Manage OLD TESTAMENT

  • Home
  • Manage OLD TESTAMENT
முன்னுரை:1

‘நீதித் தலைவர்கள்’ என்னும் இந்நூல் இஸ்ரயேலர் கானான் நாட்டைக் கைப்பற்றியதற்கும் அவர்களிடையே முடியாட்சி தொடங்கியதற்கும் இடைப்பட்ட காலத்தைப் பற்றியதாகும். இக்காலக்கட்டத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்குத் தாம் தெரிந்துகொண்டோர் மூலமாக விடுதலை அளித்து அவர்களைப் பாதுகாத்து வந்தார். இவர்களுள் பெரும்பாலோர் வலிமைமிகு வீரர்களாகவும் படைத் தலைவர்களாகவும் ஆளுநர்களாகவும் இருந்தனர்.

இஸ்ரயேலரின் வாழ்வும் வெற்றியும் கடவுளிடம் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை பொறுத்தே அமைந்திருந்தது என்பதையும் அவர்களது நம்பிக்கையின்மை அவர்களுக்கு அழிவையே கொணர்ந்தது என்பதையும் இந்நூல் வலியுறுத்திக் கூறுகின்றது. அவர்கள் இறைவனைக் கைவிட்டு அவதியுற்ற காலத்திலும் மனம்மாறி அவரிடம் திரும்பிவந்தால், அவர் தம் மக்களைத் தவறாது பாதுகாத்து அவர்களுக்கு விடுதலை அளிப்பார் என்பதையும் இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.


நூலின் பிரிவுகள்


1. யோசுவாவின் இறப்புவரை நிகழ்ந்தவை 1:1 - 2:10
2. இஸ்ரயேலின் நீதித் தலைவர்கள் 2:11 - 16:31
3. பல்வேறு நிகழ்ச்சிகள் 17:1 - 21:25


அதிகாரம் 1:1-36

அதோனிபெசக்கின்மீது இஸ்ரயேலின் வெற்றி


1யோசுவா இறந்த பின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், “யார் கானானியருக்கு எதிராகச் சென்று எங்கள் சார்பாக முதலில் அவர்களுடன் போரிடுவர்?” என்று கேட்டனர். 2ஆண்டவர், “யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்” என்றார். 3யூதாவின் மக்கள் தம் சகோதரராகிய சிமியோனின் மக்களிடம், “எங்களுடன் எங்கள் நிலப்பகுதிக்குள் வாருங்கள். கானானியருக்கு எதிராக நாம் போரிடுவோம். நாங்களும் உங்கள் நிலப்பகுதிக்குள் உங்களுடன் வருவோம்” என்றனர். சிமியோனின் மக்கள் அவர்களுடன் சென்றனர்.

4அவ்வாறே, யூதா போரிடச் சென்றபொழுது ஆண்டவர் கானானியரையும் பெரிசியரையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்கள் பெசக்கில் பத்தாயிரம் பேரைக் கொன்றனர். 5அதோனிபெசக்கைப் பெசக்கில் கண்டுபிடித்து, அவனை எதிர்த்துப் போரிட்டுக் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் வீழ்த்தினர்.

6தப்பி ஓடிய அதோனிபெசக்கை அவர்கள் துரத்திச் சென்று பிடித்து, அவனுடைய கை, கால்களின் பெருவிரல்களைத் துண்டித்தனர்.

7அப்பொழுது, அதோனிபெசக்கு, “கை, கால்களின் பெருவிரல்கள் துண்டிக்கப்பட்ட எழுபது அரசர்கள் என் உணவு மேசையிலிருந்து சிதறியவற்றைப் பொறுக்கினார்கள். நான் செய்தவாறே, கடவுள் எனக்குச் செய்துள்ளார்” என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். அவன் அங்கே இறந்தான்.


யூதா குலம் எருசலேமையும் எபிரோனையும் கைப்பற்றல்


8யூதாவின் மக்கள் எருசலேமுக்கு எதிராகப் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாள்முனையால் மக்களை வெட்டிவீழ்த்தி, நகரை நெருப்புக்கு இரையாக்கினர். 9பின்னர், யூதாவின் மக்கள் மலைநாட்டிலும், நெகேபிலும், மலை அடிவாரங்களிலும் வாழும் கானானியருக்கு எதிராகப் போர்புரியச் சென்றனர். 10யூதாவின் மக்கள் “கிரியத்து அர்பா” என்று முன்னர் அழைக்கப்பட்ட எபிரோனில் வாழ்ந்த கானானியருக்கு எதிராகச் சென்றனர் என்பதாகும். அவர்கள் சேசாய், அகிமான், தல்மாய் இனங்களைத் தோற்கடித்தனர்.


ஒத்னியேல் தெபீர் நகரைக் கைப்பற்றல்


11அங்கிருந்து தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றனர். தெபீரின் முன்னாள் பெயர் கிரியத்து-சேபேர் என்பதாகும். 12காலேபு, கிரியத்து-சேபேரைத் தாக்கிக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாக அளிப்பேன்” என்றார். 13காலேபின் இளைய சகோதரனும், கெனாசின் மகனுமாகிய ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். எனவே, காலேபு அவருக்குத் தம்மகள் அக்சாவை மனைவியாக அளித்தார். 14அவள் வந்தபோது, அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார்⁕. எனவே அவள் கழுதையைவிட்டு இறங்கியபோது காலேபு அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று அவளைக் கேட்டார். 15அவள் அவரிடம், “எனக்கு நீர் ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். எனக்கு வறண்ட நிலத்தைத்தான் கொடுத்துள்ளீர். எனக்கு நீரூற்றுகளையும் தாரும்” என்றாள். எனவே, காலேபு அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.


யூதா, பென்யமின் குலத்தாரின் வெற்றிகள்


16மோசேயின் மாமனாரின் மக்களாகிய கேனியர், பேரீச்ச நகரிலிருந்து யூதா மக்களுடன், யூதா பாலைநிலத்திற்குச் சென்றனர். அது ஆராத்துக்குத் தெற்கே உள்ளது. அவர்கள் அங்குச் சென்று அங்கிருந்த மக்களுடன் வாழ்ந்தனர். 17யூதாவின் மக்கள் தம் சகோதரர் சிமியோனின் மக்களுடன் சென்றனர். அவர்கள் செப்பாத்தில் வாழும் கானானியரைக் கொன்று அந்நகரை முற்றிலும் அழித்தனர், நகரின் பெயரை ஒர்மா என்று அழைத்தனர். 18யூதாவின் மக்கள் காசாவையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் அஸ்கலோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் எக்ரோனையும் அதன் எல்லைக்குட்பட்டவற்றையும் கைப்பற்றினர். 19ஆண்டவர் யூதாவின் மக்களுடன் இருந்தார். அவர்கள் மலைப்பகுதியை உரிமையாக்கிக் கொண்டனர். ஆனால், சமவெளியில் வாழ்ந்தவர்களை அவர்களால் விரட்ட முடியவில்லை. ஏனெனில், அவர்களிடம் இரும்புத் தேர்கள் இருந்தன. 20ஆனாக்கின் மூன்று புதல்வர்களை விரட்டியடித்த காலேபுக்கு மோசே கூறியிருந்தவாறு, எபிரோன் கொடுக்கப்பட்டது. 21எருசலேமில் வாழ்ந்த எபூசியரைப் பென்யமின் மக்கள் விரட்டவில்லை. இந்நாள்வரை எபூசியர் பென்யமின் மக்களுடன் எருசலேமில் வாழ்கின்றனர்.✠


எப்ராயிம், மனாசே குலங்கள் பெத்தேலைக் கைப்பற்றல்


22யோசேப்பின் வீட்டார் பெத்தேலுக்கு எதிராகச் சென்றனர். ஆண்டவர் அவர்களுடன் இருந்தார். 23யோசேப்பின் வீட்டார் பெத்தேலை உளவு பார்த்தனர். இந்நகரின் முன்னாள் பெயர் ‘லூசு’ என்பதாகும். 24ஒற்றர்கள், ஓர் ஆள் நகரிலிருந்து வெளியே வருவதைக் கண்டனர். அவர்கள் அவனிடம், “தயவு செய்து நகரின் நுழைவாயிலைக் காட்டு. நாங்கள் உனக்குக் கருணை காட்டுவோம்” என்றனர். 25அவனும் அவர்களுக்கு நகரின் நுழைவாயிலைக் காட்டினான். அவர்கள் நகரை வாள்முனையில் தாக்கினர். ஆனால், அவர்கள் அந்த ஆளையும் அவன் குடும்பம் முழுவதையும் தப்பிச்செல்ல விட்டுவிட்டனர். 26அந்த ஆள் இத்தியரின் நாட்டுக்குச் சென்று ஒரு நகரைக் கட்டி எழுப்பினான். அதற்கு ‘லூசு’ என்று பெயரிட்டான். அப்பெயர் இந்நாள்வரை நிலவி வருகின்றது.


இஸ்ரயேலால் துரத்தியடிக்கப்படாத மக்கள்


27பெத்சானையும், அதன் சிற்றூர்களையும், தனாக்கையும், அதன் சிற்றூர்களையும், தோர்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், இபிலயாம்வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும், மெகிதோ வாழ் மக்களையும், அவர்களின் சிற்றூர்களையும் மனாசேயின் மக்கள் முறியடிக்கவில்லை. கானானியர் அந்நிலத்தில் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். 28இஸ்ரயேலர் வலிமை பெற்றதும், கானானியரை அடிமை வேலைக்கு அமர்த்தினர். ஆனால், அவர்களை முற்றிலும் விரட்டவில்லை. 29எப்ராயிமின் மக்கள் கெசேரில் வாழ்ந்த கானானியரை விரட்டவில்லை. கானானியர் கெசேரில் அவர்களிடையே வாழ்ந்தனர்.✠ 30கிற்றரோன்வாழ் மக்களையோ, நகலோல் வாழ் மக்களையோ செபுலோனின் மக்கள் விரட்டவில்லை. கானானியர் அவர்களிடையே வாழ்ந்தனர். அவர்கள் அடிமைகள் ஆயினர். 31அக்கோ வாழ் மக்களையும், சீதோன், அக்லாபு, அக்சீபு, எல்பா, அப்பீகு, இரகோபு வாழ் மக்களையும் ஆசேரின் மக்கள் விரட்டவில்லை. 32ஆசேரின் மக்கள் அந்நாட்டில் வாழும் கானானியரிடையே வாழ்கின்றனர். ஏனெனில், அவர்கள் அவர்களை விரட்டவில்லை. 33நப்தலியின் மக்கள் பெத்சமேசுவாழ் மக்களையும், பெத்தனாத்து வாழ் மக்களையும் விரட்டவில்லை. அந்நாட்டில் வாழும் கானானியர், பெத்சமேசுவாழ் மக்கள், பெத்தனாத்துவாழ் மக்கள் ஆகியோரிடையே வாழ்கின்றனர். 34எமோரியர், தாண் மக்களைச் சமவெளிக்கு இறங்கவிடாமல் தடுத்து, மலைநோக்கிச் செல்லுமாறு நெருக்கினார்கள். 35எமோரியர் கர்கரேசிலும், அய்யலோனிலிருந்த சாலபிமிலும் தொடர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். யோசேப்பு வீட்டாரின் கை ஓங்கியது. எமோரியர் அடிமைகள் ஆயினர். 36எமோரியரின் எல்லை அக்ரபிம் ஏற்றத்திலிருந்து, சேலாவுக்கு வடக்கே மேல் நோக்கிச் சென்றது.


1:21 யோசு 15:63; 2 சாமு 5:6; 1 குறி 11:4. 1:27-28 யோசு 17:11-13. 1:29 யோசு 16:10.


1:14 எபிரேயத்தில், ‘அவள் அவரைத் தூண்டினாள்’ என்பது பாடம்.



அதிகாரம் 2:1-23

பொக்கிமில் ஆண்டவரின் தூதர்


1ஆண்டவரின் தூதர் கில்காலிலிருந்து பொக்கிமுக்குச் சென்று கூறியது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். உங்கள் தந்தையருக்கு வாக்களித்த நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தேன். உங்களுடன் செய்துகொண்ட எனது உடன்படிக்கையை என்றுமே முறிக்கமாட்டேன். 2நீங்கள் இந்நாட்டில் வாழ்பவர்களுடன் உடன்படிக்கை செய்யக்கூடாது. அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்தெறியுங்கள்” என்று கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?✠ 3ஆகவே, இப்பொழுது கூறுகின்றேன்; நான் அவர்களை உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடமாட்டேன். அவர்கள் உங்களுக்கு முள்ளாக இருப்பார்கள். அவர்கள் தெய்வங்கள் உங்களுக்குக் கண்ணியாக இருப்பார்கள்”. 4ஆண்டவரின் தூதர் இவ்வார்த்தைகளை எல்லா இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும், மக்கள் தங்கள் குரலை எழுப்பி அழுதனர். 5அவ்விடத்தின் பெயரைப் ‘பொக்கிம்’ என அழைத்தனர். அங்கு ஆண்டவருக்குப் பலியிட்டனர்.


யோசுவாவின் இறப்பு


6யோசுவா இஸ்ரயேல் மக்களை அனுப்பிவிட, அவர்கள் ஒவ்வொருவரும் தம் உரிமைச் சொத்தாகிய நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளச் சென்றனர். 7யோசுவாவின் வாழ்நாள் முழுவதிலும் யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த முதியோரின் நாள்களிலும் மக்கள் ஆண்டவருக்கு ஊழியம் புரிந்து வந்தனர். ஆண்டவர் இஸ்ரயேலருக்குச் செய்த மாபெரும் செயல்கள் அனைத்தையும் அம்முதியோர் கண்டிருந்தனர். 8நூனின் மகனும் ஆண்டவரின் ஊழியருமாகிய யோசுவா இறந்தார். அவருக்கு வயது நூற்றுப் பத்து. 9காகசு மலைக்கு வடக்கே எப்ராயிம் மலைநாட்டில் அவரது உரிமை நிலத்தின் எல்லையிலிருந்த திம்னத்கெரேசில் அவரை அடக்கம் செய்தனர்.✠ 10அத்தலைமுறையினரும் தம் மூதாதையரைப்போல இறந்தனர். அவர்களுக்குப்பின் வந்த தலைமுறையினர் ஆண்டவரையோ அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்ததையோ அறிந்திருக்கவில்லை.


இஸ்ரயேல் ஆண்டவரை விட்டு விலகுதல்


11இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். அவர்கள் பாகால்களுக்கு ஊழியம் செய்தனர். 12அவர்கள் தங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டனர். தங்களைச்சுற்றி வாழ்ந்த மக்களினங்களின் தெய்வங்களைப் பின்பற்றி, வழிபட்டு, ஆண்டவருக்குச் சினமூட்டினர். 13அவர்கள் ஆண்டவரைக் கைவிட்டுப் பாகாலுக்கும் அஸ்தரோத்துக்கும் ஊழியம் செய்தனர். 14இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. எனவே, அவர் கொள்ளையடிப்போரிடம் அவர்களை ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தனர். அவர்களைச் சூழ்ந்திருக்க எதிரிகளிடம் ஆண்டவர் அவர்களை விற்றார். அதனால், அவர்கள் எதிரிகளின் முன், அவர்களால் எதிர்த்து நிற்க இயலாமற்போயிற்று. 15ஆண்டவர் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறியதுபோல், அவர்கள் போருக்குச் சென்றபொழுதெல்லாம், ஆண்டவரின் கை அவர்களுக்கு எதிராகத் தீமை விளைவித்தது. அவர்கள் பெருந்துயரத்துக்கு உள்ளாயினர். 16ஆண்டவர் நீதித் தலைவர்களை எழச்செய்தார். அவர்கள் அவர்களைக் கொள்ளையடித்தவர்களின் கைகளிலிருந்து விடுவித்தனர். 17ஆயினும், அவர்கள் தங்கள் நீதித் தலைவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை; ஏனெனில், அவர்கள் வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றித் தொழுது வேசித்தனம் செய்தனர்; தங்கள் மூதாதையர் ஆண்டவரின் கட்டளைகளுக்குச் செவி கொடுத்து நடந்த நெறியைவிட்டு விரைவில் விலகினர். 18ஆண்டவர் அவர்களுக்காக நீதித் தலைவர்களை எழச்செய்த பொழுதெல்லாம் அவர் அந்தத் தலைவர்களுடன் இருந்து, அத்தலைவர்களின் வாழ்நாள் முழுவதும் எதிரிகளின் கையிலிருந்து மக்களை விடுவித்தார். ஏனெனில், துன்புறுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட அவர்களின் அழுகுரலைக் கேட்டு ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டார். 19ஆனால், அவர்கள் ஒவ்வொரு நீதித் தலைவர் இறந்தபொழுதும், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றியும், அவற்றுக்கு ஊழியம் செய்தும், அவற்றை வழிபட்டும், தங்கள் மூதாதையரைவிட இழிவாக நடந்தனர். அவர்களுடைய தீய பழக்கங்களையும் முரட்டுத்தனமான நடத்தையையும் விட்டகலவில்லை. 20எனவே, இஸ்ரயேலின்மேல் ஆண்டவரின் கோபக்கனல் கனன்றது. அவர், “இம்மக்களின் மூதாதையர் கைக்கொள்ளுமாறு கட்டளையிட்ட என் உடன்படிக்கையை இவர்கள் மீறிவிட்டனர். என் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. 21ஆகவே, நானும் யோசுவா இறக்கும்பொழுதுவிட்டு வைத்த வேற்றினத்தாரை இவர்கள் முன்னிருந்து இனியும் விரட்டமாட்டேன். 22ஆண்டவரது நெறிமுறையில் நடப்பதில் இஸ்ரயேலின் மூதாதையர் கவனமாக இருந்ததுபோல், இஸ்ரயேலரும் கவனமாக இருக்கின்றார்களா இல்லையா என இவர்களைக்கொண்டு நான் சோதிக்கின்றேன்” என்றார். 23எனவே, ஆண்டவர் இந்த வேற்றினத்தாரை யோசுவாவிடம் ஒப்படைக்காமலும் விரைவில் விரட்டாமலும் விட்டு வைத்தார்.


2:2 விப 34:12-13; இச 7:2-5. 2:9 யோசு 19:49-50.



அதிகாரம் 3:1-31

நாட்டில் எஞ்சியிருந்த வேற்றினத்தார்


1இஸ்ரயேல் மக்களைச் சோதிக்கும்படி இந்த வேற்றினங்களை ஆண்டவர் விட்டு வைத்திருந்தார். இம்மக்கள் அனைவரும் கானானின் போர் முறையை அறிந்திருக்கவில்லை. 2இஸ்ரயேல் மக்களின் இத்தலைமுறையினர் போர்முறையைக் கற்றுக் கொள்ளுமாறும் இதனை இதுவரை அறியாதோர்க்குக் கற்றுத்தருமாறும் விட்டுவைக்கப்பட்டோர்; 3ஐந்து பெலிஸ்திய இளவரசர், அனைத்துக் கானானியர், சீதோனியர், பாகால் எர்மோன் மலைநாட்டிலிருந்து ஆமாத்துக் கணவாய்வரை லெபனோன் மலையில் வாழ்ந்த இவ்வியர். 4மோசே வழியாக இஸ்ரயேலரின் மூதாதையருக்கு ஆண்டவர் இட்ட கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிவார்களா என்று சோதித்து அறியும் பொருட்டு அவர்கள் விடப்பட்டிருந்தனர். 5இஸ்ரயேல் மக்கள் கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் நடுவில் வாழ்ந்தனர். 6இவர்கள், அவர்கள் புதல்வியரைத் தங்கள் மனைவியராகக் கொண்டனர்; தங்கள் புதல்வியரை அவர்கள் புதல்வருக்குக் கொடுத்தனர்; அவர்களுடைய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.


