 14நாங்களோ அரண்மனை உப்பைத் தின்பதாலும், மன்னரின் இழிவைப் பார்ப்பது முறையற்றது என்பதாலும், நாங்கள் மன்னருக்கு இதை அனுப்பித் தெரிவித்துக்கொள்கின்றோம். 15எனவே, உம்முடைய முன்னோரின் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் அதில் அந்நகர் கலகம் மிகுந்த அரசர்களுக்கும், மாநிலங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் கண்டுணர்வீர். அதில் தொன்றுதொட்டுக் கலகங்கள் எழுந்துள்ளன. அதன் பொருட்டே அந்நகர் அழிக்கப்பட்டது. 16ஆகையால் அந்நகர் கட்டப்படுமானால், அதன் மதிற் சுவர்கள் கட்டுதல் நிறைவேறுமானால் பேராற்றுக்கு அக்கரைப் பகுதி உமக்குச் சொந்தமாகாது என்பதை மன்னருக்குத் தெரிவிக்கின்றோம்.

17ஆட்சியாளரான இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் சமாரியாவில் வாழ்ந்தவர்களுக்கும், நதிக்கு அக்கரையில் வாழும் மற்றவர்களுக்கும் சமாதானம் கூறி மன்னர் அனுப்பிய செய்தி பின்வருமாறு; 18“நீங்கள் எங்களுக்கு அனுப்பிய மடல் என்முன் தெளிவாக வாசிக்கப்பட்டது. 19எனவே என்னிடமிருந்து ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டு தொன்றுதொட்டு அந்நகர் மன்னருக்கு எதிராக எழுந்தது என்றும், குழப்பமும் கிளர்ச்சியும் அதில் இருந்து வந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 20மேலும் எருசலேமில் ஆற்றல்மிக்க அரசர்கள் இருந்திருக்கின்றனர்; அவர்கள் பேராற்றுக்கு அக்கரைப் பகுதிகளையெல்லாம் ஆட்சி செய்துள்ளனர்; வரி மற்றும் ஆயம் வசூலித்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 21எனவே நான் மறுஆணை பிறப்பிக்கும் வரை அந்நகரைக் கட்டியெழுப்பாமல் இந்த ஆள்கள் வேலையை நிறுத்துமாறு கட்டளை கொடுங்கள். 22இதைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். மன்னருக்குத் தீங்கு வரும் அளவிற்குத் தீமை ஏன் பெருகவேண்டும்?” 23மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறுத்தும்படி செய்தனர்.


கோவில் வேலை தொடர்தல்


24எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைபட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரை நிறுத்தப்பட்டிருந்தது.


4:2 2 அர 17:24-41. 4:6 எஸ் 1:1. 4:24-5:1 ஆகா 1:1; செக் 1:1.



அதிகாரம் 5:1-17

1அப்பொழுது, இறைவாக்கினர் ஆகாயும், இத்தோ மகன் செக்கரியாவும் — யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்த யூதருக்கு இஸ்ரயேலின் கடவுள் பெயரால் இறைவாக்கு உரைத்தனர். 2அப்போது செயல்தியேல் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் ஏசுவாவும் முன்வந்து, எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினர். கடவுளின் இறைவாக்கினர் அவர்களோடு இருந்து உதவி செய்தனர்.✠

3அக்காலத்தில், பேராற்றின் அக்கரைப்பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும், செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும், அவர்களிடம் வந்து, “இக்கோவிலைக் கட்டியெழுப்பவும் இம்மதில்களைக் கட்டி முடிக்கவும் உங்களுக்கு உத்தரவு கொடுத்தது யார்?” என்று வினவினர். 4மேலும் அவர்கள், “இக்கட்டடத்தைக் கட்டுவோர் யார், யார்?” என்று வினவினர். 5கடவுளின் கருணைக் கண் யூத மூப்பர்கள் மேல் இருந்ததால் இச்செய்தி தாரியுவைச் சென்றடையும்வரை அவர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. எனவே அவர்கள் தாரியுவுக்கு இதைப்பற்றி ஒரு மடல் அனுப்பினார்கள். 6பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவனைச் சார்ந்தவர்களும் பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு அதிகாரியானவர்களும் மடலின் நகல் ஒன்றை மன்னர் தாரியுவுக்கு அனுப்பினர்.

