Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

கி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செப்பனியா இறைவாக்கு உரைத்தார். அவர் இறைவாக்கு உரைத்த காலம் யோசியா அரசன் கி.மு. 621இல் செயல்படுத்திய சமயச் சீர்திருத்தத்திற்கு முன்னைய பத்தாண்டாக இருக்கலாம்.

ஏனைய இறைவாக்கு நூல்களில் மிகுதியாகக் காணப்படும் கருத்துகளையே இந்நூலும் கொண்டுள்ளது: அழிவின் நாள் நெருங்கிவிட்டது. அப்பொழுது யூதா வேற்றுத் தெய்வங்களை வழிபட்டதற்காகத் தண்டிக்கப்படும். எருசலேம் அழிவுற்றாலும் மீண்டும் ஒரு நாள் முன்னைய நன்னிலைக்கு உயர்த்தப்படும்; பணிவும் நேர்மையும் மிக்க மக்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.


நூலின் பிரிவுகள்


1. ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் 1:1 - 2:3
2. வேற்றினத்தாரின் அழிவு 2:4 - 15
3. எருசலேமின் அழிவும் மீட்பும் 3:1 - 20



அதிகாரம் 1:1-18

1ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியின் மைந்தர் ஆவார்.✠


ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள்


2“மண்ணுலகில் எதுவும் இராதவாறு
3அனைத்தையும் அழித்துவிடுவேன்,”
என்கிறார் ஆண்டவர்.
“மனிதரையும் விலங்குகளையும்
அழிப்பேன்;
வானத்துப் பறவைகளையும்
கடல் மீன்களையும் ஒழிப்பேன்;
கொடியவர்களை
இடறிவிழச் செய்வேன்;
மனிதஇனம்
மண்ணுலகில் இல்லாதவாறு
அற்றுப் போகச் செய்வேன்,”
என்கிறார் ஆண்டவர்.
4யூதாவுக்கும் எருசலேமில் வாழும்
அனைவர்க்கும் எதிராக
நான் கையை ஓங்குவேன்.
பாகால் வழிபாட்டில்
எஞ்சியிருப்பதையும்
அந்தச் சிலை வழிபாட்டு
அர்ச்சகர்களின் பெயரையும்
அழித்து விடுவேன்.
5வீட்டின் மேல்தளத்திலிருந்து
வான் படைகளை வணங்குவோரையும்,
ஆண்டவரை வணங்கி
அவர் பெயராலும்
மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும்
ஆணையிடுவோரையும்
ஒழித்து விடுவேன்.
6ஆண்டவரைவிட்டு விலகிச்
செல்வோரையும்
ஆண்டவரைத் தேடாது,
அவரை அறிய முயலாது இருப்போரையும்
அழித்துவிடுவேன்.
7தலைவராகிய ஆண்டவர் திருமுன்
மௌனமாயிருங்கள்;
ஏனெனில் ஆண்டவரின் நாள்
அண்மையில் உள்ளது;
பலி ஒன்றை
ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்;
தாம் அழைத்தவர்களை
அவர் புனிதப்படுத்தியுள்ளார்
8ஆண்டவரது பலியின் நாளில்
தலைவர்களையும்
அரசனுடைய புதல்வர்களையும்
வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள
அனைவரையும் தண்டிப்பேன்.