ஒத்னியேல்


7ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர். தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர். 8இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களை மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமிடம் ஒப்படைத்து விட்டார். இஸ்ரயேலர் கூசான் ரிசத்தாயிமுக்கு எட்டாண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர். 9இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார். அவர் காலேபின் இளைய சகோதரரான கெனாசின் மகன் ஒத்னியேல். அவர் அவர்களுக்கு விடுதலை அளித்தார். 10அவர்மீது ஆண்டவரின் ஆவி இருந்தது. அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார். அவர் போருக்குச் சென்றார். அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார். அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார். 11நாடு நாற்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தது. பின் கெனாசின் மகன் ஒத்னியேல் இறந்தார்.


ஏகூது


12இஸ்ரயேல் மக்கள் மீண்டும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். மோவாபின் மன்னன் எக்லோனை இஸ்ரயேலருக்கு எதிராக ஆண்டவர் வலிமைப்படுத்தினார். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தனர். 13அவன் தன்னுடன் அம்மோனியரையும் அமலேக்கியரையும் சேர்த்துக்கொண்டு சென்று, இஸ்ரயேலரை வென்று, பேரீச்ச நகரைக் கைப்பற்றினான். 14இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்தனர்.

15இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க பென்யமினைச் சார்ந்த கேராவின் மகன் ஏகூதை எழச் செய்தார். அவர் இடக்கை மனிதர். இஸ்ரயேல் மக்கள் மோவாபின் மன்னன் எக்லோனுக்குக் கப்பம் கட்டுமாறு அவரை அனுப்பிவைத்தனர். 16ஏகூது தமக்கு ஒரு முழ நீளமும், இருபக்கம் கருக்குமுள்ள வாள் ஒன்றைச் செய்து கொண்டார். அதை அவர் தம் ஆடைகளுக்கு அடியில் வலதுதொடையில் கட்டி வைத்துக்கொண்டார். 17அவர் மோவாபு மன்னன் எக்லோனுக்குக் கப்பத்தைச் செலுத்தினார். எக்லோன் மிகவும் பருத்த மனிதன். 18ஏகூது கப்பத்தைச் செலுத்தி முடித்ததும், கப்பப் பொருள்களைச் சுமந்து வந்த மக்களை அவர் அனுப்பிவிட்டார். 19அவர் கில்காலுக்கு அருகில் உள்ள சிலைகள் வரை சென்று திரும்பி வந்து, “மன்னரே! என்னிடம் உமக்கு ஓர் இரகசிய செய்தி உள்ளது” என்றார். அவன் “அமைதி” என்றான். அவனைச் சுற்றி நின்ற அனைவரும் அவனை விட்டுவிட்டு வெளியேறினர். 20ஏகூது அவன் அருகில் வந்தார். அப்பொழுது அவன் குளிர்ந்த மேலறையில் தனியாக அமர்ந்திருந்தான். ஏகூது, “உமக்கான கடவுளின் செய்தி ஒன்று என்னிடம் உள்ளது” என்று கூற, அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். 21ஏகூது தம் இடக்கையை நீட்டி வலது தொடையிலிருந்து வாளை உருவி அவனுடைய வயிற்றில் குத்தினார். 22வாளோடு கைப்பிடியும் உள்ளே இறங்கியது. கொழுப்பு கைப்பிடியை மூடியதால், வாளை வயிற்றிலிருந்து வெளியே அவரால் உருவ முடியவில்லை. அது பின்புறமாக வெளியே வந்தது. 23ஏகூது முன்தளத்திற்கு வந்து மேலறையின் கதவுகளை அடைத்துப் பூட்டினார். 24அவர் வெளியே சென்றபின், மன்னனின் வேலையாளர்கள் வந்தனர். இதோ! அவனது மேலறையில் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவன் குளிர்ந்த மேலறையின் கழிவறைக்குத்தான் சென்றிருப்பான் என்று கூறிக் கொண்டனர்.

25அவர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். மேலறையின் கதவுகளை அவன் திறக்காமல் போகவே, அவர்கள் சாவியை எடுத்துத் திறந்தார்கள். இதோ! அவர்கள் தலைவன் தரையில் இறந்து கிடந்தான். 26அவர்கள் காத்திருந்த நேரத்தில் ஏகூது கற்சிலைகளைக் கடந்து, செயிராவுக்குத் தப்பி ஓடினார். 27அவர் அங்கு வந்து எப்ராயிம் மலையில் எக்காளம் ஊதினார். அவர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் மலைநாட்டிலிருந்து கீழே இறங்கினர். 28அவர் அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள். ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்” என்றார். அவர்கள் அவர் பின்னே சென்று மோவாபுக்கு எதிரே இருந்த யோர்தானின் கடவுதுறைகளைக் கைப்பற்றினர். எவரும் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. 29அவர்கள் அவ்வமயம் மோவாபியருள் உடற்கட்டும் வலிமையும் வாய்ந்த பத்தாயிரம் பேரைக் கொன்றனர். எவரும் தப்பிவில்லை. 30அந்நாளில் மோவாபு இஸ்ரயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டது. எண்பது ஆண்டுகள் நாடு அமைதியாக இருந்தது.


சம்கார்


31ஏகூதுக்குப் பின், அனாத்தின் மகன் சம்கார் தலைவராக இருந்தார். அவர் அறுநூறு பெலிஸ்தியரைக் கலப்பைக் கொழுவால் கொன்றார். அவரும் இஸ்ரயேலுக்கு விடுதலை அளித்தார்.



அதிகாரம் 4:1-24

தெபோராவும் பாராக்கும்


1ஏகூது இறந்தபின், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். 2ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் அவர்களை ஒப்படைத்தார். அவனுடைய படைத்தலைவன் சீசரா அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான். 3இஸ்ரயேலர் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில், அவனிடம் தொள்ளாயிரம் இரும்புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலரைக் கடுமையாக ஒடுக்கினான்.

4அச்சமயத்தில் இஸ்ரயேலருக்கு இறைவாக்கினரும் இலப்பிதோத்தின் மனைவியுமான தெபோரா நீதித் தலைவியாக இருந்தார். 5அவர் எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் “தெபோராப் பேரீச்சை” என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்புப் பெறுதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர். 6நப்தலியில் இருந்த கெதேசில் வாழ்ந்த அபினொவாமின் மகன் பாராக்கை அவர் ஆளனுப்பிக் கூப்பிட்டார். அவர் அவரிடம், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குக் கட்டளையிடுகிறார்; நீர் போய் நப்தலி, செபுலோன் மக்களைத் தாபோர் மலையில் ஒன்று கூட்டி அவர்களிலிருந்து பத்தாயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ளும். 7யாபினின் படைத்தலைவன் சீசராவையம் அவன் தேர்களையும் படையையும் கீசோன் ஆற்றின் அருகே இழுத்து வந்து உம் கையில் கொடுப்பேன்” என்றார். 8பாராக்கு அவரிடம், “நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன். நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன்” என்றார். 9அவர் அவரிடம், “நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்” என்றார். பின்பு, தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார். 10பாராக்கு செபுலோனையும் நப்தலியையும் கெதேசில் ஒன்று கூட்டினார். பத்தாயிரம் பேர் அவர்பின் அணிவகுத்துச் சென்றனர். தெபோராவும் அவருடன் சென்றார்.

11கேனியரான எபேர், மோசேயின் மாமனார் ஒபாபின் மக்களான கேனியரிடமிருந்து பிரிந்து, வாழ்ந்து வந்தார். அவர் கெதேசுக்கு அருகில் சானானிமிலிருந்த கருவாலி மரத்திற்கு அருகில் தம் கூடாரத்தை அமைத்திருந்தார்.

12அபினோவாமின் மகன் பாராக்கு தாபோர் மலைமீது ஏறிவிட்டதைச் சீசராவுக்கு அறிவித்தனர். 13சீசரா தன்னிடமிருந்த மொத்தம் தொள்ளாயிரம் இரும்புத்தேர்களையும், தன்னுடன் இருந்த மக்கள் எல்லாரையும் அரோசத்கோயிமிலிருந்து கீசோன் ஆற்றின் அருகே ஒன்று திரட்டினான். 14தெபோரா பாராக்கிடம், “எழுந்திரும்; இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?” என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர். 15ஆண்டவர் சீசராவையும் அவனுடைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனையில் பாராக்கின் முன்னால் சிதறடித்தார். சீசரா தன் தேரிலிருந்து இறங்கித் தப்பி ஓடினான். 16பாராக்கு தேர்களையும், படையையும் அரோசத்கோயிம் வரை துரத்தினார். சீசராவின் படை முழுவதும் வாள்முனைக்கு இரையாயிற்று. ஒருவர்கூட தப்பவில்லை. 17சீசரா கேனியரான எபேரின் மனைவி யாவேலின் கூடாரத்திற்கு ஓடினான். ஏனெனில் ,ஆட்சோர் மன்னன் யாபினுக்கும் கேனியரான எபேரின் வீட்டுக்கும் இடையே நல்லிணக்கம் நிலவி இருந்தது. 18யாவேல் சீசராவைச் சந்திக்க வெளியே வந்து “இங்கே திரும்பும், என் தலைவரே! என்னிடம் திரும்பும்; அஞ்ச வேண்டாம்” என்றார். அவன் அவரோடு கூடாரத்திற்குச் சென்றான். அவர் அவனை ஒரு போர்வையால் மூடினார். 19அவன் அவரிடம், “எனக்குச் சிறிது தண்ணீர் கொடு. நான் தாகமாயிருக்கிறேன்” என்றான். பால் வைக்கும் தோற்பையைத் திறந்து அவர் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தார். பின் அவனை மூடினார். 20அவன் அவரிடம், “கூடாரத்தின் வாயிலில் நின்று கொள், எவனாவது வந்து, ‘இங்கு ஓர் ஆள் இருக்கின்றானா?’ என்று உன்னைக் கேட்டால் நீ ‘இல்லை’ என்று சொல்” என்றான். 21அவன் களைப்பால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அப்பொழுது, எபேரின் மனைவி யாவேல் கூடார முளை ஒன்றையும் கத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக் கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளைதரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிந்தான். 22இதோ! பாராக்கு சீசராவைத் துரத்திக் கொண்டு வந்தார். யாவேல் அவரைச் சந்திக்க வெளியே வந்தார். யாவேல் அவரிடம், “வாரும்! நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன்” என்றார். அவரும் அவருடன் உள்ளே செல்ல, இதோ! சீசரா இறந்து கிடந்தான். கூடார முளை அவன் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு இருந்தது. 23இவ்வாறு, அந்நாளில் கடவுள் கானானிய மன்னன் யாபினை இஸ்ரயேல் மக்களின் முன் ஒடுக்கினார். 24இஸ்ரயேல் மக்களின் கை மேன்மேலும் வலுவடைந்து, கானானிய மன்னன் யாபினை நசுக்கி அழித்தது.



அதிகாரம் 5:1-31

தெபோரா, பாராக்கின் வெற்றிப்பாடல்


1அந்நாளில், தெபோராவும் அபினோவாமின் மகன் பாராக்கும் பாடிய பாடல்: 2“இஸ்ரயேலின் தலைவர்கள் தலைமை

தாங்கிச் செல்ல

மக்களும் தங்களை மனமுவந்து

அளிக்கின்றனர்.

ஆண்டவரைப் போற்றுங்கள்.!

3அரசர்களே, கேளுங்கள்!

இளவரசர்களே, செவிகொடுங்கள்.!

நான் ஆண்டவருக்குப் பண்

இசைப்பேன்.

இஸ்ரயேலின் கடவுளாகிய

ஆண்டவரின் புகழ்பாடுவேன்.

4ஆண்டவரே, நீர் சேயிரிலிருந்து

வெளிவந்தபோது,

நீர் ஏதொமின் வயல்வெளியைக்

கடந்தபோது,

நிலம் நடுங்கியது, வானம்

பொழிந்தது,

கார்மேகம் நீரைச் சொரிந்தது.

5ஆண்டவரின் முன்னிலையில்

மலைகள் நடுங்கின.

சீனாய் மலையே! நீயும்

இஸ்ரயேலின் கடவுளாகிய

ஆண்டவர்முன் நடுங்கினாய்.✠

6அனாத்தின் மகன் சம்காரின்

நாள்களிலும் யாவேலின்

நாள்களிலும் நெடுஞ்சாலைகள்

வெறுமையாகிக் கிடந்தன.

பயணிகள் சுற்றுப் பாதைகளில்

சென்றனர்.

7தெபோரா! நீ எழும்பும் வரை,

இஸ்ரயேலின் தாயாகத் தோன்றும்

வரை, இஸ்ரயேலின் சிற்றூர்கள்

வாழ்விழந்து கிடந்தன.

8வேற்றுத் தெய்வங்கள் தேர்ந்து

கொள்ளப்பட்டதும்,

வாயில்களில் போர் வந்துற்றது.

இஸ்ரயேலின் நாற்பதாயிரம்

பேர்களுள் எவரிடம் கேடயமோ

ஈட்டியோ இருந்தது?

9என் இதயம் இஸ்ரயேலின்

படைத்தலைவர்களில் பெருமிதம்

கொள்கிறது. மக்கள் நடுவில்

தங்களை மனமுவந்து

அளித்தவர்கள் இவர்களே!

ஆண்டவரைப் போற்றுங்கள்!

10பெண் கழுதைகள் மீது

விரைந்து செல்வோரே!

விலைமிகு கம்பளத்தில்

வீற்றிருப்போரே!

பாதையில் பயணம் செய்வோரே!

பாடி மகிழுங்கள்!

11நீர்நிலைகளின் அருகிலிருந்து

எழும் பாடகர்குரல்

அங்கே ஆண்டவரின் வெற்றியைப்

பாடுகின்றது.

இஸ்ரயேல் ஊரக வாழ்வின்

பொலிவை முழங்குகின்றது.

அப்பொழுது, ஆண்டவரின் மக்கள்

நகர வாயில்களுக்கு

இறங்கிச் சென்றார்கள்.

12எழுந்திடு! தெபோரா! எழுந்திடு!

பாடல் ஒன்று பாடு!

எழுந்திடு! பாராக்கு! அபினோவாம்

புதல்வா! உன் கைதிகளை

இழுத்துச் சென்றிடு!

13அப்பொழுது, எஞ்சிய உயர்குடியினர்

பீடு நடைபோட்டனர்.

வலியோரை எதிர்த்து நிற்க

ஆண்டவரின் மக்கள் என்னிடம்

இறங்கி வந்தனர்.

14எப்ராயிமிலிருந்து அதன் மக்கள்

அமலேக்கிற்குப் போயினர்.

பென்யமின்! உன் பின்னால்

உன் மக்களும் மாக்கிரிலிருந்து

தலைவர்களும் செபுலோனிலிருந்து

தலைவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.

15இசக்காரின் இளவரசர்கள்

தெபோராவுடன் சென்றனர்.

இசக்காரின் மக்கள் பாராக்குடன்

சென்றனர்; அவர்கள்

கால்நடையாக பள்ளத்தாக்கிற்கு

விரைந்தனர். ரூபனின்

பிரிவுகளிடையே விளைந்தது

மாபெரும் இதய சோதனையே!

16மந்தைகளில் இரைச்சலைக்

கேட்கவோ

தொழுவங்களிடையே நீ

நின்று விட்டாய்? ரூபனின்

பிரிவுகளிடையே விளைந்தது

மாபெரும் இதய சோதனையே!

17கிலயாது யோர்தானுக்கு

அப்பால் தங்கியது.

தாண்! நீ ஏன் கப்பல்களில்

தங்கிவிட்டாய்? ஆசேர்

கடற்கரைப்பகுதியில் தங்கி, அதன்

துறைமுகத்தில் குடியிருந்தான்.

18செபுலோன் மக்களோ தங்கள்

உயிரைப் பணயம் வைத்தனர்.

உயர் நிலத்து நப்தலியும் அவ்வாறே!

19மன்னர்கள் வந்து போரிட்டனர்.

கானானிய மன்னர்கள் தானாக்கில்

மெகிதோ நீர் நிலைகளில்

போரிட்டனர். கொள்ளைப்

பொருளாக வெள்ளி எதுவும்

கிடைக்கவில்லை.

20வானிலிருந்து விண்மீன்கள்

போரிட்டன!

தங்கள் பாதையிலிருந்து சீசராவுடன்

போரிட்டன!

21கீசோன் ஆறு அவர்களை அடித்துச்

சென்றது.

பெருக்கெடுத்து வரும் ஆறே

கீசோன் ஆறு.

என் உயிரே! வலிமையுடன்

பீடு நடை போடு!

22குதிரைகளின் குளம்புகள் நிலத்தை

அதிரச் செய்தன.

குதிரைகள் பாய்ந்து ஓடின;

வேகமாக விரைந்து ஓடின.

23‘மேரோசைச் சபியுங்கள்’

என்கிறார் ஆண்டவரின் தூதர்.

அதில் வாழ்வோரைக் கடுமையாகச்

சபியுங்கள். ஏனெனில் அவர்கள்

ஆண்டவருக்கு உதவி செய்ய

வரவில்லை. வலிமை மிக்கோருக்கு

எதிராக ஆண்டவருக்கு

உதவி செய்ய வரவில்லை.

24கேனியனான கெபேரின் மனைவி

யாவேல்! நீ பெண்களுள் பேறு

பெற்றவள்! கூடாரம்வாழ் பெண்களுள்

நீ பேறு பெற்றவள்!

25அவன் கேட்டதோ தண்ணீர்!

இவள் கொடுத்ததோ பால்!

அவள் உயர்தரக் கிண்ணத்தில்

தயிர் கொண்டு வந்தாள்.

26அவள் தன் கையைக் கூடார

முளையில் வைத்தாள்.

அவள் வலக்கை தொழிலாளர்

சுத்தியலைப் பிடித்தது.

சீசராவின் தலையில் அடித்தாள்;

சிதைத்தாள்; அவன் நெற்றிப்

பொட்டினை நொறுக்கினான்; துளைத்தான்.

27அவன் சரிந்தான்; விழுந்தான்;

அவள் காலடியில் உயிரற்றுக்

கிடந்தான்; அவள் காலடியில் அவன்

சரிந்தான்; விழுந்தான்; அவன்

விழுந்த இடத்திலேயே

இறந்து கிடந்தான்.

28சீசராவின் தாய் சாளரம் வழியாக

எட்டிப்பார்த்தாள்.

சாளரத்தில் சாய்ந்துகொண்டு

அவள் கத்தினாள்;

“அவன் தேர் வர ஏன் இந்தத் தாமதம்?

அவன் தேர்க்குதிரைகளின் குளம்

பொலி ஏன் இன்னும் கேட்கவில்லை?

29அவளுடைய அறிவார்ந்த பணிப்

பெண்கள் அவளுக்கு விடை

கூறுகின்றனர்; அவளது கேள்விக்கு

அவளே விடை கூறுகின்றாள்;

30அவர்கள் கொள்ளைப் பொருளைக்

கண்டுபிடித்துப் பங்கிடுகிறார்களோ?

ஆளுக்கு ஓரிரண்டு பெண்கள்;

சீசராவுக்குக் கொள்ளைப்

பொருளில் வண்ண ஆடைகள்;

என் தோளுக்குக் கொள்ளையடித்த

வண்ண ஆடைகள்;

இரண்டு பூப்பின்னல் ஆடைகள்.

31“ஆண்டவரே, இவ்வாறு உம் எதிரிகள்

அழியட்டும்! உம்மீது அன்பு

கூர்வோர் பொலிவுடன், கதிரவன்

போல வாழட்டும்!”

பின்னர் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி

நிலவிற்று.


5:5 விப 19:18.