7அவருக்கு அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு: “மன்னர் தாரியுவுக்கு எல்லா நலமும் உரித்தாகுக! 8மன்னர் அறியவேண்டியது; யூதா மாநிலத்திலுள்ள மாபெரும் கடவுளின் கோவிலுக்குச் சென்றிருந்தோம்; பெரும் கற்களால் அது கட்டப்பட்டு வருகிறது. சுவரில் மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வேலை நுணுக்கமாகவும் விரைவாகவும் செய்யப்பட்டு வருகின்றது. 9எனவே அம் மூப்பர்களை நோக்கி, ‘இக்கோவிலைக் கட்டவும், இச்சுவர்களைக் கட்டி முடிக்கவும் உத்தரவு கொடுத்தது யார்?’ என்றோம். 10அவர்கள் தலைவர்கள் யார், யார் என்பதை உமக்கு எழுதி அறிவிக்க அவர்களின் பெயர்களைக் கேட்டோம். 11அவர்கள் எங்களுக்குச் சொன்ன மறுமொழியாவது; ‘விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளானவரின் ஊழியர்கள் நாங்கள். பல ஆண்டுகளுக்குமுன் இஸ்ரயேலின் பேரரசர் ஒருவர் கட்டிய கோவிலைத் தான் மீண்டும் கட்டியெழுப்புகிறோம். 12எம் முன்னோர் விண்ணகக் கடவுளுக்குச் சினமூட்டியதால், அவர் பாபிலோனின் மன்னனும் கல்தேயனுமான நெபுகத்னேசரின் கையில் அவர்களையும், இக்கோவிலையும் ஒப்புவித்தார். அவன் இக்கோவிலை அழித்தான். மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினான்.✠ 13ஆனால் பாபிலோன் மன்னர் சைரசு தம் முதலாம் ஆட்சி ஆண்டில் கடவுளின் இக்கோவிலைக் கட்ட ஆணையிட்டார்.✠ 14மேலும் நெபுகத்னேசர் எருசலேமிலுள்ள கோவிலிருந்து பாபிலோன் கோவிலுக்குக் கொண்டு வந்த திருக்கோவில் பொன், வெள்ளிப் பாத்திரங்களை மன்னர் சைரசு பாபிலோன் கோவிலிருந்து எடுத்தார். ஆளுநராகத் தாம் நியமித்த சேஸ்பட்சர் என்பவரிடம் ஒப்படைத்தார். 15மன்னர் அவரிடம் “இப்பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் எருசலேம் கோவிலில் வை. கடவுளின் கோவில் அது இருந்த இடத்திலேயே கட்டப்படட்டும்” என்றார். 16எனவே சேஸ்பட்சர் திரும்பி வந்து எருசலேமில் கடவுளின் கோவிலுக்கு அடித்தளம் இட்டார். அதனால் அன்று முதல் இன்று வரை இது கட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது முடிவு பெறவில்லை. 17ஆகவே, இப்பொழுது மன்னர் விரும்பினால், பாபிலோனில் உள்ள தமது கருவூலத்தில் தேடிப்பார்க்கட்டும். எருசலேமில் கடவுளுக்குக் கோவில் கட்டச் சைரசு மன்னர் கட்டளை கொடுத்திருக்கின்றாரா என்பதை அறியட்டும். இதைக் குறித்து மன்னர் தம் விருப்பத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுகின்றோம்’.”


4:24-5:1 ஆகா 1:1; செக் 1:1. 5:2 ஆகா 1:12; செக் 4:6-9. 5:12 2 அர 25:8-12; 2 குறி 36:17-20; எரே 52:12-15. 5:13 எஸ்ரா 1:2-11.



அதிகாரம் 6:1-22

சைரசு மன்னரின் கட்டளை ஏடு கண்டுபிடிக்கப்படல்


1பின்பு மன்னர் தாரியு கட்டளையிடவே, பாபிலோனிலுள்ள கருவூலத்தைக் கொண்ட ஏட்டுச் சுருள்கள் வைக்கப்படும் அறையைச் சோதனையிட்டார்கள். 2மேதிய மாநிலத்தில் இருந்த எக்பத்தான அரண்மனையில் ஏட்டுச் சுருள் ஒன்று அகப்பட்டது. அது ஒரு பத்திரம். அதில் எழுதியிருந்ததாவது: 3‘சைரசு மன்னர் அரியணை ஏறிய முதலாம் ஆண்டு, சைரசு மன்னர், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலைப் பற்றி ஆணையொன்று பிறப்பித்தார். எங்கே பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டனவோ அங்கேயே கோவில் கட்டப்படட்டும். அடித்தளம் உறுதியாக்கப்படட்டும். அதன் உயரம் அறுபது முழம், அதன் அகலம் அறுபது முழம் இருக்கட்டும். 4மூன்று வரிசை பெரிய கற்களாலும், மூன்று வரிசை புது மரங்களாலும் அமையட்டும். அதற்குத் தேவையான செலவை அரசு கருவூலத்திலிருந்து கொடுக்கட்டும். 5நெபுகத்னேசர் எருசலேம் கோவிலிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவந்த கோவிலுக்குரிய பொன், வெள்ளிப் பாத்திரங்கள் எருசலேம் கோவிலுக்குத் திரும்பிக் கொடுக்கப்படட்டும். அவை கடவுளின் கோவிலில் முன்பு இருந்த இடத்திலேயே வைக்கப்படட்டும்.’


கோவில் வேலை தொடரத் தாரியு மன்னரின் கட்டளை


6எனவே, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருக்கும் தத்னாய்! செத்தர்போசனாய்! நீங்களும் பேராற்றின் அக்கரைப் பகுதியிலுள்ள உங்களைச் சார்ந்த அதிகாரிகளும், அவ்விடத்தைவிட்டு விலகுங்கள்! 7கடவுளின் கோவிலைக் கட்டும் பணியைத் தடைசெய்யாதிருங்கள். யூதர்களின் ஆளுநரும், யூதர்களின் மூப்பர்களும் கடவுளின் கோவிலை, அது முன்பு இருந்த இடத்தில், மீண்டும் எழுப்பட்டும்.

8யூதர்களின் மூப்பர் கடவுளின் கோவிலைக் கட்டுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி ஆணை பிறப்பிக்கின்றேன். அவர்கள் வேலை தடைப்படாதபடி, அதற்கான முழுச் செலவைப் பேராற்றின் அக்கரைப் பகுதியிலிருந்து வரும் வரியாகிய அரச வருவாயினின்று கொடுக்கவேண்டும். 9மேலும் விண்ணகக் கடவுளுக்கு எரிபலி ஒப்புக் கொடுக்கத் தேவையான இளங்காளைகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவையும் எருசலேமின் குருக்கள் தேவையென்று கேட்கும் கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் நாள்தோறும் தவறாது கொடுக்கப்படட்டும். 10இதனால் குருக்கள் விண்ணகக் கடவுளுக்கு நறுமணப் பலி செலுத்தி, மன்னரும் அவர் தம் மைந்தரும் நீடூழி வாழ வேண்டுமென மன்றாடுவார்களாக! 11எவராவது இக்கட்டளையை மாற்றினால், அவருடைய வீட்டிலுள்ள உத்திரத்தைப் பிடுங்கி அவரை அதில் கழுவேற்றித் தொங்கிவிட வேண்டும். இதனால் அவருடைய வீடு குப்பை மேடாகக்கடவது. இது எனது ஆணை. 12எந்த மன்னராவது, மக்களாவது இவ்வாணையை மாற்றவோ எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலை அழிக்கவோ முற்பட்டால், தமது பெயரை அங்கு விளங்கும்படி நிலைநாட்டிய கடவுள் அவர்களை அழிப்பாராக! தாரியு என்னும் நானே இக்கட்டளையைப் பிறப்பித்தேன். இது சரிவர நிறைவேற்றப்படட்டும்.