9வாயிற்படியை மிதிக்காமல்
தாண்டி வந்து,
தங்கள் தலைவனின் வீட்டை
வன்செயலாலும் வஞ்சனையாலும்
நிரப்புகிறவர்களை
அந்நாளில் தண்டிப்பேன்.
10ஆண்டவர் கூறுகின்றார்:
“அந்நாளில் எருசலேமின்
மீன் வாயிலிருந்து கூக்குரலும்,
புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும்,
குன்றுகளிலிருந்து
இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.
11நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே!
கதறி அழுங்கள்;
ஏனெனில், வணிகர் அனைவர்க்கும்
அழிவு வருகின்றது;
பணம் படைத்தவர் அனைவரும்
வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்;
12அக்காலத்தில்,
நான் கையில் விளக்கேந்திக் கொண்டு
எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்;
‘ஆண்டவர் நன்மையும் செய்யார்;
தீமையும் செய்யார்’ என்று
தங்கள் உள்ளங்களில்
சொல்லிக் கொண்டு
பஞ்சணையில் சாய்ந்து
கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.
13அவர்களுடைய உடைமைகள்
கொள்ளையடிக்கப்படும்;
வீடுகள் பாழாக்கப்படும்;
அவர்கள் வீடுகள்
கட்டிக்கொள்வார்கள்;
ஆனால் அவற்றில்
குடியிருக்கப்போவதில்லை;
திராட்சைத் தோட்டங்களைப்
பயிர் செய்தாலும்,
அவற்றின் இரசத்தைக்
குடிக்கப் போவதில்லை.”
14ஆண்டவரின் மாபெரும் நாள்
அண்மையில் உள்ளது;
அது விரைந்து
நெருங்கிக் கொண்டிருக்கிறது;
ஆண்டவரது நாளின் பேரொலி
கசப்பை உண்டாக்கும்;
மாவீரனையும் கலங்கி
அலறும்படி செய்யும்.
15அந்த நாள் கடும் சினத்தின் நாள்;
துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;
பேரழிவும் பேரிழப்பும்
கொண்டு வரும் நாள்;
இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;
16அரண்சூழ் நகர்களுக்கும்
உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக
எக்காளமும் போர் முழக்கமும்
கேட்கும் நாள்.
17மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்;
பார்வையற்றோர்போல்
அவர்கள் தடுமாறுவர்;
ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப்
பாவம் செய்தனர்;
அவர்களது இரத்தம்
புழுதி போல் கொட்டப்படும்;
சதைப்பிண்டம்
சாணம்போல் எறியப்படும்.
18ஆண்டவரது சினத்தின் நாளில்,
அவர்களது வெள்ளியும் பொன்னும்
அவர்களைக் காப்பாற்றா.
உலகம் முழுவதும்
அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும்.
உலகில் வாழும் அனைவரையும்
அவர் நொடிப்பொழுதில்
முற்றிலும் அழித்துவிடுவார்.