அதிகாரம் 6:1-40

கிதியோன்


1இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தனர். அவர்களை ஆண்டவர் மிதியானியரிடம் ஏழு ஆண்டுகள் ஒப்படைத்தார். 2மிதியானியரின் ஆட்சியில் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர். எனவே, மிதியானியரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மலைப்பிளவுகளையும், குகைகளையும், கோட்டைகளையும் தங்கள் பதுங்கிடமாக அமைத்துக் கொண்டனர். 3இஸ்ரயேல் மக்கள் பயிரிட்டதை மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்களும் அழித்து வந்தனர். 4அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக முற்றுகையிட்டுக் காசா வரையில் உள்ள நிலப்பகுதியின் விளைச்சலை அழித்து வந்தனர்; இஸ்ரயேலில் உணவை விட்டுவைக்கவில்லை; ஆட்டையும் மாட்டையும் கழுதையையும் எதையுமே விட்டுவைக்கவில்லை. 5அவர்கள் தங்கள் கால்நடைகளுடனும் கூடாரங்களுடனும் வெட்டுக்கிளிகள்போல் பெருங்கூட்டமாக வந்தனர். அவர்களும் அவர்களுக்குரிய ஒட்டகங்களும் எண்ணிக்கையில் அடங்கா. அவர்கள் கொள்ளையடிக்க நாட்டினுள் வந்தனர். 6மிதியானியரிடம் மிகவும் சிறுமையுற்ற இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர்.

7இவ்வாறு, மிதியானியரை முன்னிட்டு, இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்ட பொழுது, 8ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் ஒருவரை அனுப்பினார். அவர் அவர்களுக்குக் கூறியது: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தேன். உங்களை அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தேன். 9எகிப்தியரின் கையிலிருந்தும், உங்களை நசுக்கியோர் அனைவரின் கையிலிருந்தும், உங்களை நான் மீட்டேன். அவர்களை உங்கள் முன்னிருந்து விரட்டிவிட்டு அவர்கள் நிலத்தை உங்களுக்குக் கொடுத்தேன். 10நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். “நீங்கள் வாழும் நாட்டில் உள்ள அம்மோனியரின் தெய்வங்களை வணங்காதீர்கள்” என நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். நீங்களோ என் குரலைக் கேட்கவில்லை.”

11பின்பு, ஆண்டவரின் தூதர் ஒபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் வந்து அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடும்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார். 12ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்” என்றார். 13கிதியோன் அவரிடம், “என் தலைவரே! ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன? ஆண்டவர் எம்மை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வரவில்லையா என்று கூறி, எங்கள் தந்தையர் எமக்கு வியந்துரைத்த அவரது வியத்தகு செயல்களெல்லாம் எங்கே? இப்பொழுது ஏன் ஆண்டவர் எம்மை இப்படிக் கைவிட்டுவிட்டார்? எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்துவிட்டாரே!” என்றார். 14ஆண்டவர் அவர் பக்கம் திரும்பி, “உன்னுடைய இதே ஆற்றலுடன் செல்வாய். மிதியானியர் கையிலிருந்து இஸ்ரயேலை நீ விடுவிப்பாய். உன்னை அனுப்புவது நான் அல்லவா?” என்றார். 15கிதியோன் அவரிடம், “என் தலைவரே! எவ்வழியில் நான் இஸ்ரயேலை விடுவிப்பேன்! இதோ! மனாசேயிலேயே நலிவுற்று இருப்பது என் குடும்பம். என் தந்தை வீட்டிலேயே நான்தான் சிறியவன்” என்றார். 16ஆண்டவர் அவரிடம், “நான் உன்னோடு இருப்பதால் நீ தனி ஒரு ஆளாக மிதியானியரை வெல்வாய்” என்றார். 17கிதியோன், “உம் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது என்றால், நீர்தான் என்னுடன் பேசுகிறவர் என்பதற்கு அடையாளம் ஒன்று காட்டும். 18நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்” என்றார். அவரும், “நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.

19கிதியோன் வந்து ஆட்டுக் குட்டியையும், இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால்⁕ மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார். பிறகு, அவர் இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு சட்டியிலும், எடுத்துக்கொண்டு அந்தக் கருவாலி மரத்தடிக்கு வந்து அவரிடம் கொடுத்தார். 20கடவுளின் தூதர் அவரிடம், “இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் கொண்டு வந்து இப்பாறைமீது வைத்துக் குழம்பை ஊற்று” என்றார். அவரும் அவ்வாறே செய்தார். 21ஆண்டவரின் தூதர் தம் கையிலிருந்த கோலின் முனையால் இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் தொட்டார். பாறையிலிருந்து நெருப்பு எழும்பி, இறைச்சியையும் புளியாத அப்பத்தையும் எரித்தது. ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார். 22அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், “ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!” என்றார். 23ஆண்டவர் அவரிடம், “உனக்கு நலமே ஆகுக! அஞ்சாதே! நீ சாகமாட்டாய்” என்றார். 24கிதியோன் அங்கே ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி எழுப்பினார். அதை “நலம் நல்கும் ஆண்டவர்” என அழைத்தார். அது இந்நாள் வரை அபியேசர் குடும்பத்தவருக்குச் சொந்தமான ஒபிராவில் உள்ளது.

25அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், “உன் தந்தைக்குச் சொந்தமான ஓர் இளங்காளையையும் ஏழு வயதுள்ள மற்றொரு காளைளையும் தேர்ந்தெடுத்துக் கொள். உன் தந்தைக்குச் சொந்தமான பாகாலின் பீடத்தை இடித்து எறி; அதை அடுத்துள்ள அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்து! 26உன் கடவுளாகிய ஆண்டவருக்கு இக்கோட்டையின் உச்சியில் முறையாக ஒரு பலிபீடம் கட்டு. இரண்டாவது காளையைக் கொண்டுவந்து நீ வெட்டிய அசேராக் கம்பத்தை விறகாக்கி எரி பலியாகச் செலுத்து” என்றார். 27கிதியோன் தம் வேலையாள்களில் பத்துப்பேரைக் கூட்டிக் கொண்டு, தமக்கு ஆண்டவர் இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அவர் தம் தந்தை வீட்டாருக்கும் நகர மக்களுக்கும் அஞ்சி அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்து முடித்தார்.

28நகர மக்கள் காலையில் துயிலெழுந்தனர். இதோ! பாகாலின் பலிபீடம் இடித்தெறியப்பட்டிருந்தது. அதை அடுத்திருந்த அசேராக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தது. அங்கே எழுப்பப்பட்ட பலி பீடத்தின்மீது இரண்டாவது காளை எரி பலியாக்கப்பட்டிருந்தது. 29ஒவ்வொரு வரும் தமக்கு அடுத்தவரிடம், “இதைச் செய்தவர் யார்?” என்று வினவினர். அவர்கள் தேடி விசாரித்து, ‘இதைச் செய்தவர் யோவாசின் மகன் கிதியோன்’ என்றனர். 30நகர மக்கள் யோவாசிடம், “உன் மகன் கிதியோனை வெளியே கொண்டுவா. அவன் சாக வேண்டும். ஏனெனில், அவன் பாகாலின் பலி பீடத்தைத் தகர்த்தெறிந்தான். அதை அடுத்திருந்த அசேராக் கம்பத்தை வெட்டி வீழ்த்தினான்” என்றனர். 31யோவாசு தம்மை எதிர்த்து வந்த அனைவரிடமும், “நீங்கள் பாகாலுக்காகப் போராடுகிறீர்களா? அவனைக் காப்பாற்றப் போகிறீர்களா? பாகாலுக்காகப் போராடுபவன் காலைக்குள் கொல்லப்படுவான். பாகால் கடவுளாக இருந்தால், தன் பலி பீடத்தைத் தகர்த்தவனோடு, அவனே போராடிக் கொள்ளட்டும்” என்றார். 32‘தன் பலிபீடத்தைத் தகர்த்தெறிந்த இந்த மனிதனோடு பாகாலே போராடிக்கொள்ளட்டும்’ என்று கூறி, அவர்கள் கிதியோனுக்கு ‘எருபாகால்’ என்று அந்நாளில் பெயரிட்டனர்.

33எல்லா மிதியானியரும், அமலேக்கியரும் கிழக்கில் வாழும் மக்களும் ஒன்றுகூடி, யோர்தானைக் கடந்து இஸ்ரயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர். 34ஆண்டவரின் ஆவி கிதியோனை ஆட்கொண்டது. அவர் எக்காளம் ஊதி, அபியேசர் குடும்பத்தவரைத் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைத்தார். 35மனாசே குலம் முழுவதற்கும் அவர் தூதரை அனுப்பினார். அவர்களும் அவர் பின்வர அழைக்கப்பட்டனர். ஆசேர், செபுலோன், நப்தலி குலங்களுக்கும் தூதரை அனுப்பினர். அவர்களும் அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள். 36கிதியோன் கடவுளிடம், “நீர் கூறியபடி இஸ்ரயேலை என்மூலம் விடுவிக்க விரும்பினால், 37இதோ! நான் ஆட்டுக் கம்பளியைப் போர் அடிக்கும் களத்தில் வைக்கிறேன். கம்பளிமேல் மட்டும் பனி இறங்கி இருந்து, தரைமுழுவதும் காய்ந்திருந்ததேயானால், நீர் கூறியபடி என்மூலம் இஸ்ரயேலை நீர் விடுவிப்பீர் என அறிந்து கொள்வேன்” என்றார். 38அவ்வாறே நடந்தது. மறுநாள் காலை அவர் எழுந்து கம்பளியைப் பிழிந்தார். அவர் கம்பளியை முறுக்கிப் பிழிய, பனி நீர் ஒரு கிண்ணம் முழுவதையும் நிரப்பியது. 39கிதியோன் கடவுளிடத்தில், “எனக்கு எதிராக நீர் சினம் கொள்ளாதீர். மீண்டும் ஒரு முறை நான் பேசுகிறேன். இன்னும் ஒருமுறை மட்டும் நான் கம்பளியால் சோதித்துப் பார்க்கிறேன். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க வேண்டும். தரைமீதெங்கும் பனி இறங்கி இருக்க வேண்டும்” என்றார். 40அவ்விரவில் ஆண்டவர் அவ்வாறே செய்தார். கம்பளி மட்டும் உலர்ந்திருக்க, தரை மீதெங்கும் பனி இறங்கி இருந்தது.


6:19 ‘ஓர் ஏப்பா’ என்பது எபிரேய பாடம்.



அதிகாரம் 7:1-25

கிதியோன் மிதியானியரைத் தோற்கடித்தல்


1எருபாகால் என்ற கிதியோனும் அவருடன் இருந்த மக்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து அரோது நீரூற்றருகே பாளையம் இறங்கினர். மிதியானியர் பாளையம் இவரது பாளையத்திற்கு வடக்கே மோரே மலை அருகே பள்ளத்தாக்கில் இறங்கி இருந்தது. 2ஆண்டவர் கிதியோனை நோக்கி, “உன்னுடன் இருக்கும் மக்கள் ஏராளமாக இருப்பதால், மிதியானியரை அவர்கள் கையில் ஒப்படைக்கமாட்டேன். இல்லையெனில், ‘எம் கையே எம்மைக் காத்தது’ என்று கூறி, இஸ்ரயேல் மக்கள் எனக்கெதிராகத் தற்பெருமை கொள்வர். 3இப்பொழுது மக்கள் கேட்குமாறு நீ கூறவேண்டியது: போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும். கிலயாது மலையை விட்டகலட்டும்” என்றார். மக்களுடன் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றனர். பத்தாயிரம் பேர் எஞ்சி இருந்தனர்✠ 4ஆண்டவர் கிதியோனிடம், “மக்கள் இன்னும் ஏராளமாக உள்ளனர். அவர்களை நீர்நிலைக்கு அழைத்துவா. அங்கே உனக்காக அவர்களைத் தேர்ந்தெடுப்பேன். ‘இவன் உன்னுடன் செல்வான்’ என்று யாரைக் குறித்து உன்னிடம் குறிப்பிடுகிறேனோ அவன் உன்னுடன் செல்வான்; ‘இவன் உன்னுடன் செல்லமாட்டான்’ என்று யாரைக் குறித்துக் குறிப்பிடுகிறேனோ, அவன் உன்னுடன் செல்லமாட்டான்” என்றார். 5அவர் மக்களை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆண்டவர் கிதியோனிடம், “நாய் போன்று நாக்கினால் நீரை நக்கிக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து; முழங்காலில் மண்டியிட்டு நீரைக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து” என்றார். 6நாக்கினால் நக்கிக் குடித்தவர்களின்⁕ எண்ணிக்கை முந்நூறு. மற்ற மக்கள் அனைவரும் நீர் அருந்த முழங்காலில் மண்டியிட்டனர். 7ஆண்டவர் கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறு பேர் மூலம் நான் உங்களை விடுவிப்பேன். நான் மிதியானியரை உன் கையில் ஒப்படைப்பேன். மற்ற எல்லா மக்களும் தமக்குரிய வீடுகளுக்குச் செல்லட்டும்” என்றார். 8அந்த முந்நூறு பேர் தங்கள் கைகளில் உணவுப் பொருள்களையும் தங்கள் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர் மற்ற எல்லா இஸ்ரயேலரையும் அவர்கள் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைத் தம்முடன் நிறுத்திக்கொண்டார். மிதியானியரின் பாளையம் அவர் இருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.

9அவ்விரவில் ஆண்டவர் அவரிடம், “எழுந்து பாளையத்திற்குள் இறங்கிச் செல். நான் அதை உன்கையில் ஒப்படைத்துவிட்டேன். 10ஆயினும், நீ போக அஞ்சினால், முதலில் பூரா என்ற உன் வேலையாளுடன் பாளையத்திற்குச் செல். 11அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை நீ உற்றுக்கேள். அதன்பின், உன் கைகள் வலுப்பெற, நீ பாளையத்திற்கு எதிராகச் செல்வாய்” என்றார். அவர் பூரா என்ற தம் வேலையாளுடன் பாளையத்தில் இருந்த போர்வீரர்களின் எல்லைக் காவலுக்குச் சென்றார். 12மிதியானியரும் அமலேக்கியரும் கிழக்கில் வாழ்ந்த மக்கள் அனைவரும் வெட்டுக்கிளி போன்று ஏராளமாகப் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தனர். கடற்கரையில் உள்ள ஏராளமான மணலைப் போன்று அவர்கள் ஒட்டகங்களுக்கு எண்ணிக்கை இல்லை. 13கிதியோன் வந்து சேர்ந்தபொழுது, ஒருவன் தன் தோழனிடம் தன் கனவுபற்றிக் கூறிக் கொண்டிருந்தான். அவன் கூறியது: “நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது” என்றான். 14அவன் தோழன் மறுமொழியாக, “இஸ்ரயேலனும் யோவாசின் மகனுமாகிய கிதியோனின் வாளைத் தவிர இது வேறொன்றுமில்லை. கடவுள் மிதியானியரையும் பாளையம் முழுவதையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று கூறினான்.

15கனவையும் அதன் பொருளையும் அவன் கூறக் கேட்டதும் கிதியோன் தலை வணங்கினார். பின்னர், இஸ்ரயேலின் பாளையத்திற்குத் திரும்பினார். “எழுங்கள், ஏனெனில், மிதியானியரின் பாளையத்தை ஆண்டவர் உங்கள் கையில் ஒப்படைத்துள்ளார்” என்றார். 16அவர் முந்நூறு பேரையும் மூன்று பிரிவாகப் பிரித்தார். அவர்கள் அனைவரின் கையிலும் எக்காளங்களையும், காலிப் பானைகளையும், அந்தப் பானைகளுக்குள் வைக்க நெருப்புப் பந்தங்களையும் கொடுத்தார். 17அவர்களிடம் அவர், என்னைப் பார்த்து நான் செய்வது போலச் செய்யுங்கள். நான் பாளையத்தின் எல்லைக்காவல் வரை செல்வேன். நான் செய்வதுபோல நீங்களும் செய்யுங்கள். 18நான் எக்காளம் ஊதுவேன். நானும் என்னோடு உள்ளவர்களும் ஊதும்பொழுது நீங்கள் அனைவரும் பாளையத்தைச் சுற்றிலும் ஊதிக்கொண்டு, ‘ஆண்டவருக்காக! கிதியோனுக்காக!’ என்று கூறுங்கள்” என்றார். 19நள்ளிரவுக் காவல் தொடங்கும் நேரத்தில் காவலர் மாற்றி நிறுத்தப்பட்டனர். அப்போது கிதியோனும் அவருடன் இருந்த நூறுபேரும் எல்லைக் காவலை அடைந்தனர். கிதியோனும் அவருடன் இருந்தவர்களும் எக்காளம் ஊதினர். தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தனர். 20மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதினர். பானைகளை உடைத்தனர்; தங்கள் இடக்கையில் நெருப்புப் பந்தங்களையும், வலக்கையில் ஊதுவதற்கு எக்காளங்களையும் ஏந்தியிருந்தனர். அவர்கள், “ஆண்டவருக்காக! கிதியோனுக்காக! ஒரு வாள்!” என்று முழங்கினர். 21பாளையத்தைச் சுற்றி ஒவ்வொருவனும் தன் இடத்தில் நின்றான். பாளையத்தில் இருந்த அனைவரும் ஓட்டமெடுத்தனர்; ஓலமிட்டுக் கொண்டு தப்பி ஓடினர். 22அப்பொழுது முந்நூறு பேரும் எக்காளம் ஊதினர். ஆண்டவர் பாளையம் முழுவதிலும் ஒவ்வொருவனும் மற்றவன்மீது வாள்வீசச் செய்தார். பாளையத்தினர் செரேராவை நோக்கி பெத்சிற்றாவரையிலும் தபாத்தாவில் உள்ள ஆபல்மெகோலா எல்லைவரையிலும் தப்பி ஓடினர். 23நப்தலியிலிருந்தும் ஆசேரிலிருந்தும் மனாசே முழுவதிலிருந்தும் இஸ்ரயேல் வீரர் ஒன்று திரட்டப்பட்டனர். அவர்கள் மிதியானியரைத் துரத்திச் சென்றனர். 24கிதியோன் எப்ராயிம் மலையில் உள்ள அனைவருக்கும் தூதரை அனுப்பி, “மிதியானியரை எதிர்க்கக் கீழே இறங்கி வாருங்கள். பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றுங்கள்” என்றார். 25எப்ராயிம் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் பெத்பராவரை உள்ள நீரூற்றுகளையும் யோர்தானையும் கைப்பற்றினர். அவர்கள் ஓரேபு, செயேபு என்ற இரு மிதியானியத் தலைவர்களைச் சிறைப்பிடித்தனர். ஓரேபை ஓரெபாவில் உள்ள பாறை மேல் கொன்றனர். செயேபைச் செயேபில் உள்ள திராட்சை ஆலையில் கொன்றனர். அவர்கள் மிதியானியரை மிதியான்வரை துரத்திச்சென்றனர். ஓரேபின் தலையையும் செயேபின் தலையையும் யோர்தானுக்கு அப்பாலிருந்த கிதியோனிடம் கொண்டு வந்தனர்.


7:3 இச 20:8.


7:6 ‘தங்கள் கையிலிருந்து வாய்க்கு’ என்பது எபிரேய மூலம்.



அதிகாரம் 8:1-35

மிதியானியர் முற்றும் அழிவுறுதல்


1எப்ராயிம் மக்கள் கிதியோனிடம், “என்ன, எங்களுக்கு இப்படிச் செய்து விட்டீரே? நீர் மிதியானியருக்கு எதிராகப் போரிடச் சென்றபொழுது எங்களைக் கூப்பிடவில்லையே!” என்று சொல்லி அவர்கள் அவரோடு தீவிரமாக வாக்குவாதம் செய்தனர். 2அவர் அவர்களிடம், “நான் இப்பொழுது உங்களைவிட என்ன சாதித்து விட்டேன்? எப்ராயிமின் இரண்டாம் திராட்சைப்பழப் பறிப்பு அபியேசரின் முதல் பறிப்பைவிடச் சிறந்ததல்லவா? 3ஆண்டவர் மிதியானியரின் சிற்றரசர்கள் ஒரேபையும் செயேபையும் உங்கள் கையில் ஒப்படைத்தார். நான் உங்களைவிட என்ன சாதித்துவிட முடிந்தது?” என்று சொன்னதும், அவர்மீது அவர்கள் கொண்ட சினம் தணிந்தது.