கோவில் அர்ப்பணிக்கப்படல்


13பின்பு, பேராற்றின் அக்கரைப் பகுதிக்கு ஆளுநராக இருந்த தத்னாயும் செத்தர்போசனாயும் அவர்களைச் சார்ந்தவர்களும் மன்னர் தாரியு அனுப்பிய ஆணைப்படியே எல்லாவற்றையும் சரிவரச் செய்து முடித்தனர். 14இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்கரியாவும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்; வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்.✠ 15மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது. 16இஸ்ரயேல் மக்கள், குருக்கள், லேவியர், அடிமைத் தனத்திலிருந்து திரும்பிவந்த ஏனையோர், கடவுளின் கோவில் அர்ப்பண விழாவை அக்களிப்புடன் கொண்டாடினார்கள்; 17கடவுளின் கோவில் அர்ப்பண விழாவில் நூறு காளைகளையும், இருநூறு செம்மறிக்கிடாய்களையும், நானூறு செம்மறிக்குட்டிகளையும் ஒப்புக் கொடுத்தார்கள்; இஸ்ரயேல் குலக்கணக்கின்படி பன்னிரண்டு வெள்ளாட்டுக் கிடாய்களை இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பாவம் போக்கும் பலியாகச் செலுத்தினார்கள். 18மோசேயின் நூலில் எழுதியுள்ளபடி எருசலேமில் கடவுளின் பணிக்காகக் குருக்களை அவர்களின் பிரிவின்படியும் லேவியரை அவர்களின் துறைகளின்படியும் அவர்கள் நியமித்தனர்.


பாஸ்காத் திருவிழா


19மேலும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த மக்கள் பாஸ்கா விழாவை முதல் மாதத்தின் பதினான்காம் நாள் கொண்டாடினர்.✠ 20குருக்களும் லேவியரும் ஒன்றிணைந்து தங்களைத் தூய்மைப்படுத்திகொண்டனர். அவர்கள் தூய்மையானார்கள். அடிமைத் தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த எல்லா மக்களுக்காகவும், சகோதரக் குருக்களுக்காகவும், தங்களுக்காகவும் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொன்றனர். 21அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்திருந்த இஸ்ரயேல் மக்களும், மேலும், இஸ்ரயேல் கடவுளை வழிபட வேற்றினத் தீட்டிலிருந்து ஒதுங்கி இவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் பாஸ்கா உணவை உண்டனர். 22புளிப்பற்ற அப்ப விழாவை ஏழு நாள்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். ஏனெனில் ஆண்டவர் அவர்களை மகிழ்வுபடுத்தினார். இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரின் இல்லப் பணியில் அவர்களுக்குத் துணைபுரியமாறு ஆண்டவர் அசீரிய மன்னரின் மனத்தை மாற்றியிருந்தார்.


6:14 ஆகா 1:1; செக் 1:1. 6:19 விப 12:1-20.



அதிகாரம் 7:1-28

எஸ்ரா எருசலேமுக்கு வருதல்


1இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார். 2இந்த எஸ்ரா செராயாவின் மகன்; இவர் அசாரியாவின் மகன்; இவர் இல்கியாவின் மகன்; இவர் சல்லூமின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் அகித்தோப்பின் மகன்; 3இவர் அமாரியாவின் மகன்; இவர் அசரியாவின் மகன்; இவர் மெரயோத்தின் மகன்; 4இவர் செரகியாவின் மகன்; இவர் உசீயின் மகன்; இவர் புக்கீயின் மகன்; 5இவர் அபிசுவாவன் மகன்; இவர் பினகாசின் மகன்; இவர் எலயாசரின் மகன்; இவர் தலைமைக் குருவான ஆரோனின் மகன்.

6எஸ்ரா இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த திருச்சட்டநூலில் வல்லுநர். அவருடைய கடவுளான ஆண்டவரின் அருட்கரம் அவரோடு இருந்ததால், அவருக்குத் தேவையான அனைத்தையும் மன்னர் அவருக்குக் கொடுத்தார். 7அவரோடு இஸ்ரயேல் மக்களில் சிலரும், குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காப்போர், கோவில் ஊழியர் ஆகியோரில் சிலரும், மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஏழாம் ஆட்சி ஆண்டில் எருசலேமிற்குப் புறப்பட்டனர். 8அவர்கள் மன்னரின் ஏழாம் ஆட்சியாண்டில் ஐந்தாம் திங்கள் எருசலேமை அடைந்தார்கள். 9ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்ததால், முதலாம் திங்களின் முதல் நாள் பாபிலோனிலிருந்து புறப்பட்ட அவர் ஐந்தாம் திங்கள் முதல் நாள் எருசலேமை வந்தடைந்தார். 10எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.