1:1 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.



அதிகாரம் 2:1-15

மனந்திரும்ப அழைப்பு


1பண்புகெட்ட இனமே!
பகுத்தறிவோடு நடந்துகொள்.
2பதரைப்போல் நீங்கள்
தூற்றப்படுமுன்னே,
ஆண்டவரது கடும் சினம்
உங்கள் மேல் விழுமுன்னே,
ஆண்டவரது சினத்தின் நாள்
உங்கள்மேல் விழுமுன்னே,
3நாட்டிலிருக்கும் எளியோரே!
ஆண்டவரின் கட்டளையைக்
கடைப்பிடிப்போரே!
அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்;
நேர்மையை நாடுங்கள்;
மனத்தாழ்மையைத் தேடுங்கள்;
ஆண்டவரது சினத்தின் நாளில்
ஒரு வேளை உங்களுக்குப்
புகலிடம் கிடைக்கும்.


வேற்றினத்தாரின் அழிவு


4காசா குடியற்றுப்போகும்;
அஸ்கலோன் பாழடைந்துபோகும்;
அஸ்தோது நண்பகலில்
விரட்டியடிக்கப்படும்;
எக்ரோன் வேரோடு
பிடுங்கியெறியப்படும்.
5கடற்கரையில் வாழும்
இனத்தாராகிய கெரேத்தியரே!
உங்களுக்கு ஐயோ கேடு!
ஆண்டவரின் வாக்கு
உங்களுக்கு எதிராய் உள்ளது;
பெலிஸ்தியரின் நாடே! கானானே!
எவனும் குடியிராதபடி
நான் உன்னை அழித்து விடுவேன்.
6இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு
இடையரின் குடில்களுக்கும்
ஆடுகளின் பட்டிகளுக்குமே
ஏற்றதாகும்.
7அந்தக் கடற்கரை
யூதாவின் குடும்பத்தவருள்
எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்;
அங்கே அவர்கள்
தங்கள் ஆடுகளை மேய்த்து,
மாலையில் அஸ்கலோன் வீடுகளில்
படுத்திருப்பார்கள்;
ஏனெனில்
அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்
அவர்கள்மீது அக்கறை கொண்டு,
முன்னைய நன்னிலைக்கு
அவர்களை உயர்த்துவார்.
8மோவாபின் பழிப்புரைகளையும்
அம்மோனியரின் வசைமொழிகளையும்
நான் கேட்டேன்;
அவர்கள் என் மக்களை இழித்துரைத்து,
அவர்களின் நாட்டு
எல்லைகளைக் குறித்து
வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.
9ஆதலால், படைகளின் ஆண்டவரும்,
இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய
நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்;
மோவாபு சோதோமைப்போல் ஆகும்;
அம்மோனியர்
கொமோராவைப்போல் ஆவர்;
இது உறுதி.
இந்நாடுகள்
காஞ்சொறி படரும் காடாகவும்,
உப்புப் பள்ளம் நிறைந்த
பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும்.
என் மக்களில் எஞ்சியோர்
அவர்களைக் கொள்ளையடிப்பர்;
என் மக்களுள் தப்பியோர்
அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர்.✠
10அவர்களுடைய இறுமாப்புக்குக்
கிடைக்கும் பயன் இதுவே;
ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய
மக்களுக்கு எதிராக
அவர்கள் பழித்துரைத்தார்கள்;
வீம்பு பேசினார்கள்.
11ஆண்டவர் அவர்களை
அச்சமுறச் செய்வார்;
நாட்டின் தெய்வங்களை எல்லாம்
ஆற்றல் குன்றிப்போகச் செய்வார்.
வேற்றினத்தார் அனைவரும்
அவரவர்தம் தீவுகளில்
இருந்து கொண்டு
அவரையே வணங்குவர்.
12எத்தியோப்பியரே!
நீங்களும் எனது வாளால்
வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.✠
13வடதிசைக்கு எதிராகத்
தம் கையை ஓங்கி,
ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்;
நினிவே நகரைப் பாழடையச் செய்து,
வறண்ட பாலைநிலமாக்குவார்.
14அங்கே மந்தைகளும்
எல்லாவகை விலங்குகளும்
படுத்துக் கிடக்கும்;
தூண்களின் உச்சியில்
கூகையும் சாக்குருவியும்
தங்கியிருக்கும்;
பலகணியில் அமர்ந்தவாறு
ஆந்தை அலறும்;
நிலைக்கதவின்மேல் இருந்தவாறு
காகம் கரையும்;
கேதுரு மர வேலைப்பாடுகள்
அழிக்கப்படும்.
15“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்று
கவலையின்றிக் களிப்புற்றிருந்த
நகர் இதுதானோ?
இப்பொழுது அது
காட்டு விலங்குகளின் குகையாகி
எவ்வளவு பாழாய்ப் போயிற்று!
அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும்
சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.


2:4-7 எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7. 2:8-11 எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15. 2:9 தொநூ 19:24. 2:12 எசா 18:1-7. 2:13-15 எசா 10:5-34; 14:24-27; நாகூ 1:1-3:19.