4கிதியோன் யோர்தானுக்கு வந்து அதைக் கடந்தார். அவரும் அவரோடு இருந்த முந்நூறு பேரும் களைப்புற்றிருந்தாலும் துரத்திச் சென்றனர். 5அவர் சுக்கோத்து மக்களிடம், “என் பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள். ஏனெனில் இவர்கள் களைத்திருக்கின்றனர். நான் மிதியானிய அரசர்களான செபாகு. சல்முன்னா என்பவர்களைத் தொடர்ந்து துரத்திக்கொண்டு செல்கிறேன்” என்றார். 6“செபாகையும் சல்முன்னாவையம் நீ பிடித்துவிட்டாயா? உமது படைக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்கவேண்டும்?” என்று சுக்கோத்தின் மக்கள் கேட்டனர்.

7கிதியோன், “அவ்வாறே ஆண்டவர் செபாகையும் சல்முன்னாவையும் என்கையில் ஒப்படைக்கும்பொழுது நான் உங்கள் உடலைப் பாலைநில முட்களாலும் நெருஞ்சிகளாலும் கிழிப்பேன்” என்றார். 8அங்கிருந்து பெனுவேலுக்குச் சென்று இதேபோல அவர்களிடமும் கேட்டார். சுக்கோத்து மக்கள் பதிலளித்தது போலவே, பெனுவேல் மக்களும் அவருக்குப் பதிலளித்தனர். 9பெனுவேல் மக்களிடம், “நான் வெற்றியுடன் திரும்பி வரும்பொழுது இந்தக் கோபுரத்தை இடித்துத் தள்ளுவேன்” என்றார்.

10செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தனர். பதினைந்தாயிரம் பேர் கொண்ட படையும் அவர்களோடு இருந்தது. அவர்கள் அனைவரும் கிழக்கில் வாழும் மக்களின் படை அனைத்திலிருந்தும் எஞ்சி இருந்தவர்கள். ஏற்கெனவே, ஓர் இலட்சத்து இருபதாயிரம் போர் வீரர் மடிந்திருந்தனர். 11கிதியோன் கூடாரங்களில் வாழ்வோரின் பாதைவழியாக நோபாவுக்கும் யோக்பகாவுக்கும் கிழக்காகச் சென்று, எதிர்பாராத நேரத்தில் படையைத் தாக்கினார். 12செபாகும் சல்முன்னாவும் தப்பி ஓடினர். அவர் அவர்கள் பின்னே துரத்திச் சென்று மிதியானின் இரண்டு அரசர்களான செபாகையும் சல்முன்னாவையும் பிடித்தார். படைமுழுவதையும் சிதறடித்தார்.

13யோவாசின் மகன் கிதியோன் போரிலிருந்து எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தார். 14அவர் சுக்கோத்தைச் சார்ந்த ஓர் இளைஞனைப் பிடித்து அவனை விசாரித்தார். அவன் அவருக்குச் சுக்கோத்தின் தலைவர்களும் பெரியோர்களுமாக எழுபத்தேழுபேரின் பெயர்களை எழுதிக்கொடுத்தான். 15அவர் சுக்கோத்து மக்களிடம் வந்து, “இப்பொழுதே செபாகையும் சல்முன்னாவையும் பிடித்துவிட்டாயா? களைப்புற்ற உன் வீரர்களுக்கு நாங்கள் ஏன் உணவு கொடுக்க வேண்டும் என்று கூறி என்னைப் பழித்தீர்களே! அந்தச் செபாகையும் சல்முன்னாவையும் இதோ பாருங்கள்” என்று கூறினார். 16பாலைநில முட்களையும் நெருஞ்சிகளையும் கொண்டு நகரின் பெரியோர்களை வதைத்துச் சுக்கோத்து மக்களுக்குப் பாடம் புகட்டினார். 17பெனுவேலின் கோபுரத்தை இடித்து நகரின் மக்களைக் கொன்றார்.

18செபாகிடமும் சல்முன்னாவிடமும், “நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?” என்று கேட்டார். அவர்கள், “உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர்” என்றனர். 19அவர், “அவர்கள் என் சகோதரர்கள்; என் தாயின் மக்கள்; நீங்கள் அவர்களை உயிரோடு விட்டிருந்தால் நான் உங்களைக் கொல்லமாட்டேன். இது வாழும் ஆண்டவர் மீது ஆணை!” என்றார். 20அவர் தம் தலைமகன் எத்தேரிடம், “எழு! அவர்களைக் கொல்” என்றார். இளைஞன் தன் வாளை உருவவில்லை. ஏனெனில், அவன் இன்னும் சிறுவனாக இருந்ததால் அஞ்சினான். 21செபாகும் சல்முன்னாவும், “நீயே எழுந்து எங்களைத் தாக்கு. ஆளைப்போன்றே அவனது ஆற்றல்” என்றனர். கிதியோன் எழுந்து செபாகையும் சல்முன்னாவையும் கொன்றார். அவர்களது ஒட்டகங்களின் கழுத்தில் இருந்த இளம்பிறை அணிகளை எடுத்துக் கொண்டார்.

22இஸ்ரயேலர் கிதியோனிடம், “எங்களை ஆள்வீர்! நீரூம் உம் மகனும், உம் மகனின் மகனும் ஆள்வீர்களாக! ஏனெனில், நீர் மிதியானியரின் கையிலிருந்து எங்களை விடுவித்தீர்!” என்றனர். 23கிதியோன் அவர்களிடம், “நான் உங்களை ஆளமாட்டேன். என் மகனும் உங்களை ஆளமாட்டான். ஆண்டவரே உங்களை ஆள்வார்” என்றார். 24அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு வரும் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள்” என்றார். ஏனெனில், இஸ்மயேலரான மிதியானியர் தங்கக் காதணிகள் அணிவது வழக்கம். 25இஸ்ரயேலர், “நாங்கள் உறுதியாகச் செய்வோம்” என்றனர். அவர்கள் ஒரு துணியை விரித்தனர். அதன்மீது ஒவ்வொருவனும் தான் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியைப் போட்டான். 26அவர் கேட்ட தங்கக் காதணிகளின் எடை ஆயிரத்து எழுநூறு செக்கேல் ஆகும். அத்தோடு இளம்பிறை அணிகள், தொங்கணிகள், மிதியான் அரசர்களின் பட்டாடைகள், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்தின்மீது இருந்த அணிகலன்கள் ஆகியவற்றையும் கொடுத்தனர். 27கிதியோன் அவற்றைக் கொண்டு ஓர் ஏப்போதைச் செய்து தம் நகராகிய ஒபிராவில் அதை நிறுவினார். இஸ்ரயேலர் அனைவரும் அங்கே வேசித்தனம் செய்தனர். கிதியோனுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் அது ஒரு கண்ணியாக இருந்தது. 28மிதியானியர் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்டனர். அவர்களால் தலைதூக்க முடியவில்லை. கிதியோனின் காலத்தில் நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது.


கிதியோனின் இறப்பு


29யோவாசின் மகன் எருபாகால் திரும்பிச்சென்று தம் வீட்டில் வாழ்ந்தார். 30கிதியோனுக்கு அவருடைய சொந்த மக்கள் எழுபது பேர். ஏனெனில், அவருக்குப் மனைவியர் பலர் இருந்தனர். 31செக்கேமிலிருந்த அவருடைய வைப்பாட்டி அவருக்கு ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். அவர் அவனுக்கு அபிமெலக்கு என்று பெயரிட்டார். 32யோவாசின் மகன் கிதியோன் மிகுந்த வயதாகி இறந்தார். அவரை அபியேசருக்குரிய ஒபிராவில் அவர் தந்தை யோவாசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். 33கிதியோன் இறந்த பின் இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பாகாலிடம் திரும்பி வேசித்தனம் செய்தனர். பாகால் பெரித்தைத் தங்கள் தெய்வமாக வைத்துக்கொண்டனர். 34தங்களைச் சூழ்ந்து வாழ்ந்த எதிரிகளின் கையிலிருந்து விடுவித்த தங்கள் கடவுளாகிய ஆண்டவரை இஸ்ரயேல் மக்கள் நினைவிற் கொள்ளவில்லை. 35கிதியோன் என்ற எருபாகால் இஸ்ரயேலுக்குச் செய்த அனைத்து நன்மைகளுக்கும் தக்க நன்றியை அவர்கள் அவரது வீட்டுக்குக் காட்டவில்லை.


8:3-5 திபா 83:11.



அதிகாரம் 9:1-57

அபிமெலக்கு


1எருபாகாலின் மகன் அபிமெலக்கு செக்கேமிலிருந்த தன் தாயின் சகோதரர்களிடம் சென்றான். அவர்களிடமும் தன் தந்தை, தாய் குடும்பத்தைச் சார்ந்த தன் இனத்தார் அனைவரிடமும் கூறியது: 2செக்கேமிலுள்ள எல்லாக் குடிமக்களும் கேட்குமாறு கூறுங்கள்: எது உங்களுக்கு நல்லது? எருபாகாலின் எழுபது புதல்வர் உங்களை ஆள்வதா? அல்லது ஒருவன் உங்களை ஆள்வதா? நான் உங்கள் எலும்பும் சதையுமாக இருக்கின்றேன் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்” . 3அவன் தாயின் சகோதரர் அவனுக்காக, செக்கேமின் எல்லா மக்களும் கேட்குமாறு, இந்த வார்த்தைகள் அனைத்தையும் கூறினர். அவர்களது இதயம் அபிமெலக்கின் பக்கம் திரும்பியது. ஏனெனில், அவர்கள் “அவன் நம் சகோதரன்” என்றனர். 4பாகால் பெரித்தின் கோவிலிருந்து அவனுக்கு எழுபது வெள்ளிக் காசுகள் கொடுத்தனர். அபிமெலக்கு அவற்றைக் கொண்டு வீணரும் முரடருமான ஆள்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டான். அவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர். 5ஒபிராவிலிருந்த தன்தந்தை வீட்டுக்கு வந்து எருபாகாலின் மக்களும் தன் சகோதரர்களுமாகிய எழுபது பேரை ஒரே கல் மீது வைத்துக் கொன்றான். எருபாகாலின் கடைசி மகன் யோத்தாம் மட்டும் ஒளிந்து கொண்டதால் தப்பித்துக்கொண்டான். 6செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்கள் அனைவரும் செக்கேமில் “சிலைத்தூண் கருவாலி” மரத்தடியில் அபிமெலக்கை அரசனாக ஏற்படுத்தினர்.

7இது யோத்தாமுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் கெரிசிம் மலைக்கு ஏறிச் சென்று அதன் உச்சியில் நின்று கொண்டு உரத்த குரலில் கூப்பிட்டுக் கூறியது: “செக்கேமின் மக்களே, எனக்குச் செவிசாயுங்கள்; கடவுள் உங்களுக்குச் செவி கொடுப்பார்.

8மரங்கள், தங்களுக்கு ஓர் அரசனைத்

திருப்பொழிவு செய்யப் புறப்பட்டன.

அவை ஒலிவ மரத்திடம், “எங்களை

அரசாளும்” என்று கூறின.

9ஒலிவ மரம் அவற்றிடம், “எனது

எண்ணெயால் தெய்வங்களும்

மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர்.

அப்படியிருக்க அதை உற்பத்தி

செய்வதை நான் விட்டுக்கொடுத்து

மரங்களுக்கு மேல் அசைந்தாட

வருவேனா?” என்றது.

10மரங்கள் அத்தி மரத்திடம், “வாரும்,

எங்களை அரசாளும்” என்றன.

11அத்தி மரம் அவற்றிடம், “எனது

இனிமையையும் நல்ல பழத்தையும்

விட்டுவிட்டு, மரங்கள் மீது

அசைந்தாட வருவேனா?” என்றது.

12மரங்கள் திராட்சைக் கொடியிடம்,

“வாரும், எங்களை அரசாளும்”

என்றன.

13திராட்சைக் கொடி அவற்றிடம்,

“தெய்வங்களையும் மானிடரையும்

மகிழ்விக்கும் எனது திராட்சை

இரசத்தை விட்டுவிட்டு

மரங்கள்மேல் அசைந்தாட

வருவேனா?” என்றது.

14மரங்கள் எல்லாம் முட்புதரிடம், “வாரும்,

எங்களை அரசாளும்” என்றன.

15முட்புதர் மரங்களிடம், “உண்மையில்,

உங்கள் மீது ஆட்சி செய்ய நீங்கள்

என்னைத் திருப்பொழிவு செய்தால்,

வாருங்கள்; என் நிழலில்

அடைக்கலம் புகுங்கள்; இல்லையேல்,

முட்புதரான என்னிடமிருந்து

நெருப்பு கிளர்ந்தெழுந்து

லெபனோனின் கேதுரு மரங்களை

அழித்துவிடும்” என்றது.

16இப்பொழுது நீங்கள் அபிமெலக்கை அரசனாக்கியிருக்கிறீர்களே! உண்மையுடனும் நேர்மையுடனுமா இதைச் செய்தீர்கள்? நீங்கள் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லதா செய்திருக்கிறீர்கள்? அவரது செயலுக்கேற்பவா நீங்கள் அவருக்குக் கைம்மாறு செய்திருக்கிறீர்கள்? 17என் தந்தை உங்களுக்காகப் போரிட்டார்; தம் உயிரைப் பணயம் வைத்தார்; உங்களை மிதியானியர் கையிலிருந்து விடுவித்தார். 18இன்று நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராக எழுந்து, அவருடைய புதல்வர் எழுபது பேரை ஒரே கல்லின் மேல் வைத்துக் கொன்றீர்கள். அவருடைய வேலைக்காரியின் மகன் அபிமெலக்கைச் செக்கேமின் குடிமக்களுக்கு அரசனாக்கினீர்கள். 19இதை உண்மையுடனும் நேர்மையுடனும் எருபாகாலுக்கும் அவர் குடும்பத்திற்கும் இந்நாளில் செய்திருந்தால், நீங்கள் அபிமெலக்கைக் குறித்து மகிழ்ச்சி அடையுங்கள். அவனும், உங்களைக் குறித்து மகிழ்ச்சி அடைவான். 20இல்லையேல், அபிமெலக்கிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து, செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களை எரித்தழிக்கட்டும்! செக்கேம் மற்றும் பெத்மில்லோவின் குடிமக்களிடமிருந்து நெருப்பு கிளர்ந்தெழுந்து அபிமெலக்கை எரித்தழிக்கட்டும்!” என்றார். 21பின்னர், யோத்தாம் தம் சகோதரன் அபிமெலக்கிற்கு அஞ்சிப் பெயேருக்குத் தப்பி ஓடிச் சென்று, அங்கே வாழ்ந்து வந்தார்.

22அபிமெலக்கு இஸ்ரயேல் மக்கள் மீது மூன்றாண்டுகள் ஆட்சி செய்தான். 23கடவுள் அபிமெலக்கிற்கும் செக்கேம் குடிமக்களுக்கும் இடையே கடும் பகையை மூட்ட, அவர்கள் அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர். 24எருபாகாலின் எழுபது புதல்வர்களது இரத்தத்தை வன்முறையில் சிந்திய அபிமெலக்கின் மீதும் அவன் அவர்களைக் கொல்லத் துணைநின்ற செக்கேமின் குடிமக்கள் மீதும் அத்தீமை திரும்பி விழுமாறு இவ்வாறு நடந்தது. 25செக்கேமின் குடிமக்கள் அவனுக்கு எதிராக மலைகளின் உச்சிகளில் ஆள்களைப் பதுங்கி இருக்க வைத்து அவ்வழியே கடந்து செல்வோரை எல்லாம் கொள்ளையடிக்கச் செய்தனர். இது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது.

26தன் சகோதரர்களுடன் செக்கேமுக்கு வந்திருந்த எபேதின் மகன் ககால், செக்கேம் குடிமக்களின் நம்பிக்கைக்குரியவனானான். 27அவர்கள் அனைவரும் தம் விளைநிலங்களுக்குச் சென்று திராட்சையைப் பறித்து, பிழிந்து விழாக் கொண்டாடினர். அவர்கள் தம் தெய்வங்களின் கோவிலுக்குச் சென்று உண்டு குடித்து அபிமெலக்கைப் பழித்துப் பேசினர். 28எபேதின் மகன் ககால், “அபிமெலக்கு என்பவன் யார்? செக்கேமின் மக்கள் யார்? நாம் ஏன் அவனுக்கு அடி பணிய வேண்டும்? எருபாகாலின் மகனும் செபூல் என்ற அவனுடைய அதிகாரியும் செக்கேமின் தந்தையாகிய ஆமோரின் ஆள்களுக்கு அடிபணிந்திருந்தார்களே? அப்படியிருக்க, நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும்? 29இம்மக்களை யார் என் கையில் ஒப்படைப்பர்? அப்பொழுது நான் அபிமெலக்கை ஒழித்துவிடுவேன். நான் அபிமெலக்கிடம் ‘உன் படையைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டு வா’ என்று கூறுவேன்” என்றான்.

30நகரின் அதிகாரி செபூல், எபேதின் மகன் ககாலின் வார்த்தைகளைக் கேட்டுச் சினமுற்றான். 31அவன் அபிமெலக்கிற்கு மறைவாகத் தூதரை அனுப்பித் தெரிவித்தது; “இதோ! எபேதின் மகன் ககாலும் அவன் சகோதரர்களும் செக்கேமுக்கு, வந்துள்ளனர். அவர்கள் உனக்கெதிராக நகரைத் தூண்டிவிடுகின்றனர். 32இப்பொழுது இரவோடு இரவாக எழுந்து நீயும் உன்னோடு உள்ள மக்களும் விளைநிலங்களில் பதுங்கியிருங்கள். 33காலையில் கதிரவன் உதிக்கும் பொழுது நீ புறப்பட்டு நகருக்குள் பாய்ந்து செல்; அவனும் அவனோடு இருக்கும் மக்களும் உன்னை நோக்கி வெளியே வருவார்கள். உனக்குத் தோன்றுவது போல் அவனுக்குச் செய்”.

34அபிமெலக்கும் அவனோடு இருந்த மக்களும் இரவில் எழுந்து நான்கு பிரிவுகளாகச் செக்கேமுக்கு அருகில் பதுங்கியிருந்தனர். 35எபேதின் மகன் ககால் வெளியே சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான். அபிமெலக்கும் அவனுடன் இருந்த மக்களும் பதுங்கியிருந்த இடத்திலிருந்து எழுந்தனர். 36ககால் அவர்களைப் பார்த்துச் செபூலிடம், “இதோ! மக்கள் மலைகளின் உச்சிகளிலிருந்து இறங்குகின்றனர்” என்றான். அதற்குச் செபூல், “மலைகளின் நிழலை நீ மனிதர்களாகக் காண்கிறாய்” என்றான். 37ககால் மீண்டும் இவ்வாறு கூறினான்; “இதோ! மக்கள் நாட்டின் மிக உயர்ந்த பகுதியிலிருந்து வருகின்றார்கள். ஒரு பிரிவு, குறி சொல்வோர் கருவாலி மரப்பாதையிலிருந்து வருகின்றது”. 38செபூல் அவனிடம், “அபிமெலக்கு என்பவன் யார்? நாம் ஏன் அவனுக்கு அடிபணிய வேண்டும் என்று கூறிய உன்வாய் எங்கே? இம்மக்களையன்றோ நீ இழித்துரைத்தாய்? இப்பொழுது புறப்பட்டுச் சென்று அவனோடு போரிடு என்றான். 39ககால் செக்கேம் மக்களின் முன்னே சென்று அபிமெலக்குடன் போரிட்டான். 40அபிமெலக்கு அவனைத் துரத்த, அவனிடமிருந்து தப்பி ஓடினான். நுழைவாயில் வரை பலர் காயமுற்று விழுந்தனர். 41அபிமெலக்கு அருமாவில் தங்கினான். ககாலையும் அவன் சகோதரர்களையும் செக்கோமில் வாழாதபடி செபூல் துரத்திவிட்டான்.