அர்த்தக்சஸ்தா எஸ்ராவுக்கு வழங்கிய ஆவணம்


11ஆண்டவரின் கட்டளைகளைச் சார்ந்த காரியங்களிலும், இஸ்ரயேலரின் சட்டங்களிலும் வல்லுநரான குரு எஸ்ராவிடம் மன்னர் அர்த்தக்சஸ்தா வழங்கிய ஆவணத்தின் நகல் பின்வருமாறு;

12“மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது; 13என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிலும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன். 14ஏனெனில், உமது கையிலிருக்கிற உம் கடவுளின் திருச்சட்டத்தின்படி, யூதாவிலும் எருசலேமிலும் விசாரணை செய்யும்படி மன்னராகிய நானும் என் ஆலோசகர் எழுவரும் உம்மை அனுப்புகிறோம். 15மேலும் மன்னராகிய நானும் என் ஆலோசகர்களும் எருசலேமில் வாழும் இஸ்ரயேலின் கடவுளுக்கு நாங்கள் மனமுவந்து ஒப்புக்கொடுத்த பொன்னையும், வெள்ளியையும் எடுத்துச் செல்லவும், 16மற்றும், பாபிலோன் நாடெங்கும் உமக்குக் கிடைக்கும் பொன்னையும் வெள்ளியையும், அவற்றோடு எருசலேமில் உள்ள தங்கள் கடவுளின் இல்லத்திற்காக ஒப்புக் கொடுக்கும் காணிக்கைகளையும் எடுத்துச் செல்லவும் நாங்கள் அனுமதி அளிக்கிறோம். 17இப்பணத்தைகொண்டு காளைகளையும், ஆட்டுக்கிடாய்களையும், செம்மறிக் குட்டிகளையும், தானிய, நீர்மப் படையல்களையும் கவனத்துடன் வாங்கி, எருசலேமில் உள்ள உங்கள் கடவுளின் இல்லப்பீடத்தில் காணிக்கையாக்கும். 18எஞ்சிய வெள்ளியையும், பொன்னையும், உமக்கும் உம் சகோதரர்களுக்கும் நலமெனப்பட்டதை உங்கள் கடவுளின் திருவுளப்படி செய்யும். 19உம் கடவுளின் இல்ல வழிபாட்டுக்காக உம்மிடம் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எருசலேமில் உள்ள உம் கடவுளின் திருமுன் வையும். 20மேலும், உம் கடவுளின் இல்லதிற்கு இதற்குமேல் தேவையானவற்றை மன்னரின் கருவூலத்திலிருந்து நீர் பெற்றுக் கொள்ளலாம். 21மன்னர் அர்த்தக்சஸ்தா என்னும் நான் யூப்ரத்தீசின் அக்கரைப் பகுதியில் உள்ள பொருளாளர்களுக்குக் கட்டளையிடுவது; விண்ணகக் கடவுளின் திருச்சட்ட வல்லுநரும் குருவுமாகிய எஸ்ரா உங்களிடம் கேட்பதையெல்லாம் உடனடியாகக் கொடுக்கவும். 22அவருக்கு நூறு தாலந்து வெள்ளி, நூறு படி கோதுமை, நூறு குடம் திராட்சை இரசம், நூறு குடம் எண்ணெய் ஆகியவற்றைத் தேவையான அளவு கொடுக்கலாம். 23நாட்டை ஆளும் மன்னர்மீதும், அவர் மக்கள் மீதும், விண்ணகக் கடவுள் சினம் கொள்ளாதபடி, அவரின் இல்லத்திற்கு, அவர் கட்டளையிட்ட அனைத்தும் கொடுக்கப்படவேண்டும். 24மேலும், நான் அறிவிப்பது; குருக்கள், லேவியர், பாடகர், வாயிற்காவலர், கோவிற் பணியாளர், கடவுளது இந்த இல்லத்தின் மற்ற ஊழியர் எவர் மீதும் திறையோ, வரியோ, தீர்வையோ சுமத்துவது முறையன்று. 25எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்; திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும். 26மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்; மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும்”.


எஸ்ரா இறைவனைப் புகழ்தல்


27எருசலேமிலுள்ள ஆண்டவரின் இல்லத்தை அழகுபடுத்தும்படி மன்னரைத் தூண்டிய நம் முன்னோரின் கடவுளான ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! 28மன்னர், அவர்தம் ஆலோசகர், ஆற்றல்மிகு அரச அதிகாரிகள் ஆகியோரின் பார்வையில் தயவுகிடைக்கும்படி செய்தவர் அவரே! என் கடவுளான ஆண்டவரின் அருள்கரம் என்னோடு இருந்ததால், நான் திடம் கொண்டு, இஸ்ரயேலின் தலைவர்களை ஒன்று சேர்த்து, அவர்களை என்னோடு அழைத்துவந்தேன்.