அதிகாரம் 3:1-20

எருசலேமின் பாவமும் மீட்பும்


1கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும்
மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு
ஐயோ கேடு!
2எந்தச் சொல்லுக்கும் அவள்
செவி சாய்ப்பதில்லை;
கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை;
ஆண்டவர்மேல் அவள்
நம்பிக்கை வைப்பதில்லை;
தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.
3அந்நகரின் தலைவர்கள்
கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்;
அதன் நீதிபதிகள்,
மாலையில் கிடைப்பதை
காலைவரை வைத்திராத ஓநாய்கள்.
4அதன் இறைவாக்கினர்
வீண் பெருமை பேசும்
வஞ்சகமிக்க மனிதர்;
அதன் குருக்கள்
புனிதமானதைக் களங்கப்படுத்தித்
திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.
5அதனுள் இருக்கும் ஆண்டவரோ
நீதியுள்ளவர்;
அவர் கொடுமை செய்யாதவர்;
காலைதோறும் அவர்
தமது தீர்ப்பை வழங்குகின்றார்;
வைகறைதோறும் அது
தவறாமல் வெளிப்படும்;
ஆனால் கொடியவனுக்கு
வெட்கமே இல்லை.
6வேற்றினத்தாரை நான்
வெட்டி வீழ்த்தினேன்;
அவர்களுடைய கோட்டைகளைத்
தகர்த்தெறிந்தேன்;
அவர்களுடைய தெருக்களை
வெறுமையாக்கினேன்;
அவற்றில் நடந்துசெல்பவர்
எவருமில்லை;
யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி
அவர்களுடைய நகர்கள்
பாழடைந்து போயின.
7“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்;
எனது கண்டிப்புரையை
ஏற்றுக் கொள்வாய்;
நான் வழங்கிய
தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம்
நீ மறக்கமாட்டாய்” என்று
நான் எண்ணினேன்;
அவர்களோ தங்கள் செயல்களைச்
சீர்கேடாக்க
இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.
8ஆதலால் ஆண்டவர்
இவ்வாறு கூறுகின்றார்:
“நான் குற்றம் சாட்டுவதற்கு
எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு;
வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து,
அரசுகளையும் ஒன்று திரட்டி,
என் கடும்சினத்தையும்
கோபத்தீயின் கொடுமை முழுவதையும்,
அவர்கள் மேல் கொட்டிவிடத்
திட்டமிட்டுள்ளேன்;
ஏனெனில், என் வெஞ்சினத் தீக்கு
உலகெல்லாம் இரையாகும்.
9அக்காலத்தில் நான்
மக்களினங்களுக்குத்
தூய நாவினை அருள்வேன்;
அப்போது அவர்கள் அனைவரும்
ஆண்டவரின் பெயரால்
மன்றாடி ஒருமனப்பட்டு
அவருக்குப் பணிபுரிவார்கள்.
10எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும்
அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் —
சிதறுண்ட என் மக்கள் —
எனக்குக் காணிக்கை
கொண்டு வருவார்கள்.
11எனக்கு எதிராக எழுந்து
நீ செய்த குற்றங்களை முன்னிட்டு
அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்;
ஏனெனில், அப்பொழுது
இறுமாப்புடன் அக்களித்திருப்போரை
உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்;
இனி ஒருபோதும் எனது திருமலையில்
செருக்கு அடையமாட்டாய்.
12ஏழை எளியோரை உன் நடுவில்
நான் விட்டுவைப்பேன்;
அவர்கள் ஆண்டவரின் பெயரில்
நம்பிக்கை கொள்வார்கள்.
13இஸ்ரயேலில் எஞ்சியோர்
கொடுமை செய்யமாட்டார்கள்;
வஞ்சகப் பேச்சு
அவர்களது வாயில் வராது;
அச்சுறுத்துவார் யாருமின்றி,
அவர்கள் மந்தைபோல் மேய்ந்து
இளைப்பாறுவார்கள்.”✠


மகிழ்ச்சிப் பாடல்


14மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;
இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;
மகளே எருசலேம்!
உன் முழு உள்ளத்தோடு
அகமகிழ்ந்து அக்களி.
15ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்
தள்ளிவிட்டார்;
உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;
இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்
உன் நடுவில் இருக்கின்றார்;
நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
16அந்நாளில் எருசலேமை நோக்கி
இவ்வாறு கூறப்படும்:
“சீயோனே, அஞ்சவேண்டாம்;
உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
17உன் கடவுளாகிய ஆண்டவர்
உன் நடுவில் இருக்கின்றார்;
அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;
உன்பொருட்டு அவர் மகிழ்ந்து
களிகூருவார்;
தம் அன்பினால் உனக்குப்
புத்துயிர் அளிப்பார்;
உன்னைக் குறித்து
மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.
18அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.
உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;
ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.
19இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை
அந்நாளில் நான் தண்டிப்பேன்;
கால் ஊனமுற்றவர்களைக்
காப்பாற்றுவேன்;
ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்;
அவமானமுற்ற அவர்களை
உலகெங்கும் பெயரும் புகழும்
பெறச்செய்வேன்.
20அக்காலத்தில் உங்களை
ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து
உங்கள் தாய்நாட்டுக்கு
அழைத்து வருவேன்;
ஆம், உங்கள் கண்முன்பாகவே
உங்களை முன்னைய
நன்னிலைக்கு உயர்த்தி,
உலகின் எல்லா மக்களிடையேயும்
நீங்கள் பெயரும் புகழும்
பெறுமாறு செய்வேன்”
என்கிறார் ஆண்டவர்.


3:13 திவெ 14:5.