42மறுநாள் வெளியே விளைநிலத்திற்கு மக்கள் செல்லவிருந்தது அபிமெலக்கிற்கு அறிவிக்கப்பட்டது. 43அவன் தன் ஆள்களைக் கூட்டி, அவர்களை மூன்று பிரிவாகப் பிரித்து, விளைநிலங்களில் பதுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். இதோ! மக்கள் நகரிலிருந்து வெளியே வந்தனர். அவன் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைக் கொன்றான். 44அபிமெலக்கும் அவனோடு இருந்த பிரிவும் விரைந்து சென்று நகரின் நுழைவாயிலில் நின்று கொண்டனர். மற்ற இரண்டு பிரிவுகள் விளைநிலங்களில் இருந்த அனைவர் மீதும் பாய்ந்து அவர்களைக் கொன்றன. 45அபிமெலக்கு அந்நாள் முழுதும் நகருக்கு எதிராகப் போரிட்டு, நகரைக் கைப்பற்றினான்; அதனுள் இருந்த மக்களைக் கொன்றான்; நகரைத் தரை மட்டமாக்கி அதில் உப்பை விதைத்தான்.

46செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று, ஏல்பெரித்துக் கோவிலின் அரணுக்குள் அடைக்கலம் புகுந்தனர். 47செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தது அபிமெலக்கிற்குத் தெரிவிக்கப்பட்டது. 48அபிமெலக்கும் அவனுடன் இருந்த ஆள்கள் அனைவரும் சால்மோன் மலைக்கு ஏறிச்சென்றனர். அபிமெலக்கு கோடரியைத் தன் கையிலெடுத்து மரங்களின் கிளைகளை வெட்டித் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். அவன் தன்னோட இருந்தவர்களிடம், நான் செய்வதைக் கண்டீர்கள். விரைந்து அவ்வாறே செய்யுங்கள்” என்றான். 49அவர்களுள் ஒவ்வொருவனும் கிளையை வெட்டினான். அவர்கள் அபிமெலக்கின் பின் சென்று, மதிலோடு சேர்த்து அடுக்கி, அதற்குத் தீ வைத்தனர். செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் ஆணும் பெண்ணுமாக ஆயிரம் பேர் இறந்தனர்.

50அபிமெலக்கு தெபேசுக்குச் சென்று அந்நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். 51நகரின் நடுவே உறுதியான மலைக்கோட்டை ஒன்று இருந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய நகரக் குடி மக்கள் அனைவரும் மலைக் கோட்டைக்குள் தப்பி ஓடி அதைப் பூட்டிக் கொண்டு அதன் உச்சிக்குச் சென்றனர். 52அபிமெலக்கு மலைக்கோட்டையைத் தாக்க வந்தான்; அதன் கதவுக்கு நெருப்பிட அதன் அருகே வந்தான். 53அப்பொழுது ஒரு பெண் ஓர் அரைக்கும் கல்லை அபிமெலக்கின் தலைமீது போட்டு அவன் மண்டையைப் பிளந்தாள்.✠ 54உடனே அவன் அவனுடைய படைக்கலம் தாங்கியிருந்த பணியாளனை அழைத்து அவனிடம், “உன் வாளை உருவு; ஒரு பெண் அவனைக் கொன்றாள்! என்று என்னைப் பற்றிச் சொல்லாதபடி என்னைக் கொன்றுவிடு” என்றான். அந்தப் பணியாளன் அவனை ஊடுருவக் குத்தவே அவனும் மடிந்தான். 55இஸ்ரயேல் மக்கள் அபிமெலக்கு மடிந்ததைக் கண்டனர். ஒவ்வொருவரும் தம் இடத்திற்குத் திரும்பினர். 56இவ்வாறு, அபிமெலக்கு தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்கு எதிராகச் செய்த தீச்செயலுக்கு உரிய தண்டனையை கடவுள் அவனுக்கு வழங்கினார். 57ஆண்டவர் செக்கேமின் மக்கள் செய்த எல்லாத் தீய செயலுக்குரிய தண்டனையையும் அவர்கள் தலைமீதே விழச்செய்தார். எருபாகாலின் மகன் யோத்தாமின் சாபம் அவர்கள்மீது விழுந்தது.


9:53 2 சாமு 11:21.



அதிகாரம் 10:1-18

தோலா


1அபிமெலக்கிற்குப் பின் இஸ்ரயேலை விடுவிக்கத் தோதுவின் புதல்வன் பூவாவின் மகனான தோலா எழுந்தார். அவர் இசக்கார் குலத்தைச் சார்ந்தவர். அவர் எப்ராயிம் மலையில் சாமீரில் வாழ்ந்து வந்தார். 2அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்து மூன்று ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார். அவர் இறந்து சாமீரில் அடக்கம் செய்யப்பட்டார்.


யாயிர்


3அவருக்குப் பின் கிலாயத்தைச் சார்ந்த யாயிர் என்பவர் எழுந்தார். அவர் இஸ்ரயேல் மக்களுக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் நீதித் தலைவராக விளங்கினார். 4அவருக்கு முப்பது புதல்வர். அவர்கள் முப்பது கோவேறு கழுதைகள் மீது சவாரி செய்தனர். அவர்களுக்கு முப்பது நகர்கள் இருந்தன. அவற்றை அவ்வோத்து-யாயிர் என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது கிலயாது நிலப்பகுதியில் உள்ளது. 5அவர் இறந்து காமோனில் அடக்கம் செய்யப்பட்டார்.


இப்தா


6ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதை இஸ்ரயேல் மக்கள் மீண்டும் செய்யத் தொடங்கினர். பாகால்களுக்கும், அஸ்தரோத்துகளுக்கும், சிரியாவின் தெய்வங்களுக்கும் சீதோனின் தெய்வங்களுக்கும், மோவாப்பின் தெய்வங்களுக்கும், அம்மோனிய மக்களின் தெய்வங்களுக்கும், பெலிஸ்தியரின் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்தனர். ஆண்டவரைக் கைவிட்டனர். அவருக்கு ஊழியம் புரியவில்லை. 7இஸ்ரயேலுக்கு எதிராக ஆண்டவரின் சினம் மூண்டது. அவர் அவர்களைப் பெலிஸ்தியரின் கையிலும் அம்மோனியரின் கையிலும் ஒப்படைத்தார். 8அவர்கள் அந்த ஆண்டு இஸ்ரயேல் மக்களை ஒடுக்கித் துன்புறுத்தினர். யோர்தானுக்கு அப்பால் கிலயாதில் இருந்த அம்மோனியர் நிலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களைப் பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினர். 9யூதாவுடனும், பென்யமினுடனும், எப்ராயிம் வீட்டுடனும் போரிட அம்மோனியர் யோர்தானைக் கடந்து வந்தனர். இஸ்ரயேலர் மிகவும் அல்லலுற்றனர்.

10இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம், “உமக்கெதிராகப் பாவம் செய்தோம். ஏனெனில், நாங்கள் எங்கள் கடவுளாகிய உம்மைவிட்டு விலகிப் பாகாலுக்கு ஊழியம் புரிந்தோம்” என்று கூறிக் கூக்குரலிட்டனர். 11ஆண்டவர் இஸ்ரயேல் மக்களிடம், எகிப்தியரிடமிருந்தும் எமோரியரிடமிருந்தும் அம்மோன் மக்களிடமிருந்தும் பெலிஸ்தியரிடமிருந்தும் நான் உங்களை விடுவிக்கவில்லையா? 12சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும் உங்களை நசுக்கிய பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டீர்கள். நான் உங்களை அவர்கள் கையிலிருந்து விடுவித்தேன்.13ஆனால், நீங்கள் என்னைவிட்டு விலகி வேற்றுத் தெய்வங்களை வணங்கினீர்கள். ஆகவே, நான் உங்களை மீண்டும் விடுவிக்கமாட்டேன். 14நீங்கள் தேர்ந்தெடுத்த தெய்வங்களிடமே சென்று கூக்குரலிடுங்கள். அவர்கள் உங்கள் துன்ப வேளையில் உங்களை விடுவிக்கட்டும்” என்றார். 15இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம்,“ நாங்கள் பாவம் செய்தோம். உம் பார்வையில் நல்லதெனப் பட்டதை எங்களுக்குச் செய்யும். இன்று எங்களை விடுவித்தருளும்” என்று வேண்டினர். 16அவர்கள் தங்களிடையே இருந்த வேற்றுத் தெய்வங்களை அகற்றி ஆண்டவருக்கு ஊழியம் புரிந்தனர். எனவே, அவர் இஸ்ரயேல் மக்களின் துன்பம் குறித்து வருத்தமுற்றார். 17அம்மோனியர் ஒன்றுதிரண்டு கிலயாதில் பாளையம் இறங்கினர். இஸ்ரயேல் மக்கள் ஒன்று கூடி மிஸ்பாவில் பாளையம் இறங்கினர். 18மக்களும் கிலாயத்தின் தலைவர்களும் ஒவ்வொருவரும் தம் நண்பரிடம், “அம்மோனியருக்கு எதிராக யார் போரிடத் தொடங்குகின்றானோ, அவனே கிலாயதுவாழ் மக்கள் அனைவருக்கும் தலைவனாக இருப்பான்” என்றனர்.



அதிகாரம் 11:1-40

1கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போர்வீரர். அவர் ஒரு விலைமாதின் மகன்; இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர். 2கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவர்கள் அவரிடம் “எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில், நீ வேறொரு பெண்ணின் மகன் என்று கூறினர். 3இப்தா தம் சகோதரர்களிடமிருந்து தப்பி ஓடி, தோபு நாட்டில் வாழ்ந்து வந்தார். 4வீணர்கள் இப்தாவுடன் சேர்ந்துகொண்டு அவருடன் திரிந்தனர். 5அம்மோனியர் இஸ்ரயேலருடன் போர் தொடுத்த பொழுது, கிலாயதின் பெரியோர்கள் இப்தாவைத் தோபிலிருந்து கூட்டி வரச் சென்றனர். 6அவர்கள் இப்தாவிடம், “நீர் வந்து எங்களுக்குத் தலைவராக இரும். அம்மோனியருக்கு எதிராக நாம் போரிடுவோம்” என்றனர். 7இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் என்னை வெறுக்கவில்லையா?, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா? நீங்கள் துன்புறும் இந்நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகின்றீர்கள்” என்று கேட்டார்.✠ 8கிலாயதின் பெரியோர்கள் இப்தாவிடம், “அதனால்தான் நாங்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். எங்களுடன் வந்து அம்மோனியருடன் போரிடும். நீர் எங்களுக்கும் கிலாயதில் வாழும் அனைவருக்கும் தலைவராக இருப்பீர் என்றனர்”. 9இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், “நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன்” என்றார். 10கிலயாதின் பெரியோர்கள் இப்தாவிடம், “நீர் கூறியபடி நாங்கள் செய்வது உறுதி. ஆண்டவரே நமக்கிடையே சாட்சியாக இருப்பார்” என்றனர். 11இப்தா கிலயாதின் பெரியோர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மக்கள் அவரைத் தங்கள் தலைவராகவும் போர்த் தளபதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இப்தா மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தம் காரியங்கள் அனைத்தையும் பற்றிக் கூறினார்.

12இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி, “எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு? நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்?” என்று கேட்டார். 13அம்மோனியரின் மன்னன் இப்தாவின் தூதரிடம், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வருகையில் அர்னோனிலிருந்து யாபோக்குவரை, யோர்தான் வரையிலும் என் நிலத்தைப் பறித்துக் கொண்டனர். இப்பொழுது அவற்றைச் சமாதானமாகத் திருப்பிக் கொடும்” என்றான். 14இப்தா தூதரை மீண்டும் அம்மோனிய மன்னனிடம் அனுப்பி அறிவித்தது. 15“இப்தா கூறுவது இதுவே: இஸ்ரயேலர் மோவாபியரின் நிலத்தையோ, அம்மோனியரின் நிலத்தையோ, பறித்துக்கொள்ளவில்லை. 16ஏனெனில், அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வருகையில் இஸ்ரயேலர் பாலைநிலத்தில் நடந்து செங்கடலுக்கும் பின்னர் காதேசுக்கும் வந்தனர். 17இஸ்ரயேலர் ஏதோமின் மன்னனுக்கு, “நாங்கள் உம் நாட்டைக் கடக்க அனுமதி அளியும்” என்று தூதரிடம் சொல்லி அனுப்பினர். ஏதோமின் மன்னன் அதைக் கேட்கவில்லை. மோவாபு மன்னனிடமும் அனுப்பினர். அவனும் இசையவில்லை. எனவே, இஸ்ரயேலர் காதேசில் தங்கினர். 18பின்னர், அவர்கள் பாலைநிலத்தில் ஏதோம் நாட்டையும் மோவாபு நாட்டையும் சுற்றிச் சென்று மோவாபின் கிழக்குப்பகுதிக்கு வந்தனர். அங்கு மோவாபின் எல்லையான அர்னோனின் அக்கரைப் பகுதியில் தங்கினர். மோவாபின் எல்லைக்குள் கால்வைக்கவே இல்லை.✠ 19இஸ்ரயேலர் எஸ்போனில் ஆட்சி செய்த எமோரிய மன்னன் சீகோனிடம் தூதரை அனுப்பினர். இஸ்ரயேலர் அவனிடம், “உம் நாட்டைக் கடந்து எம் இடத்தை அடைய அனுமதி தாரும்” என்று வேண்டினர்.

20ஆனால், சீகோன் இஸ்ரயேலரை நம்பாததால் அவர்களைத் தன் எல்லைக்குள் விடாது, தன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, யாகசிவில் பாளையம் இறங்கி இஸ்ரயேல் மக்களுடன் போர்புரிந்தான். 21இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர். 22அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர். 23இப்பொழுது இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் எமோரியரைத் தம் மக்கள் இஸ்ரயேலின் முன்னிலையிலிருந்து துரத்தியிருக்க, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வது எப்படி? 24உம் கடவுளாகிய கெமோசு உமக்கு உடைமையாகக் கொடுப்பதை நீர் உரிமையாக்கிக் கொள்ள மாட்டீரா? அவ்வாறே, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு உடைமையாகக் கொடுத்ததை நாங்கள் உரிமையாக்கிக் கொள்ளாது இருப்போமா? 25நீர் மோவாபின் மன்னன் சிப்போரின் மகன் பாலாக்கைவிடச் சிறந்தவரா? அவன் இஸ்ரயேலருடன் எப்போதாவது வழக்காடினானா? அல்லது அவர்களோடு போரிட்டானா?✠ 26இஸ்ரயேலர் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், அர்னோனின் கரைகளில் இருந்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க, இவ்வளவு காலமாய் நீர் ஏன் அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை? 27நான் உமக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால், நீர் எனக்கு எதிராகப் போர் தொடுத்துத் தீமை விளைவிக்கின்றீர். நீதி வழங்கும் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் இடையே இன்று நீதி வழங்கட்டும்”. 28அம்மோனியரின் மன்னன் தனக்கு இப்தா சொல்லி அனுப்பிய வார்த்தைகளை ஏற்கவில்லை. 29ஆண்டவரின் ஆவி இப்தாவுக்கு அருளப்பட்டது. அவர் கிலயாதையும், மனாசேயையும் கடந்து, கிலயாதிலிருந்த மிஸ்போவைக் கடந்து, அங்கிருந்து அம்மோனியரை நெருங்கினார். 30இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். “நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால், 31அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும் பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரி பலியாக்குவேன்.” 32இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார். 33இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.


இப்தாவின் புதல்வி


34இப்தா மிஸ்பாவிலிருந்து தம்வீடு திரும்பினார். இதோ! அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக் கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை. 35அவர் அவளைப் பார்த்தார்; தம் உடைகளைக் கிழித்துக் கொண்டு, “ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!” என்றார்.✠

36அவள் அவரிடம், “அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்” என்றாள். 37அவள் தந்தையிடம், “என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்” என்றாள். 38அவர், “சென்று வா” என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள். 39இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை. 40அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.


11:7 எண் 20:14-21. 11:18 எண் 21:4. 11:19-22 எண் 21:21-24. 11:25 எண் 22:1-6. 11:35 எண் 30:2.



அதிகாரம் 12:1-15

இப்தாவும் எப்ராயிம் மக்களும்


1எப்ராயிம் மக்கள் ஒன்று திரண்டு சாப்போனைக் கடந்து சென்று இப்தாவிடம், “எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?” என்று கேட்டனர். உமக்கு எதிராக நாங்கள் உம் வீட்டை நெருப்பில் எரிப்போம்” என்றனர். 2இப்தா அவர்களிடம், “அம்மோனியருடன் எனக்கும் என் மக்களுக்கும் பெரும் சச்சரவு ஏற்பட்டபோது, நான் உங்களை உதவிக்கு அழைத்தேன். நீங்கள் என்னை அவர்கள் கையிலிருந்து விடுவிக்கவில்லை. 3நீங்கள் என்னை விடுவிக்க வரவில்லை எனக் கண்டு நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, அம்மோனியரிடம் சென்றேன். ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார். இப்படியிருக்க இன்று நீங்கள் என்னோடு சண்டையிடவா வருகின்றீர்கள்?” என்று கேட்டார். 4இப்தா கிலயாதின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி, எப்ராயிமுக்கு எதிராகப் போரிட்டார். கிலயாதியர் எப்ராயிம் மக்களைக் கொன்றனர். ஏனெனில், அவர்கள், “கிலயாதியரே! எப்ராயிமுக்கும் மனாசேக்கும் இடையில் வாழும் நீங்கள் எப்ராயிமிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள்” என்று பழித்துரைத்திருந்தனர். 5கிலயாதியர் எப்ராயிமுக்கு உரிய யோர்தானின் தொங்கு பாலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். எப்ராயிமிலிருந்து தப்பி ஓடிவந்தவர்களுள் ஒருவன், “நான் கடந்து செல்கிறேன்” என்று சொன்னால், கிலயாதியர் அவனிடம், “நீ எப்ராயிமைச் சார்ந்தவனா?” என்று கேட்பர். அவன் “இல்லை” எனச் சொன்னால், 6அவர்கள் அவனிடம், “‘ஷிபோலத்து’ என்று சொல்” என்பர். அவன் ‘சிபோலத்து’ என்பான். அவ்வார்த்தையை அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. உடனே அவர்கள் அவனைப் பிடித்து யோர்தானின் வழித்தடங்களில் கொல்வர். இவ்வாறு, அவர்கள் எப்ராயிம் மக்களில் நாற்பத்திரண்டாயிரம் பேரைக் கொன்றனர்.

7இப்தா ஆறு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். கிலயாதைச் சார்ந்த இப்தா இறந்து, கிலயாதின் நகர் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டார்.


இப்சான், ஏலோன், அப்தோன்


8அவருக்குப்பின் பெத்லகேமைச் சார்ந்த இப்சான் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். 9அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வேற்றினத்தாருக்கு மணமுடித்து வைத்தார். வேற்றினத்துப் பெண்கள் முப்பது பேரைத் தம் புதல்வருக்கு மணமுடித்து வைத்தார். அவர் ஏழு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். 10இப்சான் இறந்து பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார் 11அவருக்குப் பின் செபுலோனைச் சார்ந்த ஏலோன் பத்து ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித்தலைவராக விளங்கினார். 12செபுலோனைச் சார்ந்த ஏலோன் இறந்து, செபுலோன் நிலப்பகுதியில் இருந்த அய்யலோனில் அடக்கம் செய்யப்பட்டார். 13அவருக்குப்பின் பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். 14அவருக்கு நாற்பது புதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர். அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார். 15பிராத்தோனாகிய இல்லேலின் மகன் அப்தோன் இறந்து அமலேக்கியரின் மலைநாட்டு எப்ராயிம் நிலப்பகுதியில் இருந்த பிராத்தோனில் அடக்கம் செய்யப்பட்டார்.