அதிகாரம் 8:1-36

சிறையிருப்பினின்று திரும்பியோரின் இரண்டாம் பட்டியல்


1மன்னர் அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்காலத்தில் எஸ்ராவோடு பாபிலோனியாவிலிருந்து வந்தவர்களின் குடும்பத் தலைவர்களது தலைமுறை அட்டவணை அவர்களின் மூதாதையர் மரபின்படி பின்வருமாறு: 2பினகாசின் வழிமரபில் கெர்சோம்; இத்தாமர் வழிமரபில் தானியேல்; தாவீதின் வழிமரபில் ஆற்றூசு; 3பாரோசு வழிமரபில் செக்கனியாவின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு நூற்றைம்பது ஆண்கள்; 4பாகாத்மோவாபு வழிமரபில் செரெகியாவின் மகன் எல்யகோவனாய்; மற்றும் அவரோடு இருநூறு ஆண்கள்; 5சாத்து* வழிமரபில் எகசியேலின் மகன் செக்கனியா; மற்றும் அவரோடு முந்நூறு ஆண்கள்;✠ 6ஆதின் வழிமரபில் யோனத்தானின் மகன் எபேது; அவரோடு ஐம்பது ஆண்கள்; 7ஏலாமி வழிமரபில் அத்தலியாவின் மகன் ஏசாயா; மற்றும் அவரோடு எழுபது ஆண்கள்; 8செபத்தியா வழிமரபில் மிக்கேலின் மகன் செபதியா; மற்றும் அவரோடு எண்பது ஆண்கள்; 9யோவாபு வழிமரபில் எகியேலின் மகன் ஒபதியா; மற்றும் அவரோடு இருநூற்றுப் பதினெட்டு ஆண்கள்; 10பானி வழிமரபில் யோசிப்பியாவின் மகன் செலோமித்து; மற்றும் அவரோடு நூற்றிருபது ஆண்கள்;✠ 11பேபாய் வழிமரபில் பேபாயின் மகன் செக்கரியா; மற்றும் அவரோடு இருபத்தெட்டு ஆண்கள்; 12அஸ்காது வழிமரபில் அக்காற்றானின் மகன் யோகனான்; மற்றும் அவரோடு நூற்றுப்பத்து ஆண்கள்; 13அதோனிக்காம் வழிமரபில் பிற்காலத்தவர்களான எலிப்பலேற்று எவேல், செமாயா; 14மற்றும் அவர்களோடு அறுபது ஆண்கள்; பிக்வாயின் வழிமரபில் உத்தாய், சக்கூர்; மற்றும் அவர்களோடு எழுபது ஆண்கள்.


கோவில் பொறுப்புக்கு லேவியரை எஸ்ரா நியமித்தல்


15அகவா செல்லும் ஆற்றருகில் அவர்களை நான் ஒன்று சேர்த்தேன். அங்கே மூன்று நாள்கள் தங்கியிருந்தோம். மக்களையும் குருக்களையும் பற்றிக் கேட்டறிந்தபோது, அங்கே அவர்களுள் எவரும் லேவியர் இல்லை என்று கண்டேன். 16ஆகையால், எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிபு, எல்நாத்தான், நாத்தான், செக்கரியா, மெசுல்லாம் ஆகிய தலைவர்களையும் யோயாரிபு, எல்நாத்தான் ஆகிய ஞானியரையும் என்னிடம் அழைத்தேன். 17அவர்களைக் கசிப்பியாவில் இருந்த மக்கள் தலைவரான இத்தோவிடம் அனுப்பி வைத்தேன். கசிப்பியாவில் இருந்த இத்தோவிடம் அவருடைய சகோதரர்களான கோவில் பணியாளர்களிடமும், ‘நம் கடவுளின் இல்லத்திற்குப் பணியாளரை அனுப்புங்கள்’ என்று சொல்லும்படி கூறினேன். 18எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால், இஸ்ரயேல் இனத்தவரும் லேவியருமான, மக்லியின் புதல்வருள் புத்திக்கூர்மையுடைய செரேபியாவையும், அவருடைய புதல்வர்களும் உறவினர்களுமாகப் பதினெட்டுப் பேரையும், 19அசபியாவையும், அவரோடு மெராரியின் புதல்வர்களில் ஒருவரான ஏசாயாவையும் அவருடைய சகோதரர்களும், அவர்களின் புதல்வர்களுமான இருபது பேரையும், 20மற்றும் தாவீதும் அவரின் அலுவலர்களும் லேவியர்களுக்கு உதவி செய்யப் பிரித்து வைத்திருந்த இருநூற்று இருபது கோவில் பணியாளரையும் அவர்கள் எங்களிடம் அழைத்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் தம் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.


நோன்பிருந்து மன்றாடுமாறு எஸ்ரா மக்களை அழைத்தல்


21இதன்பின் எங்கள் கடவுள்முன் எங்களையே நாங்கள் தாழ்த்திக் கொண்டு, எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும், எங்கள் எல்லா உடைமைகளுக்கும் பயணம் நலமாக அமையவேண்டுமென்று மன்றாடுமாறு, அகவா ஆற்றருகே நோன்பு ஒன்று அறிவித்தேன். 22ஏனெனில், வழியில் எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி காலாட்படையினரையும், குதிரைப்படையினரையும் எங்களோடு அனுப்பி வைக்குமாறு மன்னனைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது. இதற்குக் காரணம் நாங்கள் மன்னரை நோக்கி, “எங்கள் கடவுளின் அருட்கரம் அவரை நேர்மையுடன் தேடுகிற அனைவர்மீதும் இருக்கின்றது என்றும், அவரைப் புறக்கணிப்பவர்கள் அவரது வலிமைக்கும், சினத்துக்கும் ஆளாவர்கள்” என்றும் சொல்லியிருந்தோம். 23எனவே நாங்கள் நோன்பிருந்து, இதற்காக எங்கள் கடவுளிடம், வேண்டிக் கொண்டோம். அவரும் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளினார்.


கோவில் காணிக்கைகள்


24பின்னர் குருக்களின் தலைவர்கள் பன்னிருவராகிய செரேபியா, அசபியா மற்றும் அவர்களின் உறவினர் பத்துப் பேரைப் பிரித்து, அவர்களிடம் 25அரசரும் அவருடைய ஆலோசகர்களும் அவருடைய அலுவலர்களும் அங்கிருந்த மக்களும் எங்கள் கடவுளின் இல்லத்திற்குக் காணிக்கையாக அளித்திருந்த வெள்ளி, தங்கம், பாத்திரங்கள் யாவற்றையும் நிறுத்துக் கொடுத்தேன். 26அவர்களிடம் நிறுத்துக் கொடுத்தவை: இருபத்தாறு ‘டன்’⁕ நிறைவுள்ள வெள்ளி; நாலாயிரம் கிலோகிராம் நிறைவுள்ள வெள்ளிப் பாத்திரங்கள்; ஆயிரம் பொற்காசு மதிப்புள்ள இருபது பொற் கிண்ணங்கள்;✠ 27பொன்போன்று மெருகேற்றப்பட்ட இரு வெண்கலப் பாத்திரங்கள். 28பின்பு, அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்; இந்தப் பாத்திரங்களும் அர்ப்பணிப்பட்டவையே. இந்த வெள்ளியும் பொன்னும் உங்கள் மூதாதையரின் கடவுளுக்கு அளிக்கப்பட்ட தன்னார்வக் காணிக்கைகள். 29நீங்கள் எருசலேமிலுள்ள குருக்களின் தலைவர்கள், லேவியர், இஸ்ரயேல் குலத்தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில், ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் ஒப்படைக்கும்வரை இவற்றைப் பாதுகாத்து வாருங்கள்’ என்று சொன்னேன். 30எனவே குருக்களும், வேலியரும் நிறுக்கப்பட்ட வெள்ளி, பொன்பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள நம் கடவுளின் இல்லதிற்குக் கொண்டுபோகும்படி பெற்றுக் கொண்டனர்.


எருசலேமுக்குத் திரும்புதல்


31பிறகு முதல் திங்கள் பன்னிரண்டாம் நாள், அகவா ஆற்றைவிட்டு எருசலேமுக்குப் புறப்பட்டோம். எங்கள் கடவுளின் அருட்கரம் எங்களோடு இருந்ததால் போகும் வழியில் நாங்கள் எங்கள் பகைவர் கையினின்றும் திருடர் கையினின்றும் பாதுகாக்கப்பட்டோம். 32நாங்கள் எருசலேமை அடைந்து அங்கு மூன்று நாள்கள் தங்கினோம். 33நான்காம் நாள், நம் கடவுளின் இல்லத்தில் உரியாவின் மகனும் குருவுமாகிய மெரமோத்தின் கையில் வெள்ளியும் பொன்னும் பாத்திரங்களும் நிறுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவரோடு பினகாசின் மகன் எலயாசரும், லேவியரான ஏசுவாவின் மகன், யோசபாத்தும் பின்னூயின் மகன் நோவதியாவும் இருந்தனர். 34அவற்றின் எண்ணிக்கையும், எடையையும் அன்று அவர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள். 35அப்பொழுது அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்து, திரும்பி வந்தவர்கள், இஸ்ரயேலின் கடவுளுக்கு எரிபலிகள் செலுத்தினர்; இஸ்ரயேலின் எல்லா மக்களுக்காகவும் பன்னிரு இளங் காளைகளையும் தொண்ணூற்றாறு செம்மறிக் கிடாய்களையும், எழுபத்தேழு ஆட்டுக் குட்டிகளையும் பாவம் போக்கும் பலியான பன்னிரு வெள்ளாட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாக ஒப்புக் கொடுத்தனர். 36மேலும் அவர்கள் மன்னரின் ஆவண மடல்களைச் சிற்றரசர்களிடமும், யூப்பிரத்தீசின் அக்கரையில் இருந்த ஆளுநர்களிடமும் கொடுத்தனர். இவர்கள் மக்களுக்கும் கடவுளின் இல்லத்திற்கும் உறுதுணையாய் இருந்தனர்.


8:5 கிரேக்க பாடம். 8:10 கிரேக்க பாடம்.


8:26 ‘அறுநூற்று ஐம்பது தாலந்து’ என்பது எபிரேய பாடம். 8:26 ‘ஆயிரம் திராக்மா’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 9:1-15

வேற்றினத்தாரோடு கலப்புமணம் செய்தல் கண்டிக்கப்படல்


1இவைகளுக்குப் பின்னர், அதிகாரிகள் என்னிடம் வந்து, ‘இஸ்ரயேல் மக்களும் குருக்களும் லேவியரும், கானானியர், இத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எமோரியர் ஆகிய நாட்டினரின் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவில்லை. 2ஏனெனில், அவர்கள் தங்களுக்கும் தங்கள் புதல்வர்களுக்கும் அவர்களுடைய புதல்வியரை மனைவியராக எடுத்துக்கொண்டனர். எனவே புனித இனம் வேற்று நாட்டு மக்களோடு கலக்கப்பட்டது. இந்தப் பற்றுறுதியின்மைக்கு அதிகாரிகளும், ஆளுநர்களுமே முதற்காரணம் ஆவர்’ என்று கூறினார்கள். 3இதைக் கேட்டவுடன், நான் என் ஆடையையும், மேலுடையையும் கிழித்தேன்; மேலும் தலைமுடியையும் தாடியையும் பிய்த்துக் கொண்டு திகைப்புற்று உட்கார்ந்தேன். 4இஸ்ரயேலின் கடவுளின் வார்த்தைகளுக்கு அஞ்சிய யாவரும், அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தவர்களின் குற்றத்திற்காக என்னைச் சூழ்ந்து நின்றனர். நானோ மாலைப்பலி நேரம்வரை செயலற்று அமர்ந்திருந்தேன்.