அதிகாரம் 13:1-25

சிம்சோனின் பிறப்பு


1இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்தனர். ஆண்டவர் அவர்களைப் பெலிஸ்தியர் கையில் நாற்பது ஆண்டுகள் ஒப்படைத்தார்.

2சோராவைச் சார்ந்தவரும் தாண் குலத்தவருமான ஒருவர் இருந்தார். அவர் பெயர் மனோவாகு. அவர் மனைவி மலடியாய் இருந்ததால், குழந்தை பெறவில்லை. 3ஆண்டவரின் தூதர் அப்பெண்ணுக்குத் தோன்றி அவரிடம், “நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். 4இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே. 5ஏனெனில், நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக் கத்தி அவன் தலைமீது படக்கூடாது. ஏனெனில், பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென ‘நாசீர்’ ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்” என்றார்.✠ 6அப்பெண் தம் கணவரிடம் வந்து கூறியது: “கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார். அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் அவரைக் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை. 7அவர் என்னிடம், ‘இதோ! நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். ஆகவே, நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாதே. தீட்டான எதையும் உண்ணாதே. ஏனெனில், பையன் பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை, கடவுளுக்கென நாசீராக இருப்பான்’ என்றார்.

8மனோவாகு ஆண்டவரை நோக்கி, “என் தலைவரே! நீர் அனுப்பிய கடவுளின் மனிதர் மீண்டும் எங்களிடம் வந்து, பிறக்கப்போகும் குழந்தைக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுத் தரட்டும்” என்று கூறி வேண்டினார். 9கடவுள் மனோவாகின் வேண்டுதலைக் கேட்டார். கடவுளின் தூதர் மீண்டும் அப்பெண்ணிடம் வந்தார். அப்போது அவர் வயலில் அமர்ந்திருந்தார். அவருடைய கணவர் மனோவாகு அவருடன் இல்லை. 10அவர் தம் கணவரிடம் விரைந்து ஓடிச் சென்று அவரிடம், “இதோ! அன்று என்னிடம் வந்த மனிதர் எனக்குத் தோன்றியுள்ளார்” என்று தெரிவித்தார். 11மனோவாகு எழுந்து தம் மனைவியின் பின்னே சென்றார். அவர் அம்மனிதரிடம் வந்து, “இப்பெண்ணிடம் பேசிய மனிதர் நீர்தாமா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் தான்” என்றார். 12மனோவாகு “உம் வார்த்தைகள் நிறைவேறும்பொழுது பையனின் நெறிமுறையும் செயலும் எப்படியிருக்கும்?” என்று கேட்டார். 13ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், “நான் இப்பெண்ணிடம் சொன்ன அனைத்தையும் அவள் கவனமாய்க் கடைப்பிடிக்கட்டும். 14திராட்சைக் கொடியிலிருந்து வரும் எதையும் அவள் உண்ணக்கூடாது. திராட்சை இரசமோ மதுபானமோ அவள் அருந்தக்கூடாது. தீட்டான எதையும் அவள் உண்ணக்கூடாது. நான் அவளுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவள் கடைப்பிடிக்கட்டும்” என்றார். 15மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், “தயவு கூர்ந்து சற்று நேரம் காத்திரும். உமக்காக ஓர் ஆட்டுக்குட்டியைச் சமைக்கின்றோம்” என்றார். 16ஆண்டவரின் தூதர் மனோவாகிடம், “நீ என்னைக் காத்திருக்க வைத்தாலும், நான் உனது உணவை உண்ண மாட்டேன். நீ ஒரு எரி பலியைச் செலுத்துவதாக இருந்தால், அதை ஆண்டவருக்குச் செலுத்து” என்றார். ஏனெனில், மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறியவில்லை.

17மனோவாகு ஆண்டவரின் தூதரிடம், “உமது பெயர் என்ன? உம் வார்த்தைகள் நிறைவேறும் பொழுது நாங்கள் உம்மைப் பெருமைப்படுத்துவோம்” என்றார். 18ஆண்டவரின் தூதர் அவரிடம், “எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது” என்றார்.✠ 19மனோவாகு ஓர் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்து உணவுப்படையலுடன் பாறைமீது ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது, மனோவாகும் அவர் மனைவியும் காணும் வண்ணம் ஆண்டவர் வியப்பானதொன்றைச் செய்தார். 20பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வான்நோக்கி மேல் எழும்பியபோது, அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் மேல் நோக்கிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் அதைப்பார்த்து முகம் தரைப்பட விழுந்தனர். 21ஆண்டவரின் தூதர் மனோவாகிற்கும் அவர் மனைவிக்கும் மீண்டும் தோன்றவில்லை. மனோவாகு அவர் ஆண்டவரின் தூதர் என்பதை அறிந்து கொண்டார். 22மனோவாகு தம் மனைவியிடம், “நாம் செத்தோம். ஏனெனில், நாம் கடவுளைப் பார்த்து விட்டோம்” என்றார். 23அவர் மனைவி அவரிடம், “ஆண்டவர் நம்மைக் கொல்வதாயிருந்தால் நம் கையிலிருந்து எரிபலியையும் உணவுப் படையலையும் ஏற்றிருக்கமாட்டார்; இவற்றை எல்லாம் காட்டியிருக்க மாட்டார்; இதை நமக்கு இப்போது அறிவித்திருக்கவும் மாட்டார்” என்றார். 24அப்பெண் ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவனானான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். 25சோராவுக்கும், எசுத்தாவேலுக்குமிடையே அவன் இருக்கும்போது தான் ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கியது.


13:5 எண் 6:1-5. 13:18 தொநூ 32:29.



அதிகாரம் 14:1-20

சிம்சோனும் திமினாவின் இளம்பெண்ணும்


1சிம்சோன், திமினாவுக்குச் சென்றார்; திமினாவில் பெலிஸ்தியர் மகளிருள் ஒருத்தியைக் கண்டார். 2அவர் திரும்பிச் சென்று தம் தந்தையிடமும் தாயிடமும், “நான் திமினாவில் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் பெலிஸ்திய மகளிருள் ஒருத்தி, இப்பொழுது அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்றார். 3அவர் தந்தையும் தாயும் அவரிடம், “உன் உறவுப் பெண்களிடையே யாரும் இல்லையா? நம் மக்கள் அனைவரிடையே ஒரு பெண் கிடைக்கவில்லையா? நீ ஏன் விருத்தசேதனம் செய்யப்படாத பெலிஸ்தியரிடம் சென்று பெண் எடுக்க வேண்டும்?” என்று கேட்டனர். சிம்சோன் தம் தந்தையிடம், “அவளை எனக்கு மணமுடித்து வையும். ஏனெனில் அவளை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றார். 4அவர் தந்தையும் தாயும் இது ஆண்டவரின் செயல் என்று அறியவில்லை. ஏனெனில், அந் நாள்களில் இஸ்ரயேல் மீது அதிகாரம் செலுத்தி வந்த பெலிஸ்தியரைத் தண்டிக்க ஆண்டவர் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார். 5சிம்சோனும் அவர் தந்தையும் தாயும் திமினாத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திமினாத்தின் திராட்சைத் தோட்டங்களை வந்தடைந்தனர். அப்போது ஒரு சிங்கக்குட்டி கர்ச்சித்துக்கொண்டு அவர் மீது பாய்ந்தது. 6ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. ஆட்டை இரண்டாகக் கிழிப்பது போல் சிங்கக்குட்டியை அவர் வெறுங்கையால் கிழித்தார். அவர் தாம் செய்ததைத் தம் தந்தைக்கும் தாய்க்கும் கூறவில்லை. 7அவர் சென்று அப்பெண்ணிடம் பேசினார். சிம்சோனுக்கு அவள் பிடித்தவளாகத் தோன்றினாள். 8சில நாள்கள் கழித்து அவளைக் கூட்டிச் செல்ல அவர் மீண்டும் வந்தார். அவர் சிங்கத்தின் பிணத்தைக் காணத் திரும்பினார். இதோ! சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் காணப்பட்டன. 9அவர் தேனடையைக் கையில் எடுத்து அருந்திக் கொண்டே தொடர்ந்து நடந்தார்; தம் தந்தை தாயிடம் சென்று அவர்களுக்கும் கொடுத்தார். அவர்களும் அருந்தினர். அவர் அவர்களிடம் சிங்கத்தின் பிணத்திலிருந்து தேனடையை எடுத்ததாகச் சொல்லவில்லை.

10அவர் தந்தை பெண்வீட்டுக்குச் சென்றார். அங்குச் சிம்சோன் விருந்தளித்தார். ஏனெனில், இளைஞர்கள் அவ்வாறு செய்வது வழக்கம். 11அவர்கள் அவரைப் பார்த்து அவருடைய தோழராய் இருக்குமாறு முப்பது பேரைக் கூட்டி வந்தனர். 12சிம்சோன் அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை கூறுகின்றேன். நீங்கள் விருந்தின் ஏழு நாள்களுக்குள் அதற்கு விடை கண்டுபிடித்து எனக்குக் கூறினால், நான் உங்களுக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் அளிப்பேன். 13நீங்கள் எனக்குச் சரியான விடை கூறமுடியாவிடில், எனக்கு முப்பது நார்ப்பட்டாடைகளையும் முப்பது மேலாடைகளையும் நீங்கள் அளிக்கவேண்டும்” என்றார். அவர்கள் அவரிடம், “விடுகதையைச் சொல்; நாங்கள் கேட்கின்றோம்” என்றனர்.

14அவர் அவர்களிடம், “உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது; வலியவனிடமிருந்து இனியது வந்தது” என்றார். மூன்று நாளாகியும் அவர்களால் விடுகதைக்கு விடை காணமுடியவில்லை.

15நான்காம்⁕ நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், “உன் கணவனை மயக்கி, விடுகதையின் விடையை எங்களுக்குக் கூறச் சொல். இல்லையேல், உன்னையும் உன் தந்தையின் வீட்டையும் தீக்கிரையாக்குவோம். நீங்கள் எங்களைக் கூப்பிட்டது கொள்ளையடிக்கவா?” என்றனர். 16சிம்சோனின் மனைவி அவர்முன் அழுது அவரிடம், “நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பையே காட்டுகின்றீர். என் உறவுப் பையன்களுக்கு ஒரு விடுகதை கூறினீர். எனக்கு அதன் விடையைக் கூறவில்லையே” என்றாள். 17அவர்களுக்கு நடந்த விருந்தின் ஏழு நாள்களும் அவள் அவர் முன் அழுதாள். அவள் அவரை மிகவும் நச்சரிக்க, அவளிடம் விடையைக் கூறினார். அவளோ, தன் உறவுப் பையன்களிடம் விடுகதையின் விடையை அறிவித்து விட்டாள். 18ஏழாம் நாள் கதிரவன் மறையும் முன் அந்நகரின் ஆண்கள் அவரிடம், “தேனினும் இனியது எது? சிங்கத்தினும் வலியது எது?” என்றனர். அவர் அவர்களிடம், “என் இளம் பசுவைக்கொண்டு நீங்கள் உழுதிருக்காவிடில், என் விடுகதைக்கு விடை கண்டு பிடித்திருக்கவே மாட்டீர்கள்” என்றார்.

19ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது. அவர் அஸ்கலோனுக்குச் சென்று, அங்குள்ளவர்களுள் முப்பது பேரைக் கொன்று, அவர்கள் உடைகளை உரிந்து விடுகதைக்கு விடை கூறியவர்களுக்குக் கொடுத்தார். அவருக்குச் சினம் பொங்கியெழ, அவர் தம் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிச்சென்றார். 20சிம்சோனின் மனைவி, அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.


14:15 எபிரேயத்தில் ஏழாம் என்பது பாடம்.



அதிகாரம் 15:1-20

1சில நாள்களுக்குப் பிறகு, கோதுமை அறுவடைக் காலத்தில் சிம்சோன் ஓர் ஆட்டுக்குட்டியுடன் தம் மனைவியைச் சந்திக்கச் சென்றார். “நான் அறையிலுள்ள என் மனைவியிடம் செல்கிறேன்” என்றார். அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. 2அவள் தந்தை, “நீர் அவளை உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உம் தோழனுக்குக் கொடுத்துவிட்டேன். அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா? அவளுக்குப் பதிலாக இவள் உமக்கு மனைவியாக இருக்கட்டும்” என்றார். 3சிம்சோன் “இம்முறை நான் பெலிஸ்தியருக்குத் தீமை செய்யும் பொழுது அவர்களின் முன் குற்றமற்றவன்” என்றார். 4சிம்சோன் சென்று முந்நூறு நரிகளைப் பிடித்தார். அவர் தீப்பந்தங்களை எடுத்து, வாலோடு வால் சேர்த்து, இரு வால்களுக்கு இடையே ஒரு தீப்பந்தமாக வைத்தார். 5பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முற்றிய பயிர்களிடையே நரிகளை அனுப்பினார். அவை தானியங்களையும், முற்றிய பயிர்களையும், திராட்சை, ஒலிவத் தோட்டங்களையும் எரித்தன. 6பெலிஸ்தியர் “இதைச் செய்தது யார்?” என்றனர். “இதைச் செய்தது திமினாவின் மருமகன் சிம்சோன். ஏனெனில், திமினா அவர் மனைவியை எடுத்து அவருடைய தோழனுக்குக் கொடுத்துவிட்டான்” என்றனர். எனவே, பெலிஸ்தியர் சென்று அவளையும் அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர். 7சிம்சோன், “நீங்கள் இப்படிச் செய்ததற்கு நான் உங்களைப் பழிவாங்கும் வரை ஓயமாட்டேன்” என்றார். 8அவர் அவர்களைக் கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார். அங்கிருந்து புறப்பட்டு ஏற்றாமின் பாறைப்பிளவில் தங்கியிருந்தார்.


சிம்சோன், பெலிஸ்தியரைத் தோற்கடித்தல்


9பெலிஸ்தியர் யூதாவில் பாளையம் இறங்கி, இலேகியைத் தாக்கினர். 10யூதா மக்கள் அவர்களிடம், “ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்?” என்றனர். அதற்குப் பெலிஸ்தியர் “சிம்சோனைப் பிடித்து, அவன் எங்களுக்குச் செய்ததுபோல், நாங்களும் அவனுக்குச் செய்ய வந்துள்ளோம்” என்றனர். 11யூதாவிலிருந்து மூவாயிரம் பேர் ஏற்றாமின் பாறைப்பிளவுக்குச் சென்று சிம்சோனிடம், “பெலிஸ்தியருக்குக் கீழ் நாம் இருக்கின்றோம் என்பது உனக்குத் தெரியாதா? ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்?” என்றனர். அவர் அவர்களிடம், “அவர்கள் எனக்குச் செய்தது போல், நானும் அவர்களுக்குச் செய்தேன்” என்றார். 12அவர்கள் அவரிடம்,“உன்னைப் பிடித்துக் கட்டிப் பெலிஸ்தியர் கையில் ஒப்படைக்க நாங்கள் வந்துள்ளோம்” என்றனர். சிம்சோன் அவர்களிடம், “என்னைத் தாக்கமாட்டீர்கள் என்று எனக்கு உறுதி கூறுங்கள்” என்றார். 13அவர்கள் அவரிடம், “இல்லை; நாங்கள் உன்னைப் பிடித்துக் கட்டி அவர்கள் கையில் ஒப்படைப்போம். நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவர்கள் அவரை இரண்டு புதிய கயிறுகளால் கட்டிப் பாறைப் பிளவிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தனர்.

14அவர் இலேகியை நெருங்கி வருகையில், பெலிஸ்தியர் கூச்சலிட்டுக்கொண்டு அவரைக் காண வந்தனர். ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன. 15அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடை எலும்பைக் கண்டு, கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார். 16சிம்சோன், “கழுதைத் தாடையால் குவியல் குவியல்கள்! கழுதையின் தாடையால் கொன்றேன் ஆயிரம் பேரை” என்றார். 17அவர் இதைச் சொல்லி முடித்ததும், தாடை எலும்பைத் தம் கையிலிருந்து வீசி எறிந்தார். அவ்விடத்தை “இராமேத்து இலேகி”⁕ என அழைத்தார்.

18அவர் மிகவும் தாகமுற்று, ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பி, “நீர் உம் ஊழியன்மூலம் இம் மாபெரும் விடுதலையைத் தந்தீர். ஆனால், இப்பொழுது நான் தாகத்தால் செத்து, விருத்தசேதனம் செய்யப்படாதவரின் கையில் வீழ்வேனோ?” என்று மன்றாடினார். 19கடவுள் இலேகியில் ஒரு நிலப்பிளவைத் தோற்றுவிக்க, அதிலிருந்து தண்ணீர் வெளிவந்தது. சிம்சோன் அதைக் குடித்ததும் அவருக்கு உயிர் திரும்ப, அவர் புத்துயிர் பெற்றார். அவ்விடத்தை ‘ஏன்ககோரே’⁕ என அழைத்தார். அது இந்நாள் வரை இலேகியில் உள்ளது. 20பெலிஸ்தியரின் காலத்தில் அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.


15:17 எபிரேயத்தில், ‘தாடை எலும்பின் மலை’ என்பது பொருள். 15:19 எபிரேயத்தில், ‘மன்றாடுவோரின் நீரூற்று’ என்பது பொருள்.



அதிகாரம் 16:1-31

காசாவில் சிம்சோன்


1சிம்சோன் காசாவுக்குச் சென்றார். அவர் அங்கே ஒரு விலைமாதைக் கண்டு, அவளிடம் சென்றார். 2“சிம்சோன் இங்கு வந்துள்ளார்” என்று காசா மக்களுக்குக் கூறப்பட்டது. அவர்கள் அவ்விடத்தைச் சூழ்ந்து கொண்டு இரவு முழுவதும் அவருக்காக நகர வாயிலில் காத்துக்கிடந்தனர். “பொழுது புலரும்வரை காத்திருப்போம்; பின்னர் அவனைக்கொல்வோம்” என்று கூறி இரவு முழுவதும் அமைதியாக இருந்தனர். 3சிம்சோன் நடுச்சாமம் வரை படுத்துக்கிடந்தார். நள்ளிரவில் அவர் எழுந்து, நகர் வாயிலின் கதவுகளையும் இரண்டு கதவு நிலைகளையும் பிடித்து, அவைகளைக் குறுக்குச் சட்டங்களுடன் பிடுங்கினார். அவற்றைத் தம் தோள்களின்மீது வைத்துக் கொண்டு எபிரோனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் சென்றார்.


சிம்சோனும் தெலீலாவும்


4அதன்பின் சோரேக்குப் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைக் காதலித்தார். அவள் பெயர் தெலீலா. 5பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம், சென்று, “நீ அவனை மயக்கி, எதில் அவனுடைய பெரும் வலிமை உள்ளது; எப்படி நாங்கள் அவனை வென்று கட்டி வதைத்து அடக்கமுடியும் என்று கண்டுபிடி. நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக் காசு தருவோம்” என்றனர். 6தெலீலா சிம்சோனிடம், “எதில் உமது பெரும் வலிமை உள்ளது என்றும், எப்படி உம்மைக் கட்டி அடக்கமுடியும் என்றும் என்னிடம் சொல்லும்” என்றாள். 7சிம்சோன் அவளிடம், “ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார். 8பெலிஸ்தியச் சிற்றரசர் அவளிடம் ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளைக் கொண்டு வந்தனர். அதைக் கொண்டு அவள் அவரைக் கட்டினாள். 9ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருக்க, அவள் அவரிடம், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். நெருப்புப்பட்டதும் சணல்கயிறு அறுவது போன்று அவர் நரம்புக் கயிறுகளை அறுத்தெறிந்தார். அவரது ஆற்றலின் இரகசியம் புலப்படவில்லை.