5மாலைப்பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து நான் கூறியது: 6“கடவுளே; உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்கு மேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டு விட்டன. 7எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும் அடிமைத்தனத்திற்கும் கொள்ளைக்கும் வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்பவிக்கப்பட்டோம். 8ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். 9நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுதுபார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளினீர்! 10ஆயினும், எம் கடவுளே! இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும் நாங்கள் இப்பொழுது என்ன சொல்லமுடியும்? நாங்கள் உம் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டோமே! 11நீர் உம் அடியார்களாகிய இறைவாக்கினர் மூலம், ‘நீங்கள் குடியேறவிருக்கிற நாடு வேற்றினத்தாரின் தீட்டினாலும், பிற நாடுகளின் தீட்டினாலும் அந்நாட்டை ஒருமுனை தொடங்கி மறுமுனை வரை மாசுபடுத்தியுள்ள மக்களின் அருவருப்புகளாலும் தூய்மை இழந்திருக்கின்றது. 12எனவே நீங்கள் வலிமை பெறவும் நாட்டின் நலன்களை அனுபவிக்கவும், அந்நாட்டை என்றென்றும் உங்கள் மக்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமாயின் வேற்றினத்தாருடன் பெண் கொள்வதும் கொடுப்பதும் இருத்தலாகாது. மேலும் அவர்களின் நல்லலுறவையும் நலத்தையும் என்றுமே நாடாலாகாது’ என்று நீர் கட்டளையிட்டிருப்பதைப் புறக்கணித்தோம்.✠ 13எம் தீச்செயல்களினாலும் எமது பெரும் பாவத்தினாலுமே இவையெல்லாம் எங்கள்மீது வந்தன. ஆனால் எங்கள் கடவுளாகிய நீர் எங்கள் குற்றத்திற்கு ஈடாக தண்டியாமல் எங்களை எஞ்சியிருக்கச் செய்தீர். 14நாங்கள் மீண்டும் உமது கட்டளைகளை மீறுவோமா? இவ்வாறு வெறுப்பானவைகளைச் செய்கின்ற மக்களோடு இனி கலப்பு மணம் செய்து கொள்வோமா? அப்படிச் செய்தால், எஞ்சியுள்ள எங்களுள் எவரும் இல்லாதபடி, யாரும் தப்பாதபடி, நீர் எம்மை அழிக்கும்வரை எம்மீது சினம் கொள்வீர் அன்றோ? 15இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர். ஏனெனில், இன்று நாங்களே எஞ்சியுள்ளோராய் விடப்பட்டிருக்கிறோம். இதோ நாங்கள் உம்முன் குற்றவாளிகளாய் இருக்கிறோம். இதனால் எங்களில் யாரும் உம்முன் நிற்க இயலாது.”


9:12 விப 34:11-16; இச 7:1-5.



அதிகாரம் 10:1-44

கலப்புத் திருமணத்தை நிறுத்தத் திட்டம்


1இவ்வாறு, எஸ்ரா கடவுளின் இல்லத்தின்முன் விழுந்து மன்றாடி விண்ணப்பித்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது ஆண், பெண், குழந்தைகள் உள்பட இஸ்ரயேல் மக்களின் பெருங்கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு கூக்குரலிட்டு அழுதனர். 2அப்பொழுது ஏலாமியருள் ஒருவரான எகியேல் மகன் செக்கனியா எஸ்ராவை நோக்கி, “நாங்கள் கடவுளுக்கு எதிராக நேர்மையற்றவர்களாய் நடந்து கொண்டோம். ஏனெனில் இந்நாட்டின் மக்களான வேற்றினப் பெண்களை மணந்தோம். ஆயினும், இஸ்ரயேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு. 3ஆகவே, என் தலைவரின் அறிவுரைக்கும் கடவுளின் கட்டளைகளுக்கும் அஞ்சி நடப்போரின் விருப்பத்திற்கும் ஏற்ப, அப்பெண்கள் அனைவரையும் அவர்களின் பிள்ளைகளையும் அகற்றி விடுவோம் என்று நம் கடவுளோடு உடன்படிக்கை செய்வோம். திருச்சட்டத்திற்கு ஏற்ப இது செய்யப்படட்டும். 4எழுந்திரும்! இது உம் கடமை. நாங்கள் உம்மோடு இருக்கின்றோம். இதை மனஉறுதியுடன் செய்யும்” என்றார். 5“எஸ்ரா எழுந்து, குருக்களின் தலைவர்களையும், லேவியர்களையும், எல்லா இஸ்ரயேல் மக்களையும் இவ்வாறு வாக்குறுதி அளிக்கச் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்தனர். 6பின்பு, எஸ்ரா கடவுளது இல்லத்தின் முகப்பினின்று எழுந்தார்; எலியாசிபின் மகனான யோகனானின் அறையினுள் சென்றார். அங்கே உணவு உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தார். ஏனெனில் அடிமைத்தனத்திலிருந்து திரும்பிவந்தவர்களின் நேர்மையின்மையின் பொருட்டுப் புலம்பி அழுது கொண்டிருந்தார்.

7அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்திருந்த மக்கள் அனைவரும் எருசலேமில் கூடவேண்டுமென்றும், 8அவர்களுள் எவராவது மூன்று நாள்களுக்குள் வராமல் இருந்தால், மக்கள் தலைவர்கள் பெரியோர் ஆகியோரின் அறிவரைப்படி, அவனுடைய உடைமைகள் பறிமுதல் செய்யப்படவேண்டும் என்றும் அடிமைத்தனத்திலிருந்து வந்தவர்களின் கூட்டத்திலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படவேண்டும் என்றும் யூதாவிலும் எருசலேமிலும் அறிவிக்கப்பட்டது. 9எனவே, யூதா, பென்யமின் குலத்தார் அனைவரும் எருசலேமில் மூன்று நாள்களுக்குள் அதாவது, ஒன்பதாம் மாதம், இருபதாம் நாளன்று ஒன்று கூட்டப்பட்டனர். மக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்டதன் காரணமாகவும், மழையின் காரணமாகவும் கடவுளது இல்லத்தின் வளாகத்தில் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

10குரு எஸ்ரா எழுந்து அவர்களைப் பார்த்துக் கூறியது: “நீங்கள் வேற்றினப் பெண்களை மணந்ததால் நேர்மையற்றவர்களாகி, இஸ்ரயேலின் பாவத்தைப் பெருகச் செய்துள்ளீர்கள். 11எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள்”.

12அப்பொழுது குழுமியிருந்த அனைவரும் உரத்த குரலில் கூறியது: “நீர் சொல்வதே சரி! உமது வார்த்தையின்படியே நாங்கள் செய்வோம். 13ஆயினும் இதனை ஓரிரு நாள்களில் செய்ய இயலாது; ஏனெனில் மக்கள் மிகுதியாக உள்ளனர். இது மாரிக்காலமாக இருப்பதால், வெளியே நிற்க முடியவில்லை. மேலும், இக்காரியத்தில் எங்களுள் பாவம் செய்தோர் பலர். 14எனவே, எல்லா மக்களின் சார்பில் தலைவர்கள் இதன் காரணமாக மூண்ட நம் கடவுளின் கோபக்கனல் நம்மைவிட்டு விலகும்வரை தங்கியிருக்கட்டும், நம் நகர்களில் வாழும் வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரும் குறித்த காலத்தில் வரட்டும்; அவர்களோடு ஒவ்வொரு நகரத்தின் பெரியோர்களும், அதன் நீதிபதிகளும் வரட்டும்.” 15அசாவேலின் மகனான யோனத்தானும், திக்வாவின் மகன் யாகிசியாவுமே இதை எதிர்த்து நின்றனர். மெசுல்லாமும் லேவியரான சபத்தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தனர்.

16அடிமைத்தனத்தலிருந்து திரும்பி வந்திருந்தோர் அவ்வாறே செய்தனர். குரு எஸ்ராவும் மக்கள் தலைவர்களும் அவர்களின் மூதாதையரின் வழிமரபின்படியும், ஒவ்வொருவரின் பெயர் வரிசைப்படியும், பத்தாம் மாதம் முதல் நாள் இதைப்பற்றி விசாரணை செய்ய அமர்ந்தனர். 17முதல் மாதம் முதல் நாளிலே வேற்றினப் பெண்களை மணந்தவர்கள் அனைவரையும் விசாரித்து முடித்தனர்.


வேற்றினப் பெண்களை மணந்தோர்


18குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்: ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர். 19அவர்கள் தம் மனைவியரை அனுப்பி விட வாக்களித்தனர்; தங்கள் குற்றநீக்கப் பலியாக ஒரு கிடாயைச் செலுத்தினர். 20இம்மேயின் வழிமரபில், அனானி, செபதியா ஆகியோர். 21ஆரிம் வழிமரபில் மாசேயா, எலியா, செமாயா, எகியேல், உசியா ஆகியோர்.

22பஸ்கூர் வழிமரபில் எலியேனாய், மாசேயா, இஸ்மயேல், நத்தனியேல், யோசபாது, எலாசா ஆகியோர். 23லேவியரில், யோசபாது, சிமயி, கெலித்தா என்ற கேலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் ஆகியோர். 24பாடகரில் எலியாகிபு; வாயிற்காவலரில், சல்லூம், தேலம், ஊரி, ஆகியோர். 25மற்ற இஸ்ரயேலருள் பாரோகின் வழிமரபில் இரமியா, இசியா, மல்கியா, மிய்யாமின், எலியாசர், மல்கியா, பெனாயா ஆகியோர். 26ஏலாம் வழிமரபில், மத்தானியா, செக்கரியா, எகியேல், அப்தி, ஏரேமோத்து, எலியா ஆகியோர். 27சத்தூ வழிமரபில், எலியேனாய், எலியாகிபு, மத்தனியா, எலிமோது, சாபாது, அசிசா ஆகியோர். 28பேபாய் வழிமரபில் யோகனான், அனனியா, சபாய், அத்லாய் ஆகியோர். 29பானி வழிமரபில், மெசுல்லாம், மல்லூக்கு, அதாயா, யாசூபு, செயால், எரேமேத்து ஆகியோர். 30பாகாத்மோவாபு வழிமரபில், அத்னா, கெலால், பெனாயா, மாசேயா, மத்தனியா, பெசலேல், பின்னூய், மனாசே ஆகியோர். 31ஆரிம் வழிமரபில், எலியேசர், இசிய்யா, மல்கியா, செமாயா, சிமியோன், 32பென்யமின், மல்லூக்கு, செமரியா ஆகியோர். 33ஆசூம் வழிமரபில், மத்தனாய், மத்தாத்தா, சாபது, எலிப்பலேற்று, எரேமாய், மனாசே, சிமயி ஆகியோர். 34பானி வழிமரபில், மாகதாய், அம்ராம், ஊவேல், 35பெனாயா, பேதயா, கெலூகி, 36வானியா, மெரேமோத்து, எலியாசிபு, 37மத்தனியா, மத்தனாய், யகசு ஆகியோர். 38பின்னூய் வழிமரபில், சிமயி, 39செலேமியா, நாத்தான், அதாயா, 40மாக்னதபாய், சசாய், சாராய், 41அசரியேல், செலேமியா, செமரியா, 42சல்லூம், அமரியா, யோசேப்பு ஆகியோர். 43நெபோ வழிமரபில், எயியேல், மத்தித்தியா, சாபது, செபினா, யாதாய், யோவேல், பெனாயா ஆகியோர். 44வேற்றினப் பெண்களை மணந்திருந்த இவர்கள் அனைவரும் இப்பெண்களையும் அவர்களிடமிருந்து பிறந்த பிள்ளைகளையும் விலக்கிவிட்டனர்.