10தெலீலா சிம்சோனிடம், “இதோ! நீர் என்னை அற்பமாக நினைத்து என்னிடம் பொய்கள் சொல்லிவீட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று இப்பொழுது தயவு செய்து எனக்குச் சொல்லும்” என்றாள். 11அவர் அவளிடம், “இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதர்ரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார். 12தெலீலா புதிய கயிறுகளை எடுத்து அவற்றால் அவரைக் கட்டிய பின், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். ஆள்கள் அறையில் ஒளிந்துகொண்டிருந்தனர். நூல்கயிற்றைப்போல் அவர் தம் கைகளிலிருந்து அவற்றை அறுத்தெறிந்தார்.

13தெலீலா சிம்சோனிடம், “இதோ நீர் என்னை அற்பமாக நினைத்து, என்னிடம் பொய்கள் சொல்லிவிட்டீர். எதனால் உம்மைக் கட்டவேண்டும் என்று எனக்குச் சொல்லும்” என்றாள். அவர், “என்னுடைய ஏழு மயிர்க் கற்றைகளையும் பாவுநூலால் பின்னினால் போதும்” என்றார். 14ஆகவே, அவர் தூங்கும்பொழுது தெலீலா அப்படியே செய்து, முளை அடித்து மாட்டி, “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்” என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து எழுந்து, முளையோடு பாவுநூலைப் பிடுங்கி எறிந்தார்.

15அவள் அவரிடம், “மனம் திறந்து பேசாமல் நீர் எம்மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்? மும்முறை நீர் என்னை அற்பமாய் நடத்திவிட்டீர். உமது பேராற்றல் எதில் உள்ளது என்று நீர் எனக்கு இன்னும் சொல்லவில்லை” என்றாள். 16அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள். அவர் உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார். 17எனவே, எதையும் மறைக்காமல் அவர் அவளிடம் கூறியது: “சவரக் கத்தி என் தலைமீது பட்டதேயில்லை. ஏனெனில், பிறப்பிலிருந்தே நான் கடவுளின் நாசீராக இருக்கின்றேன். என் தலை மழிக்கப்பட்டால் எனது ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும். நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப்போல் ஆகிவிடுவேன்” என்றார்.

18அவர் தன்னிடம் மனம் திறந்து எல்லாவற்றையும் கூறிவிட்டார் என்பதை தெலீலா உணர்ந்தாள். எனவே, அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு, “உடனே வாருங்கள்; அவர் என்னிடம் மனம் திறந்து அனைத்தையும் கூறிவிட்டார்” என்று ஆளனுப்பினாள். பெலிஸ்தியச் சிற்றரசர் வெள்ளிக்காசுகளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவளிடம் சென்றனர். 19அவள் அவரைத் தன் மடியில் தூங்க வைத்தாள். ஓர் ஆளைக் கூப்பிட, அவன் அவர் தலையின் ஏழு மயிர்க்கற்றைகளையும் மழித்தான். அவரது ஆற்றல் அவரிடமிருந்து அகன்றது. எனவே, அவள் அவரைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள். 20அவள், “சிம்சோன்! பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர்!” என்று கத்தினாள். அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து “முன்பு போல் இப்பொழுதும் என்னை விடுவித்துக்கொண்டு வெளியே செல்வேன்” என்று சொன்னார். ஏனெனில், ஆண்டவர் அவரிடமிருந்து அகன்றுவிட்டார் என்பதை அவர் உணரவில்லை. 21பெலிஸ்தியர் அவரைப் பிடித்து அவர் கண்களைத் தோண்டி எடுத்து அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றார்கள். அவரை வெண்கலச் சங்கிலிகளால் கட்டினர். சிறையில், அரைக்கும் வேலைக்கு அவரை உட்படுத்தினர். 22மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது.


சிம்சோனின் இறப்பு


23பெலிஸ்தியச் சிற்றரசர், “நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார்” என்று சொல்லித் தம் தெய்வமான தாகோனுக்கு மாபெரும் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடினர். 24மக்கள் அவரைப் பார்த்ததும் தங்கள் தெய்வத்தைப் புகழ்ந்தனர். “நம் கடவுள் நம் எதிரி சிம்சோனை நம் கையில் ஒப்புவித்தார். அவன் நம் விளைநிலங்களை அழித்தவன்; நம்மில் பலரைக் கொன்றவன்; என்றனர். 25அவர்கள் அகமகிழ்ந்திருக்க, “சிம்சோனைக் கூப்பிடுங்கள். அவன் நமக்கு வேடிக்கை காட்டட்டும்” என்றனர். சிறையிலிருந்து சிம்சோனைக் கொண்டுவர, அவர் அவர்கள் முன்னிலையில் வேடிக்கை காட்டினார். அவர்கள் அவரைத் தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர். 26சிம்சோன் கையால் தம்மைப் பிடித்திருந்த இளைஞனிடம் “இவ்வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்களை நான் தொடுமாறு அங்கு என்னை இட்டுச்செல்; நான் அவற்றின்மீது சாய்ந்து நிற்பேன்” என்றார். 27ஆண்களாலும் பெண்களாலும் வீடு நிரம்பியிருந்தது. பெலிஸ்தியச் சிற்றரசர் அனைவரும் அங்கே வந்திருந்தனர். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் மேல்தளத்திலிருந்து சிம்சோன் காட்டிய வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

28சிம்சோன் ஆண்டவரை நோக்கி, “என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும். என் கடவுளே! என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும்” என்று மன்றாடினார். 29சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நின்ற இரண்டு நடுத்தூண்களில் ஒன்றின்மீது வலக்கையும் மற்றொன்றின்மீது இடக்கையும் வைத்துச் சாய்ந்தார். 30சிம்சோன், “என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்” என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார். வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது. இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார். 31அவருடைய சகோதரர்களும் அவர் தந்தை வீட்டார் அனைவரும் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு சென்றனர். காசாவுக்கும் எசுத்தாவோலுக்கும் இடையில் அவருடைய தந்தை மனோவாகின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தனர். அவர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேலின் நீதித் தலைவராக விளங்கினார்.



அதிகாரம் 17:1-13

மீக்காவின் சிலைகள்


1எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் பெயர் மீக்கா. 2அவர் தம் தாயிடம், “உம்மிடமிருந்து ஆயிரத்து நூறு வெள்ளிக் காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரா? இதோ! அந்த வெள்ளிக்காசுகள் என்னிடமே உள்ளன. அவற்றை எடுத்தவன் நான்தான்” என்றார். அப்பொழுது அவர் தாய், “என் மகனே, ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!” என்றார். 3அவர் ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகளைத் தம் தாயிடம் திருப்பிக் கொடுக்க, அவர் தாய், “என் மகன் உனக்காக என் கையிலிருந்து இந்த வெள்ளிக் காசுகளை ஆண்டவருக்கு நேர்ச்சையாக அர்ப்பணிக்கின்றேன். அவற்றைக் கொண்டு செதுக்கிய உருவத்தையும் வார்ப்புச் சிலையையும் செய்துகொள். எனவே, அவற்றை இப்பொழுதே உன்னிடம் திருப்பித் தருகின்றேன்” என்றார். 4அவர் தம் தாயிடம் திருப்பிக் கொடுத்த வெள்ளிக் காசுகளிலிருந்து அவர் தாய் இருநூறு வெள்ளிக் காசுகளை எடுத்து, அதைத் தட்டானிடம் கொடுத்தார். அவர் அதை செதுக்கிய உருவமாகவும், வார்ப்புச் சிலையாகவும் செய்தார். அது மீக்காவின் வீட்டில் இருந்தது. 5இந்தத் தெய்வங்களுக்கான கோவில் ஒன்று மீக்காவிற்குச் சொந்தமாக இருந்தது. அவர் ஏபோதையும் தெராபிமையும் செய்தார்; தம் புதல்வருள் ஒருவரைக் குருவாக நியமித்தார். 6அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப் பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்.✠

7யூதாநாட்டுப் பெத்லகேமில், யூதா குலத்தைச் சார்ந்த லேவியரான ஓர் இளைஞர் தங்கியிருந்தார். 8அவர் யூதாநாட்டுப் பெத்லகேம் நகரிலிருந்து தாம் தங்கி வாழ, வேறோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில் எப்ராயிம் மலைப்பகுதியில் இருந்த மீக்காவின் வீட்டை நெருங்கினார். 9மீக்கா அவரிடம், “எங்கிருந்து வருகின்றீர்?” என்று கேட்டார். அவர் அவரிடம், “நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்” என்றார். 10மீக்கா அவரிடம், “என்னுடன் தங்கும்; எனக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பீர். நான் உமக்கு ஆண்டொன்றுக்குப் பத்து வெள்ளிக் காசுகளும் உடையும் உணவும் தருவேன்” என்றார். 11லேவியர் அவருடன் சென்றார். லேவியர் அவரோடு விருப்பமுடன் தங்கினார். அவ்விளைஞர் அவருடைய புதல்வருள் ஒருவரைப் போல் இருந்தார். 12மீக்கா, இளைஞரான அந்த லேவியரைக் குருவாக நியமித்தார். அவர் மீக்காவின் வீட்டில் வாழ்ந்து வந்தார். 13மீக்கா, “இப்பொழுது ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என அறிவேன். ஏனெனில், ஒரு லேவியரே எனக்குக் குருவாக இருக்கின்றார்” என்றார்.


17:6 நீத 21:25.



அதிகாரம் 18:1-31

மீக்காவும் தாண் குலத்தாரும்


1அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் இல்லை; அந்நாள்களில் தாண் குலத்தார் தாம் வாழ்வதற்கென உரிமைப் பகுதியைத் தேடிக் கொண்டிருந்தனர். ஏனெனில், அந்நாள்வரை இஸ்ரயேலின் குலங்களிடையே அவர்களுக்கு உரிமைப் பகுதி கிடைக்கவில்லை. 2தாண் மக்கள் தங்கள் குலத்தாருள் ஆற்றல் வாய்ந்த அனைவரிலிருந்தும், சோராவையும் எசுத்தாவோலையும் சார்ந்த ஐந்து போர்வீரர்களை, நாட்டை உளவு பார்க்கவும் வேவு பார்க்கவும் அனுப்பினர். அவர்கள் அவர்களிடம், “செல்லுங்கள், நிலத்தை வேவு பாருங்கள்” என்றனர். ஐவரும் எப்ராயிம் மலைநாட்டில் இருந்த மீக்காவின் வீட்டுக்கு அருகே வந்து இரவைக் கழித்தனர். 3அவர்கள் மீக்காவின் வீட்டருகே இருந்தபொழுது, லேவியரான இளைஞரின் குரலைக் கண்டுகொண்டு, அவர் பக்கம் திரும்பிச் சென்று, அவரிடம் “உன்னை இங்கு அழைத்து வந்தது யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றாய்? இங்கு உனக்கு என்ன வேலை?” என்று கேட்டனர். 4அவர் அவர்களிடம் மீக்கா தமக்குச் செய்ததனைத்தையும்பற்றிக் கூறியபொழுது, “அவர் என்னை வேலைக்கு அமர்த்தியுள்ளார். நான் அவரிடம் குருவாக இருக்கின்றேன்” என்றார். 5அவர்கள் அவரிடம், “நாங்கள் செல்லும் பயணம் வெற்றிகரமாக இருக்குமா என்பதை நாங்கள் அறியுமாறு கடவுளிடம் கேள்” என்றனர். 6குரு அவர்களிடம், “மன அமைதியுடன் செல்லுங்கள். நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை ஆண்டவர் கண்ணோக்கிக் காப்பார்” என்றார்.

7ஐவரும் பயணத்தைத் தொடர்ந்து இலாயிசை வந்தடைந்தபொழுது அங்கிருந்த மக்கள் அச்சமின்றி, சீதோனியர் நெறிமுறைக்கேற்ப, அமைதியாக கவலையற்றவர்களாக வாழ்வதைக் கண்டனர். நாடு எதிலும் குறைவற்றதாகவும், செழிப்புடையதாகவும் இருந்தது. அம்மக்கள் சீதோனியரிடமிருந்து தூரத்தில் இருந்ததால் அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. 8அவர்கள் சோராவிலும் எசுத்தாவோலிலும் இருந்த சகோதரர்களிடம் திரும்பி வந்தனர். அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், “நீங்கள் கண்டதென்ன?” என்று கேட்டனர். 9அவர்கள், “வாருங்கள், அவர்களுக்கு எதிராகப் புறப்படுவோம். ஏனெனில், நாங்கள் ஒரு நாட்டைக் கண்டோம். அது மிகவும் செழிப்பானது. நீங்கள் எதுவும் செய்யப் போவதில்லையா? அங்கு செல்லவும், அந்நாட்டில் நுழைந்து அதை உரிமையாக்கிக் கொள்ளவும் தயங்க வேண்டாம். 10நீங்கள் கவலையற்ற மக்களிடம் செல்லவிருக்கின்றீர்கள். பரந்த அந்நிலத்தைக் கடவுள் உங்கள் கையில் ஒப்புவித்துவிட்டார். நாடு அனைத்திலும் குறைவற்றதாக உள்ளது” என்றனர்.

11தாண் குலத்தார் அறுநூறுபேர் போர்க்கோலம் தாங்கிச் சோராவிலிருந்தும் எசத்தாவோலிலிருந்தும் புறப்பட்டுச் சென்றனர். 12அவர்கள் யூதாநாட்டுக் கிரியத்து எயாரிமில் பாளையம் இறங்கினர். ஆகவே, அவ்விடத்தை ‘மகனே தாண்’⁕ என்று இந்நாள் வரை அழைக்கின்றனர். அது கிரியத்து எயாரிமுக்கு மேற்கே உள்ளது. 13அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு எப்ராயிம் மலைநாட்டுக்குச் சென்று மீக்காவின் வீட்டை நெருங்கினார்கள்.

14இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது: இவ்வீடுகளில் ஏபோது, தெராபிம், செதுக்கிய உருவம், வார்ப்புச்சிலை, ஆகியவை உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதைப்பற்றிச் சிந்தியுங்கள்” என்றனர். 15அவர்கள் மீக்காவின் வீட்டில் லேவியரான இளைஞர் இருந்த இடம் நோக்கித் திரும்பி வந்து, அவரிடம் நலம் விசாரித்தனர். 16போர்க்கோலம் தாங்கிய அறுநூறு தாண்வீரர்களும் நுழைவாயிலின் முன் நின்றனர். 17நாட்டை வேவு பார்க்க வந்திருந்த ஐவரும் உள்ளே சென்று, செதுக்கிய உருவம், ஏபோது, தெராபிம், வார்ப்புச்சிலை ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். குருவும் போர்க் கோலம் தாங்கிய அறுநூறு வீரர்களும் நுழைவாயிலின்முன் நின்று கொண்டிருந்தனர். 18மீக்காவின் வீட்டுக்குள் சென்ற ஐவரும் செதுக்கிய உருவம், ஏபோது, தெராபீம், வார்ப்புச்சிலை, ஆகியவற்றை எடுத்தபொழுது குரு அவர்களிடம், “நீங்கள் செய்வது என்ன?” என்று கேட்டார். 19அவர்கள் அவரிடம், “பேசாதே! வாயை மூடு!! எங்களுடன் நட. எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய். எது உனக்கு நலம்? ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? இஸ்ரயேலின் ஒரு குலத்திற்கு, ஒரு குடும்பத்திற்குக் குருவாக இருப்பதா?” என்றனர். 20குருவின் இதயம் மகிழ்வுற்றது. அவர் ஏபோது, தெராபிம் செதுக்கிய உருவம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு மக்களிடையே வந்தார்.

21குழந்தைகளும் கால்நடைகளும் உடைமைகளும் அவர்கள் முன்னே செல்ல, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

22அவர்கள் மீக்காவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபின், அடுத்த வீட்டு ஆள்கள் ஒன்றுதிரண்டு, குரலெழுப்பி, தாண் மக்களைத் துரத்திச் சென்றனர். 23அவர்கள் தாண் மக்களை நோக்கிக் கத்தினர். தாண் மக்கள் திரும்பிப் பார்த்து மீக்காவிடம், “நீ ஏன் ஆள்திரட்டி வருகின்றாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டனர். 24அவர், “நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள்; குருவையும் கூட்டிக் கொண்டு செல்கிறீர்கள். எனக்கு வேறு என்ன இருக்கிறது? இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என்று என்னையே கேட்கிறீர்களே?” என்றார். 25தாண் மக்கள் அவரிடம், “எங்களோடு விவாதம் செய்யாதே! செய்தால் கொடிய மனம் கொண்ட இம்மனிதர் உங்களைத் தாக்குவர். நீயும் உன் வீட்டாரும் உயிரிழக்க நேரிடும்” என்றனர். 26தாண் மக்கள் தங்கள் வழியே சென்றனர். மீக்கா அவர்கள் தம்மைவிட வலிமை வாய்ந்தவர்கள் என்று கண்டு தம் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார். 27தாண் மக்கள் மீக்கா செய்து வைத்திருந்ததையும் அவருடைய குருவையும் கவர்ந்து சென்றனர். அவர்கள் அமைதியாகவும் கவலையற்றும் வாழ்ந்த இலாயிசு மக்களுக்கு எதிராக நின்று அவர்களை வாளுக்கு இரையாக்கி நகரை எரித்தனர். 28ஏனெனில், இலாயிசு மக்கள் சீதோனிலிருந்து தொலையில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. இலாயிசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தனர். 29இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை “தாண்” என்று அழைத்தனர். அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு. 30செதுக்கிய உருவத்தைத் தாணின் மக்கள் தங்களுக்கென்று நிறுவிக்கொண்டனர். மோசேயின் புதல்வனான கெர்சோமின் மகன் யோனத்தானும் அவன் மக்களும் தாணின் குடும்பத்தினருக்கு, மக்கள் நாடு கடத்தப்படும் வரை, குருக்களாக இருந்தனர். 31கடவுளின் உறைவிடம் சீலோவில் இருந்தவரை, மீக்கா செய்திருந்த செதுக்கப்பட்ட உருவத்தைத் தாண் மக்கள் தங்களுக்கென்று வைத்திருந்தனர்.


18:12 எபிரேயத்தில், ‘தாணின் பாளையம்’ என்பது பொருள்.



அதிகாரம் 19:1-30

லேவியரும் அவர் மறுமனைவியும்


1இஸ்ரயேல் மக்களுக்கு அரசன் இல்லாத அந்நாள்களில் லேவியர் ஒருவர் எப்ராயிம் மலைநாட்டின் எல்லைப்புறத்தில் தங்கியிருந்தார். யூதாநாட்டுப் பெத்லகேமைச் சார்ந்த ஒரு பெண்ணை மறு மனைவியாகக் கொண்டிருந்தார். 2அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்துவிட்டு அவரிடமிருந்து பிரிந்து யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்த தன் தந்தையின் வீட்டுக்குச் சென்றாள். அங்கு நான்கு மாதம் தங்கியிருந்தாள். 3அவளிடம் நயந்து பேசி, அவளைத் தன்னுடன் மீண்டும் அழைத்து வர அவள் கணவன் அவளை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அவர் தம்முடன் தம் வேலையாளையும் இரு கழுதைகளையும் கூட்டிக்கொண்டு சென்று அவள் தந்தையின் வீட்டை வந்தடைந்தார். அவரைக் கண்டதும் பெண்ணின் தந்தை மகிழ்வுடன் வரவேற்றார். 4பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே அவர் அவருடன் மூன்று நாள்கள் தங்கினார். 5நான்காம் நாள் அவர்கள் அதிகாலையில் எழுந்தார்கள். அவர் புறப்படுகையில் பெண்ணின் தந்தை தம் மருமகனிடம், “சிறிது உணவருந்தித் திடம் கொண்டபின் போகலாம்” என்றார். 6அவர்கள் இருவரும் ஒன்றாக அங்கே அமர்ந்து உண்டு குடித்தனர். பெண்ணின் தந்தை அவரிடம், “உம் இதயம் மகிழுமாறு இரவும் இங்கே தங்கும்” என்றார். 7அவர் போவதற்கு எழுந்தார். அவர் மாமனார் அவரை வற்புறுத்தவே, அவர் அங்கேயே தங்கி இரவைக் கழித்தார். 8அவர், ஐந்தாம் நாள் புறப்படுவதற்காக அதிகாலையில் எழுந்தார். அப்போது பெண்ணின் தந்தை உம் இதயம் மகிழுமாறுபொழுது சாயும்வரை இங்கே தங்கும்” என்றார். இருவரும் உண்டனர். 9அவரும் அவர் மறுமனைவியும் அவருடைய வேலையாளும் புறப்படத் தயாராயினர், பெண்ணின் தந்தையான அவர் மாமனார் அவரிடம், “இதோ! நாள் முடிந்து மாலையாகி விட்டது. நாள் முடிவடைந்துவிட்டது. இரவு இங்கே தங்கி, உம் இதயத்தை மகிழ்வியும்; நாளை அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டுக்குப் பயணமாகலாம்” என்றான்.

10அம்மனிதர் இரவு தங்க விரும்பவில்லை. எனவே, அவர் சேணமிட்ட இரு கழுதைகளுடனும் தம் மறு மனைவியுடனும் புறப்பட்டு எருசலேம் என்ற எபூசுக்கு அருகே வந்தார். 11அவர்கள் எபூசை நெருங்கியபொழுது அந்திமாலை ஆகிவிட்டது. வேலையாள் தம் தலைவரிடம், “நாம் எபூசுக்குச் சென்று அங்கே இரவைக் கழிப்போம்” என்றான். 12அவன் தலைவர் அவனிடம், “நாம் இஸ்ரயேல் மக்கள் அல்லாத வேற்றினத்தார் நகர்ப்பக்கம் செல்லாமல், கிபயாவுக்குக் கடந்து செல்வோம்” என்றார். 13அவர் தம் வேலையாளிடம், “கிபயா அல்லது இராமாவுக்குச் சென்று அவற்றுள் ஏதாவது ஓரிடத்தில் இரவைக் கழிப்போம்” என்றார். 14அவ்வாறே, அவர்கள் சென்று பென்யமினைச் சார்ந்த கிபயாவை அடைந்தபொழுது கதிரவன் மறைந்தான். 15அவர்கள் கிபயாவில் இரவைக் கழிக்க அங்கே சென்றனர். ஆனால், இரவைக் கழிக்கத் தன் வீட்டிற்குள் வருமாறு அவர்களை ஒருவனும் அழைக்கவில்லை. ஆகவே, நகரின் சதுக்கத்தில் அமர்ந்தனர்.

16மாலையில் ஒரு முதியவர் தம் வேலையை முடித்துவிட்டு, வயலிலிருந்து வந்தார். அவர் எப்ராயிம் மலை நாட்டைச் சார்ந்தவர். அவர் கிபயாவிற்கு வந்து தங்கியிருந்தார். ஆனால் அங்கு வாழ்ந்தவர்கள் பென்யமின் மக்கள், 17அவர் உற்றுப்பார்த்த பொழுது, வழிப்போக்கரான அந்த மனிதரை நகரின் சதுக்கத்தில் கண்டார். அம்முதியவர் அவரிடம், “எங்கே போகின்றாய்? எங்கிருந்து வருகின்றாய்?” என்று கேட்டார். 18அவரிடம், “நாங்கள் யூதாநாட்டுப் பெத்லகேமிலிருந்து எப்ராயிமின் மலை நாட்டு எல்லைப்புறத்திற்குச் செல்கின்றோம். நான் அப்பகுதியைச் சேர்ந்தவன். யூதாநாட்டுப் பெத்லகேமிற்குச் சென்றிருந்தேன். நான் என் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றேன். இங்கே தன் வீட்டுக்குள் வருமாறு என்னை ஒருவனும் அழைக்கவில்லை. 19எங்கள் கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும், தீவனமும் உம் ஊழியர்களாகிய எனக்கும் என் மறுமனைவிக்கும் வேலையாளுக்கும் வேண்டிய அப்பமும் திராட்சை இரசமும் எங்களிடம் உள்ளன. எங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை” என்றார். 20அப்பொழுது முதியவர், “உனக்கு நலம் உண்டாகுக! உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன். இரவில் சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றார். 21அவர் அவரைத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழுதைகளுக்குத் தீவனம் அளித்தார். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவினர்; உண்டு குடித்தனர்.

22அவர்கள் மனமகிழ்ந்திருந்தபொழுது இதோ! அந்நகரின் இழி மனிதர் அவ்வீட்டைச் சூழ்ந்துகொண்டு கதவைத் தட்டினர். அவ்வீட்டின் உரிமையாளரான முதியவரிடம், “உன் வீட்டிற்கு வந்திருக்கும் மனிதனை வெளியே கொண்டு வா. நாங்கள் அவனுடன் உறவு கொள்ள வேண்டும்” என்றனர். 23வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து அவர்களிடம், “வேண்டாம், என் சகோதரர்களே, என் வீட்டிற்கு வந்திருக்கும் இம்மனிதனுக்குத் தீங்கு எதுவும் செய்ய வேண்டாம். இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள். 24இதோ! கன்னிப்பெண்ணான என் மகளையும், அவர் மறுமனைவியையும் வெளியே அழைத்து வருகிறேன். அவர்களோடு உறவு கொண்டு உங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளுங்கள். ஆனால், இம்மனிதனுக்கு இக்கொடிய செயலைச் செய்யாதீர்கள்” என்றார். 25அவர்களோ அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பொழுது அந்த லேவியர் தம் மறுமனைவியை அவர்களுக்காக வெளியே தள்ளிவிட்டார். அவர்கள் அவளோடு உறவு கொண்டு இரவு முழுவதும் வைகறைவரை அவளை இழிவுபடுத்தினர். அவர்கள் வைகறையானதும் அவளைப் போகவிட்டனர். 26வைகறையில் அப்பெண் வந்து தன் கணவன் இருந்த வீட்டின் கதவருகில் காலைவரை விழுந்துகிடந்தாள். 27காலையில் அவள் கணவர் எழுந்து, பயணத்தைத் தொடர, வீட்டின் கதவுகளைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் மறுமனைவியான அப்பெண் வீட்டின் கதவருகில் விழுந்துகிடந்தாள். அவள் கைகள் கதவு நிலையின்மீது இருந்தன. 28அவர் அவளிடம் எழுந்திரு புறப்படுவோம் என்றார். பதில் இல்லை. எனவே, அவர் அவளைக் கழுதை மீது தூக்கி வைத்து தன் வீட்டை நோக்கி சென்றார். 29அவர் தம் வீட்டிற்கு வந்ததும் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலைப் பன்னிரு துண்டுகளாக வெட்டி, அவற்றை இஸ்ரயேலின் எல்லா நிலப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.✠ 30அதைக் கண்ட அனைவரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து, புறப்பட்டதிலிருந்து இந்நாள் வரை இது போன்றது நடந்ததில்லை; இது போன்றதைக் கண்டதுமில்லை; இதைப் பற்றி நீங்கள் சிந்தியுங்கள்; கலந்து பேசுங்கள்; உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்” என்று சொல்லிக் கொண்டனர்.


19:22-24 தொநூ 19:5-8. 19:29 1 சாமு 11:7.



அதிகாரம் 20:1-48

இஸ்ரயேல் மக்கள் போருக்குப் புறப்படல்


1தாண் தொடங்கிப் பெயேர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர். 2இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களைச் சார்ந்த எல்லா மக்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர். அவர்கள் வாளேந்திய நான்கு இலட்சம் போர் வீரர்கள். 3இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள்,“இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள்” என்று கேட்டனர். 4கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவனான லேவியர் பதிலளித்துக் கூறியது: “நானும் என் மறுமனைவியும் இரவில் தங்குவதற்குப் பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவுக்கு வந்தோம். 5கிபயா ஆள்கள் எனக்கெதிராகப் புறப்பட்டு வந்து இரவில் என்னையும் வீட்டையும் சூழ்ந்துகொண்டு என்னைக் கொல்ல முயற்சி செய்தனர். அவர்கள் என் மறுமனைவியை இழிவுபடுத்தவே, அவள் இறந்து போனாள். 6என் மறுமனைவியின் சடலத்தை எடுத்து வந்து அதைத் துண்டு துண்டாக வெட்டி இஸ்ரயேலின் உரிமைச் சொத்தான அனைத்துப்பகுதிகளுக்கும் அனுப்பினேன். ஏனெனில், அவர்கள் இஸ்ரயேலுக்கு எதிராக ஒழுக்கக் கேடான அருவருக்கத்தக்க செயலைச் செய்தனர். 7இதோ! இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் கலந்து பேசி உங்கள் முடிவைத் தெரிவியுங்கள்.”

8எல்லா மக்களும் ஒரே மனத்தவராயக் கூறியது: நம்மில் எவனும் — அவன் கூடாரத்தில் தங்கியிருந்தாலும், வீட்டில் வாழ்ந்தாலும் — திரும்பிச் செல்லமாட்டான். 9இப்பொழுது நாம் கிபயாவுக்குச் செய்யப்போவது இதுதான்; நம்மில் சீட்டு விழுந்தவர்கள் அதற்கு எதிராகச் செல்வர். 10இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் நூற்றுக்குப் பத்துப்பேரையும், ஆயிரத்துக்கு நூறுபேரையும், பத்தாயிரத்துக்கு ஆயிரம் பேரையும் தேர்ந்தெடுப்போம். இவர்கள் சென்று பென்யமினுக்குச் சொந்தமான கிபயாவின் ஆள்கள் இஸ்ரயேலுக்கு எதிராகச் செய்த அருவருக்கத்தக்க செயலுக்குப் பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொண்டு வரட்டும். 11இஸ்ரயேலின் எல்லா ஆள்களும் ஒன்றிணைந்து நகரை நோக்கிச் சென்றனர்.

12இஸ்ரயேலின் குலங்களைச் சார்ந்தவர்கள் பென்யமின் குலம் முழுவதற்கும் ஆளனுப்பி, “இந்தத் தீய செயல் உங்கள் நடுவில் நடை பெற்றது ஏன்? 13இப்பொழுது கிபயாவில் உள்ள இழிமனிதரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொன்று இஸ்ரயேல் நடுவிலிருந்து தீயதை அழிப்போம்” என்றனர். தங்கள் சகோதரரான இஸ்ரயேல் மக்கள் சொன்னதைப் பென்யமின் மக்கள் ஏற்கவில்லை. 14பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களுடன் போரிடுமாறு தங்கள் நகர்களிலிருந்து புறப்பட்டுக் கிபயாவில் வந்து கூடினர். 15தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு கிபயா வாழ் மக்கள் போருக்கு தயாராக இருந்ததுபோக, அன்று பென்யமின் மக்களுள் அதன் நகர்களிலிருந்து வாளேந்திப் போருக்கென ஒன்று திரண்டவர் இருபத்தாறாயிரம் பேர். 16இவர்களைத் தவிர கிபயா வாழ் மக்கள் எழுநூறு பேர் தலைமுடி இழையளவும் குறி தவறாது இடக்கையால் கவண் எறிவர். 17இந்தப் பென்யமின் ஆள்களைத் தவிர இஸ்ரயேல் மக்களுள் நான்கு இலட்சம் பேர் ஒன்று திரண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் போர் வீரர்கள்.


பென்யமின் மக்களுடன் போர்


18அவர்கள் எழுந்து பெத்தேலுக்குச் சென்றனர். இஸ்ரயேல் மக்கள், “யார் எங்களுக்காக முதலில் பென்யமின் மக்களுடன் போருக்குச் செல்வர்?” என்று கடவுளிடம் கேட்டனர். ஆண்டவர், “முதலில் யூதா செல்லட்டும்” என்றார்.

19இஸ்ரயேல் மக்கள் காலையில் எழுந்து, கிபயாவுக்கு எதிரில் பாளையம் இறங்கினர். 20இஸ்ரயேல் ஆள்கள் பென்யமின் மக்களுடன் போர்புரியச் சென்றனர். கிபயாவை நோக்கி அணிவகுத்து நின்றனர். 21பென்யமின் மக்கள் கிபயாவிலிருந்து வெளியே வந்து, அந்நாளில் இருபதாயிரம் இஸ்ரயேல் மக்களை வெட்டி வீழ்த்தினர். 22இஸ்ரயேல் வீரர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு முதல் நாள் கூடிய அதே இடத்தில் மீண்டும் போருக்கு அணி வகுத்து நின்றனர். 23இஸ்ரயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் மாலைவரை அழுதனர். இஸ்ரயேல் மக்கள், “தம் சகோதரர்களாகிய் பென்யமின் மக்களுடன் மீண்டும் போரிடச் செல்லலாமா” என்று ஆண்டவரிடம் கேட்டனர். ஆண்டவர், “அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்” என்றார்.

24இரண்டாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நெருங்கினர். 25அன்று பென்யமின் மக்களும் அவர்களுக்கு எதிராகக் கிபயாவிலிருந்து புறப்பட்டு வந்தனர். அவர்கள் மீண்டும் இஸ்ரயேல் மக்களுள் பதினெட்டாயிரம் பேரை வெட்டி வீழ்த்தினர். இவர்கள் அனைவரும் போர்வீரர். 26இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பெத்தேலுக்கு வந்து அழுதனர். அங்கே ஆண்டவர் திருமுன் அமர்ந்து அன்று மாலைவரை உண்ணாநோன்பு இருந்தனர். மேலும், அவர்கள் எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர். 27இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரிடம் அறிவுரை கேட்டனர். ஏனெனில், அந்நாள்களில் கடவுளின் உடன்படிக்கையின் பேழை அங்கு இருந்தது. 28ஆரோனின் புதல்வன் எலயாசரின் மகன் பினகாசு அன்று அதற்குமுன் நின்று, “என் சகோதரர்களாகிய பென்யமின் மக்களுடன் போரிட நான் மீண்டும் செல்ல வேண்டாமா?” என்று கேட்டான். ஆண்டவர், “செல்லுங்கள், நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்படைப்பேன்” என்றார்.

29இஸ்ரயேல் மக்கள் கிபயாவைச் சுற்றி பதுங்கிடம் அமைத்தனர். 30மூன்றாம் நாள் இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களுக்கு எதிராகச் சென்றனர். இம்முறையும் முன்புபோல் கிபயாவுக்கு எதிராக அணிவகுத்து நின்றனர். 31பென்யமின் மக்கள் இஸ்ரயேல் மக்களை எதிர்க்க வெளியே வந்தனர். அவர்கள் நகரிலிருந்து வெகு தொலைவுக்கு வந்து விட்டனர். முன்புபோல் இம்முறையும் அவர்கள் பெத்தேலுக்கு செல்லும் நெடுஞ்சாலையிலும், கிபயாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையிலும் தாக்கத் துவங்கித் திறந்த வெளியில் ஏறக்குறைய முப்பது பேரைக் கொன்றனர். 32எனவே, பென்யமின் மக்கள் முன்பு போலவே ‘நம் முன்னிலையில் இஸ்ரயேல் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர்’ என்று கூறிக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களோ ‘நாம் தப்பி ஓடுவதுபோல நடித்து அவர்களை நகரிலிருந்து நெடுஞ்சாலைக்கு இழுப்போம்’ என்று திட்டமிட்டிருந்தனர். 33எனவே, இஸ்ரயேல் வீரர்கள் அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கிப் பால்தாமாரில் அணிவகுத்து நின்றனர். இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாயிரம் பேர் கிபயாவுக்கு அருகில் தங்கள் பதுங்கிடங்களிலிருந்து வெளிவந்து நகரைக் கிழக்கிலிருந்து தாக்கினர். 34போர் கடுமையாக இருந்தது. ஆனால், பென்யமின் மக்கள் தங்களுக்குத் தீமை வரப்போகிறது என்பதை உணரவில்லை. 35ஆண்டவர் இஸ்ரயேலின் பொருட்டுப் பென்யமினைத் தோற்கடித்தார். அன்று இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றனர். அவர்கள் அனைவரும் போர்வீரர்கள்.


இஸ்ரயேலர் வெற்றி கொள்ளல்


36பென்யமின் மக்கள் தாங்கள் தோல்வியுற்றதைக் கண்டனர். இஸ்ரயேல் மக்கள் தாங்கள் அமைத்திருந்த பதுங்கிடங்களில் நம்பிக்கை வைத்திருந்ததால் பென்யமின் மக்கள் முன்னேற இடம் அளித்தனர். 37பதுங்கியிருந்தோர் திடீரென கிபயாமீது பாய்ந்தனர். அவர்கள் அணிவகுத்துச் சென்று நகரத்தவர் அனைவரையும் வாளுக்கு இரையாக்கினர். 38பதுங்கியிருந்தோர் இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளமாக பெரும்புகைப் படலத்தை நகரிலிருந்து மேல் எழச்செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய முன்னேற்பாடு. 39இஸ்ரயேல் மக்கள் போரில் பின்வாங்கியபோது, அவர்களுள் ஏறக்குறைய முப்பது பேரைப் பென்யமின் மக்கள் கொன்றுவிட்டனர். முன்புபோல், அவர்கள் நம் முன்னிலையில் விரட்டியடிக்கப்பட்டனர் என்று கூறிக்கொண்டனர். 40நகரிலிருந்து பெரும் புகைப்படலம் அடையாளமாக மேல் எழும்பத் தொடங்கியபொழுது, பென்யமின் மக்கள் பின்புறம் திரும்பிப்பார்த்தனர். அந்தோ! நகர் முழுவதும் புகை விண்ணை நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது. 41இஸ்ரயேல் வீரர்கள் திரும்பித் தாக்கவே பென்யமின் வீரர் தங்களுக்கு அழிவு நெருங்குவதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். 42அவர்கள் இஸ்ரயேல் வீரர் முன்னிலையில் பாலைநிலப்பாதையில் புறமுதுகிட்டு ஓடினர். போரினின்று அவர்களால் தப்ப முடியவில்லை. இஸ்ரயேல் நகர்களிலிருந்து வந்தோர் அவர்களை வெட்டி வீழ்த்தினர். 43அவர்கள் பென்யமின் மக்களை அடித்து நொறுக்கி, அவர்களைத் துரத்திச் சென்று கதிரவன் உதிக்கும் திசையில் கிபயாவின் எதிர்ப்புறம் வரை விடாது துரத்திச் சென்று அழித்தனர். 44பென்யமின் மக்களுள் பதினெட்டாயிரம்பேர் மடிந்தனர். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வீரர்கள். 45ஏனையோர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்கு ஓடிவந்தனர். இஸ்ரயேலர் பென்யமின் மக்களுள் ஐயாயிரம் பேரை நெடுஞ்சாலைகளில் கொன்றனர். தொடர்ந்து கிதாம்வரை துரத்திச் சென்று அவர்களுள் இரண்டாயிரம் பேரைக் கொன்றனர். 46அந்நாள்களில் பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் இருபத்தையாயிரம். இவர்கள் அனைவரும் ஆற்றல்மிகு வாளேந்திய வீரர்கள். 47எஞ்சியிருந்த அறுநூறு பேர் பாலைநிலம் நோக்கித் திரும்பி ரிம்மோன் பாறைக்குத் தப்பி ஓடி அங்கே நான்கு மாதங்கள் வாழ்ந்தனர். 48இஸ்ரயேல் மக்கள் பென்யமின் மக்களை நோக்கித் திரும்பி, நகரில் கண்ட அனைவரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்கினர். தாங்கள் கண்ட நகர்கள் அனைத்தையும் நெருப்பில் எரித்தனர்.



அதிகாரம் 21:1-25abcd